Powered By Blogger

Wednesday, February 21, 2024

அமிதாப் பச்சனை நிராகரித்த வானொலி நிலையம்

 


இன்று உலக வானொலி தினம். ஆண்டுதோறும் பிப்ரவரி 12-ம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படும் என்று யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி இன்று உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக வானொலி தினம் கொண்டாடப்படும் சூழலில், வானொலியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்

உலகின் முதல் ரேடியோ ஒலிபரப்பு 1895-ம் ஆண்டு மே 13-ம் தேதி மார்க்கோனியால் செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் ரேடியோ ஒலிபரப்பு 1923-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் செய்யப்பட்டது. பாம்பே ரேடியோ கிளப் இந்த ஒலிபரப்பை செய்தது. பாம்பே ரேடியோ கிளப்தான் இந்தியாவில் வானொலி சேவையை தொடங்கிய முதல் நிறுவனம்.

கடந்த 2023-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 479 வானொலி நிலையங்கள் உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 99.19 சதவீத மக்களை சென்று சேரும் வகையில் வானொலியின் சேவை உள்ளது.

ரேடியோ அலைகள் வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. இது ஒளியின் வேகத்துக்கு நிகரானதாகும்.

உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

உலகின் முதல் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு 1940-ம் ஆண்டில் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர், ரேடியோ சிக்னல்களை அனுப்பும் டவராகவும் பயன்படுத்தப்படுகிறது.

நம் நாட்டில் ஆல் இந்தியா ரேடியோ 1936-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தனது முதல் ஒலிபரப்பை தொடங்கியது.

இப்போது ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்துக்கு சொந்தமாக 415 வானொலி நிலையங்கள் உள்ளன. 23 மொழிகளில் அது ஒலிபரப்புகளை செய்து வருகிறது.

ஆல் இந்தியா ரேடியோவின் முக்கிய ஒலிபரப்பான விவித் பாரதி 1957-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆல் இந்தியா ரேடியோவுக்கு லோகோவாக இருக்கும் ட்யூனுக்கு இசையமைத்தவர் வால்டர் கஃப்மேன்.

இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அமிதாப் பச்சன், ஒரு காலகட்டத்தில் வானொலி அறிவிப்பாளராக விரும்பியுள்ளார். அப்போது அவரது குரல் சரியாக இல்லை என்று கூறி வானொலி நிறுவனம் அவரை நிராகரித்தது.

1936-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஆல் இந்தியா ரேடியோவில் முதல் முறையாக செய்தி ஒலிபரப்பப்பட்டது.

1952-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி முதல் இசை தொடர்பான நிகழ்ச்சிகள் ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

அஸ்வின் 500 –போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

 


இந்திய கிரிக்கெட்டுக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அந்த சாதனையை படைத்தவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.  நம் சென்னை பையனான ரவிச்சந்திரன் அஸ்வின்தான் அந்த சாதனை நாயகன். இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில்  சக் கிராலேவின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்த  வெற்றி அஸ்வினுக்கு அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. அதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள் பல.

அஸ்வினின் வெற்றிக்கு வித்திட்ட முதல் நபர் அவரது அப்பா ரவிச்சந்திரன். சென்னையில் கிளப் கிரிக்கெட்டில் ஆடிவந்த ரவிச்சந்திரனுக்கு இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது கனவு. ஆனால் அந்த கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. தன்னால் முடியாததை மகனை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் விரும்பினார். கிரிக்கெட் வீர்ராகும் கனவை தன் மகனுக்குள் விதைத்தார்.

ஆரம்பத்தில் அஸ்வினுக்கு சுழற்பந்து வீச்சில் ஆர்வம் அதிகம் இல்லை. ஒரு பேட்ஸ்மேனாகத்தான் விரும்பியுள்ளார். பள்ளிக்கூட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், மித வேகப் பந்து வீச்சாளராகவும்தான் அஸ்வின் இருந்துள்ளார். இந்த சூழலில் அவரது பயிற்சியாளரான சி.கே.விஜய்தான் அஸ்வினின் உடல்வாகு ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கானது என்று கண்டுபிடித்துள்ளார். அதை அஸ்வினுக்கு சொல்லி, அவரை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார். அந்த வகையில் அஸ்வினை உருவாக்கிய இரண்டாவது நபர் அவரது பயிற்சியாளர்.

சுழற்பந்து வீச்சாளரான பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்த அஸ்வினுக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்த அணி சிஎஸ்கே. ஐபிஎல்லில்  சிஎஸ்கேவுக்காக பல விக்கெட்களை அஸ்வின் கொய்ய,  2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அணியின் ஒரே தமிழராக இடம்பெற்றார் அஸ்வின்.

இந்தியா உலகக் கோப்பையை வென்ற அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் டேரன் பிராவோவின் விக்கெட்டை முதல் விக்கெட்டாக வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் இன்று 500-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி நிற்கிறது.

பொதுவாக நன்றாக ஆடும் வீர்ர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும். ஆனால் அஸ்வினுக்கு அப்படி நடக்கவில்லை. காரணம் பாலிடிக்ஸ். தோனியின் காலத்தில் கொண்டாடப்பட்ட அஸ்வின், விராட் கோலி வந்ததும்  கொஞ்சம் ஒதுக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மிக முக்கிய ஆட்டங்களில், குறிப்பாக இந்தியா ஒரு ஸ்பின்னரை மட்டுமே வைத்து ஆடும் வெளிநாட்டு பிட்ச்களில் அஸ்வின் ஒதுக்கப்பட்டு, ஜடேஜா முன்னிறுத்தப்பட்டார்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அஸ்வின் கவலைப்படவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விக்கெட்களை கொய்தார். அவரது இடைவிடாத போராட்டம்தான் இன்று 500 விக்கெட்களை கொய்ய அவருக்கு உதவியிருக்கிறது.

அஸ்வினுக்கு சிறு வயதில் ஒரு வழக்கம் இருந்துள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியில் தான் சிறப்பாக ஆடியதாக அவருக்குத் தோன்றினால், அந்த போட்டியில் அணிந்த சட்டையை வீட்டில் ஒரு அறையில் மாட்டி வைப்பார். அவ்வாறு முக்கிய போட்டிகளில் அணிந்த சட்டைகளை மாட்டி வைப்பதற்காகவே அவரது வீட்டில் ஒரு அறை உள்ளது. 500-வது விக்கெட்டை எடுத்தபோது அணிந்த சட்டையும் அந்த அறைக்குள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

 

 

சுப்மான் கில் – அப்பாவால் கிடைத்த சதம்

 


 கிரிக்கெட் வீர்ர்களின் புகழை ரோலர் கோஸ்டரோடு ஒப்பிட்டு சொல்லலாம். எப்போது உயரத்துக்கு போவார்கள்எப்போது கீழே இறங்குவார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் சுப்மான் கில்.

2023-ம் ஆண்டில் இந்திய அணியின் நாயகனாக இருந்தவர் சுப்மான் கில். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் உள்ளிட்ட பல சதங்களை அடித்த சுப்மான் கில், விராட் கோலியையும் தாண்டி இந்திய ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார். ஐசிசி தரவரிசை பட்டியலிலும் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார்.  ஆனால் உலகக் கோப்பை தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆடாததால், அந்த நாற்காலியின் கால்கள் ஆட்டம் காண தொடங்கின.

உலகக் கோப்பைக்குப் பிறகும் அவர் சொல்லிக்கொள்ளும் வகையில் ஆடாததால், வீழ்ச்சியின் வேகம் அதிகமானது. அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட்  போட்டியில் கில் பேட்டிங்கில் சொதப்பியதுடன், இந்தியாவும் தோற்றதால் கில்லின் ரோலர் கோஸ்டர் பயணம் ஆட்டம் காண தொடங்கியது. அவரை ரசிகர்கள் வில்லனாக பார்க்கத் தொடங்கினர். கடைசி 9 இன்னிங்ஸ்களில் கில் மொத்தமாகவே 153 ரன்களைத்தான் எடுத்திருந்தார் என்பதால் அவரைப் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.

புஜாரா, ரஹானே, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீர்ர்கள் இருக்கும்போது தேவையில்லாமல் கில்லுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றனஎன்று பல முன்னாள் வீர்ர்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பினர்.

எதிர்ப்புகள் அதிகமாவதை அறிந்த தேர்வுக்குழு, கடந்த சில நாட்களுக்கு முன் கில்லை அழைத்து பேசியிருக்கிறது. “விசாகபட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிதான் உங்களுக்கான கடைசி வாய்ப்பு. இதிலும் சரியாக ஆடாவிட்டால் அணியில் இருந்து விலக்கப்படுவீர்கள். பின்னர் பஞ்சாப் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடி, மீண்டும் உங்களை நிரூபித்த பிறகுதான் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆட அடுத்த வாய்ப்பு கிடைக்கும்என்று அவருக்கு திட்டவட்டமாக சொல்லப்பட்டது.

தேர்வுக் குழுவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ரஞ்சி போட்டியில் ஆட கில்லும் தயாராகி இருந்தார். “விசாகபட்டினம் டெஸ்ட் முடிந்த்தும் 9-ம் தேதி பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே தொடங்கவுள்ள ரஞ்சி போட்டியில் ஆடப் போகிறேன்என்று பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருந்தார் சுப்மான் கில். அதற்கான காரணத்தையும் சொல்லியிருந்தார்.

மகனின் இந்த தகவலைக் கேட்டதும், அவரை சமாதானப்படுத்த குடும்பத்தோடு விசாகபட்டினம் வந்துவிட்டார் சுப்மான் கில்லின் அப்பா லக்வீந்தர் சிங். சிறு வயதில் மகனுக்காக வயலை காலியாகப் போட்டு மைதானம் அமைத்தவர் அவர். அந்த மைதானத்தில் உள்ளூர் பந்துவீச்சாளர்களை எல்லாம் கொண்டுவந்து சுப்மான் கில்லுக்கு பயிற்சி கொடுத்தவர் அவர்.

இப்போது சோர்ந்து நின்ற மகனை தேற்றிய அவர், “உன் பழைய ஆட்டத்தை திரும்ப வெளிப்படுத்துஎன்று தட்டிக் கொடுத்து அவரை தேற்றினார். போட்டி நடக்கும்போது மைதானத்திலேயே சுற்றி வந்தார்.

லக்வீந்தர் சிங்கின் நம்பிக்கை வார்த்தைகளும், மைதானத்தை சுற்றி வந்ததும்  பலனளித்தன. மைதானத்தில்  அப்பா இருக்கும் நம்பிக்கையாலும், அவர் கொடுத்த உற்சாகத்தாலும், விசாகபட்டினம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார் சுப்மான் கில். கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது.

இந்த சதத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்மான் கில், இதற்கு காரணம் தனது அப்பாதான் என்பதை மறுக்கவில்லை. “என் கிரிக்கெட் பயணத்தில் அவர் அளித்த உற்சாகத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர் மைதானத்தில் இருந்தது எனக்கு புத்துணர்ச்ச்சியை அளித்தது. இப்போதுகூட சதம் அடித்ததற்காக என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. கடைசியில் தேவையில்லாமல் ஷாட் அடிக்கப்போய் அவுட் ஆனதற்கு அப்பா திட்டுவாரோ என்ற பயம்தான் இருக்கிறதுஎன்று கூறியிருக்கிறார் சுப்மான் கில்.

எல்லா விளையாட்டு வீர்ர்களுக்கும் இப்படி ஒரு அப்பா இருந்துவிட்டால் பயிற்சியாளரே தேவையில்லை.

 

 

 

காந்தியின் அரையாடைக்கு வயது 100

 



மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நாள் செப்டம்பர் 22, 1921. இந்த நாளுக்கு முந்தைய தினம்வரை  வேட்டி, சட்டை, அதற்கு மேல் ஒரு கோட், தலைக்கு தொப்பி என்று குஜாராத்தி மாடலில்தான் உடையணிந்து வந்தார் காந்தி.  இந்த உடையைத் தூக்கி எறிந்து வெறும் வேட்டி, துண்டு என்று எளியவர்களின் கோலத்துக்கு காந்தியடிகள் மாறிய நாள் இன்று.
காந்தியின் பழைய புகைப்படங்களைப் பார்த்தால், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், உடையும் சேர்ந்து மாறியிருப்பதை அறிய முடியும். சிறுவனாக இருந்த காலத்தில் வேட்டி, சட்டை, அதற்கு மேல் கோட், கழுத்தில் நெக்லஸ், தலையில் ஒரு தொப்பி என்று  குஜராத்தைச் சேர்ந்த பணக்கார சிறுவர்கள் அணியும் நவநாகரீக உடைகளை அணிந்திருந்தார்.
அடுத்த கட்டமாக படிப்பதற்காக லண்டன் நகருக்கு சென்றபோது, அவரது உடையணியும் பாணியும் மாறியது. குஜராத்திய ஸ்டைல் வேட்டி சட்டையில் இருந்து ஆங்கிலேய இளைஞர்கள் அணியும் பேண்ட், சட்டை கோட்டுக்கு மாறினார். ஒரு மனிதனுக்கு, அவன் அணியும் உடைகளை வைத்துதான் மரியாதை என்ற எண்ணம் கொண்டவராய் அவர் அக்காலத்தில் இருந்தார். 1891-ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய  பிறகும்கூட சில காலங்களுக்கு  இங்கிலாந்து கலாச்சாரம் அவரைப் பின் தொடர்ந்துள்ளது. காந்திக்காக வீட்டின் சூழலையே மேற்கத்திய ஸ்டைலில் மாற்றியமைத்துள்ளார் அவரது அண்ணன் லக்‌ஷ்மிதாஸ். உணவு முதல் வீட்டில் பல்வேறு விஷயங்களை இக்காலத்தில் காந்திக்காக மாற்றி அமைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞராக  பணியாற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற காலத்தில்தான், என்னதான் மாடர்னாக உடை அணிந்தாலும், நிற வேற்றுமை கொண்ட அந்நாட்டில் இந்தியர்களுக்கு மதிப்பில்லை என்பதை காந்தி உணர்ந்துகொண்டார். ஆங்கிலேயர்களின் உடை, தொப்பி என்று இருந்தபோதிலும், பல இடங்களில் இந்தியர் என்பதால் அவமதிக்கப்பட்டார். அக்காலத்தில் தென் ஆப்பிரிக்க நீதிமன்றங்களில்  இந்தியர்கள் தலையில் தலைப்பாகையை அணியக்கூட தடை இருந்துள்ளது. இதெல்லாம் காந்தியை மிகவும் பாதித்தது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வேட்டி, சட்டை, கழுத்தைச் சுற்றி ஒரு சிறிய துணி என்று முற்றிலும் இந்திய ஆடைகளைக் கொண்டு கத்தியாவார் வம்சத்தினரின் ஸ்டைலில் காந்தியின் உடை அமைப்பு இருந்துள்ளது. இந்தியா திரும்பிய பிறகு கோபாலகிருஷ்ண கோகலேவின் வேண்டுகோளை ஏற்று  சுதந்திர போராட்டத்தில் டுபட்ட பிறகு, மற்ற இந்தியர்களின்  வறுமை நிலையைப் பார்த்து அவரது உடையில் மேலும் எளிமை கூடியது. 1915-ம் ஆண்டுமுதல் கதர் உடையைத் தவிர வேறு எதையும் அணிவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் காந்தி. வேட்டி, சட்டை, தலைக்கு ஒரு டர்பன் என்ற எளிய உடைக்கு அவர் மாறினார்.
 
இந்த காலகட்டத்தில்தான் 1921-ம் ஆண்டில் சென்னையில் இருந்து மதுரை நகருக்கு ரயிலில் வந்துள்ளார் காந்தி. அப்போது அவர் பயணித்துள்ள ரயில் பெட்டியில் இருந்த மக்களில் பலரும் வெளிநாட்டு உடைகளை அணிந்துள்ளனர். அவர்களிடம், “நீங்கள் ஏன் கதர் ஆடையை அணியக் கூடாதுஎன்று காந்தி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், “கதரடைகளின் விலை அதிகமாக உள்ளது. அது எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. ஆனால் ஆங்கிலேயர்களின் உடை விலை குறைவாக உள்ளதுஎன்று கூறியுள்ளனர்.
அதே சமயம் இந்த ரயில் பயணத்தின்போது ஜன்னல் வழியே அவர் பார்த்த காட்சிகளில் ஏழை விவசாயிகள் பலரும் வெறும் கோவணத்துடன் வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்த 2 சம்பவங்களும் காந்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறைந்த விலையில் கதர் உடைகள் கிடைக்க வேண்டுமென்றால் அதன் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்று காந்தி முடிவெடுத்தார். மேலும் சாதாரண மனிதர்களுக்காக தான் போராடும்போது, அவர்கள் அணியும் உடையையே அணியவேண்டும் என்றும் முடிவெடுத்தார்.
அன்று எடுத்த முடிவின் விளைவாகத்தான் இடுப்பில் ஒரு சிறிய வேட்டி, அதற்கு மேல் ஒரு துண்டு என அவரது உடையின் பாணி மாறியது. மதுரை மேலவாசி வீதியில் உள்ள கட்டிடத்தில் தன் புதிய கோலத்துடன் 1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் முறையாக மக்கள் முன் காட்சியளித்தார்.
காந்தியின் இந்த உடையை வைத்து, அவரை  அரை நிர்வாண பக்கிரிஎன்று ஆங்கிலேயர்கள் கிண்டலடித்தனர். ஆனால் காந்தியின் மன உறுதியை அவர்களால் மாற்ற முடியவில்லை. தனது கடைசி காலம்வரை அந்த உடையுடனேயே இருந்து சாதாரண மக்களுக்காக உழைத்தார். காந்தியின் அந்த அரையாடைக்கு இன்றுடன் 100 வயதாகிறது. இந்த புதிய உடை மாற்றத்தில் தமிழகத்துக்கும் பங்கு உண்டு  என்பதில் தமிழகர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.

நாட்டுக்காக நடையாய் நடந்த காந்தி

 


ராகுல் காந்தி, அண்ணாமலை போன்ற தலைவர்கள் நடைப்பயணம் செல்வதைப் பற்றிய செய்திகளை இப்போது தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்தியாவில் இந்த நடைபயணங்களுக்கு முதலில் வித்திட்டவர் நம் மகாத்மா காந்தி.

இப்போது இருக்கும் தலைவர்கள் எல்லாம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடக்கிறார்கள். இதில் ராகுல் காந்தியாவது பரவாயில்லை. தினமும் தொடர்ச்சியாக நடக்கிறார். முன்பு இதே போன்றதொரு நடைப்பயணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மேற்கொண்டிருந்தார். ஆனால் அண்ணாமலையின் நடைப்பயணத்தை நடைப்பயணம் என்றே சொல்ல முடியாது. இன்ஸ்டால்மெண்டில் நடந்துகொண்டு இருக்கிறார்.

ஆனால் காந்தியின் நடைப்பயணங்கள் அப்படியல்ல. அவர் மக்களின் வாக்குகளுக்காக நடக்கவில்லை. மாறாக மக்களுக்காக நடந்தார். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்காக நடந்தார். இந்த வகையில் அவர் நடந்தது கொஞ்சநஞ்ச தூரமல்ல… 1914-ம் ஆண்டுமுதல் 1948-ம் ஆண்டுவரை அவர் மொத்தம்   79,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறார் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த கணக்குப்படி பார்த்தால் இந்த உலகத்தையே அவர் 2 முறை வலம் வந்திருக்கலாம். இந்த நடையெல்லாம் அவர் நடந்தது நாட்டுக்காக. நாட்டு மக்களுக்காக.

 

பொதுவாகவே மகாத்மா காந்திக்கு நடப்பதென்றால் மிகவும் பிடிக்கும். இங்கிலாந்தில் படிக்கச் சென்ற காலகட்டத்தில் மகாத்மா காந்திக்கு நடைப்பயணத்தின் மீதான ஈர்ப்பு வந்துள்ளது. அதற்கு அவரது பொருளாதார நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

 

1888 முதல் 1891 வரை இங்கிலாந்தில் சட்டப் படிப்பு படித்த காலத்தில் ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துடன் காந்தி தங்கியுள்ளார். இந்த காலகட்டத்தில் செலவைக் குறைப்பதற்காக, தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து கல்லூரிக்கு தினமும் 10 மைல் தூரம் நடந்தே சென்றிருக்கிறார் காந்தி.

 

லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பிறகும், அவரது நடைப் பயணத்தில் மாற்றம் வரவில்லை. தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தினமும் 45 நிமிட நேரம் நடந்தே சென்றுள்ளார் காந்தி.

 

இதுபற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள மகாத்மா காந்தி, “மும்பையிலும் லண்டனிலும் நடப்பதற்கு ஒரு வித்தியாசம்தான் இருந்தது. லண்டனில் சீதோஷண நிலை மிகவும் குளுமையாக இருக்கும். அதனால் எளிதாக நடக்கலாம். ஆனால் மும்பை வெயிலில் நடப்பது கடினமாக இருந்ததுஎன்கிறார்.

 

பின்னர் மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிறகும் நடைப்பயிற்சியை அவர் விடவில்லை. பிற்காலத்தில் இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலும் நடைப் பயிற்சியை அவர் விடாமல் பற்றிக்கொண்டிருந்தார்.

 

சபர்மதி மற்றும் சேவாகிராம் ஆசிரமத்தில் தனது தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக நடைப் பயிற்சியையும் அவர் சேர்த்திருந்தார். மும்பையில் 1924-ம் ஆண்டு குடல் அழற்சிக்காக அறுவை சிகிச்சை செய்த காலத்திலும் அவர் நடைப்பயிற்சியை விடவில்லை. இந்த காலகட்டத்திலும் தன் உதவியாளர்களுடன் ஜுஹூ கடற்கரையில் தினமும் 40 நிமிடங்கள் அவர் நடந்துள்ளார்.

 

1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றிருந்த சமயத்தில், தினமும் காலை 4 மணிக்கே எழுந்து, ஆளில்லாத தெருக்களில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள்  தெரிவிக்கிறார்கள்.

1931-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்துக்காக மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகியிருந்தது.

 

இந்த காலகட்டத்திலும் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரை 386 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் காந்தியடிகள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்த நடைப்பயணம் அது.

 

காந்தியடிகள் அன்று நாட்டுக்காக நடையாய் நடந்ததால்தான் நாம் இன்றைக்கு சுதந்திரமாக எந்தக் கவலையும் இல்லாமல் மார்னிங் வாக் போகிறோம்.