Powered By Blogger

Friday, July 15, 2016

பி.வி சிந்து

 விளையாட்டில் புகழ்பெற்ற தம்பதிகளான பி.வி.ரமணாவும், விஜயாவும் தங்கள் மகள் பி.வி சிந்துவையும் ஒரு புகழ்பெற்ற வாலிபால் விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பினர்.  இதற்காக சிறுவயதில் அதிகாலையில் தாங்கள் பயிற்சி பெறும் உள் விளையாட்டு அரங்குக்கு சிந்துவையும் அழைத்துச் செல்வார்கள். ஆனால் சிந்துவின் மனதில் வாலிபால் பதியவில்லை. அதே உள் விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஆடிக்கொண்டிருந்த பாட்மிண்டன்தான் அவரைக் கவர்ந்தது.
பெற்றோர்கள் வாலிபால் பயிற்சியில் ஈடுபடும் நேரத்தில் பக்கத்தில் உள்ள பாட்மிண்டன் கோர்ட்டில் பயிற்சிபெறும் வீரர்களைப் பார்த்தவாறு நிற்பார் சிந்து. நாளடையில் அவர்களுடன் நட்பை வளர்த்துக்கொண்டு தானும் பாட்மிண்டன் ஆடத் தொடங்கினார் 6 வயதான சிந்து. இதைப்பார்த்த பெற்றோர்கள் ஒரு பாட்மிண்டன் அகாடமியில் அவரைச் சேர்த்தனர்.
2001-ம் ஆண்டில் இந்திய பாட்மிண்டன் வரலாற்றில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கோபிசந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இது பலரது கவனத்தையும் பாட்மிண்டன் பக்கம் ஈர்த்தது. அப்படி ஈர்க்கப்பட்டவர்களில் பி.வி.சிந்துவும் ஒருவர். அதுவரை பாட்மிண்டனை ஒரு பொழுதுபோக்காக கற்றுவந்த சிந்து, அன்றுமுதல்   இனி பாட்மிண்டன்தான் தனது வாழ்க்கைப் பாதை  என்று தீர்மானித்தார்.
பாட்மிண்டனில் தனது கவனம் பதிய காரணமாக இருந்த கோபிசந்திடமே பயிற்சி பெற விரும்பினார். இதைத்தொடர்ந்து சிந்துவுக்கு 10 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் கோபிசந்தை அணுகினர். சிறந்த பாட்மிண்டன் வீரர் மட்டுமல்லாது புகழ்பெற்ற பயிற்சியாளராகவும் இருந்த கோபிசந்த் அப்போது சாய்னா நெவாலுக்கு பயிற்சி கொடுத்துவந்தார். அவரது பயிற்சி மையம் கச்சிபவுளி என்ற இடத்தில் அமைந்திருந்தது.
“நான் இப்போது சாய்னா நெவால் என்ற பெண்ணுக்கு தினமும் காலை 6.30 மணி முதல் பயிற்சியளித்து வருகிறேன். அதனால் அந்த நேரத்தில் பயிற்சி அளிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் உங்கள் மகளை காலை 4.30 மணிக்கு அழைத்து வரலாம். நான் தினமும் 2 மணிநேரம் பயிற்சி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபிசந்த்.
சிந்துவின் வீடு இருப்பது செகந்திராபாதில். அங்கிருந்து கச்சி பவுளிக்கு வர அவர் 27 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும். காலை 4.30க்கு பயிற்சிக்கு வரவேண்டுமென்றால் 3 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் மகளால் தினந்தோறும் பயிற்சிக்கு வர முடியுமா என்று சிந்துவின் பெற்றோர்கள் தயங்கினர். ஆனால் சிந்துவோ, தன்னால் முடியும் என்று துணிந்து நின்றாள். பல மாதங்கள் காலை 3 மணிக்கே எழுந்து 27 கிலோமீட்டர்கள் தூரம் பயணம் செய்து பயிற்சிக்கு வந்தார். சிந்துவின் அலைச்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது பெற்றோர் பின்னர் கச்சிபவுளி பகுதிக்கே தங்கள் வீட்டை மாற்றிக்கொண்டு வந்தனர். அதன் பின்னர் சிந்துவின் பயிற்சியில் மெருகு கூடியது.
கோபிசந்தின் மேற்பார்வையில் தேசிய அளவில் பல சாம்பியன் பட்டங்களை வென்ற சிந்து, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது 2011-ம் ஆண்டில்தான். பாட்மிண்டனைப் பொறுத்தவரை எல்லோரது கவனமும் சாய்னா மீதே இருக்க, 2011-ல் நடந்த காமன்வெல்த் இளைஞர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அதே ஆண்டில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பிரிவிலும், அணிப்பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினார். அதன் பிறகு சிந்து  திரும்பிப் பார்க்கவே இல்லை சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள இவர் இப்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சாய்னா, சிந்து ஆகிய இரு நட்சத்திரங்களுக்கும் பயிற்சியளித்துள்ள கோபிசந்த், சாயானவுடன் சிந்துவை ஒப்பிட்டு கூறும்போது, “களத்தில் அதிரடி ஸ்மாஷ்களை அடித்து எதிராளியை திணறவைக்கும் ஆற்றல் படைத்தவர் சாய்னா. அதற்கு நேர்மாறாக அமைதியான முறையில் ஷட்டில் காக்கை பிளேசிங் செய்தே எதிராளியை சோர்வடையச் செய்வது சிந்துவின் ஸ்டைல்” என்கிறார்.
தன் குருநாதராக கோபிசந்தைக் கொண்டிருந்தாலும், சாய்னாவிடம் இருந்தும் தான் நிறைய கற்பதாக கூறுகிறார் சிந்து. சாய்னாவின் போராட்ட குணம் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது என்றும் கூறும் அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான பாதையில் சாய்னா வந்தால் அவரையும் முறியடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி பெற்று வரும் சிந்து, பாட்மிண்டன் பயிற்சியுடன் நீச்சல், யோகா, ஆகியவற்றையும் செய்துவருகிறார். தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும் சாக்லேட்களையும் தொடுவதே இல்லை என்கிறார்.  “வாலிபால் விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வாங்கிய என் அப்பாவும், குருநாதர் கோபிசந்தும்தான் எனக்கு உந்து சக்தியாக இருப்பவர்கள். அவர்களின் கனவை நனவாக்கவாவது நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்”  என்று உறுதியாகச் சொல்கிறார் சிந்து. நமக்கும் அதுதானே வேண்டும்
இதுவரை சாதித்தவை
சர்வதேச பாட்மிண்டன் வீராங்கனைகள் வரிசையில் தற்போது 10-வது இடம்.
2013-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.
2014-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.




No comments:

Post a Comment