சிறுவயதில் குத்துச்சண்டை பயிற்சி பெற விரும்பிய அந்தச் சிறுவனுக்கு, பயிற்சி மையங்களில் சேர பணம் இல்லை. பயிற்சிக்கான கருவிகளும் கிடைக்க வில்லை. அதற்காக கவலைப்படாத அந்தச் சிறுவன் ஒரு லாரியின் டியூபை எடுத்து நீளவாட்டாக தொங்கவிட்டு மணலை நிரப்பினான். தனது அண்ணன் துணையுடன் அதில் குத்திப் பயிற்சி பெற்றான். அப்படி பயிற்சி பெற்ற சிறுவன்தான் இன்று ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளும் மனோஜ் குமார்.
ஹரியாணாவில் உள்ள ரஜவுண்ட் கிராமத்தில் 1986-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி மனோஜ் குமார் பிறந்தார். அவரது அப்பா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அண்ணன் ராஜேஷ் குமார் ஒரு குத்துச்சண்டை வீரர். சிறுவயதில் இருந்தே தனது அண்ணன் ராஜேஷ் குமாரின் குத்துச்சண்டை ஆர்வத்தைப் பார்த்து வளர்ந்ததால் மனோஜ் குமாருக்கும் குத்துச்சண்டை மீது காதல் ஏற்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையி லான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற ராஜேஷ் குமார், தேசிய அளவிலான குத்துச்சண்டைகளில் பங்கேற்க விரும்பினார். ஆனால் குத்துச்சண்டை சங்கங்களில் இருந்த அரசியல் காரணமாக அவரால் அது முடியாமல் போனது. இதனால் வருத்தமுற்ற ராஜேஷ் குமார், இனி குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்தார். அதற்கு பதில் தனது தம்பியை ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரனாக்க முடிவெடுத்தார். அந்த அண்ணனால் பட்டை தீடப்பட்ட வைரம்தான் மனோஜ் குமார்.
இதுபற்றிக் கூறும் மனோஜ் குமார், “என் அப்பா ராணுவத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். என் அண்ணன் தனது பாக்கெட் மணிக்காக ஊரில் உள்ள சிறுவர்களுக்கு குத்துச் சண்டை கற்றுக்கொடுத்தார். கூரை வேய்ந்த அந்த பயிற்சிகூடம்தான் என் குத்துச்சண்டை பயணத்தின் தொடக்கம். இன்று நான் அடைந்துள்ள அனைத்து வெற்றிகளுக்கும் என் அண்ணன்தான் காரணம்’’ என்கிறார்.
சத்ரபதி சிவாஜியையும், ராஜேஷ் குமாரையும் தனது மானசீக குருநாதர்களாக ஏற்றுக்கொண்ட மனோஜ் குமார் சிறுவயதில் தினமும் காலையும் மாலையும் சுமார் 4 மணிநேரங்கள் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது தொடர் முயற்சியின் காரணமாக மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று 2008-ம் ஆண்டில் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சர்வதேச அளவில் அவர் அங்கீகாரம் பெற்றது 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்தான். இதில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரரான பிராட்லி சாண்டர்ஸை 11-2 என்ற புள்ளிக்கணக்கில் துவம்சம் செய்து அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் மனோஜ் குமார் பதக்கங் களைக் குவித்தார். தான் மட்டும் பதக்கங்களை வெல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேலும் பலர் இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தன் அண்ணன் துணையுடன் குறைந்த கட்டணத்துடன் கூடிய ஒரு குத்துச்சண்டை பயிற்சி மையத்தை குருஷேத்ராவில் தொடங்கியுள்ளார்.
குத்துச்சண்டை போட்டிகள் மூலம் கிடைத்த வருவாயில் அவர் தொடங்கியுள்ள இந்த பயிற்சி மையத் தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறார்கள். “இளம் வயதில் எனக்கு கிடைக்காத வசதிகளெல்லாம் இங்குள்ள குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். 2020 மற்றும் 2024-ம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் எங்கள் பயிற்சி மையத் தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தருவார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மனோஜ் குமார்.
குத்துச்சண்டை களத்தைப் போன்று நிஜ வாழ்க்கையிலும் போராட்ட குணத்தைக் கொண்டவர் மனோஜ் குமார். அவர் அர்ஜுனா விருதைப் பெற்ற விதமே அதற்கு சாட்சி. 2014-ம் ஆண்டு தனக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது கிடைக்கும் என்று உறுதியாக நம்பியிருந்தார் மனோஜ் குமார். ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழுவோ மனோஜ் குமாருக்கு பதில் அவரைவிட ஜூனியரான ஒரு குத்துச்சண்டை வீரருக்கு அர்ஜுனா விருதை வழங்கியது.
இதனால் வெகுண்டெழுந்த மனோஜ் குமார், தனக்குத்தான் அர்ஜுனா விருதை தந்திருக்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனோஜ் குமார் தரப்பில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அவருக்கு அர்ஜுனா விருது வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
“முதல் முறையாக காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நாளையும், அர்ஜுனா விருதுவென்ற நாளையும் என்னால் மறக்கவே முடியாது. அந்த வரிசை யில் இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் நாளும் சேரவேண்டும் என்பதே என் ஆசை. கடந்த ஓராண் டாக என் லட்சியம், கனவு, வாழ்க்கை எல்லாமே இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியை சுற்றியே நகர்ந்து வருகிறது. நிச்சயம் வெல்வேன்’’ என்கிறார் மனோஜ் குமார்.
அவரது லட்சியம் வெல்ல வாழ்த்துவோம்.