Powered By Blogger

Thursday, November 9, 2017

இந்தியாவின் யார்க்கர் எக்ஸ்பிரஸ்

ஜஸ்பிரித் பும்ராவின் அபாரமான யார்க்கர்களுக்கும், அவரது தாயின் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
சிறு வயதில் கிரிக்கெட்டில், குறிப்பாக பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த பும்ராவுக்கு அவரது தாயார் தல்ஜீத் விதிக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டுதான். முதல் கட்டளை வீட்டுக்குள் விளையாட வேண்டும். 2-வது கட்டளை, விளையாட்டின்போது சத்தம் எழுப்பி தனது தூக்கத்தை கெடுக்கக் கூடாது. இந்த 2 கட்டளைகளையும் நிறைவேற்ற பும்ரா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தன் வீட்டு ஹாலில் தரையும், சுவரும் இணையும் ஸ்கர்டிங் பகுதியில் குறிபார்த்து பந்துவீசு வதுதான் அந்த வழி. அப்படிச் செய்தால் ஒரே இடத்தில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்சி பெறுவதுடன் அதிக சத்தம் வராமலும் அவரால் ஆட முடிந்தது. அப்படி குறிபார்த்து பந்து வீசிப் பழகியதுதான் இன்று மிக நேர்த்தியாக பேட்ஸ்மேனின் கால் களுக்கு நெருக்கமாக யார்க்கர்களை வீச அவருக்கு உதவுகிறது. டி 20 போட்டி களுக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் முதல் இடம் பிடிக்கவும் உதவியுள்ளது.
பும்ராவின் தந்தையான ஜஸ்பீர் சிங் இளம் வயதிலேயே ஹெபடைடிஸ் பி நோயால் இறக்க, பும்ராவையும் அவரது சகோதரியையும் பள்ளி ஆசிரியையான தாயார் தல்ஜீத்தான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். தன் மகன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று தாயார் ஆசைப்பட, பும்ராவோ கிரிக்கெட் மீது காதல் கொண்டவராக இருந்தார்.
14-வது வயதில் தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புவதாக தாயாரிடம் கூறியுள்ளார் பும்ரா. ஆனால் கிரிக்கெட் விளையாடி தன் மகனால் ஒரு பெரிய ஆளாக வரமுடியுமா என்ற சந்தேகம் அவரது தாயாரின் மனதில் இருந்தது. தன் தயக்கத்தை பும்ராவிடம் கூற, “என்னை நம்புங்கள். நான் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டில் சாதிப்பேன்” என்று உறுதியாக கூறியுள்ளார் பும்ரா. இதைத்தொடர்ந்து அரை மனதுடன் அவரை பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். அதே நேரத்தில் தனக்காக படிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். அதிகாலையில் எழுந்து பயிற்சிக்கு சென்ற பும்ரா, அதன் பிறகு பள்ளிக்குச் சென்று படித்து, மாலையில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்று தன் கிரிக்கெட் ஆற்றலை கூர் தீட்டியுள்ளார். அதேநேரத்தில் படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்து தன் தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார்.
பும்ராவுக்கு சிறுவயதில் பயிற்சி கொடுத்தவரான கிஷோர் திரிவேதி, அவரைப் பற்றி கூறும்போது, “இளம் வயதிலேயே யார்க்கர்களை துல்லியமாக வீசும் ஆற்றல் பும்ராவுக்கு இருந்தது. அவன் ஆடுகளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு அடையாளத்தை வைத்து அந்த இடத்தில் துல்லியமாக பந்தை பிட்ச் ஆகச் செய்து வீசுவான். தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை இதேபோன்று ஓர் இடத்தில் பந்தை பிட்ச் செய்து பயிற்சி பெறுவான்” என்கிறார்.
இளவயதில் பயிற்சி பெற்றது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள பும்ரா, “நெஹ்ரா, ஜாஹிர் கான், மிட்செல் ஜான்சன் ஆகியோர்தான் என் இளம் வயது ஹீரோக்கள். இவர்களில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினால், உடனடியாக அடுத்த சில நாட்களுக்கு அதே போன்று பந்து வீசி பயிற்சி பெறுவேன். சில நாட்களுக்கு பிறகு என் அடுத்த ஹீரோ சாதிக்கும்போது, அவரது பாணியைக் கடைபிடித்து பயிற்சி மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
யார்க்கர் பந்துகளை வீசும் பும்ராவின் ஆற்றல், குஜராத் கிரிக்கெட் சங்கம் நடத்திய பயிற்சி முகாமில் அவரைத் தேர்வுபெற வைத்துள்ளது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி குஜராத் அணியில் கால் பதித்துள்ளார் பும்ரா. 2013-ம் ஆண்டு, சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் இவர் பந்து வீசிய விதம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான ஜான் ரைட்டை பெரிதும் கவர்ந்துள்ளது. உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மேலாளரான ராகுல் சங்வியை அழைத்துள்ளார் ஜான் ரைட்ஸ். “அற்புதமான பந்து வீச்சாளர் ஒருவரைக் கண்டு பிடித்துவிட்டேன். உடனடியாக அவரை நம் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்க நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு இடம் கிடைத்துள்ளது.
அங்கே அவருக்கு மலிங்காவின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஏற்கெனவே யார்க்கர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவை, மலிங்கா மேலும் கூர்தீட்டினார். ஸ்டம்புக்கு முன் காலணியை வைத்து அதைக் குறிபார்த்து பந்துவீசும் தன் பயிற்சி முறையை பும்ராவுக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். இதனால் மேலும் வலுப்பெற்றார் பும்ரா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆர்சிபி அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியிலேயே 32 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை பும்ரா கைப்பற்றியுள்ளார். அதில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டும் ஒன்று. ஐபிஎல் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் அவரை இந்திய அணிக்கு விரைவாக அழைத்துச் சென்றது.
2016-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார் பும்ரா. முதல் போட்டியிலேயே 40 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, அதன் பிறகு இந்தியாவின் யார்க்கர் எக்ஸ்பிரஸாக மாறி விக்கெட்களை அள்ளத் தொடங்கினார்.
28 ஒருநாள் போட்டிகளில் 52 விக்கெட்களை வீழ்த்திய அவர், குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் 28 டி20 போட்டிகளில் 38 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்துவதாலும், குறைந்த ரன்களை வழங்குவதாலும் டி 20 போட்டிக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இந்த வாரம் இடம் பிடித்துள்ளார் பும்ரா. அத்துடன் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் 3-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சாதிக்க பும்ராவை வாழ்த்துவோம்.

Wednesday, November 1, 2017

விடைபெறுகிறார் இந்திய கிரிக்கெட் போராளி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முட்கள் நிறைந்த பாதையில் அதிகம் பயணித்தவர் என்று ஆஷிஷ் நெஹ்ராவைக் கூறலாம். 1999-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்த நெஹ்ரா, மற்ற பந்து வீச்சாளர்களை விட அதிக காலம் இந்திய அணிக்காக ஆடியவர். ஆனால் இந்த 18 ஆண்டுகளில் அவர் விளையாடிய போட்டிகள் மிகவும் குறைவு. 17 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும், 26 டி 20 போட்டிகளிலும் மட்டுமே அவர் பங்கேற்றுள்ளார். அடிக்கடி காயம் அடைந்ததும், தேர்வாளர்கள் அவர் விஷயத்தில் காட்டிய பாரபட்சமுமே இதற்கு காரணம்.
1999-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஆஷிஷ் நெஹ்ரா. இந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியதால் மீண்டும் அவரை அணிக்கு தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவினர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கங்குலி கேப்டன் ஆன பிறகு அவரது வாழ்க்கையில் வெளிச்சம் விழுந்தது. 2001-ம் ஆண்டு கங்குலி தலைமையில் ஜிம்பாப்வேக்கு பயணம் செய்த இந்தியக் குழுவில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இடம் கிடைத்தது.
இந்த தொடரில் ஜாகிர் கானுடன் சேர்ந்து தொடக்க ஓவர்களில் நெஹ்ரா ஜாலம் செய்ய, கங்குலியின் பிரியத்துக்கு உரியவரானார். 2003-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த நெஹ்ரா, 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அதன் பின் சில போட்டிகளில் சொதப்ப, 2004-ம் ஆண்டில் தேர்வுக் குழுவினர் இவரைத் தூக்கி அடித்தனர். அதோடு காயங்களும் படுத்த, நெஹ்ராவின் பயணம் தடைபட்டது. ஆனால் நெஹ்ரா, போராடிக்கொண்டே இருந்தார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அவரது செயல்பாடு இந்திய அணியின் அப்போதைய கேப்டன் தோனியையும், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனையும் ஈர்த்தது. இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக இருந்த ஜாகிர் கான் காயமடைய அவருடைய இடத்துக்கு நெஹ்ராவை கொண்டுவந்தது தோனி - கிர்ஸ்டன் கூட்டணி. இதனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ம் ஆண்டில் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் நெஹ்ரா.
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் வரை நெஹ்ராவுக்கு மீண்டும் வசந்த காலமாக இருந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய பந்துவீச்சின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய நெஹ்ரா, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இப்போட்டியின்போது காயமடைந்த அவரால் சில காலம் விளையாட முடியாமல் போனது. அதன் பிறகு தேர்வுக்குழுவினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நெஹ்ரா, 5 ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு கடந்த 2016-ம் ஆண்டுதான் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
ஒருபுறம் தேர்வுக் குழுவால் புறக்கணிக்கப்பட்ட நெஹ்ராவை மறுபுறம் காயங்களும் துரத்தின. 12 முறை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளான அவர் ஒவ்வொரு முறையும் கடுமையாக பயிற்சிகளைச் செய்து வேகப்பந்து வீச்சுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார். காயங்களை விட தேர்வுக்குழுவின் புறக்கணிப்புதான் நெஹ்ராவை சோர்வடைய வைத்தது. இதுபற்றி ஒருமுறை செய்தியாளரிடம், “ஒருவேளை என் முகம் தேர்வாளர் களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ” என்று நெஹ்ரா கூறியுள்ளார்.
38 வயதிலும் புயலாக பந்து வீசிவரும் நெஹ்ரா, 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களையும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களையும், 26 டி 20 போட்டிகளில் 34 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடை பெறவுள்ள டி 20 போட்டியுடன் இந்த போர் வீரன் கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுக்கிறார்.
“நன்றாகத்தானே பந்து வீசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓய்வு பெற ஏன் அவசரப்படுகிறீர்கள்” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும் நிலையில் ஓய்வு பெறுவதுதான் ஒரு விளையாட்டு வீரனுக்கு சிறப்பு சேர்க்கும். ஏன் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும்வரை விளையாடக்கூடாது என்பதே என் கருத்து” என்று கூறியுள்ளார் நெஹ்ரா.
ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் பயிற்சியாளராகவோ வர்ணனையாளராகவோ புதிய அவதாரம் எடுப்பது குறித்து யோசித்து வருவதாக நெஹ்ரா கூறியுள்ளார். ஒரு வீரராக இல்லாவிட்டாலும், மற்ற வழிகளில் அவரது சேவை தொடரட்டும்