Powered By Blogger

Tuesday, April 9, 2024

அன்று ஷூ வாங்க காசில்லை… இன்று ஐபிஎல் ஹீரோ!

 


கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களே இல்லாமல் இந்தியா தவித்த காலம் ஒன்று இருந்தது. மற்ற அணிகளின் வீர்ர்கள் எல்லாம் 150 கிலோமீட்டர் வேகத்துக்கு அருகில் சென்று பவுன்சர்களும், யார்க்கர்களுமாய் போட்டுத் தாக்குவார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களோ 140 கிலோமீட்டர் வேகத்தை தொடுவதற்கே முக்கி முனகுவார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு அனல் பறக்கும் வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமாகி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு கிடைத்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்.

 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தன் அறிமுக போட்டியிலேயே 158 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் அசத்தியிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் வீசப்பட்ட 5 அதிவேக பந்துகளில் முதல் 4 வேகப்பந்துகளை வீசியவர் என்ற பெருமையும் ஒரே ஆட்டத்தின் மூலம் படைத்திருக்கிறார் மயங்க் யாதவ். 21 வயதே ஆன மயங்க் யாதவ், திடீரென்று  உச்சத்துக்கு வரவில்லை. அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் பல.

 

 

டெல்லியைச் சேர்ந்தவரான மயங்க்  யாதவின் அப்பா பிரபு யாதவ் ஒரு கிரிக்கெட் ரசிகர். பொதுவாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியான பேட்ஸ்மேன்களைத்தான் பிடிக்கும். ஆனால் பிரபு யாதவ் அதற்கு நேர் எதிரானவர். பேட்ஸ்மேன்களைவிட அவருக்கு வேகப்பந்து வீச்சாளர்களைத்தான் பிடிக்கும். அதிலும் வேகத்துக்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்களான ஆம்புரோஸையும், வால்ஷையும் அவருக்கு மிகவும் பிடிக்கும் வீட்டில் மகனுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்க்கும் சமயங்களில் அவர்களின் வீரப் பிரதாபங்களைச் சொல்லி வந்திருக்கிறார்.   அப்பா சொன்ன வீரதீரக் கதைகளைக் கேட்ட மயங்க் யாதவுக்கு, தானும் அப்பாவின் ஹீரோக்களைப்போல் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது.

 

ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கான சைரன்களைச் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்த பிரபு யாதவால், தனது மகனுக்குள் கனவை மட்டுமே விதைக்க முடிந்தது. மயங்கை ஒரு வீரனாக்க தேவையான பண வசதி ஏதும் அவருக்கு இல்லை. மகனுக்கு சத்தான உணவுகளை கொடுக்க முடியவில்லை. வேகப்பந்து வீச தேவையான ஷூக்கள்கூட இல்லாமல் ஆரம்ப காலத்தில் வெறும்காலில் ஓடித்தான் பந்து வீசியிருக்கிறார் மயங்க் யாதவ். இந்த நேரத்தில்தான் தாரக் சின்ஹா, தேவேந்தர் சர்மா என்ற இரு பயிற்சியாளர்கள் அவர்களுக்கு கைகொடுத்துள்ளனர். சோனட் கிளப் என்ற தங்களின் அமைப்பில் மயங்க் யாதவைச் சேர்த்து அவருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

 

மயங்க் யாதவுக்கு 14 வயதாக இருந்தபோது அவன் எங்களிடம் வந்து சேர்ந்தான். நாங்கள் அப்போது எங்கள் கிளப்புக்கு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் மயங்க்கின் அப்பா, அவனை எங்களிடம் அழைத்து வந்தார். சில பந்துகளை மயங்க் வீசிக் காட்டியதும், நாங்கள் தேடும் வேகப்பந்து வீச்சாளர் இவன்தான் என்பதை அறிந்துகொண்டோம்.. உடனே மயங்கை எங்கள் கிளப்பில் சேர்த்து பயிற்சி கொடுக்க தொடங்கினோம். பயிற்சிக்காக வந்தபோது மயங்குக்கு சொந்தமாக ஷூக்கள்கூட இல்லை. அதைக்கூட கிளப்தான் அவனுக்கு வாங்கிக்கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் போஷாக்கான ஆகாரம்கூட அவனுக்கு வீட்டில் கிடைக்கவில்லை. போட்டி நடக்கும் நாட்களிலும், பயிற்சிகளிலும் கிளப்தான் அதற்கு ஏற்பாடு செய்ததுஎன்கிறார் மயங்கின் சிறு வயது பயிற்சியாளரான தேவேந்தர் சர்மா.

 

தன்னை ஆதரித்த கிளப்புக்கு மிக விரைவிலேயே சொத்தாக மாறிப்போனார் மயங்க். எதிரணி வீர்ர்களின் தலையை குறிவைத்து மயங்க் பந்துகளை வீச, அவரைக் கண்டாலே மற்ற டெல்லி கிளப்களின் பேட்ஸ்மேன்கள் அலறத் தொடங்கினார்கள். தலையைப் பார்த்து பந்துபோடும் வீரன் என்ற பெயர் வெகு சீக்கிரத்தில் மயங்க் யாதவுக்கு கிடைத்தது.

 

கிளப் கிரிக்கெட் பயணம் முடிந்து டெல்லிக்காக மயங்க் ஆடச் செல்ல, விஜய் ஹசாரே போட்டியில் அவரது திறன் வெளிப்பட்டிருக்கிறது.  ஒரு முக்கியமான போட்டியில் எதிரணி வெற்றிபெற 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதை விட்டுக்கொடுக்காமல் டெல்லியை ஜெயிக்க வைத்திருக்கிறார் மயங்க். லக்னோ அணியின் அப்போதைய பயிற்சியாளரான கவுதம் காம்பீரும், விஜய் தாஹியாவும் அந்த போட்டியை பார்த்திருக்கிறார்கள். மயங்கைப் பார்த்து வியந்திருக்கிறார்கள்.  பையன் சூப்பராக பந்துவீசுகிறானே என்று தோன்ற 2022-ல் நடந்த த ஐபிஎல் ஏலத்தில் மயங்க் யாதவின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு அவரை வாங்கிப் போட்டிருக்கிறார்கள்.

  ஆனால் அந்த ஆண்டு அவருக்கு ஐபிஎல்லில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டில் (2023) காயம் காரணமாக அவரால் ஐபிஎல் போட்டிகளில் ஆட முடியவில்லை. சரியான ஷூக்களை அணியாமல் பந்து வீசியதால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இப்படி 2 ஆண்டுகள் வீணான நிலையில் இந்த ஆண்டு மயங்க் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

 முதல்  அடுத்தடுத்து 150 கிலோமீட்டருக்கு மேல் வேகமாக பந்துவீசி லக்னோ அணியை வெற்றிபெறச் செய்திருக்கிறார் மயங்க் யாதவ். இதில் ஒரு பந்தின் வேகம் மட்டும் 155.8.

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு கைகொடுத்த முகமது ஷமி, இப்போது அறுவைச் சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழ, இப்போது அதற்கு விடையாய் வந்திருக்கிறார் மயங்க் யாதவ்.

பும்ராவைப் போல ஐபிஎல் வெற்றியை சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்வார் என்று நம்புவோம்.

 

 

 

 

Sunday, March 10, 2024

மாறிய இயக்குநர்…, டப்பிங் பேச மறுத்த ஜனகராஜ் – குணா ரகசியங்கள்!

 


 மஞ்சுமல் பாய்ஸ்படத்தின் வெற்றிக்கு பிறகு, கமல் நடித்த குணா திரைப்படம் ரசிகர்களிடையே மீண்டும் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த சூழலில் குணா திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், இயக்குநருமான ராசி. அழகப்பன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய  படங்களின் கமர்ஷியல் வெற்றிக்குப் பிறகு, வித்தியாசமான ஒரு கலைப் படத்தை எடுக்க கமல் விரும்பினார். இதற்கான முயற்சியின் விளைவுதான் குணா திரைப்படம். இப்படத்துக்காக கமல் உடல் எடையைக் குறைப்பது, உடல் நிறத்தை குறைப்பது என பல மாற்றங்களைச் செய்தார்.

குணா திரைப்படத்தை முதலில் மலையாள இயக்குநரான சிபி மலையில்தான் இயக்குவதாக இருந்தது. இப்படத்தின் கதை விவாதங்கள் மற்றும் லொகேஷன் தேடும் பணிகளில் ஆரம்ப காலத்தில் இவரும் கமலுடன் பணியாற்றினார். ஆனால் பிறகு சில காரணங்களால் குணா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதிலிருந்து விலகினார்.

 

குணா திரைப்படத்தின் படப்பிடிப்பை முதலில் குணசீலம் பகுதியில்தான் நடத்துவதாக  இருந்தது. ஆனால் குளுமையான பகுதியில் படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கமல், கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார்.

இயக்குநர் ராசி அழகப்பன், சந்தான பாரதியின் சகோதரரும் நடிகருமான சிவாஜி ஆகிய 2 பேர் மட்டுமே இப்படத்தின் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

குணா படத்தில் சிபிஐ அதிகாரியாக முக்கிய வேடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்துள்ளார். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்தது. அதனால் மலைப் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்பது கடினம் என்று கமலிடம் எஸ்.பி.பி கூறியிருந்தார். ஆனால் எஸ்.பி.பிதான் இந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த கமல், அதில் எஸ்.பி.பியின் கதாபாத்திரத்துக்கும் சுவாசப் பிரச்சினை இருப்பதுபோல் கதையை அமைத்தார்.

 

குணா குகைக்கு டெவில்ஸ் கிச்சன் என்பதுதான் முன்பு பெயராக இருந்தது. ஆபத்தான அந்த பகுதியில் விழுந்தால் உயிருக்கே ஆபத்து என்று கமலிடம் அந்த இடத்தைக் காட்டிய ஜோசப் என்ற வழிகாட்டி  எச்சரித்துள்ளார். ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.

இப்படத்தின் ஷூட்டிங்கின்போது சண்டைப்  பயிற்சியாளர் விக்ரம் தர்மாவின் குழுவைச் சேர்ந்த 10 சண்டைப் பயிற்சியாளர்களை கமல் உடன் வைத்திருந்தார். குணா குகையின் மீது ஒரு ராட்டிணத்தைப் பொருதி, படக்குழுவினரை குகைக்குள் கொண்டுசெல்லும் முயற்சிக்கு அவர்கள்தான் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

குகைக்குள் படப்பிடிப்பு நடக்கும்போது உள்ளே இருப்பவர்கள் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிஸ்கெட்களை மட்டுமே அவர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

 

குணா படத்தின் டப்பிங்கின்போது ஜனகராஜுக்கும் இயக்குநர் சந்தான பாரதிசிவாஜி சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு அது கைகலப்பில் முடிந்துள்ளது. அதனால் படத்தின் டப்பிங்குக்கு வர ஜனகராஜ் மறுத்துள்ளார். இயக்குநர்கள் சங்கம் வரை இப்பிரச்சினை சென்றிருக்கிறது. பிறகுதான் ஜனகராஜ் டப்பிங் பேசியிருக்கிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு ஜனகராஜை தனது திரைப்படங்களில் நடிக்கவைப்பதை கமல்ஹாசன் தவிர்த்தார். ஜனகராஜின் சினிமா வாழ்க்கையில் சரிவு ஏற்பட தொடங்கியது.

 

குணா படம் வெளியான அதே காலகட்டத்தில் ரஜினி நடித்த தளபதி படம் வெளியானது. அப்போதைய சூழலில் தளபதி ஹிட் அடிக்க, குணா வசூலில் சொதப்பியது. ஆனால் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்காவிட்டாலும், விமர்சன ரீதியாக குணா நல்ல பெயர் வாங்கியது. 

 

சிவக்குமார் வேடத்தில் நடித்த ரவிச்சந்திரன் – காதலிக்க நேரமில்லை 60

 


 காதலிக்க நேரமில்லைபடம் வெளியாகி கடந்த 24-ம் தேதியுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அதன் வசனகர்த்தாவான சித்ராலயா கோபுவின் மகன் சித்ராலயா ஸ்ரீராம்வாவ் தமிழாவுக்காக பகிர்ந்துகொள்கிறார்

மாற்றத்தை விரும்பிய ஸ்ரீதர்:

1963-ல்நெஞ்சம் மறப்பதில்லைஎன்ற சீரியஸான காதல் கதையை  இயக்கிய ஸ்ரீதர், கொஞ்சம் மாறுதலுக்காக அடுத்த படத்தை காமெடி படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி தனது நண்பர் சித்ராலயா கோபுவிடம் கூறியிருக்கிறார். ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.

சிவக்குமாருக்கு பதில் ரவிச்சந்திரன்:

 காதலிக்க நேரமில்லைபடத்தில் ரவிச்சந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சிவக்குமார்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் ஒரு சில காரணங்களுக்காக அவருக்கு பதில் அந்த பாத்திரத்தில் புதுமுக நடிகரான ரவிச்சந்திரன் நடித்தார்.

தாதா மிராஸியின் தாக்கம்:

காதலிக்க நேரமில்லைபடத்தின் ஹைலைட்டே பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சிதான். இந்த காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் இயக்குநர் தாதா மிராஸி.  புதிய பறவைஉள்ளிட்ட பல படங்களை இயக்கிய தாதா மிராஸி, கதை சொல்லும்போது தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். அவரை இமிடேட் செய்து ஒரு காட்சி வைத்தால் நன்றாக இருக்குமே என்று சித்ராலயா கோபுவிடம் இயக்குநர் ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் செய்த டிஸ்கஷனுக்கு பிறகு நாகேஷ் கதை சொல்லும் சீன் உருவாகி இருக்கிறது.

நடிக்க மறுத்த சச்சு:

நடிகை சச்சு காமெடி கேரக்டரில் நடித்த முதல் படம்காதலிக்க நேரமில்லை’. முதலில் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சச்சு தயங்கியிருக்கிறார். பின்னர் இயக்குநர் ஸ்ரீதர், ‘இப்படத்தில் என்னைப் பொறுத்தவரை 3 நாயகர்கள், 3 நாயகிகள். நாகேஷ்சச்சு கதாபாத்திரங்களையும் நாயகன் நாயகியாகத்தான் பார்க்கிறேன். இப்படத்தில் நாயகன் நாயகியைவிட சச்சு பாத்திரத்துக்குதான் மாடர்னாக ஒரு நடனக் காட்சி இருக்கிறது என்று சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

ஆழியாறு கெஸ்ட் ஹவுஸ்:

காதலிக்க நேரமில்லை படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழியாறு கெஸ்ட் ஹவுஸில் படமாக்கப் பட்டுள்ளது. இந்த பட்த்தில் நடித்த பலரும் அப்போது அங்கேயே தங்கி இருந்துள்ளனர். இந்த இட்த்தை நேரில் பார்த்து இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி எம்.எஸ்.வியை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீதர். இப்பட்த்தின் சில பாடல்களை அங்கேயே இருந்து கம்போஸ் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.

ஒரு காட்சியில் நடித்த சங்கர் கணேஷ்:

இந்தப் படத்தில் எம்.எஸ்.வியிடம் உதவியாளராக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் இருவரும் இப்படத்தில் இசையமைப்பாளர்களாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள்.

சீரியஸான பாலையா, நாகேஷ்:

காதலிக்க நேரமில்லை படத்தில் அனைவரையும் சிரிக்கவைத்த பாலையாவும், நாகேஷும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சீரியஸாக இருப்பார்களாம். நாகேஷின் பேச்சு த்த்துவங்கள் நிறைந்ததாக இருக்குமாம். 1964-ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படம் வெளியான பிறகுதான் நாகேஷின் மார்க்கெட் உச்சத்துக்கு போனது.

  வெண்ணிற ஆடை நிர்மலா:

இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக வெண்ணிற ஆடை நிர்மலா முதலில் ஒப்பந்தமாகி இருந்தார். சில நாட்கள் அவர் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால் பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

 

 

 

Wednesday, February 21, 2024

அமிதாப் பச்சனை நிராகரித்த வானொலி நிலையம்

 


இன்று உலக வானொலி தினம். ஆண்டுதோறும் பிப்ரவரி 12-ம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படும் என்று யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி இன்று உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக வானொலி தினம் கொண்டாடப்படும் சூழலில், வானொலியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்

உலகின் முதல் ரேடியோ ஒலிபரப்பு 1895-ம் ஆண்டு மே 13-ம் தேதி மார்க்கோனியால் செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் ரேடியோ ஒலிபரப்பு 1923-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் செய்யப்பட்டது. பாம்பே ரேடியோ கிளப் இந்த ஒலிபரப்பை செய்தது. பாம்பே ரேடியோ கிளப்தான் இந்தியாவில் வானொலி சேவையை தொடங்கிய முதல் நிறுவனம்.

கடந்த 2023-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 479 வானொலி நிலையங்கள் உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 99.19 சதவீத மக்களை சென்று சேரும் வகையில் வானொலியின் சேவை உள்ளது.

ரேடியோ அலைகள் வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. இது ஒளியின் வேகத்துக்கு நிகரானதாகும்.

உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

உலகின் முதல் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு 1940-ம் ஆண்டில் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர், ரேடியோ சிக்னல்களை அனுப்பும் டவராகவும் பயன்படுத்தப்படுகிறது.

நம் நாட்டில் ஆல் இந்தியா ரேடியோ 1936-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தனது முதல் ஒலிபரப்பை தொடங்கியது.

இப்போது ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்துக்கு சொந்தமாக 415 வானொலி நிலையங்கள் உள்ளன. 23 மொழிகளில் அது ஒலிபரப்புகளை செய்து வருகிறது.

ஆல் இந்தியா ரேடியோவின் முக்கிய ஒலிபரப்பான விவித் பாரதி 1957-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆல் இந்தியா ரேடியோவுக்கு லோகோவாக இருக்கும் ட்யூனுக்கு இசையமைத்தவர் வால்டர் கஃப்மேன்.

இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அமிதாப் பச்சன், ஒரு காலகட்டத்தில் வானொலி அறிவிப்பாளராக விரும்பியுள்ளார். அப்போது அவரது குரல் சரியாக இல்லை என்று கூறி வானொலி நிறுவனம் அவரை நிராகரித்தது.

1936-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஆல் இந்தியா ரேடியோவில் முதல் முறையாக செய்தி ஒலிபரப்பப்பட்டது.

1952-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி முதல் இசை தொடர்பான நிகழ்ச்சிகள் ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

அஸ்வின் 500 –போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

 


இந்திய கிரிக்கெட்டுக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அந்த சாதனையை படைத்தவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.  நம் சென்னை பையனான ரவிச்சந்திரன் அஸ்வின்தான் அந்த சாதனை நாயகன். இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில்  சக் கிராலேவின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்த  வெற்றி அஸ்வினுக்கு அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. அதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள் பல.

அஸ்வினின் வெற்றிக்கு வித்திட்ட முதல் நபர் அவரது அப்பா ரவிச்சந்திரன். சென்னையில் கிளப் கிரிக்கெட்டில் ஆடிவந்த ரவிச்சந்திரனுக்கு இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது கனவு. ஆனால் அந்த கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. தன்னால் முடியாததை மகனை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் விரும்பினார். கிரிக்கெட் வீர்ராகும் கனவை தன் மகனுக்குள் விதைத்தார்.

ஆரம்பத்தில் அஸ்வினுக்கு சுழற்பந்து வீச்சில் ஆர்வம் அதிகம் இல்லை. ஒரு பேட்ஸ்மேனாகத்தான் விரும்பியுள்ளார். பள்ளிக்கூட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், மித வேகப் பந்து வீச்சாளராகவும்தான் அஸ்வின் இருந்துள்ளார். இந்த சூழலில் அவரது பயிற்சியாளரான சி.கே.விஜய்தான் அஸ்வினின் உடல்வாகு ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கானது என்று கண்டுபிடித்துள்ளார். அதை அஸ்வினுக்கு சொல்லி, அவரை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார். அந்த வகையில் அஸ்வினை உருவாக்கிய இரண்டாவது நபர் அவரது பயிற்சியாளர்.

சுழற்பந்து வீச்சாளரான பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்த அஸ்வினுக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்த அணி சிஎஸ்கே. ஐபிஎல்லில்  சிஎஸ்கேவுக்காக பல விக்கெட்களை அஸ்வின் கொய்ய,  2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அணியின் ஒரே தமிழராக இடம்பெற்றார் அஸ்வின்.

இந்தியா உலகக் கோப்பையை வென்ற அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் டேரன் பிராவோவின் விக்கெட்டை முதல் விக்கெட்டாக வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் இன்று 500-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி நிற்கிறது.

பொதுவாக நன்றாக ஆடும் வீர்ர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும். ஆனால் அஸ்வினுக்கு அப்படி நடக்கவில்லை. காரணம் பாலிடிக்ஸ். தோனியின் காலத்தில் கொண்டாடப்பட்ட அஸ்வின், விராட் கோலி வந்ததும்  கொஞ்சம் ஒதுக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மிக முக்கிய ஆட்டங்களில், குறிப்பாக இந்தியா ஒரு ஸ்பின்னரை மட்டுமே வைத்து ஆடும் வெளிநாட்டு பிட்ச்களில் அஸ்வின் ஒதுக்கப்பட்டு, ஜடேஜா முன்னிறுத்தப்பட்டார்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அஸ்வின் கவலைப்படவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விக்கெட்களை கொய்தார். அவரது இடைவிடாத போராட்டம்தான் இன்று 500 விக்கெட்களை கொய்ய அவருக்கு உதவியிருக்கிறது.

அஸ்வினுக்கு சிறு வயதில் ஒரு வழக்கம் இருந்துள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியில் தான் சிறப்பாக ஆடியதாக அவருக்குத் தோன்றினால், அந்த போட்டியில் அணிந்த சட்டையை வீட்டில் ஒரு அறையில் மாட்டி வைப்பார். அவ்வாறு முக்கிய போட்டிகளில் அணிந்த சட்டைகளை மாட்டி வைப்பதற்காகவே அவரது வீட்டில் ஒரு அறை உள்ளது. 500-வது விக்கெட்டை எடுத்தபோது அணிந்த சட்டையும் அந்த அறைக்குள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்ப்போம்.