Powered By Blogger

Saturday, February 1, 2020

இந்திய கிரிக்கெட் வரலாறு : உலகக் கோப்பையில் வெற்றி




1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணியைச் சந்தித்தது இந்தியா. தற்போதை சூழலில் ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கோப்பையின் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தால் மற்ற அணிகள் என்ன நினைக்குமோ, அதுதான் அப்போதும் நடந்தது. இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்ததற்கு காரணம் அதிர்ஷ்டம் என்று மற்ற அணிகள் நினைத்தன. இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆடவிருந்த இங்கிலாந்து அணியும் அப்படித்தான் நினைத்தது. அதனாலேயே அரை இறுதிப் போட்டியை விட அதற்கு அடுத்து நடக்கவுள்ள இறுதிப் போட்டியை எதிர்கொள்வது பற்றி அந்த அணி திட்டமிடத் தொடங்கியது.

ஆனால் தாங்கள் அரை இறுதிப் போட்டிவரை முன்னேறியதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல என்பதை இந்திய அணி மீண்டும் மைதானத்தில்  நிரூபித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை அது வெளிப்படுத்தியது. அரை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 60 ஓவர்களில் 213 ரன்களில் சுருட்டியது இந்தியா. இப்போட்டியில் கபில்தேவ் 3 விக்கெட்களையும், ரோஜர் பின்னி, மொகீந்தர் அமர்நாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷ்பால் சர்மா 61 ரன்களையும், சந்தீப் பாட்டீல் 51 ரன்களையும் குவித்தனர்.

அடுத்தது இறுதிப் போட்டி. இதில் முதலில் ஆடிய இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல்  183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இந்திய அணியில் ஸ்ரீகாந்த் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 38 ரன்களைக் குவித்தார்.
குறைந்த ரன்களை எடுத்ததால் மனமுடைந்து போனார்கள் இந்திய வீரர்கள். அப்போது அவர்களிடம் பேசிய கபில்தேவ், “நாம் இத்தனை தூரம் வருவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் வந்துவிட்டோம். எனவே எதற்க்கும்  துணிந்து களத்தில் இறங்குவோம். மைதானத்தில் பந்து நம்மைத் தேடி வரும் முன் நாம் பந்தை துரத்திப் பிடிப்போம். இப்படிச் செய்தால் நாம் கண்டிப்பாக ஜெயிக்கலாம்” என்றார்.

கபில்தேவின் இந்த உணர்ச்சி உரை இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை கொடுத்தது. மைதானத்தில் ஒவ்வொரு வீரரும் 10 வீரர்களுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தினர். இதனால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நினைப்புடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல, உலகமே நம்மை அண்ணாந்து பார்த்தது.




இந்தியன் நெ.1 : காந்தியால் கிடைத்த ஆஸ்கர்



]ஆஸ்கர் விருதுபெற்ற இந்தியர் ஒருவரின் பெயரைக் கூறுங்கள் என்று யாராவது கேட்டால்,   உடனடியாக  ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரைக் கூறுவோம். இன்னும் தீவிரமாக யோசித்தால் சிலர் ரசூல் பூக்குட்டியின் பெயரைக் கூறுவார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பாக, 1983-ம் ஆண்டிலேயே ஆஸ்கர் விருதைப் பெற்றவர் பானு ரஜோபாத்யே அத்தையா (Bhanu Rajopadhye Athaiya) என்ற பெண்மணிதான். ‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அவர் இத்துறைக்காக 1983-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
1929-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் பானு அத்தையா பிறந்தார். அவரது தந்தை அன்னாசாகேப், ஒரு ஓவியராக இருந்தார். பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அவரது தாயாரும் இந்த துறையில் அவர் கல்வி கற்க உதவினார். படிப்பை முடித்த பிறகு பல்வேறு பத்திரிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பானு அத்தையா பணியாற்றி உள்ளார்.
இந்த காலகட்டத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ‘ஈவ்ஸ் வீக்லி’ பத்திரிகையின் ஆசிரியர் ஒரு பொட்டிக்கை ஆரம்பிக்க, அவரது அழைப்பின் பேரில் அதில் ஆடை வடிவமைப்பாளராக  பணியாற்றினார்  பானு அத்தையா. இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்ததுடன், அவர் வடிவமைத்த ஆடைகள் மும்பை நகரில் புகழ்பெறவும் தொடங்கியது. இதைத்தொடர்ந்து குரு தத் தயாரிப்பில் தேவ் ஆனந்த் நடித்த ‘சிஐடி’ என்ற படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு 1956-ம் ஆண்டில் அவரைத் தேடி வந்தது. இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து குரு தத்தின் குழுவில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளார் பானு அத்தையா.
பாலிவுட் படங்களில் முக்கியமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக பானு அத்தையா இருந்த காலத்தில் ‘காந்தி’ படத்தை எடுப்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளார் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தனது கனவுப் படமான ‘காந்தி’யில் பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளைப் போலவே இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். இதைத்தொடர்ந்து இப்படத்தில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய உடைகளை வடிவமைப்பதற்காக ஜான் மல்லோ (John Mollo),  என்பவரை நியமித்த ஆட்டன்பரோ, இந்திய கதாபாத்திரங்கள் அணியும் ஆடைகளை வடிவமைப்பதற்காக ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை சிமி கரேவால் மூலமாக பானு அத்தையாவைப் பற்றி கேள்விப்பட்டுள்ளார். உடனடியாக அவரை  சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்டன்பரோ கூறினார்.

இந்த தகவலை சிமி கரேவால், பானு அத்தையாவிடம் கூறினார்.  ஒரு மிகப்பெரிய படத்துக்கு தேவையான ஆடைகளை தன்னால் வடிவமைக்க முடியுமா என்று ஆரம்பத்தில் தயங்கிய பானு அத்தையா, பின்னர் இந்த சவாலை ஏற்கத் தயாரானார். தன்னைப் பற்றிய பயோடேட்டா மற்றும் ‘காந்தி’ படத்துக்கு எப்படியெல்லாம் ஆடைகளை வடிவமைக்கலாம் என்பது பற்றிய திட்டங்களுடன் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆட்டன்பரோவை சந்தித்துள்ளார் பானு அத்தையா.

 இந்த சந்திப்புக்கு பிறகு,  ‘காந்தி படத்தில்   இந்தியா தொடர்பான கதாபாத்திரங்களுக்கு பானு அத்தையாதான் ஆடை வடிவமைப்பாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்  ஆட்டன்பரோ.  ‘காந்தி’ படத்தின் முனு ஸ்கிரிப்டையும் பானு அத்தையாவிடம்  கொடுத்த ஆட்டன்பரோ,  படப்பிடிப்பு  தொடங்க 12 வாரங்கள் ஆகும் என்றும், அதற்குள் படத்துக்கு தேவையான ஆடைகளை வடிவமைக்குமாறும்   சொல்லிவிட்டு சென்றார். அன்றிலிருந்து, ‘காந்தி’ படத்தின் படப்பிடிப்பு முடியும் நாள் வரை தூக்கத்தை மறந்து வேலை பார்த்தார்  பானு அத்தையா.

காந்தி படத்துக்காக பணிபுரிந்த நாட்களைப் பற்றி பின்னாளில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பானு அத்தையா, “மும்பையில் உள்ள அசோகா ஓட்டல்தான் எங்களின் படக்குழுவினர் சந்திக்கும் முக்கிய மையமாக இருந்தது. இப்படத்தில் காந்தி, நேரு கஸ்தூர்பா போன்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமின்றி, உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளும் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைக்க வேண்டி இருக்கும். தினமும் காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்று சொன்னால் எங்கள் குழுவினர் 5 மணிக்கெல்லாம் அங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் 9 மணிக்குள் அவர்கள் அனைவருக்கும் ஆடைகளை மாற்றி அதைச் சரிபார்க்க முடியும். இதேபோல் படப்பிடிப்பு முடிந்த பிறகும் நாங்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்ப முடியாது. அனைத்து உடைகளையும் மடித்துவைத்து ஒழுங்குபடுத்திய பிறகே வீட்டுக்கு செல்ல முடியும்.
இப்படத்தில் காந்தியின் உடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதற்காக நாங்கள் அவரைப் பற்றி நிறைய படிக்கவேண்டி இருந்தது. மேலும் காந்தியின் பல்வேறு தரப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கவேண்டி இருந்தது.  அத்துடன் காந்தியின் வாழ்க்கை வரலாறு பரந்து விரிந்த பல்வேறு காலக்கட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான உடைகளை மக்கள் அணிந்துவந்தனர். இந்த உடைகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து இப்படத்தில் பயன்படுத்தினோம்” என்கிறார்.
காந்தி படத்துக்காக பானு அத்தையா மேற்கொண்ட கடும் உழப்பு வீண் போகவில்லை. 1983-ம்  ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பானு அத்தையா பெற்றார்.
‘காந்தி’ படத்துக்கு பிறகு ஆமிர்கான் நடித்த ‘லாகான்’, ‘லேகின்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பானு அத்தையா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.   2 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ள பானு அத்தையா, இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராக விளங்குகிறார்.

வாழ்க்கைப் பாதை
மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் 1929-ம் ஆண்டு பானு அத்தையா பிறந்தார். 1956-ம் ஆண்டுமுதல் 2004-ம் ஆண்டுவரை பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அத்தையா, அதன்பிறகு இத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். 1983-ம் ஆண்டு ஆஸ்கர் விருதைப் பெற்ற இவர், ‘காந்தி’ படத்துக்காக பாஃப்டா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டர்.  1991 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் இவர் வென்றுள்ளார்.



   








இந்தியன் நம்பர் 1 - இந்திய கிரிக்கெட்டின் தந்தை




இந்தியாவில் இன்றைய தினம் கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்கள் மிகவும் குறைவு.  சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது.   ஆனால்  கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பே, இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அடி வெற்றிக்கொடி நாட்டியவர் மகாராஜா ரஞ்சித் சிங்ஜி. இந்திய கிரிக்கெட்டின் தந்தையாகவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய முதல் இந்தியராகவும் விளங்கும் மகாராஜா ரஞ்சித் சிங்கை (ரஞ்சி)  பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

1872-ம் ஆண்டில் கத்தியவாரில் ரஜபுத்திர குடும்பம் ஒன்றில் ரஞ்சி பிறந்தார். இவரது தந்தை ஜிவான்சிங்ஜி ஒரு விவசாயி. இருப்பினும் இவரது குடும்பம், ரஞ்சிஜியின்  தாத்தா வழியில் நவாநகர் அரசகுடும்பத்துக்கு உறவினர்களாக இருந்துள்ளனர். பிற்காலத்தில் நவாநகர் அரசராக இருந்த விபாஜிக்கும், அவரது மகன் கலூபாவுக்கும் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மகன் கலூபாவை அரண்மனையில் இருந்து விபாஜி வெளியேற்றினார். பின்னர் ரஜபுத்திர குடும்பங்களில் உள்ள வழக்கப்படி தனது தூரத்து உறவினரின் மகனான ரஞ்சியை தத்தெடுத்தார். அக்காலத்தில் நடந்த போர் ஒன்றில் விபாஜி வெற்றிபெற ரஞ்சியின் தாத்தா உதவியதாகவும், அதன் பிரதிபலனாகவே ரஞ்சியை தனது வாரிசாக  விபாஜி அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அரச குடும்பத்தின் வாரிசாக தத்தெடுக்கப்பட்ட ரஞ்சி,  மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு சென்ற ரஞ்சிக்கு, படிப்பைவிட  அந்நாட்டில் பிரபலமாக இருந்த கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் பிறந்தது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவரது வழக்கமாகிப் போனது.

நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவதோடு  நிறுத்திக்கொள்ளாமல், உள்ளூரில் சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்துக்குள் நடந்த பல போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரஞ்சி, பின்னாளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்காக ரஞ்சி ஆடிய ஆட்டங்கள், இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த சசெக்ஸ் கவுண்டி அணியின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடனடியாக தங்கள் கிளப்புக்காக ஆட அவரை ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
1895-ம் ஆண்டு சசெக்ஸ் அணிக்காக ஆடிய முதல் கவுண்டி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 77 ரன்களையும், 2-வது இன்னிங்ஸில் 150 ரன்களையும் குவித்து அனைவரையும் திகைக்கவைத்தார் ரஞ்சி. இதைத்தொடர்ந்து பல கவுண்டி போட்டிகளிலும் ரஞ்சி கலக்க, இங்கிலாந்தின் மூலை முடுக்கெல்லாம் அவரது புகழ் பரவியது.

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்கு தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த வழக்கத்தின்படி சசெக்ஸ் அணிக்காக ரன்மழை பொழிந்துவரும் ரஞ்சியை, அணியில் சேர்த்தால் என்ன என்ற கேள்வி இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழுவில் ஒலித்தது.   என்னதான் சிறப்பாக ஆடினாலும், ரஞ்சி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்றும்,  அவர் ஒரு இந்தியர் என்றும் கூறி சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில்  நீண்ட விவாதத்துக்கு பிறகு ரஞ்சியை இங்கிலாந்து அணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.

1896-ம் ஆண்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட ரஞ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிக்கெட்டில்  இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டங்களில் எப்படி அனல் பறக்குமோ, அதே போலத்தான் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும்போதும் அனல் பறக்கும். யாரிடம் தோற்றாலும் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கக் கூடாது என்பது இங்கிலாந்து ரசிகர்களின் எண்ணமாக இருக்கும். இந்நிலையில் தனது ஜென்ம வைரியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஞ்சியை களம் இறக்கியது இங்கிலாந்து.


1896-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக களம் இறங்கினார் ரஞ்சி. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேநேரத்தில் இந்த ஒரு சாதனையுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில்   62 ரன்களைக் குவித்த ரஞ்சி, 2-வது இன்னிங்ஸில் 154 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன்மூலம் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ரஞ்சியை இங்கிலாந்து தேர்வுக் குழுவுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ரஞ்சியும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரன் மழை பொழிந்தார்.  இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக உருவெடுத்தார்.  அப்போதுதான் கிரிக்கெட் விளையாட்டின் அரிச்சுவடிகளை படித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டனர்.

கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில்  நவாநகரின் ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்கவேண்டிய சூழல் வந்தது. இதைத்தொடர்ந்து 1904-ம் ஆண்டில் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துவிட்டு இந்தியா திரும்பினார் ரஞ்சி.

1907-ம் ஆண்டில் நவாநகரின் அரசராக பொறுப்பேற்ற ரஞ்சி, மக்கள் பணியில் ஈடுபட்டதுடன் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். 1933-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி அவர் காலமானார். அவர் மறைந்தாலும் கிரிக்கெட் உலகில் அவர் படைத்த சாதனைகள் இன்னும் அவரது பெயரை சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்கை போற்றும் வகையில் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடராக இது இன்னும் விளங்குகிறது.

ரஞ்சியும் கிரிக்கெட்டும்
இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரஞ்சி 2 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 989 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் 39 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். மேலும் இங்கிலாந்தில் 307 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள ரஞ்சி, இதில் 72 சதங்கள், 109 அரைசதங்கள் உட்பட மொத்தம் 24,692 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 285 ரன்களைக் குவித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வரலாறு - ஆல்ரவுண்ட் நாயகன் கபில்தேவ்



ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு காலத்தில் சொத்தையாகவே இருந்தது.  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளெல்லாம் இந்தியாவை துவைத்து எடுத்துக்கொண்டிருந்த காலத்தில், அதை மாற்ற வந்தவரைப் போல் இந்திய அணிக்குள் நுழைந்தார் கபில்தேவ்.

இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பை கபில்தேவுக்கு யாரும் தங்கத் தட்டில் தூக்கிக் கொடுக்கவில்லை. அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். 1970-களின் இறுதிக்காலத்தில் ஹரியாணா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கபில்தேவ் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் நிறைய விக்கெட்களை எடுத்ததால், இந்திய அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒவ்வொரு தேர்வுக்குழு கூட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார் கபில்தேவ்.

இந்த சூழ்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும்  இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நடப்பதைக் கேள்விப்பட்டு அங்கு  சென்றார் கபில்தேவ். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி அதிகாரபூர்வமற்ற முறையில்தான் அப்போது செல்வதாக இருந்தது. இருப்பினும்  இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தால், அதை வைத்து டெஸ்ட் அணிக்குள் இடம்பெற்று விடலாம் என்று நம்பினார் கபில்தேவ்.


இந்திய அணியின் அப்போதைய தேர்வுக்குழு தலைவரான ராஜ்சிங் துங்கர்பூரின் வீட்டைக் கண்டுபிடித்து, அவர் முன் போய் நின்றார்.  அந்தச் சமயத்தில் துங்கர்பூர் அவசர அவசரமாக தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருந்தார். கபில்தேவிடம் பேச அவருக்கு நேரமில்லை. “அவசரமாக வெளியில் செல்கிறேன். வந்த பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு செல்லும் அணியை தேர்வு செய்யத்தான் அவர் செல்கிறார் என்பதை அறியாத கபில்தேவும், அவர் வந்தபிறகு பேசலாம் என்று அங்குள்ள கேட்டின் அருகில் காத்திருந்தார்.

மதியத்தில் வீட்டை விட்டு கிளம்பிய துங்கர்பூர், அணியை தேர்வு செய்துவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் வந்தார். வாசலில் அவருக்காக அப்போதும் கபில்தேவ் காத்திருந்தார். வாட்ச்மேன் மூலம் இத்தகவலை கேள்விப்பட்ட துங்கர்பூர், கபில்தேவை அழைத்து வந்த விஷயத்தைக் கேட்டார். இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்க உதவி செய்யவேண்டும் என்று கபில்தேவ் கேட்டுக்கொண்டர்.

கபில்தேவைப் பற்றியும், அவரது பந்துவீசும் திறனைப் பற்றியும்  ஏற்கெனவே அறிந்திருந்த துங்கர்பூரின் மனதை, அவர் தனக்காக பல மணிநேரம் சாலையில் காத்திருந்த சம்பவம் உருக்கியது.   உடனடியாக கிரிக்கெட் வாரிய தலைவருக்கு போன் போட்டு, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியினருடன் கபில்தேவின் பெயரையும் சேர்க்கச் சொன்னார். இப்படி போராடி அணிக்குள் இடம்பிடித்த கபில்தேவ், இந்த தொடரில் சிறப்பாக ஆட அடுத்ததாக பாகிஸ்தான் செல்லும் அதிகாரபூர்வ டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். இந்த தொடரில் தன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் கபில்தேவ் மிரட்ட, அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார்.