Powered By Blogger

Tuesday, June 20, 2023

யோகா - வயது 5000

 


 

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு 21-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமைய கத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இச்சூழலில் யோகாசனத்தைப் பற்றி சில சுவையான தகவல்களை தெரிந்துகொள்வோம்

 

யோகாசனம் இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய  உடற்பயிற்சி முறை. கி.மு.1500-ல் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் யோகாசனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

 

1890-ம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளில் யோகாசனம் அறிமுகம் ஆனது. மேற்கத்திய நாடுகளில் யோகாவைப் பரப்பியதில் சுவாமி விவேகானந்தருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1893-ம் ஆண்டில் சிகாகோவில் நடந்த சமய மாநாட்டில் விவேகானந்தர் பேசிய பிறகு, அங்குள்ளவர்களுக்கு யோகாசனம் மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.

 

யோகா பாயிற்சி மேற்கொள்ளும் ஆண்கள் யோகி என்றும், பெண்கள் யோகினி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

 

பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைப்பதில் யோகாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

யோகாசனத்தை முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் முன் செய்ய வேண்டும். தவறான முறையில் யோகாசனம் செய்தால் உடலில்  காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கன்ணாடி முன்பு யோகாசனத்தை செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.

 

யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கலாம்.

 

உலகளாவிய அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் யோகாசனங்களைச் செய்து வருகிறார்கள்.

 

8.7 சதவீதம் அமெரிக்கர்கள் யோகா பாயிற்சி செய்கிறார்கள்.

 

30 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் யோகாசனம் மிகப் பிரபலமாக உள்ளது.

 

யோகாசனத்தை தீவிரமாகச் செய்தால் 3 மாதாங்களில் 3.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.

 

சர்வதேச அளவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகாசனப் பயிற்சி மையங்கள் உள்ளன.

 

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் யோகாசனத்தில் ஈடுபடுகிறார்கள். யோகாசனம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரானது என்ற கருத்தால் மலேசியாவில் யோகாசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு முறையும் சுமார் அரை மணிநேரம் யோகாசனம் செய்த பிறகு, 5 நிமிடங்களாவது ஓய்வெடுப்பது அவசியம்.

 

நம் உடலில் உள்ள 8 சக்தி மையங்களுக்கு யோகாசனம் புத்துணர்ச்சி அளிக்கிறது.

 

பாரம்பரிய முறையில் 84 வகையான யோகாசனங்கள் உள்ளன.

 

2018-ம் ஆண்டில் டெல்லியில் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த யோகா வகுப்புதான் மிகப்பெரிய யோகா வகுப்பாகும். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நடந்த இந்த யோகா வகுப்பில் 35,985 பேர் பங்கேற்றனர்.  இந்த யோகா வகுப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

உலகின் வயதான யோகாசன ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனையை கனடா நாட்டைச் சேர்ந்த இடா ஹெர்பர்ட் படைத்துள்ளார்.  95 ஆண்டுகள்  270 நாட்களில் யோகா வகுப்பு எடுத்து அவர் இந்த சாதனையைச் செய்தார்.

 

மிக நீண்ட நேரம் யோகா செய்தவர் என்ற கின்னஸ் சாதனையைச் செய்தவர் கனடா நாட்டின் யாஸ்மின் ஃபுகாடோவ்ஸ்கா காவ். இவர் தொடர்ந்து 32 மணி நேரங்களில் 1,008 வகையான யோகாசன்ங்களைச் செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

 

 

Thursday, June 1, 2023

சாவர்க்கரை பின்பற்றினாரா நேதாஜி?

 


 ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படமும் வலதுசாரி சித்தாந்தத்தைப் பேசுகிறது. ரண்தீப் ஹூடா என்ற புதிய இயக்குநரால் இயக்கப்படும் ‘ஸ்வாதந்தர்ய வீர் சாவர்கார்’ படம்தான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான வீர சாவர்கரைப் பற்றி இரண்டு விதமான கருத்துகள் உலவுகின்றன. இந்துத்துவ அமைப்புகளும், பாஜகவும் அவரை இந்தியாவின் வீர புருஷராக சித்தரிக்கின்றன. காந்தி, நேரு போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டாலும், அவர்களின் சிறைச்சாலை அறைகள் சொகுசாக இருந்தன. ஆனால் வீர சாவர்க்கர், அந்தமானில் மிகக் குறுகிய, எந்த வசதியும் இல்லாத அறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார். அவரைப் போன்று சிறைக் கொடுமைகளை அனுபவித்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பது வலதுசாரி தலைவர்களின் வாதம்.

 

ஆனால் சிறை வாழ்க்கையில் இருந்து தப்பிக்க, ஆங்கிலேய அரசிடம் அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் என்பது காங்கிரஸ் கட்சியினரின் வாதம்.

 

இப்படி வீர சாவர்கரைப் பற்றி 2 விதமான கருத்துகள் நிலவிவரும் நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் இயக்கி வருகிறார் ரண்தீப் ஹூடா. வீர சாவர்கரை ஒரு மிகப்பெரிய ஹீரோவாகப் போற்றி எடுக்கப்படும் இப்படத்தின் டீஸர், அவரது பிறந்தநாளான மே 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டீஸரை முன்னிட்டு ரந்தீப் ஹூடா வெளியிட்ட ட்விட்டர் பதிவுதான் இப்போது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

 

 ”பிரிட்டிஷாரால் அதிகம் தேடப்பட்ட நபர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,  குதிராம் போஸ், பகத்சிங் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்தவர்” என்று இந்த டிவீட்டில் பதிவிட்டிருந்தார் ரண்தீப் ஹூடா. படத்தின் டீஸரிலும் இந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வார்த்தைகள்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

”குதிராம் போஸுக்கு வீர சாவர்கர்தான் உத்வேகம் அளித்தார் என்று இந்த டீஸரில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் குதிராம் போஸ் 1908-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி  தூக்கிலிடப்பட்டு இறந்தார். ஆனால் வீர் சாவர்கர் 1906-ம் ஆண்டுமுதல் 1911-ம் ஆண்டுவரை லண்டனில் இருந்தார். உண்மை அப்படி இருக்கும்போது, லண்டனில் இருந்த வீர் சாவர்க்கர் எப்படி குதிராம் போஸுக்கு உத்வேகம் அளித்திருக்க முடியும்? நேதாஜி பலமுறை வீர சாவர்க்கரையும், இந்து மகாசபாவையும் எதிர்த்துள்ளார். அவர் வீர சாவர்க்கரால் உத்வேகம் பெற்றவர் என்று எப்படி சொல்ல் முடியும்” என்று பலரும் இதே ட்விட்டர் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளனர்.

அதேபோல் இந்த வாசகங்களை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பமும் மறுத்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ், “சுவாமி விவேகானந்தர் மற்றும் தேசபந்து சித்ரஞ்சன் தாஸ் ஆகிய இருவரை மட்டுமே தனது குருநாதர்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டிருந்தார். நேதாஜிக்கு உத்வேகம் அளித்தவர்கள் என்று அவர்களை மட்டுமே சொல்ல முடியும். அவர்கள் இருவரைத் தவிர வேறு யாராலும் நேதாஜி ஈர்க்கப்படவில்லை. sஆவர்க்கர் ஒரு சிறந்த மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது சித்தாந்தமும், நேதாஜியின் சித்தாந்தமும் வேறு வேறானவை. அதனால் சாவர்க்கரை எந்த கட்டத்திலும் நேதாஜி பின்பற்றவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் வெளியான டீஸரே இத்தனை சச்சரவை கிளப்பியுள்ளது. முழு படமும் வெளியானால் இன்னும் என்னென்ன குழப்பங்கள் வருமோ?’

 

 

 

 

 

 

யார் இந்த சாய் சுதர்சன்?

 


ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் தல தோனிக்கே தண்ணி காட்டியவர் சாய் சுதர்சன். இறுதிப் போட்டியில் 47 பந்துகளில் 96  ரன்களை சாய் சுதர்சன் குவிக்க, 200 ரன்களைக் கடந்தது குஜராத் டைட்டன்ஸ். இதனால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கேவின் ஐபிஎல் கனவு தகர்ந்துவிடுமோ என்றுகூட ரசிகர்கள் பயந்தார்கள். ஆனால் மழைக்கு பிறகு சிஎஸ்கே வீரர்கள் காட்டிய திறமையால் கோப்பை கைவசமானது.

 

பரபரப்பான இந்த இறுதிப் போட்டிக்கு பிறகு யார் இந்த சாய் சுதர்சன் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய இவர், சென்னையைச் சேர்ந்தவர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

 

சாய் சுதர்சனின் அப்பா பரத்வாஜ் ஒரு தடகள வீரர். 1993-ம் ஆண்டில் நடந்த தேற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றவர். அம்மா உஷா அழகு, சிறுவயதில் வாலிபால் விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர். வாலிபால் விளையாட்டில்  தமிழக அணிக்காக ஆடியுள்ளார். பிற்காலத்தில்  கிரிக்கெட் வீரர்கள் எல்.பாலாஜி, அபினவ் முகுந்த், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் உள்ளிட்ட வீரர்களுக்கு கண்டிஷனிங் கோச்சாக இருந்து, அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவியுள்ளார்.

பெற்றோர் இருவரின் உடலில் ஓடுவது விளையாட்டு ரத்தம் என்பதால் சாய் சுதர்சனுக்கும் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.  சிறுவயது முதலே கிரிக்கெட்டில் தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார் சாய் சுதர்சன். கொரோனா காலத்தில் சென்னையில் பயிற்சிபெற சில கட்டுப்பாடுகள் இருந்தபோது, தினமும் 30 கிலோமீட்டர் தூரம் பயணித்து  புறநகர் பகுதிகளுக்கு சென்று பயிற்சி பெற்றார். இந்த இடைவிடாத பயிற்சிதான் இன்று அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

 

சாய் சுதர்சன் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில்தான். இந்த தொடரில் 2021-ல் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக ஆடிய சாய் சுதர்சன் 8 இன்னிங்ஸ்களில் 358 ரன்களைக் குவித்தார். இதில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.  இத்தனைக்கும் அந்த ஆட்டத்தில் சேலம் அணியில் நடராஜன்ம் பெரியசாமி உள்ளிட்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்துள்ளனர். தமிழகத்துக்காக 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக ஆடியுள்ளார்.

 

லைகா கோவை கிங்ஸ் அணிக்காக சுதர்சன் ஆடிய விதம்தான் அவரை ஐபிஎல் பக்கம் கரை ஒதுக்கியது. 2022-ல் நடந்த  ஐபிஎல் தொடரின்போது விஜய் சங்கர் காயத்தால் பாதிக்கப்பட, அவருக்குப் பதில் 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு சாய் சுதர்சனை வாங்கிப் போட்டது குஜராத் டைட்டன்ஸ். கடந்த ஆண்டில் 5 போட்டிகளில் மட்டும் ஆடிய சாய் சுதர்சன், 145 ரன்களை மட்டுமே எடுத்தார். அணியில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து இந்த ஆண்டில் சாத்திருக்கிறார். 8 இன்னிங்ஸ்களில் 362 ரன்களைக் குவித்துள்ளார்.  இதன்மூலம் குஜராத் கிங்ஸ் அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.     

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்களைக் குவித்ததைப் பற்றி கூறும் சாய் சுதர்சன், “போட்டிக்கு முன்னதாக என்னிடம் பேசிய பயிற்சியாளர்கள், ஒரு பந்தைக்கூட டாட் பந்தாக விடக்கூடாது. அனைத்து பந்துகளிலும் ரன்களைக் குவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.  அவர்கள் ஆலோசனைப்படி ஆடினேன்.  முதலில் நிதானமாக ஆடினாலும், பிட்ச் பழக்கப்பட்ட பிறகு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தேன்” என்கிறார்.

ஸ்ரீகாந்த், அஸ்வின், முரளி விஜய் வரிசையில் தமிழகத்துக்கு இப்போது ஒரு புதிய வீரர் கிடைத்துள்ளார். அவரது வெற்றிகள் மேலும் தொடர வாழ்த்துவோம்.