Powered By Blogger

Wednesday, June 1, 2022

கேகே – காற்றில் கலந்த குரல்

 

 

யார் பாடியது என்று தெரியாமலேயே ஒரு சில பாடல்கள் நம் மனதில் நிலைத்திருக்கும். அப்படி 90-களில் தமிழக இளைஞர்களின் மனதில் நிலைத்து நின்ற பல பாடல்களுக்கு சொந்தக்காரர் பாடகர் கேகே.

 “ஸ்டிராபெர்ரி கண்ணே”, “பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது”, ”நினைத்து நினைத்து பார்த்தேன்” ”அண்டங்காக்கா கொண்டக்காரி”, ”காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன்”, ”காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும்வரை” உட்பட 90-ஸ் கிட்ஸ் இளைஞர்களின் தேசிய கீதமாக விளங்கிய 50-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே).  இசையை தன் உயிராகக் கருதிய கேகே   கொல்கத்தாவில் நேற்று நடந்த  கல்லூரி விழாவில் தனது இசைக் கச்சேரியை நடத்தியிருந்தார். அதன் பிறகு அறைக்கு திரும்பியவர் மயங்கி விழுந்து  மாரடைப்பால் காலமானார்.

53 வயதிலேயே திரையிசையில் பல சாதனைகளைப் படைத்த கேகேவைப் பற்றிய சில முக்கிய தவல்களைப் பார்ப்போம்:

 

கேகேயின் குடும்பம் முதலில் டெல்லியில் வசித்து வந்தது. இசையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் முன் ஓட்டல் துறையில் கேகே பணியாற்றியுள்ளார்.

கேகேயின் மனையின் பெயர் ஜோதிகிருஷ்ணா. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் சிறிது காலம் சேல்ஸ்மேனாக கேகே பணியாற்றி உள்ளார். பின்னர் மனைவி மற்றும் அப்பாவின் வற்புறுத்தலால் இசையில் மீண்டும் கவனம் செலுத்தினார்.

 

திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ்களை (விளம்பரப் பாடல்கள்) கேகே பாடியுள்ளார்.

 கேகேயின் பாடல் திறமையை முதலில் அடையாளம் கண்டது பாடகர் ஹரிஹரன்தான். டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கேகே பாடுவதைக் கேட்ட ஹரிஹரன், அவரிடம் சினிமாவுக்கு முயற்சி செய்யுமாறு கூறியிருக்கிறார். மேலும் டெல்லியில் இருந்து மும்பைக்கு வீட்டை மாற்றிக்கொள்ளுமாறும் அவர்தான் வற்புறுத்தி உள்ளார்.

கேகேயின் குரல் வளத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஏஆர் ரஹ்மான், தான் இசையமைத்த ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் வரும் ‘ஹலோ டாக்டர்’ என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். இதுதான் அவர் பாடிய முதல் தமிழ் பாடல். இதைத்தொடர்ந்து தனது இசையில் மேலும் பல பாடல்களை கேகேவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.

 

இந்தியில் முதல் முதல் முறையாக மாச்சீஸ் என்ற படத்தில் ‘சோட் ஆயே ஹம் வோ கலியான்’ என்ற பாடலை கேகே பாடியுள்ளார். விஷால் பரத்வாஜ் இசையமைத்த இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

 

1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார்

கேகேவுக்கு மிகவும் பிடித்த பாடகர் கிஷோர்குமார். தன்னை பாடத் தூண்டியவர் கிஷோர் குமார்தான் என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கேகே முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை.  “ஒருசில நாட்கள் இசைப்பள்ளியில் படித்தாலும், பின்னர் அதைத் தொடரவில்லை. பாடல்களை கேட்டு கேட்டுத்தான் முறைப்படி பாட கற்றுக்கொண்டேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கேகே. குறிப்பாக அக்காலத்தில் தனது அம்மா டேப் ரெகார்டரில் கேட்ட மலையாளப் பாடல்கள் தன்னை இசையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியதாக கேகே கூறியுள்ளார்.

 

தமிழைத் தவிர இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடா, பெங்காலி, மலயாளம், குஜராத்தி மற்றும் அஸ்ஸாமி மொழிகளில் கேகே பாடியுள்ளார்.

 

 

 

 

 

No comments:

Post a Comment