Powered By Blogger

Monday, March 21, 2022

ரோஹித் சர்மாவின் நிழலில் மும்பை இந்தியன்ஸ்

 


ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு டஃப் கொடுக்கும் அணி மும்பை இந்தியன்ஸ். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இந்த அணி,  ஐபிஎல் கோப்பையை அதிகமாக 5 முறை வென்றுள்ளது. ஐபிஎல்லில் வெல்வது மட்டுமின்றி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் என பல வீரர்களை உருவாக்கி இந்திய கிரிக்கெட் அணியை பலப்படுத்தியதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பங்கு உண்டு.

ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றபோதிலும், கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் போனது, அந்த அணிக்கு மாறாத வடுவை ஏற்படுத்தியது.  அதனால் வலுவான புதிய அணியை கட்டமைக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்றது.

 இந்த ஏலத்திலேயே அதிக விலை கொடுத்து (ரூ.15.25) இஷான் கிஷனை வாங்கிய மும்பை இந்தியன்ஸ், டிம் டேவிட் (ரூ8.25 கோடி), ஜோஃப்ரா ஆர்ச்சர் (ரூ.8 கோடி) ஆகியோரையும் வாங்கியுள்ளது. அத்துடன் இளம் வீரர்கள் பலரையும் வாங்கி, அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் ஐபிஎல் களத்தில் இறங்குகிறது.

பலம்:

சென்னைக்கு எப்படி தோனியோ, அதுபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அஸ்திவாரமாய் விளங்குகிறார் ரோஹித் சர்மா. மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் முடிசூட்டிக்கொண்ட பிறகு, இதுவரை அந்த அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளதே இதற்கு சான்று. ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கெய்ரன் பொலார்ட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பது மும்பை அணியின் பலம். பேட்டிங்குக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து பந்துவீச்சு வரிசையும் ஸ்டிராங்காக உள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், பும்ரா டைமல் மில்ஸ், ஜெய்தேவ் உனட்கட் என நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் அணியில் உள்ளனர்.  

பலவீனம்:

பேட்டிங், வேகப்பந்து வீச்சு ஆகியவற்றில் மும்பை அணிக்கு உள்ள பலம் சுழற்பந்து வீச்சில் இல்லை. ஏற்கெனவே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்த ராகுல் சாஹர், க்ருனால் பாண்டியா ஆகியோர் கழற்றி விடப்பட்ட நிலையில் இளம் வீரர்களான முருகன் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோரின் தோள்களில் மிகப்பெரிய சுமை அழுந்திக் கிடக்கிறது. அதேபோல் அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியாவை கழற்றிவிட்டதும் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடத்தை வேறு வீரர்களைக் கொண்டு நிரப்ப முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மும்பை அணி இம்முறை கோப்பையை வெல்லவேண்டுமானால், முதலில் இந்த பலவீனங்களைக் களைய வேண்டும்.

 

மீண்டும் ஜெயிக்குமா சென்னை சிங்கங்கள்?

 

ஐபிஎல் அப்டேட்:


ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நம் வீரர்கள் களம் இறங்க இன்னும் 5 நாட்கள்தான் உள்ளன. அடுத்த 60 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர், விலைவாசி உயர்வு, ஹிஜாப் பிரச்சினை போன்ற விஷயங்களை மூலையில் போட்டுவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே விவாதிக்க ஒரு கும்பல் கிளம்பிவிடும்.

இந்தச் சூழலில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் தற்போதைய நிலை, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்…

 இப்பகுதியில் முதலில் நாம் பார்க்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். ரூ.732 கோடி நிகர மதிப்பு கொண்ட இந்த அணிக்கு, ஆரம்பத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உரிமையாளராய் இருந்தது. பின்னர் 2014-ம் ஆண்டுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடட் நிறுவனம் உரிமையாளராய் உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர்

என்.ஸ்ரீனிவாசனின் மேற்பார்வையில் உருவான இந்த அணி, இதுவரை 4 முறை ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை மட்டுமே இந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை என்பதில் இருந்தே இதன் பலத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

அத்தனை சீக்கிரத்தில் தங்கள் வீரர்களை மாற்ற விரும்பாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிப்ரவரியில் நடந்த ஏலத்தில்கூட தீபக் சாஹர், அம்பட்டி ராயுடு, ராபின் உத்தப்பா, பிராவோ ஆகிய வீரர்களைத்தான் முதலில் எடுத்தது. அதே நேரத்தில்  ஹங்கர்கேகர் போன்ற இளம் வீரர்களுக்கும்   முக்கியத்துவம் கொடுத்தது.

சரியான கலவையில் அணியை எடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியில் அணியின் நிர்வாகிகள் இருக்க, அடுத்தடுத்து 2 சறுக்கல்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. முதலாவது சறுக்கல் தீபக் சாஹரின் காயம். சர்வதேச போட்டி ஒன்றின்போது காயம் அடைந்த தீபக் சாஹர், குறைந்தது அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இரண்டாவது சறுக்கலாக அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு ஈனும் விசா கிடைக்கவில்லை. அதனால் அவர் வருவது சற்று தாமதமாகிறது இந்த இரண்டு சிக்கல்களையும் எப்படி அணி சரிசெய்யப்போகிறது என்ற யோசனையில் ரசிகர்கள் உள்ளனர்.

பலம்:

 ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலம் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. 2008-ம் ஆண்டில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை தோனியைத் தவிர மற்றொரு கேப்டனை  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்துக்கூட பார்க்கவில்லை. எத்தனை டென்ஷன் வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சக வீரர்களை அரவணைத்து, ஆலோசனை வழங்கி அணியை முன்னெடுத்துச் செல்லும் தோனியின் ஸ்டைல், பல வெற்றிகளுக்கு காரணமாகி உள்ளது. தற்போது 2 முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ள நிலையிலும் அணியை சிறப்பாக தோனி கையாள்வார் என்ற நம்பிக்கை அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் அதிகமாக உள்ளது. தோனிக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமாக அதன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும், தொடக்க அட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டையும் கூறலாம். சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த கான்வாய், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகர் ஆகியோரை வாங்கியிருப்பதும் அணிக்கு வலு சேர்க்கக்கூடும்.

பலவீனம்:

அணியின் வெற்றிக்கு தோனியை மட்டுமே நம்பியிருப்பதும் சென்னை அணிக்கு பலவீனம்தான்.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று சுமார் 2 ஆண்டுகள் ஆன சூழலில் தோனியால் இன்னும் முன்போல் அணிக்கு பேட்டிங்கில் பங்களிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக இருந்த பப் டுபிளெஸ்ஸியை ஏலத்தில் எடுக்காததும் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.