Powered By Blogger

Thursday, May 11, 2023

ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆச்சு?

 


 

அஜிங்க்ய ரஹானே, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என்று சர்வதேச கிரிக்கெட்டில் சில மாதங்களாக ஃபார்மை இழந்திருந்த வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல்லில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சக்கை போடு போடுகிறார்கள்.  இந்த ஆண்டின் இறுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்காக சந்தோஷப்படும் மனநிலையில் இந்திய ரசிகர்கள் இல்லை. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பி வருவதே இதற்கு காரணம்.

 

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோஹித் சர்மா, மொத்தமாகவே 184 ரன்களைத்தான் எடுத்துள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் அதிகபட்சமாக 65 ரன்களை எடுத்துள்ள ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் 129.58.  இதில் மிகப்பெரிய சோகமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் (15)  பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளார். ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங், சுனில் நரைன் ஆகியோரும் இதுவரை 15 முறை டக் அவுட் ஆகி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

 

இந்த சோக சாதனையுடன் இன்னொரு மோசமான சாதனையையும் அவர் ஐபிஎல்லில் படைத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில்  (70 முறை)  அவுட் ஆன பேட்ஸ்மேன் என்பதுதான் அந்த பரிதாப சாதனை.  கடந்த 3 போட்டிகளில் 2, 3, 0 என்று மிக மோசமான ஸ்கோர்களையே ரோஹித் சர்மா அடித்துள்ளார்.

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை இரட்டைச் சதம் அடித்தவர்  (3 இரட்டைச் சதங்கள்) என்ற பெருமை ரோஹித் சர்மாவுக்கு இருக்கிறது. இதனாலேயே இந்த உலகக் கோப்பை போட்டியில் அவரது பேட்டிங்கை இந்திய அணி பெரிதும் நம்பி இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே 2 ஆண்டுகளாக ஃபார்மை இழந்திருந்த விராட் கோலி இப்போதுதான் ஓரளவுக்கு தேறி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் ரோஹித் சர்மா ஃபார்ம் அவுட் ஆகி அணிக்கு சுமையாக மாறிவிடுவாரோ என்று கவலைப்படுகிறார்கள் ரசிகர்கள்.

பேட்டிங்கில் சொதப்பினாலும், அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் தோனியைப் போல் mister cool-ஆக அணியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் பெற்றவராக ரோஹித் சர்மாதான் இருக்கிறார். அதனால் அவரை அணியில் இருந்து நீக்குவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. மாறாக அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறார்கள்.

 

”ரோஹித் சர்மாவின் பலவீனம் பவுன்சர்கள். யாராவது இடுப்புக்கு மேல் பந்தை வீசினால் அதை சிக்சருக்கு கடாசிவிட வேண்டும் என்று ரோஹித் சர்மா துடிக்கிறார். முழு வேகத்தில் பந்தை தூக்கியடிக்க முயல்கிறார். இதுபோன்ற சூழலில் பல முறை பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கேட்சாக மாறிவிடுகிறது. அவரது இந்த பலவீனத்தை தெரிந்துகொண்ட எதிரணியினர் வேண்டுமென்றே ஷார்ட் பிட்ச் பந்துகளை அவருக்கு வீசுகிறார்கள். தனது இந்த பலவீனத்தை உணர்ந்து ரோஹித் சர்மா பொறுப்பாக பேட்டிங் செய்ய வேண்டும்” என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மார்க் பவுச்சர், “டி20 போட்டிகளில் அதிரடியான தொடக்கம் வேண்டும் என்று நினைக்கும் ரோஹித் சர்மா, அதற்காக ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை இழக்கிறார். இதுபோன்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி சில முறை ஆட்டம் இழப்பது சகஜம்தான். இதிலிருந்து ரோஹித் சர்மா நிச்சயம் மீண்டு வருவார். அவர் ஃபார்முக்கு திரும்பினால் அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம்” என்கிறார்.

 

இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இப்படித்தான் நம்புகிறார்கள்.  அவர்களின் நம்பிக்கையைக் காக்க ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்..

 

 

 

Matheesha Pathirana – CSKயின் 175 கிமீ வேக குழந்தை

 


 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய  சுட்டிக் குழந்தை மதீஷா பதிரணா. சுட்டிக் குழந்தை மட்டுமல்ல, வேகக் குழந்தையும் இவர்தான்.   இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பதிரணாவைப் பார்த்து சக சிஎஸ்கே வீரர்களே பொறாமைப் படுகிறார்கள். வேகத்தின் உச்சத்தில் இருக்கிறது அவரது பந்து வீச்சு. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நடந்த போட்டியில் பதிரணா வீசிய பந்து 150 கிமீ வேகத்தை தொட்டிருக்கிறது.   

 

பதிரணாவுக்கு இப்போது 20 வயதாகிறது. உலகிலேயே மிக வேகமாக பந்தை வீசியவர் என்ற பெருமையும் பதிரணாவுக்கு இருக்கிறது. 2020ல் நடந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மதீஷா பதிரணா வீசிய பந்து 175 கிமீ வேகத்தை தொட்டது, அதுதான் உலகிலேயே மிக வேகமாக வீசப்பட்ட பந்து என்று கூறப்படுகிறது. அப்போது பதிரணாவுக்கு வயது 17.

 

மற்ற பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால் தோனியைப் பார்க்க பயந்து பதுங்குவார்கள்.  ஆனால் பதிரணாவோ, அவரை ஓரக்கண்ணால் பார்த்து நாக்கைக் கடித்து சிரிக்கிறார். தோனியும் பதிலுக்கு செல்லமாக முறைக்கிறார். இவர்கள் இருவரின் பாசப் பிணைப்பு சிஎஸ்கே ரசிகர்களை புல்லரிக்கச் செய்கிறது.

 

இலங்கையின்  முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் ஜெராக்ஸ் காப்பி என்று பதிரணாவைச் சொல்லலாம். மலிங்காவின் அதே  ஸ்டைலில் கையைச் சுழற்றி யார்க்கர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் பதிரணாவின் சொந்த ஊர் இலங்கையின் கண்டி. இவர் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்ததற்கும். 2019-ம் ஆண்டு ஐபிஎல்லின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் சிஎஸ்கே தோற்றதற்கும் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது.

 

2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லின் இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் மும்பையிடம் தோற்றது சிஎஸ்கே. அப்போட்டியின் கடைசி பந்தில் சிஎஸ்கே ஜெயிக்க 2 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்ய, மும்பைக்காக மலிங்கா பந்துவீசினார்.  அவர் வீசிய யார்க்கர் பந்தில் ஷர்துல் தாக்குர் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழக்க, ஒரு ரன்னில் ஜெயித்து கோப்பையை தட்டித் தூக்கியது மும்பை இந்தியன்ஸ்.

 

 அந்த போட்டி முடிந்த பிறகு சக வீரர்களிடம் பேசிய தோனி, “இப்படி ஒரு பவுலர் நமக்கும் வேணும்” என்றார். சிஎஸ்கே நிர்வாகம் இதற்கான தேடலில் ஈடுபட்டது. அப்போது கண்டியைச் சேர்ந்த   17 வயதான ஒரு சிறுவன், மலிங்காவைப் போலவே பந்து வீசுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருந்தது.  தோனியும், சிஎஸ்கே நிர்வாகிகளும் அந்த வீடியோவைப் பார்த்து புல்லரித்தார்கள். அவரை அணியின் நெட் பவுலராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது அவரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை.

 

இதே காலகட்டத்தில் இலங்கைக்கு கிரிக்கெட் ஆடச் சென்ற பல வெளிநாட்டு பேட்ஸ்மேன்களும், பதிரணவாவை நெட்டில் பந்து வீசச் செய்து மலிங்காவுக்கு எதிராக ஆட பயிற்சி பெற்றனர். தனக்கான டிமாண்ட் அதிகமாக, ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டதாக பொய் சொல்லி பயிற்சிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார் பதிரணா. இதை அவரது சிறு வயது பயிற்சியாளரான பின்னடுவா குறிப்பிட்டுள்ளார்.

 

பதிரணாவைப் பற்றி மேலும் கூறும் அவர், “பதிரணாவுக்கு 12 வயதாக இருந்தபோது பள்ளி கிரிக்கெட் ஒன்றில் அவர் பந்து வீசுவதைப் பார்த்தேன். அவரது பந்துவீச்சில் மலிங்காவின் சாயல் தெரிந்ததால் வியந்துபோன நான், அவருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அவரது பந்துவீச்சு ஸ்டைலை மேலும் மெருகூட்டினேன். ஆரம்பத்தில் அவர் நேராக ஓடமாட்டார். தத்தக்கா பித்தக்கா என்று கால்களை மாற்றிவைத்து ஓடுவார். ஆனால் அப்போதே 110 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவார். அவர் ஓடும் ஸ்டைலை மட்டும் மாற்றினால் சிறந்த வீரராக அவரை உருவாக்கலாம் என்று நினைத்து அதை மாற்றினேன்” என்கிறார்.  

 

இதைத்தொடர்ந்து இலங்கையில் நடந்த 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் பலரது கவனத்தை பதிரணா பெற்றுள்ளார்.  2021 முதல்  இலங்கையின் உள்ளூர் டி20 லீக் போட்டிகளிலும், துபாயில் நடந்த 10 ஓவர் லீக் கிரிக்கெட்டிலும் பதிரணா ஆடினார். அப்போது அவருடன் இந்த தொடரில் ஆடிய பிராவோ, அவரை சிஎஸ்கேவில் சேர்க்க வலை விரித்தார். 2022 ஐபிஎல்லின் நடுவில் சிஎஸ்கேவுக்காக ஆடிக்கொண்டிருந்த  மில்னே காயத்தால் விலக, இந்தச் சமயத்தில பதிரணாவை அணிக்குள் கொண்டுவந்தது சிஎஸ்கே நிர்வாகம்.

 

நெட் பிராக்டிஸில் அவர் வீசிய முதல் பந்தைப் பார்த்ததும் தோனிக்கு பிடித்துப் போய்விட்டது. “இப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்” என்று பதிரணாவை வாரி அணைத்துக்கொண்டார். அவருக்கு தீவிர பயிற்சிகள் தர அணி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறினார். சிஎஸ்கேவின் முக்கிய புள்ளியாக பதிரணா உருவெடுத்தது இப்படித்தான். கடந்த ஆண்டிலேயே சிஎஸ்கே அணியின் சேர்க்கப்பட்டாலும், அவரை அதிகமாக ஆட வைக்கவில்லை. இந்த ஆண்டில் பதிரணா  முழுமையாக தயாரானதாக தோனிக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்னர்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாலராக அவர் பயன்படுத்தப்படுகிறார்.

 

பதிரணாவின் பந்துவீச்சை தோனி விரும்பினாலும், அவரது பந்துவீசும் ஸ்டைலால் அதிக காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால் குறைந்த அளவிலான போட்டிகளிலேயே அவர் ஆடவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார் தோனி. இலங்கை அணியும் குறைந்த ஆட்டங்களில் அவரை பயன்படுத்த ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

 

தோனியின் ஆலோசனையை பதிரணா நிச்சயம் கேட்பார் என்று நம்புவோம்..