1991-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தத்து. அவரது அப்பா ஒரு விவசாயி. கூடவே கிணறு வெட்டும் வேலைக்கும் சென்றுவந்தார். தத்துவுக்கு 2 தம்பிகள். பள்ளி இறுதியில் படிக்கும் காலத்திலேயே தன் தந்தையுடன் சேர்ந்து தத்துவும் கிணறு வெட்டும் வேலைக்கும், விவசாய வேலைக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அவர்கள் குடும்பத்தில் புயல் வீசியது. தத்துவின் தந்தை திடீரென இறந்தார். அதோடு அவர் வாங்கிய கடன்களும் குடும்பத்தின் கழுத்தை நெரித்தன. அப்பாவின் கடன்களை அடைக்க, வீட்டில் இருந்த டிராக்ட ரும், சிறிது விவசாய நிலமும் விற்கப்பட்டது. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தத்து கையைப் பிசைந்துகொண்டி ருந்தார்.
அப்போதுதான் ராணுவத்தில் ஆட்களைச் சேர்ப்பதற்கான முகாம் நடைபெறுவதாக அவருக்கு தகவல் தெரிந்தது. தன் குடும்பத் தின் கஷ்டங்களைத் தீர்க்க ராணுவத்தில் சேர முடிவெடுத்தார் தத்து. அதற்கான முயற்சியில் வெற்றியும் பெற்றார். 2012-ல் ராணுவத்தில் இணைந்த தத்துவுக்கு விளையாட்டுத்துறை யில் தான் சாதிப்போம் என்ற எந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அப்போது இல்லை.
இந்த நேரத்தில் ராணுவத்தில் இருந்த படகோட்டும் பயிற்சியாளரான இஸ்மாயில் பேக் என்பவரின் பார்வையில் தத்து பட்டார். 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட தத்துவின் உடல்வாகு, படகோட்டும் போட்டிக்கு ஏற்றதாக இருப்பதாக அவர் கருதினார். இதுபற்றி தத்துவிடம் கூற, அவரோ, “எனக்கு தண்ணீர் என்றாலே பயம். நீச்சல் தெரியாது. அதனால் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால் இஸ்மாயில் பேக் விட வில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவரை வழிக்கு கொண்டுவந்தார். முதலில் அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தார். பின்னர் படகில் ஏற்றினார். ஆரம்பத்தில் பலமுறை படகு கவிழ்ந்து அவரை தண்ணீர் குடிக்க வைத்தது. கவிழ்ந்த படகை பிடித்து நீந்தியவாறு அவர் கரைக்குத் திரும்பினார். ஆனால் அதெல்லாம் சில நாட்கள்தான். காலம் செல்லச் செல்ல படகு அவர் சொன்னதைக் கேட்டது. எந்த தண்ணீரைக் கண்டு பயந்தாரோ, படகில் ஏறி அதே தண்ணீரில் சாகசங்களைச் செய்யத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீரே கதியென்று கிடக்கும் அவர், அதில் வெற்றிகளை ஈட்டத் தொடங்கினார்.
2014-ம் ஆண்டு நடந்த தேசிய படகோட்டும் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். அதிலிருந்து அவர் துடுப்பு போட்ட இடமெல்லாம் வெற்றிக்கொடி பறந்தது. இந்திய அளவில் முன்னணி படகு ஓட்டும் வீரரானார். 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டிகளில் 5-வது இடமே கிடைத் தாலும், சர்வதேச போட்டிகள் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அவருக்கு கொடுத்தது.
கடந்த மே மாதம், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று தென் கொரியாவில் நடந்தது. இதற்காக தத்து தயாராகிக் கொண்டிருந்தபோது அந்த அசம் பாவிதம் நிகழ்ந்தது. அவரது தாயார் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். நினைவிழந்த நிலையில் தாய் இருந்தபோதிலும் தாய்நாட்டின் பெருமையைக் காக்க, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கலந்துகொண்டார் தத்து.
கடும் மன உளைச்சலிலும் இப்போட்டியில் 2 கிலோ மீட்டர் தூரத்தை 7.7 நிமிடங்களில் கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தத்து தகுதிபெற்றார். இந்தியாவின் சார்பில் படகோட்டும் போட்டியில் கலந்துகொள்ளும் ஒரே வீரர் தத்து என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கூறும் தத்து, “என் தாயார் இன்னும் புனேவில் உள்ள ராணுவ மருத்து வமனையில் சுய நினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனக்கு இப்போதுள்ள ஆசையெல்லாம் இரண்டுதான். முதல் ஆசை நான் ஒலிம்பிக் கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது. இரண்டாவது ஆசை அதைக் கேட்டு என் தாய் ஆனந்தப்பட வேண்டும் என்பது” என்கிறார்.
அவரது இரண்டு ஆசை களும் நிறைவேற பிரார்த்திப் போம்.