ஐபிஎல் அப்டேட்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நம் வீரர்கள் களம் இறங்க இன்னும் 5 நாட்கள்தான்
உள்ளன. அடுத்த 60 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர், விலைவாசி உயர்வு, ஹிஜாப் பிரச்சினை
போன்ற விஷயங்களை மூலையில் போட்டுவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே விவாதிக்க ஒரு
கும்பல் கிளம்பிவிடும்.
இந்தச் சூழலில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் தற்போதைய நிலை, அவற்றின்
பலம் மற்றும் பலவீனங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்…
இப்பகுதியில் முதலில் நாம் பார்க்கும்
அணி சென்னை சூப்பர் கிங்ஸ்…
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ்.
ரூ.732 கோடி நிகர மதிப்பு கொண்ட இந்த அணிக்கு, ஆரம்பத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்
உரிமையாளராய் இருந்தது. பின்னர் 2014-ம் ஆண்டுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடட்
நிறுவனம் உரிமையாளராய் உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர்
என்.ஸ்ரீனிவாசனின் மேற்பார்வையில் உருவான இந்த அணி, இதுவரை 4 முறை ஐபிஎல்லில்
சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை மட்டுமே இந்த
அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை என்பதில் இருந்தே இதன் பலத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
அத்தனை சீக்கிரத்தில் தங்கள் வீரர்களை மாற்ற விரும்பாத சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி, பிப்ரவரியில் நடந்த ஏலத்தில்கூட தீபக் சாஹர், அம்பட்டி ராயுடு, ராபின் உத்தப்பா,
பிராவோ ஆகிய வீரர்களைத்தான் முதலில் எடுத்தது. அதே நேரத்தில் ஹங்கர்கேகர் போன்ற இளம் வீரர்களுக்கும் முக்கியத்துவம்
கொடுத்தது.
சரியான கலவையில் அணியை எடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியில் அணியின் நிர்வாகிகள்
இருக்க, அடுத்தடுத்து 2 சறுக்கல்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
முதலாவது சறுக்கல் தீபக் சாஹரின் காயம். சர்வதேச போட்டி ஒன்றின்போது காயம் அடைந்த தீபக்
சாஹர், குறைந்தது அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல்
உள்ளது. இரண்டாவது சறுக்கலாக அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு ஈனும் விசா
கிடைக்கவில்லை. அதனால் அவர் வருவது சற்று தாமதமாகிறது இந்த இரண்டு சிக்கல்களையும் எப்படி
அணி சரிசெய்யப்போகிறது என்ற யோசனையில் ரசிகர்கள் உள்ளனர்.
பலம்:
ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலம் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. 2008-ம்
ஆண்டில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை தோனியைத் தவிர மற்றொரு கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.
எத்தனை டென்ஷன் வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சக வீரர்களை அரவணைத்து, ஆலோசனை
வழங்கி அணியை முன்னெடுத்துச் செல்லும் தோனியின் ஸ்டைல், பல வெற்றிகளுக்கு காரணமாகி
உள்ளது. தற்போது 2 முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ள
நிலையிலும் அணியை சிறப்பாக தோனி கையாள்வார் என்ற நம்பிக்கை அணி நிர்வாகத்துக்கும்,
ரசிகர்களுக்கும் அதிகமாக உள்ளது. தோனிக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமாக
அதன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும், தொடக்க அட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டையும்
கூறலாம். சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த கான்வாய், இளம் வேகப்பந்து வீச்சாளர்
ஹங்கர்கேகர் ஆகியோரை வாங்கியிருப்பதும் அணிக்கு வலு சேர்க்கக்கூடும்.
பலவீனம்:
அணியின் வெற்றிக்கு தோனியை மட்டுமே நம்பியிருப்பதும் சென்னை அணிக்கு பலவீனம்தான்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று
சுமார் 2 ஆண்டுகள் ஆன சூழலில் தோனியால் இன்னும் முன்போல் அணிக்கு பேட்டிங்கில் பங்களிக்க
முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர்
கிங்ஸ் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக இருந்த பப் டுபிளெஸ்ஸியை ஏலத்தில் எடுக்காததும்
சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.
No comments:
Post a Comment