Powered By Blogger

Friday, February 17, 2023

ஊசி போட்டு ஆடும் வீரர்கள் – இந்திய கிரிக்கெட் சீக்ரெட்ஸ்

 


ஸ்டிங் ஆபரேஷன் முறையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர்  சேதன் சர்மாவின் ரகசிய உரையாடலைப் பதிவு செய்து அதை ஒளிபரப்பியுள்ளது ஒரு தனியார் தொலைக்காட்சி. இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் பல விஷயங்களை, இந்திய கிரிக்கெட்டின் பல ரகசியங்களை இந்த உரையாடலில் வெளியிட்டுள்ளார்  சேதன் சர்மா. இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

போட்டிக்கு முன்பு ஊசி

இந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் இந்திய வீரர்கள் சிலர் போட்டிகளுக்கு முன்னதாக உடல்தகுதியை கூட்டிக்கொள்ள ஊசி போட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான்.

இதுபற்றி கூறும் சேதன் சர்மா, “இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் சிலர் முழு உடல்தகுதி இல்லாமலேயே, 80 முதல் 85 சதவீத உடல்தகுதி மட்டும் இருக்கும்போதே தாங்கள் விளையாடத் தகுதியாக இருப்பதாக கூறுகிறார்கள்.  ஒரு ஆட்டத்தைக்கூட விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.  காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ராவால்  குனியக்கூட முடியாது. அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அணி நிர்வாகத்துக்கும், தேர்வுக் குழுவுக்கும் இடையே அவரை அணியில் சேர்ப்பதில் கருத்து வேறுபாடு உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.  பிசிசிஐயின் மருத்துவக் குழு பும்ராவை கண்காணித்து வருகிறது. அவர் விரைவில் முழு உடல்தகுதியைப் பெற்று ஆட வருவார்.

 சில வீரர்கள் தங்களுக்கு முழு உடல் தகுதி இல்லாவிட்டாலும் அணியில் இடம்பிடிக்க தாங்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக சொல்கிறார்கள். ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால்  தங்கள் முழு உடல்தகுதியைப் பெறுவதற்காக ஊசி போட்டுக்கொள்கின்றனர்.  அவை வலி நிவாரணி ஊசிகள் அல்ல. வலி நிவாரணி ஊசிகள் என்றால் ஊக்க மருந்து சோதனையில் அவற்றைப் போட்டுக்கொண்டது தெரியவரும்.  அவை எதற்கான ஊசிகள் என்று முழுமையாக தெரியவில்லை. அந்த ஊசியைப் போட்டுக்கொண்டு முழு உடல் தகுதியுடன் சில வீரர்கள்  கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார்கள். அந்த ஊசியில் பயன்படுத்தும் மருந்துகளை ஊக்க மருந்து சோதனையில் கண்டுபிடிக்க முடியாது” என்கிறார்.

 

கோலி – கங்குலி மோதல்

 

இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தபோது அவருக்கும், சவுரவ் கங்குலிக்கும் இடையே இருந்த மோதல்களைப் பற்றியும் இந்த வீடியோவில் சேதன் சர்மா விரிவாக பேசியுள்ளார்.

 “கங்குலிக்கும் கோலிக்கும் இடையே ஒருவகையான ஈகோ யுத்தம் இருந்து வந்தது.  இருவரில் யார் பெரியவர் என்ற எண்ணம் இருந்தது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு கங்குலிதான் காரணம் என்று விராட் கோலி கருதினார். அதற்காக அவரைப் பழிவாங்கவும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் திட்டமிட்டார். அதன் ஒரு பகுதியாகவே டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கங்குலி பேசும்போது, கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். ஆனால் கோலி,   தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கங்குலி  கேட்கவில்லை என்று மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.   இது கங்குலிக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்பியது.

உண்மையில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்த தேர்வுக் குழு கூட்டத்தில் நான், கங்குலி உட்பட 9 பேர் இருந்தோம். அன்றைய தினம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோலி எங்களுடன் கூட்டத்தில் கலந்துகொண்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி கூறியதும், அந்த முடிவை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கங்குலி கூறியது உண்மை. இருவேளை கோலிக்கு அது கேட்காமல் போயிருக்கலாம்” என்று சேதன் சர்மா கூறியுள்ளார்.

இதைத்தவிர மேலும் சில விஷயங்களையும் சேதன் சர்மா இதில் தெரிவித்துள்ளார் அவற்றில் சில…

 

கோலி – ரோஹித் மோதலா?

 

 இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒரு அணி விராட் கோலியின் தலைமையிலும், மற்றொரு அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையிலும் இயங்குகிறது.  அதேநேரத்தில் இருவரும் ஒருவர் மீது மற்றவர் நல்ல மரியாதை வைத்துள்ளனர். கோலி கடுமையான காலங்களை கடந்த சமயத்தில் ரோஹித் சர்மா அவருக்கு துணையாக இருந்துள்ளார்

ரோஹித் சர்மாவின் எதிர்காலம்

 இந்திய கிரிக்கெட் வாரியம் நீண்ட கால கேப்டனாக ரோஹித் சர்மாவை கருதவில்லை. இந்திய டி20 அணியின் கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்டுள்ள ஹர்த்திக் பாண்டியாவைத்தான் நீண்டநாள் கேப்டனாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. அவர் முழுமையாக பொறுப்பு ஏற்கும்வரை சில காலத்துக்கு மட்டுமே ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

கோலி நம்பவில்லை

இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தபோது என்னை அவர்  முழுமையாக  நம்பவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் என்னை முழுமையாக நம்புகிறார்கள்.  இதில் ஹர்த்திக் பாண்டியா என் வீட்டுக்கு வந்துகூட அணியின் எதிர்காலம் பற்றி பேசுவார். ரோஹித் சர்மாவும் அடிக்கடி சுமார் 30 நிமிடங்களாவது அணியின் எதிர்காலம் பற்றி என்னிடம் விவாதித்து இருக்கிறார்.

கில், இஷானால் மற்றவர்களுக்கு நெருக்கடி

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஷிகர் தவன், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு சுப்மான் கில்லும், இஷான் கிஷனும் கடும் நெருக்கடியைக் கொடுக்கிறார்கள். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடுவதால், இந்திய அணியில் தங்களுக்கு இடம் கிடைக்க தவன், சாம்சன், கே.எல்.ராகுல் ஆகியோர் கடுமையாக போராடவேண்டி உள்ளது.

 

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகள்படி தேர்வுக்குழு உறுப்பினரோ அல்லது தலைவரோ, அணித் தேர்வு விவகாரங்களைப் பற்றியோ, கிரிக்கெட் வாரியம், வீரர்களைப் பற்றிய ரகசியங்களையோ  பொதுவெளியில் பேசக் கூடாது. ஆனால் இப்போது தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள உரையாடலில் பல விஷயங்களை உளறிக் கொட்டியிருக்கிறார் சேதன் சர்மா. இதனால் அவரது பதவிக்கு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.       

Monday, February 13, 2023

சச்சின் முதல் ஹர்திக் பாண்டே வரை – கிரிக்கெட் காதல்கள்

 




சச்சின் – அஞ்சலி - ஏர்போர்ட்டில் மலர்ந்த காதல்

 

1990-ம் ஆண்டில் தனது முதல் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரை முடித்துக்கொண்டு மும்பை விமான நிலையத்தில் வந்திறகினார் சச்சின் டெண்டுல்கர். அப்போது லண்டனிலிருந்து வரும் தனது அம்மாவை  வரவேற்பதற்காக மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார் அஞ்சலி. அஞ்சலிக்கு கிரிக்கெட்டைப் பற்றியோ, சச்சினைப் பற்றியோ எதுவும் அப்போது தெரியாது. உடன் இருந்த அஞ்சலியின் தோழிதான் சச்சினைப் பற்றி அஞ்சலியிடம் கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் அதிசயக் குழந்தை என்று சச்சினைப் பற்றி தோழி சொல்ல, ஏர்போர்ட்டில் நடந்து வந்துக் கொண்டிருந்த சச்சினைப் பார்த்திருக்கிறார் அஞ்சலி.

 

17 வயதேயான சச்சினின் குழந்தைத்தனமான ‘Cute’ முகம் அஞ்சலியை கவர்ந்துவிட்டது. அம்மாவைக்கூட மறந்து, ‘சச்சின்… சச்சின்…’ என்று கத்திக் கொண்டே அவரது காரை நோக்கி ஓடியிருக்கிறார் அஞ்சலி. கார் ஏறிக் கொண்டிருந்த சச்சின் ஒரே ஒரு முறை அஞ்சலியைப் பார்த்திருக்கிறார். பார்வைகள் சந்தித்ததும் காதல்.

ஏர்போர்ட் சம்பவத்துக்குப் பிறகு சச்சினின் வீட்டு தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து தொடர்ந்து போன் அடித்திருக்கிறார். அப்போது செல்போன் கிடையாது. லேண்ட் லைன் தான்.  பல முறை தொடர்பு கொண்டதில் ஒரு முறைதான் சச்சினை போனை எடுத்திருக்கிறார்.

 

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அஞ்சலி, விமான நிலைய சம்பவத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். உடனே சச்சின், ‘ஆமாம்… நினைவிருக்கிறது. நானும் உங்களைப் பார்த்தேன்’ என்று கூறியிருக்கிறார்.  இதைக் கேட்டதும் அஞ்சலிக்கு சந்தேகம்.

 

 ‘நிஜமாகவே  நீங்கள் என்னைப் பார்த்தீர்களா? என்ன பார்த்தீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார் அஞ்சலி.  ‘நீங்கள் ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருந்தீர்கள்’ என்று சச்சின் கூற அஞ்சலியின் மகிழ்ச்சி அதிகமாகி உள்ளது.

 

அப்படி தொடங்கிய பழக்கம் காதலாகிவிட்டது. கிரிக்கெட் போட்டிகளில் ஆட சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல, அவருக்கு காதல் கடிதங்களை அனுப்பி காதலை வளர்த்திருக்கிறார் அஞ்சலி.

 

ஒருநாள் சச்சின் அஞ்சலியை வீட்டுக்கு அழைத்துள்ளார். ஒரு பெண் வீட்டுக்கு வந்தால் வீட்டில் என்ன சொல்வது என்று சச்சினுக்கு தயக்கம். அதனால் வீட்டில் இருப்பவர்களிடம் அஞ்சலியை பத்திரிகையாளர் என்று கூறி அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

அஞ்சலியைக் காதலிப்பதை வீட்டில் சொல்ல சச்சினுக்கு பயம். என்ன செய்வதென்று அஞ்சலியிடம் கேட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஒருநாள் சச்சின் டெண்டுல்கர் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் ஆடப் போயிருக்கும் நாளில், சச்சினின் வீட்டில் தங்கள் காதலைச் சொல்லியிருக்கிறார் அஞ்சலி. இரு தரப்பு பெற்றோரும் பச்சைக் கொடி காட்ட அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.

 

 

ஷட்டில்காக்கில் விட்ட  தூது

 

பெற்றோருக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு,  அதை யாருக்கும் தெரிவிக்காமல் நல்ல பிளையாய் வீட்டில் வசிக்கும் ஜோடியை ‘அலைபாயுதே’ படத்தில் பார்த்திருப்போம்.   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் நிஜ வாழ்க்கையிலேயே அது நடந்திருக்கிறது.

 

கொல்கத்தாவின் பணக்கார குடும்பத்தில்  பிறந்தவர் கங்குலி. அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டோனாவுக்கும் இடையே சிறு வயதிலேயே காதல் பிறந்துள்ளது. இந்த பரஸ்பர காதலுக்கு என்ன காரணம் என்று இருவருக்கும் புரிந்ததில்லை. ஆனால் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.

 

சிறுவயதில் கங்குலிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து.  டோனாவின் வீடு வழியாகத்தான் கால்பந்து மைதானத்துக்குச்  செல்லவேண்டும். அப்படி செல்லும்போதெல்லாம் டோனா வீட்டில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டே செல்வார் கங்குலி. 

 

அதேபோல் நண்பர்களுடன் பாட்மிண்டன் விளையாடுவதென்றால் டோனாவின் வீட்டுக்கு அருகில்தான் விளையாடுவார்.  அதை வீட்டு வாசலில் நின்று டோனா பார்த்துக்கொண்டிருப்பார். ஷட்டில்காக் டோனாவின் வீட்டில் விழுந்தால், அதை டோனாவே எடுத்துவந்து கங்குலிக்கு கொடுப்பார்.   இருவரும் காதல் பார்வையை  பரிமாறிக் கொள்வார்கள். இப்படி ஷட்டில்காக் மூலமும் அவர்கள் காதல் வளர்ந்திருக்கிறது.

 

  இந்திய அணிக்காக ஆட கங்குலி, இங்கிலாந்துக்கு சென்ற நேரத்தில் இவர்களின் காதல் மேலும் வளர்ந்தது. இந்த தொடர் முடிந்து இந்தியா வந்ததும், முதல் வேலையாக யாருக்கும் சொல்லாமல் டோனாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் தாதா. இந்த திருமணத்தை இருவரும் 6 மாதங்களுக்கு தங்கள் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளனர். இறுதியில் இவர்களின் பதிவுத் திருமணம் பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாக, அது வீட்டுக்கு தெரியவந்தது.

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர், பிறகு சமாதானமாகி 1997-ம் ஆண்டில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

 

ஷூட்டிங்கில் மலர்ந்த காதல்

2013-ம் ஆண்டில் ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக  சென்றபோது அனுஷ்காவை முதல் முறையாக சந்தித்தார்  விராட் கோலி. அது ஒரு ஷாம்பூ விளம்பரம். படப்பிடிப்புக்கு முதலில் சென்ற விராட் கோலி, அங்கு இருந்தவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் காரில் படப்பிடிப்பு தளத்தில் வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா சர்மா.

 

பாலிவுட் நடிகைகளில் அனுஷ்கா கொஞ்சம் உயரமானவர்.  அன்றைய தினம் படப்பிடிப்புக்கு வந்தபோது உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணியை அனுஷ்கா அணிந்திருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தார். அதே நேரத்தில் விராட் கோலி அத்தனை உயரமானவர் கிடையாது. அனுஷ்காவைவிட ஒருசில அங்குலங்கள்தான் உயரமாக இருப்பார். காரில் இருந்து அனுஷ்கா இறங்கியதும், முதலில் அவரது உயரத்தைத்தான் கோலி கவனித்துள்ளார்.

 

ஏற்கெனவே உயரமான பெண்ணாக இருந்த அனுஷ்கா,  மிகப்பெரிய ஹீல்ஸ்களையும் அணிந்து இருந்ததால், இன்னும் உயரமாக தெரிந்தார். அதனால் அவருக்குப் பக்கத்தில் தான் நின்றால் குள்ளமாக தெரிவோமோ என்று விராட் கோலிக்கு பட்டுள்ளது. இதனால் அப்போதை ஜாலி மூடில், “இதைவிட உயரமான ஹீல்ஸ் செருப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஆனால் அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்று அனுஷ்காவுக்கு புரியவில்லை. “என்ன கேட்டீர்கள்” என்று திரும்பக் கேட்டுள்ளார்.  முதல் சந்திப்பிலேயே அனுஷ்காவை கிண்டலடித்து விட்டோமோ  என்று நினைத்த கோலி, “ஒன்றுமில்லை, சும்மா ஜோக்குக்காக சொன்னேன்” என்று பேச்சை மாற்றியுள்ளார். பின்னாளில் தினேஷ் கார்த்திக்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலைச் சொல்லியுள்ளார் விராட் கோலி.

அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக  கோலி பழகிய விதம் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப் போக இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும், அனுஷ்காவின் வீட்டுக்கு விராட் கோலி சென்றது மிகப்பெரிய செய்தியானது. இதைத்தொடர்ந்து நியூஸிலாந்துக்கு இந்திய அணி ஆடச் சென்றபோது, விராட் கோலியை உற்சாகப்படுத்துவதற்காக அனுஷ்கா சர்மாவும் நியூஸிலாந்துக்கு சென்றார்.  இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றபோதும் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள டார்லிங் ஹார்பரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது பலரது புருவங்களை உயர்த்தியது.

 

ஐஎஸ்எல்  கால்பந்து, யுவராஜ் சிங்கின்  திருமணம் என பல இடங்களுக்கு  ஒன்றாகச் சென்று, ‘ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம்’ என்பதை இவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.  2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் சதமடித்த கோலி, மைதானத்தில் அனுஷ்கா இருந்த இடம் நோக்கி ஒரு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிட்டு தனது காதலை பகிரங்கப்படுத்தினார்.

 

இப்படி கொஞ்ச காலம் காதல் பறவையாக சுற்றிக்கொண்டிருந்த  கோலி – அனுஷ்கா ஜோடியின் திருமணம்  இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் டிசம்பர் 11-ம் தேதி நடந்தது.

 

கிரிக்கெட் கிளப்பில் சொன்ன காதல்

ரோஹித் சர்மாவும் அவர் மனைவில் ரித்திகாவும் முதலில் சந்தித்துக் கொண்டது ஒரு விளம்பர ஷூட்டிங்கில்தான்.   ஸ்போர்ட்ஸ்  ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ரித்திகா, அந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மாவுக்கு தேவையான விஷயங்களை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

 

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ரித்திகா. அதனாலேயே ரித்திகாவிடம் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே ரோசித்தை எச்சரித்திருந்தார் யுவராஜ் சிங். அவரது எச்சரிக்கையால் கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் பேசத் தொடங்கினார் ரோஹித் சர்மா.   இந்த சந்திப்புக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் நிகழ்ச்சிகளை கவனித்துக்கொள்ளும் வேலையையும் செய்யத் தொடங்கினார் ரித்திகா. இதற்காக  இருவரும் அடிக்கடி பேச, வாழ்க்கை முழுவதும் ரித்திகா தன் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார் ரோஹித் சர்மா.

 

 

ரோஹித் சர்மாவுக்கு செண்டிமெண்ட் அதிகம். அதனால்  தான் முதலில் கிரிக்கெட்  வாழ்க்கையைத் தொடங்கிய போரிவலி கிரிக்கெட் கிளப்தான் காதலைச் சொல்ல ஏற்ற இடம் என்று நினைத்திருக்கிறார். ஒருநாள் ரித்திகாவை போரிவலி கிரிக்கெட் கிளப்புக்கு அழைத்துச் சென்ற ரோஹித் சர்மா, அவர்முன் ஸ்டைலாக மண்டியிட்டு முன்னரே தான் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை நீட்டி காஅதலைச் சொல்லியிருக்கிறார். ரோஹித்தைப் போலவே ரித்திகாவின் மனதிலும் ஏற்கெனவே காதல் இருக்க, அவரும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இருவருக்கும் 2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது.

 

 

காதலர் தினத்தில் கல்யாணம்

 

மும்பையில் உள்ள ஒரு நைட் கிளப்பில்தான் ஹர்த்திக் பாண்டியாவும், அவரது காதலி நடாஷாவும் முதல் முறையாக சந்தித்தனர். ஆரம்பத்தில் அவர்களிடையே நட்பு மட்டுமே இருந்தது. இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சியில் வெளியான கரண் ஜோகர் ஷோவில் ஹர்த்திக் பாண்டியா சில சர்ச்சையான கருத்துகளைச் சொல்ல, அவரை சில ஆட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ.

 

கிரிக்கெட் போட்டிகளில் ஆடமுடியாததால் ஹர்த்திக் சோகத்தில் மூழ்க, அந்த காலகட்டத்தில் அவருக்கு ஆறுதல் கூறி, அவருடனே இருந்துள்ளார் நடாஷா. இந்த ஆறுதலும் துணையும்தான் ஹர்த்திக்கின் மனதில் நடாஷாவுக்கு இடம் கொடுத்துள்ளது.  இந்த நட்பு காதலாக மாற மும்பை நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் திருமனம் செய்துகொண்டனர். அதே திருமணத்தை   சம்பிரதாய முறைப்படி காதலர் தினத்தன்று மீண்டும்  செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது இந்த ஜோடி.

 

 

ரூ.3.40 கோடிக்கு ஏலம் – யார் இந்த ஸ்ருமிதி மந்தனா?

 


பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மிக அதிகபட்சமாக 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம்  போயிருக்கிறார் ஸ்ருமிதி மந்தனா. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பெண்களுக்கான ஐபிஎல் போட்டிக்காக இந்த தொகையைக் கொடுத்து அவரை வாங்கியிருக்கிறது  பெங்களூரு அணி. இந்த ஏலத்தில் பங்கேற்ற  5 அணிகளும்  வீராங்கனைகளை வாங்க மொத்தமாக  12 கோடி ரூபாய்தான் செலவழிக்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால் மந்தனாவுக்கு கிடைத்துள்ள 3.4 கோடி ரூபாய் மிகப்பெரிய தொகை.

இத்தனை அதிக விலைக்கு ஏலம் போயிருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை ஸ்ருமிதி மந்தனா மீது விழுந்திருக்கிறது.

 

யார் இந்த ஸ்மிருதி மந்தனா?

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு புகழ்பெற்ற மும்பை நகரத்தில் பிறந்தவர்தான் ஸ்ருமிதி மந்தனா. 26 வயதான அவர் இப்போது இந்திய அணியின் துணைக் கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் இருக்கிறார்.

 ஸ்மிருதி மந்தனாவின் அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட் வீரர்களாக இருந்தவர்கள் அதனால் அவரது ரத்தத்திலேயே கிரிக்கெட் ஊறிப் போயிருந்தது.  அவரது அப்பா ஸ்ரீநிவாஸ் மந்தனா மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடியவர். அவரது அண்ணன், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். அவர் ஆடும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கப் போய் சிறுவயதிலேயே மந்தனாவுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரும் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

சிறுவயதில் அவர் பயிற்சி பெறும் காலத்தில் பெண்கள் கிரிக்கெட் அத்தனை பிரபலமானதாக இல்லை. அதனாலேயே அவ்விளையாட்டில் பெண் குழந்தைகள் அதிகம் பயிற்சி பெறவில்லை. அதனால் 200 முதல் 300 ஆண்கள் பயிற்சி பெறும் மைதானத்தில் ஒரே பெண்ணாக ஸ்மிருதி மந்தனா பயிற்சி செய்தார். முழுக்க முழுக்க ஆண் குழந்தைகளுக்கு நடுவில் ஒரே பெண்ணாக பயிற்சியில் ஈடுபட்டது மிகவும் கஷ்டமாக இருந்ததாக ஒரு பேட்டியில் மந்தனா கூறியிருக்கிறார்.

அந்த கஷ்டத்துக்கு நடுவிலும் விடாமல் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபபட்ட மந்தனா, 9 வயதிலேயே  தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கினார்.  15 வயதுக்கு உட்பட்ட மகாராஷ்டிர அணிக்காகத்தான் அவர் முதலில் ஆடினார். அதன் பிறகு   11 வயதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகாராஷ்டிர அணியில் இடம் பிடித்தார். 2013-ம் ஆண்டில், தனது 17 வயதிலேயே மேற்கு மண்டல அணிக்காக அவர் இரட்டைச் சதம் அடிக்க, கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை இவர் மீது திரும்பியது. கூடவே தேர்வாளர்களின் பார்வையும்.

2013-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் மந்தனா. அப்போதில் இருந்து இந்திய அணியின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக மந்தனா இருக்கிறார்.

சர்வதேச டி20 போட்டியில் அரைசதம் எடுத்த இளம் வீராங்கனை, ஒரே தொடரில் அதிக சதங்களை அடித்த வீராங்கனை உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மந்தனா, இப்போது நடந்துவரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக இருக்கிறார்.

 

 “இந்தியாவில் ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாவது அத்தனை எளிதான விஷயமல்ல. பல குடும்பங்களில் பெற்றோர் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் என் விஷயத்தில் அப்படி இல்லை. என்னைவிட என் பெற்றோர்தான் நான் கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்ரு விரும்பினார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் இன்று என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது” என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஸ்மிருதி மந்தனா. இன்று அவருக்கு கிடைத்துள்ள இந்த சம்பளத்துக்கு அவரது பெற்றோர் தந்த ஊக்கமும் ஒரு காரனம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.