Powered By Blogger

Wednesday, June 1, 2022

CSK குயின்ஸ்

 

தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்களை தெரிந்தவர்களுக்கெல்லாம், அவர்களின் மனைவிகளையும் தெரிந்திருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடும்போதெல்லாம், பார்வையாளர் வரிசையில் இருந்து அவர்களை ஊக்குவிக்கும் மனைவிகளைத் தெரிந்துகொள்வோம்.

சாக்‌ஷி சிங் ராவத்  

தல தோனியின் மனைவியான சாக்‌ஷி சிங் ராவத்தைப் (Sakshi Singh Rawat) பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தோனியின் உள்ளம் கவர்ந்த காதல் மனைவியான சாக்‌ஷி, 1988-ம் ஆண்டில் டேராடூனில்  பிறந்தார். 2007-ம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்காலில் இவர் இண்டர்ன்ஷிப் செய்துகொண்டு இருந்தபோது தோனியின் பார்வையில் பட்டுள்ளார். சாக்‌ஷியைக் கண்டதும் தோனியின் நெஞ்சில் காதல் தீ பற்றிக் கொண்டது.

2 ஆண்டுகள் காதலர்களாக இருந்த இந்த ஜோடி 2010-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டது. தற்போது தோனி செல்லும் இடமெல்லாம் உடன் பயணிக்கும் சாக்‌ஷி, தோனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக விலங்குகிறார். தோனியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றும் சாக்‌ஷி, தனது கணவரின் பிஸினஸ் விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.

ரிவா சோலங்கி

சாக்‌ஷிக்கு அடுத்ததாக சிஎஸ்கே ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் ஜடேஜாவின் மனைவி ரிவா சோலங்கி (Riva Solanki). ராஜ்கோட் நகரில் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் படித்தவரான ரிவா, ஒரு அரசியல்வாதியும்கூட. 2019-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த ரிவா சோலங்கி, அதன் மகளிர் பிரிவான கர்னி சேனாவின் தலைவியாக இருக்கிறார். 2016-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு நித்யானா என்ற மகள் இருக்கிறார்.

ரெஜினா ராம்ஜித்

தோனியின் நண்பரும் சிஎஸ்கே அணியின் நீண்டநாள் வீரருமான பிராவோவுக்கு 3 மனைவிகள். இந்த மூன்று மனைவிகளும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 மனைவிகள் மூலம் பிராவோவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  இந்த 3 மனைவிகளில் பிராவோவின் பயணங்களில் அதிகமாக உடன் இருப்பவர்  ரெஜினா ராம்ஜித். பார்படாஸில் மாடலாக இருக்கும் ரெஜினா, தனது ஊரில் சொந்தமாக ஒரு பொட்டிக்கை வைத்து நடத்துகிறார்.  சமீப காலமாக இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்கள் பிரியப் போவதாகவும் செய்திகள் பரவுகின்றன.

ஜெயா பரத்வாஜ்

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை விடாமல் பார்த்தவர்களுக்கு ஜெயா பரத்வாஜை நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனென்றால் கடந்த ஆண்டு சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு மைதானத்தில் அமர்ந்திருந்த ஜெயாவுக்கு தன் மோதிரத்தை பரிசளித்து காதலிப்பதாக சொன்னார் தீபக் சாஹர். இதைத்தொடர்ந்து இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. டெல்லியில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயா பரத்வாஜ், பிரபல சின்னத்திரை நடிகரான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார்.

 

பிரோசா ஹுசேன்

பேட்டிங், பந்துவீச்சு என 2 துறைகளிலும் கலக்கும் இங்கிலாந்து வீரரான மொயின் அலியின் மனைவிதான் பிரோசா ஹுசேன் (Firoza Hossain). மொயின் அலிக்கு 21 வயதாகும்போது இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதுதான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இருவருக்கும் பரஸ்பரம் பிடித்துப் போக வீட்டில் பேசி பெண் கேட்கவைத்து முறையாக திருமணம் செய்துள்ளார் மொயின் அலி. இபோது மொயின் அலி எங்கு சென்றாலும் உடன் செல்லும் பிரோசா ஹுசேன், சிஎஸ்கேவில் மற்ற வீரர்களின் மனைவிகளின் நெருங்கிய தோழியாக உள்ளார்.

ஷீதல் கவுதம்:

ராபின் உத்தப்பாவின்  மனைவியான ஷீதல் கவுதம் (Sheethal Goutham) ஒரு முன்னாள் டென்னிஸ் வீரர்.  தனது 33 வயது வரை இந்தியாவுக்காக பல டென்னிஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.  சுமார் 6 ஆண்டுகாலம் காதல் ஜோடிகளாக சுற்றித் திரிந்த உத்தப்பாவும் ஷீதல் கவுதமும், உத்தப்பாவின் 30-வது பிறந்த நாளன்று திருமணம் செய்துகொண்டனர்.  

 

 

 

உடல் பருமன் – தமிழ் நாடு இரண்டாமிடம்

 


 

நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (National Family Health Survey (NFHS-5)  இப்படியொரு குண்டை போட்டிருக்கிறது. இந்தியாவில்  உடல் எடை கூடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு முடிவு.

 

உடல் எடை கூடுவதால் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட 13 வகையான நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒபிசிட்டி (உடல் எடை கூடுதல்) பிரச்சினையால் உலக அளவில் கடந்த ஆண்டில் மட்டும்  28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உயரத்துக்கு தகுந்த எடையைவிட ஒருவரின் எடை 10 கிலோ கூடுதலாக இருந்தால், அவரது ஆயுள் 3 ஆண்டு குறைகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

இப்படி உடல் பருமன் குறித்த செய்திகள் எதிர்மறையாக இருக்கையில் இந்தியாவில் உடல் பருமன் அதிகரிக்கிறது என்ற ஆய்வு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறது.

 

ஒவ்வொரு நாட்டுக்கும்  ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் இருக்கும். அந்த உணவுப் பழக்கம் அந்தந்த நாடுகளின் சீதோஷண நிலைக்கு ஏற்றதாக இருக்கும். அந்த உணவுப் பழக்கம் ஏதாவது ஒரு வகையில் மாறினால் மோசமான விளைவுகள் ஏற்படும். அந்த விளைவுகளில் ஒன்று எடை கூடுவது (ஒபிசிட்டி). இன்றைய தினம் இப்பிரச்சினையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

 

நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே (National Family Health Survey (NFHS-5) நடத்தியுள்ள இந்த ஆய்வில், இந்தியாவில் 135 மில்லியன் பேர் ஒபிசிட்டி என்ற உடல் பருமன் பிரச்சினையால்   பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இதன்படி பார்த்தால் சராசரியாக 4 இந்தியர்களில் ஒருவர் உடல் பருமன் சிக்கலில் இருக்கிறார்.

 

பீட்சா, பர்கர், ஷவர்மா, பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிப்ஸ் வகைகள் போன்ற உணவு வகைகள், இந்தியர்களின் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக  இந்த ஆய்வில் கூறப்படுகிறது.

 

இந்த ஆய்வின்படி ஆண்களில் சுமார் 23 சதவீதம் பேரும், பெண்களில் சுமார் 24 சதவீதம் பேரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 4 சதவீதம் பேரும் இந்த பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வேயின் ஆய்வின்படி இந்தியாவில் கிராமப்பகுதிகளில் 18 சதவீதம் பேர் ஒல்லியாக இருக்கிறார்கள். இதுவே நகரப் பகுதிகளில் ஒல்லியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக உள்ளது.

 

நகரப் பகுதிகளில் 30 சதவீதம் பேர் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டிருக்க, கிராமப்பகுதிகளில் 19 சதவீதம் பேர் மட்டுமே ஒபிசிட்டியால் பாதிக்கப்படிருக்கிறார்கள். நகரப்பகுதிகளில் வாழும் மக்களிடையே வேகமாக மாறிவரும் உணவுப் பழக்கமே இதற்கு காரணம் என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.

 

ஏழைக்களைவிட பணக்காரர்கள் ஒபிசிட்டி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது  இந்த ஆய்வின் மூலம் தெளிவாகி இருக்கிறது.

 

இந்தியாவில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 28 சதவீதம் பெண்கள் ஒல்லியாக இருக்க, பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த 10 சதவீதம் பேர் மட்டுமே ஒல்லியாக இருக்கிறார்கள்.

 

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 10 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டிருக்க, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 39 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஆண்களைப் பொறுத்தவரை மாநில அளவில்  டெல்லியில் மிக அதிகமாக 38 சதவீதம் பேர் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 37 சதவீதம் ஆண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக கேரளாவில் 36 சதவீதம் பேர் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெண்களைப் பொறுத்தவரை  புதுச்சேரியைச் சேர்ந்த பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

 

 

அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.  

 

மீண்டு வந்த குல்தீப் யாதவ்

 


கிரிக்கெட்டில் அதிக அறிமுகம்  இல்லாதவர்களை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதும், சாதனையாளர்கள் பலரை ஒரே தொடரில் காணாமல் போகச் செய்வதும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கே உரிய சிறப்பம்சம். இந்த தொடரால் வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் அதிகம். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் குல்தீப் யாதவ்.

2020 ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் கடந்த 2 ஆண்டுகளாக  காணாமல் போயிருந்த குல்தீப் யாதவ், தற்போது அதே ஐபிஎல்லால் மீண்டு வந்திருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையே நேற்று நடந்த போட்டியில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியதால் மீண்டும் பலரது பார்வை அவர் மீது விழுந்துள்ளது.

    குல்தீப் யாதவ் முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.   ஆனால் அந்த ஐபிஎல் தொடரில்  ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத குல்தீப் யாதவ்,  தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து 2014-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில்  14 விக்கெட்களை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும்.

 
இந்த சாதனையைத் தொடர்ந்து கேகேஆர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குல்தீப் யாதவ்,  அங்கிருந்த பிராட் ஹாக்கிடம் சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.   2016-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுத் தந்தார்.  இந்த சூழலில் 2 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் போட்டிகளில் சொதப்ப, குல்தீப்பின் பயணம் தடைப்பட்டது. கேகேஆர் அணி ஒரு கட்டத்தில் அவரை ஆடவைக்காமல் பெஞ்சில் அமரவைக்க, மேலும் தகர்ந்துபோனார் குல்தீப். 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே குல்தீப்புக்கு வாய்ப்பு கொடுத்தது கேகேஆர். அதிலும் அவர் ரன்களை வாரி வழங்கினார்.  ஐபிஎல்லில் சொதப்பியதால் சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் துவண்டு போனார்.

இந்தச் சூழலில்தான் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நடந்தது. கேகேஆர் மீண்டும் குல்தீப்பை சேர்க்காமல் போக, 2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது டெல்லி கேபிடல்ஸ். மற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இது குறைவான தொகைதான். ஆனாலும் தனக்கு ஆட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஒப்புக்கொண்டார் குல்தீப் யாதவ்.

 “நாங்கள் உங்களை  நம்புகிறோம். ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் அணியில் உங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும்” என்று டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர்  ரிக்கி பாண்டிங் உறுதிமொழி அளிக்க, புத்துணர்வு பெற்றார்.  கேப்டன் ரிஷப் பந்த்தும் இதையே சொல்ல அவரது தன்னம்பிக்கை அதிகரித்தது. பழைய உற்சாகம் பறந்து வந்தது.  நேற்றைய போட்டியில் ஆவேசமாக பந்து வீசிய குல்தீப் யாதவ், 18 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

எந்த ஐபிஎல் குல்தீப் யாதவின் பயணத்தை பாதியில் தடுத்ததோ, அதே ஐபிஎல் இப்போது அவருக்கு ராஜபாட்டையை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாய் குல்தீப் யாதவ் உருவெடுப்பார் என்று நம்புவோம்.

   

கவுதம் கம்பீர் – ஓரங்கட்டப்பட்ட ஹீரோ

 


இந்திய கிரிக்கெட்டில் அதிகம் கொண்டாடப்படாத ஹீரோக்களில் ஒருவர் கவுதம் காம்பீர்.  2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையிலும், 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதற்காக தோனியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த 2 தொடர்களின் இறுதி ஆட்டத்திலும் இந்தியாவைக் கரைசேர்த்தவர் கவுதம் காம்பீர்.

2007 டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங், தோனி, சேவாக் போன்ற நட்சத்திரங்கள் சொதப்பியபோது காம்பீர் எடுத்த 75 ரன்களால்தான் இந்திய அணி 157 ரன்களை எடுத்தது. அதே விஷயம் 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்திலும் நடந்தது. இப்போட்டியில் 275 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்த, 31 ரன்களில் சேவாக் மற்றும் சச்சினின் விக்கெட்டை இந்தியா இழந்தது. இந்த சமயத்தில் 97 ரன்களைக் குவித்து கேப்டன் தோனிக்கு தோள்கொடுத்தார் காம்பீர். இப்படி 2 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற காரணமான காம்பீர், பின்னர் தோனியுடனான மோதல்களால் ஓரம்கட்டப்பட்டார். இருப்பினும் கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றார்.

 இப்போது கிரிக்கெட்டில் காம்பீரின் இரண்டாவது இன்னிங்ஸ் நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள காம்பீர், நட்சத்திர வீரர்கள் இல்லாத அந்த அணியை புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார்.

லக்னோ அணியின் பயிற்சியாளரானதும் கவுதம் காம்பீர் முதலில் கவனம் செலுத்தியது அணித் தேர்வில்தான். பொதுவாக பெரிய நட்சத்திரங்கள் மீது காம்பீருக்கு அவ்வளவாக நாட்டமில்லை. அணியில் ஒரு வீரராக இணைந்து செயல்படுபவர்களை வாங்க வேண்டும் என்பது அவரது கருத்து. அதற்கு ஏற்றார்போல் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக், குருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர், மணிஷ் பாண்டே, பதோனி, அவீஷ் கான், மனன் வோரா போன்ற நடுத்தர வீரர்களை அணிக்கு தேர்ந்தெடுத்தார். இவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளம் கிடையாது. 

இப்படிப்பட்ட வீரர்கள்தான் தனக்கு கட்டுப்படுவார்கள் என்பதால் அவர்களைப் பார்த்துப் பார்த்து வாங்கினார் காம்பீர். இதுபற்றி பின்னாளில் செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் காம்பீர், “வெற்றிக்கான பணிகளில் முக்கால்வாசி வீரர்களை ஏலம் எடுப்பதிலேயே முடிந்துவிடும். கோடிக்கணக்கில் பணம் செலவழித்து நட்சத்திர வீரர்களை வாங்குவதைவிட, அணிக்கு தேவையான வீரர்களை சரியாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அந்த இந்த ஏலத்தில் நாங்கள் அதில்தான் கவனம் செலுத்தினோம். சரியான அணி அமைந்ததும் எங்கள் பணி பாதி முடிந்தது” என்கிறார்.

அடுத்ததாக பயிற்சி. இதில் வீரர்களுக்கு காம்பீர் சொன்ன முதல் விஷயம் எதிராளிக்கு அடிபணிந்துவிடக்கூடாது என்பதுதான். அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும், அதைப் பார்த்து மற்ற வீரர்கள் கவலைப்படக்கூடாது. அணியை தங்களால் கரைசேர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்” என்றார் காம்பீர். இதற்கு உதராணமாக 2 உலகக் கோப்பை போட்டிகளில் தான் ஆடியதையே எடுத்துக் கூறினார். அடுத்ததாக எந்தக் கணத்திலும் போராட்ட குணத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது என்றார்.

காம்பீரின் லக்னோ அணியில் அடுத்தது பேட்டிங் ஆர்டர் மாறிக்கொண்டே இருந்தது. எந்த வீரரும் எந்தக் கணத்திலும் ஆடக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பது அவரது கருத்து. இதனால் கே.எல்.ராகுல் – டி காக் தொடக்க ஜோடியைத் தவிர அவர்களின் மற்ற பேட்ஸ்ன்களின் வரிசை மாறிக்கொண்டே இருந்தது. இதனால் எதிரணிகளால் எளிதில் கணிக்க முடியாத அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மாறிப்போனது.

 ஆனால் காம்பீரின் இந்த கணக்குகளையும் மீறி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் படுதோல்வி அடைந்தது லக்னோ. இதை காம்பீரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போட்டி முடிந்ததும் வீரர்கள் அனைவரையும் நிற்கவைத்து ஒரு சிற்றுரை ஆற்றினார் காம்பீர். 1983-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்ததில் அணி வீரர்களிடம் கபில்தேவ் ஆற்றிய உரைக்கு நிகரானது அந்த உரை.

 “ஒரு அணி தோற்பது பெரிய விஷயமில்லை. போட்டி என்றால் ஒரு அணி தோற்பதும், மற்றொரு அணி ஜெயிப்பதும் சகஜம். ஆனால் ஆட்டத்தின் பாதியிலேயே நாம் தோற்றுவிட்டோம் என்ற மனநிலைக்கு ஒரு அணி வருவதுதான் தவறு. இன்றைய போட்டியில் நாம் அப்படி விட்டுக் கொடுத்துவிட்டதாகவும், ஆட்டத்தின் பாதியிலேயே மனதளவில் தோற்றுவிட்டதாகவும் கருதுகிறேன். நாம் பலவீனமாக இருந்துவிட்டோம். இதுபோன்ற ஒரு தொடரில் பலவீனத்துக்கு இடமில்லை. பலமான பல அனிகளை நாம் இந்த தொடரில் ஜெயித்திருக்கிறோம்.

ஆனால் அப்போட்டிகளில் காட்டிய போராட்ட குணத்தை இன்று நாம் விட்டுவிட்டோம். எதிரணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற தொடர்களில் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் அந்த உரையின் சாராம்சம்.

லக்னோ அணியின் வீரர்களை வீறுகொண்டு எழவைத்தது அந்த உரை. அதன் பிரதிபலிப்பாக அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட லக்னோ அணி, இந்த ஐபிஎல்லின் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது லக்னோ. ஆனால் இதெல்லாம் காம்பீரை திருப்திப்படுத்தாது. அவரது ஒரே லட்சியம் ஐபிஎல் கோப்பை. அதை அடையும்வரை அவர் தூங்கமாட்டார்.

 

தினேஷ் கார்த்திக் – எப்படி சாதித்தார்?

 


 

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக அளவிலான  ஏற்றங்களையும், வீழ்ச்சிகளையும் சந்தித்த வீரர் என்று தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம்.  2004 -ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடம் பதித்த நாளில் இருந்து ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கையாக அவரது கிரிக்கெட் பயணம் இருந்துள்ளது.

 

தினேஷ் கார்த்திக்கின் அப்பா கிருஷ்ணகுமார், ஓஎன்ஜிசியில்  பணியாற்றினார். சிறுவயது முதலே தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் ஆசைகளுக்கு அவர் துணையாக இருந்துள்ளார்.   அவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது இதற்கு முக்கிய காரணம். சிறுவயதில் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக கிருஷ்ண குமார் இருந்துள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அவரால் கிரிக்கெட்டைத் தொடர முடியவில்லை. தனக்கு நேர்ந்தது, தனது மகனுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கிருஷ்ணகுமார். அதற்காகவே தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கனவுகள் நனவாக அவரது ஒவ்வொரு முயற்சியிலும் உடன் நின்றார்.

 

தினேஷ் கார்த்திக் பயிற்சி பெறுவதற்காகவே, தன் வீட்டை ஒட்டியுள்ள நிலத்தை பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி, அதில் பேட்டிங் பயிற்சிக்காக நெட் அமைத்துக் கொடுத்தார் கிருஷ்ணகுமார். இது அவரது கிரிக்கெட் திறமைகள் ஒளிர்விட மிகவும் உதவிகரமாக இருந்தது. சிறு வயதிலேயே சென்னையில் நடக்கும் பள்ளி கிரிக்கெட் போட்டிகளில் தன் முத்திரையைப் பதித்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் உலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மாவாட்ட அணி, மாநில அணிகளைக் கடந்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.  2004-ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் சீரிஸ்தான் அவரது முதல் தொடர்.

 

பேட்டிங்கில் திறமைவாய்ந்த விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இருப்பதால், இந்திய அணியில் அவர் நிலைத்து நிற்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தோனி எனும் கிரிக்கெட் சூறாவளி இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாக தினேஷ் கார்த்திக்கின் பயணத்துக்கு தடை வந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக தோனி உருவெடுக்க, எப்போதாவது அவர் காயம் அடைந்தாலோ, அல்லது முன்னணி பேட்ஸ்மேன்கள் யாராவது ஆட முடியாமல் போனாலோதான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு என்ற நிலை உருவானது.

 

ஆனால் இதற்கெல்லாம் தினேஷ் கார்த்திக் தளரவில்லை. தன்னால் இயன்றவரை போராடினார். அணியியில் இருந்து தன்னை ஒதுக்கி வைக்கும்போதெல்லாம் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனது இடத்தை மீட்டெடுத்தார். தோனிக்கு பிறகாவது தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் ரிஷப் பந்த் வந்ததால் மீண்டும் வாய்ப்புகள் மங்கின. இடையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்பட தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கிராஃப் இறங்கியது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள் செய்வதுபோல், ஒருகட்டத்தில் வர்ணனையாளராக உருவெடுத்தார் தினேஷ் கார்த்திக். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத, இப்போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் பயணம் அவ்வளவுதான். இனி அவர் வர்ணனையாளராகத்தான் கிரிக்கெட் பயணத்தை தொடர வேண்டும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, ஒரு  ஃப்னிஷராக இந்த ஐபிஎல் தொடரில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் தினேஷ் கார்த்திக். 5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார். இந்த தொடரில் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே பொதுமாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் எடுத்த மொத்த ரன்கள் என்னவோ 274-தான். ஆனால் இந்த ரன்களை 200  என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் அடித்துள்ளார் என்பதுதான் மிரளவைக்கும் விஷயம்.

தினேஷ் கார்த்திக்கின் இப்போதைய ஆசை இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவேண்டும் என்பதுதான். இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும்கூட கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி செல்லும் விமானத்தில் தானும் ஒரு பயணியாக இருக்க வேண்டும் என்பது தினேஷ் கார்த்திக்கின் ஆசை. ஆனால் 23 பந்துகளில் 44, 34 பந்துகளில் 55, 8 பந்துகளில் 30 ரன்கள் என்ற தினேஷ் கார்த்திக்கின் ஆவேச ஆட்டங்களைப் பார்க்கும்போது அந்த விமானத்தில் பைலட்டாகவே செல்லக்கூடிய  ஆற்றல் வாய்ந்தவராக தினேஷ் கார்த்திக் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

 

 

ஓடிடி விமர்சனம் - 12th man

 


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனிப்பட்ட சில ரகசியங்கள் இருக்கும்.  அந்த ரகசியங்கள் அவர்களுக்குள்ளேயே இருப்பதுதான் நல்லது. பகிரங்கமாக வெளியில் வந்தால் அதனால் பல சிக்கல்கள் உருவாகும் என்பதை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ள  படம் 12th man.

கல்லூரி காலம் தொட்டு இணைந்திருக்கும் 11 நண்பர்கள், பேச்சுலர் பார்டிக்காக ஒரு ரிஸார்ட்டுக்கு செல்கிறார்கள். பார்ட்டியின்போது தங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்று ஒருவர் சொல்ல, இல்லை தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் சில ரகசியங்கள் இருக்கின்றன என்று மற்றொருவர் சொல்கிறார்.  அது உண்மைதானா என்று ஒரு சர்ச்சை ஏற்படுகிறது. இந்த சர்ச்சைக்கு தீர்வுகாண அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள்.

 பார்ட்டியில் கலந்துகொள்ளும் 11 பேரும் தங்கள் செல்போனை டேபிளில்  வைக்க வேண்டும். ஏதாவது அழைப்புகள் வந்தால் ஸ்பீக்கரில் போட்டு பேசவேண்டும்.  அதேபோல் வாட்ஸ்அப்பில் தகவல்கள் வந்தாலும் அதை அனைவருக்கும் படித்துக் காட்ட வேண்டும் என்பது போட்டியின் விதி.

இந்த வினோத விளையாட்டின்போது ஒருவருக்கு வரும் தொலைபேசி அழைப்பால் நண்பர்களுக்குள் சண்டை மூள்கிறது. அனைவரும் தங்கள் அறைகளுக்குள் போகிறார்கள். சிறிது நேரம்  கழித்து அவர்களில் ஒரு பெண், ரிசார்ட் அருகே இறந்து கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. அதே ரிசார்ட்டில் வசிக்கும்  12-வது நபரான ஒரு காவல்துறை அதிகாரி (மோகன்லால்)  இதற்கு விடை காண்பதுதான் கதை.      

 

‘திருஷ்யம்’ (பாபநாசம்),  ‘த்ருஷ்யம் 2’ என மலையாளத்தில் 2 த்ரில்லர் வெற்றிகளைக் கொடுத்த மோகன்லால் – ஜீது ஜோசப் ஜோடியின் அடுத்த த்ரில்லர் படம் என்பதாலேயே இப்படத்தின்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மோகன்லால் – ஜீது ஜோசப் ஜோடி முடிந்தவரை  நிறைவேற்றி உள்ளது.

படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்துதான் அறிமுகமாகிறார் மோகன்லால். அதுவும் சில நிமிடங்கள்தான். ஒரு குடிகார காமெடியனாக நண்பர்களுடன் விவாதம் செய்துவிட்டு போகும் அவர், பின்னர் இடைவேளையின்போதுதான் மீண்டும் வருகிறார். ஆனால் அதன்பின்னர் ஒட்டுமொத்த படத்தையும் தன் முதுகில் சுமக்கிறார். எந்த கவலையும் இல்லாத ஒரு குடிகாரன் பாத்திரம், அதீத திறமைசாலியான காவல்துறை அதிகாரியின் பாத்திரம் என்று இருவிதத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

 ‘த்ருஷ்யம்’, ‘த்ருஷ்யம் 2’, ‘மெமரீஸ்’, ‘தம்பி’ (தமிழ்) ஆகிய படங்களில் த்ரில்லருடன் சற்று மசாலா விஷயங்களையும் சேர்த்து கொடுத்திருந்த ஜீது ஜோசப், இதில் முழுக்க முழுக்க சீரியசாக களம் இறங்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஒரு நீண்ட வட்டமேசையைச் சுற்றி 12 கதாபாத்திரங்களையும் அமர வைத்தே விறுவிறுப்பாக கதை சொல்லி இருப்பதில் அப்ளாஸ் வாங்குகிறார். அதேபோல் ஒரு ரிசார்ட்டுக்குள் வைத்து 80 சதவீத படத்தை எடுத்திருந்தாலும் ரசிகர்களை கொஞ்சம்கூட நெளியவைக்காமல் சுவாரஸ்யமாக கதையை கொண்டுசென்றிருக்கும் அவரை நிச்சயம் பாராட்டலாம்.

பொதுவாக சஸ்பென்ஸ் கதைகளில் சந்தேகப்படும் நபர்களாக நான்கைந்து பேர்தான் இருப்பார்கள். ஆனால் இதில் 10 பேர் இருப்பதால் ஒவ்வொருவரின் பெயரையும், அவர்களுக்கும் இறந்துபோன பெண்ணுக்கும் இடையிலான தொடர்பை ஞாபகத்தில் வைத்திருப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இதனால் சில சமயங்களில் சில காட்சிகளை மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டி உள்ளது.  .

அதேபோல் படத்தின் ஆரம்பத்தில் அனைவரையும் நல்லவர்களாக காட்டிவிட்டு, போகப்போக அனைவரையும் கோசமானவர்களாக சித்தரிப்பதும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

இருப்பினும் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை விரும்புபவர்களை இப்படம் நிச்சயம் ஏமாற்றாது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி உள்ளது.

 

 

 

கேகே – காற்றில் கலந்த குரல்

 

 

யார் பாடியது என்று தெரியாமலேயே ஒரு சில பாடல்கள் நம் மனதில் நிலைத்திருக்கும். அப்படி 90-களில் தமிழக இளைஞர்களின் மனதில் நிலைத்து நின்ற பல பாடல்களுக்கு சொந்தக்காரர் பாடகர் கேகே.

 “ஸ்டிராபெர்ரி கண்ணே”, “பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது”, ”நினைத்து நினைத்து பார்த்தேன்” ”அண்டங்காக்கா கொண்டக்காரி”, ”காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன்”, ”காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும்வரை” உட்பட 90-ஸ் கிட்ஸ் இளைஞர்களின் தேசிய கீதமாக விளங்கிய 50-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே).  இசையை தன் உயிராகக் கருதிய கேகே   கொல்கத்தாவில் நேற்று நடந்த  கல்லூரி விழாவில் தனது இசைக் கச்சேரியை நடத்தியிருந்தார். அதன் பிறகு அறைக்கு திரும்பியவர் மயங்கி விழுந்து  மாரடைப்பால் காலமானார்.

53 வயதிலேயே திரையிசையில் பல சாதனைகளைப் படைத்த கேகேவைப் பற்றிய சில முக்கிய தவல்களைப் பார்ப்போம்:

 

கேகேயின் குடும்பம் முதலில் டெல்லியில் வசித்து வந்தது. இசையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் முன் ஓட்டல் துறையில் கேகே பணியாற்றியுள்ளார்.

கேகேயின் மனையின் பெயர் ஜோதிகிருஷ்ணா. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் சிறிது காலம் சேல்ஸ்மேனாக கேகே பணியாற்றி உள்ளார். பின்னர் மனைவி மற்றும் அப்பாவின் வற்புறுத்தலால் இசையில் மீண்டும் கவனம் செலுத்தினார்.

 

திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ்களை (விளம்பரப் பாடல்கள்) கேகே பாடியுள்ளார்.

 கேகேயின் பாடல் திறமையை முதலில் அடையாளம் கண்டது பாடகர் ஹரிஹரன்தான். டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கேகே பாடுவதைக் கேட்ட ஹரிஹரன், அவரிடம் சினிமாவுக்கு முயற்சி செய்யுமாறு கூறியிருக்கிறார். மேலும் டெல்லியில் இருந்து மும்பைக்கு வீட்டை மாற்றிக்கொள்ளுமாறும் அவர்தான் வற்புறுத்தி உள்ளார்.

கேகேயின் குரல் வளத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஏஆர் ரஹ்மான், தான் இசையமைத்த ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் வரும் ‘ஹலோ டாக்டர்’ என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். இதுதான் அவர் பாடிய முதல் தமிழ் பாடல். இதைத்தொடர்ந்து தனது இசையில் மேலும் பல பாடல்களை கேகேவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.

 

இந்தியில் முதல் முதல் முறையாக மாச்சீஸ் என்ற படத்தில் ‘சோட் ஆயே ஹம் வோ கலியான்’ என்ற பாடலை கேகே பாடியுள்ளார். விஷால் பரத்வாஜ் இசையமைத்த இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

 

1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார்

கேகேவுக்கு மிகவும் பிடித்த பாடகர் கிஷோர்குமார். தன்னை பாடத் தூண்டியவர் கிஷோர் குமார்தான் என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கேகே முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை.  “ஒருசில நாட்கள் இசைப்பள்ளியில் படித்தாலும், பின்னர் அதைத் தொடரவில்லை. பாடல்களை கேட்டு கேட்டுத்தான் முறைப்படி பாட கற்றுக்கொண்டேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கேகே. குறிப்பாக அக்காலத்தில் தனது அம்மா டேப் ரெகார்டரில் கேட்ட மலையாளப் பாடல்கள் தன்னை இசையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியதாக கேகே கூறியுள்ளார்.

 

தமிழைத் தவிர இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடா, பெங்காலி, மலயாளம், குஜராத்தி மற்றும் அஸ்ஸாமி மொழிகளில் கேகே பாடியுள்ளார்.