மகாத்மா
காந்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நாள் செப்டம்பர் 22,
1921. இந்த நாளுக்கு
முந்தைய தினம்வரை வேட்டி, சட்டை, அதற்கு மேல் ஒரு
கோட், தலைக்கு தொப்பி என்று குஜாராத்தி மாடலில்தான் உடையணிந்து
வந்தார் காந்தி. இந்த உடையைத் தூக்கி எறிந்து வெறும் வேட்டி, துண்டு என்று
எளியவர்களின் கோலத்துக்கு காந்தியடிகள் மாறிய நாள் இன்று.
காந்தியின்
பழைய புகைப்படங்களைப் பார்த்தால், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், உடையும் சேர்ந்து
மாறியிருப்பதை அறிய முடியும். சிறுவனாக இருந்த காலத்தில் வேட்டி, சட்டை, அதற்கு மேல் கோட், கழுத்தில் நெக்லஸ், தலையில் ஒரு தொப்பி
என்று குஜராத்தைச் சேர்ந்த பணக்கார சிறுவர்கள் அணியும் நவநாகரீக உடைகளை அணிந்திருந்தார்.
அடுத்த கட்டமாக
படிப்பதற்காக லண்டன் நகருக்கு சென்றபோது, அவரது உடையணியும் பாணியும் மாறியது. குஜராத்திய ஸ்டைல் வேட்டி
சட்டையில் இருந்து ஆங்கிலேய இளைஞர்கள் அணியும் பேண்ட், சட்டை கோட்டுக்கு
மாறினார். ஒரு மனிதனுக்கு, அவன் அணியும் உடைகளை வைத்துதான் மரியாதை என்ற எண்ணம் கொண்டவராய்
அவர் அக்காலத்தில் இருந்தார். 1891-ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு
திரும்பிய பிறகும்கூட சில காலங்களுக்கு இங்கிலாந்து கலாச்சாரம் அவரைப் பின் தொடர்ந்துள்ளது. காந்திக்காக வீட்டின் சூழலையே மேற்கத்திய ஸ்டைலில் மாற்றியமைத்துள்ளார் அவரது அண்ணன் லக்ஷ்மிதாஸ். உணவு முதல் வீட்டில் பல்வேறு விஷயங்களை இக்காலத்தில் காந்திக்காக மாற்றி அமைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து
வழக்கறிஞராக பணியாற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற காலத்தில்தான், என்னதான் மாடர்னாக
உடை அணிந்தாலும், நிற வேற்றுமை கொண்ட அந்நாட்டில் இந்தியர்களுக்கு மதிப்பில்லை
என்பதை காந்தி உணர்ந்துகொண்டார். ஆங்கிலேயர்களின் உடை, தொப்பி என்று
இருந்தபோதிலும், பல இடங்களில் இந்தியர் என்பதால் அவமதிக்கப்பட்டார்.
அக்காலத்தில் தென் ஆப்பிரிக்க நீதிமன்றங்களில் இந்தியர்கள் தலையில் தலைப்பாகையை அணியக்கூட தடை இருந்துள்ளது. இதெல்லாம் காந்தியை மிகவும் பாதித்தது.
தென்
ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வேட்டி, சட்டை, கழுத்தைச் சுற்றி
ஒரு சிறிய துணி என்று முற்றிலும் இந்திய ஆடைகளைக் கொண்டு கத்தியாவார்
வம்சத்தினரின் ஸ்டைலில் காந்தியின் உடை அமைப்பு இருந்துள்ளது. இந்தியா திரும்பிய
பிறகு கோபாலகிருஷ்ண கோகலேவின் வேண்டுகோளை ஏற்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு, மற்ற இந்தியர்களின் வறுமை நிலையைப் பார்த்து அவரது உடையில் மேலும் எளிமை கூடியது. 1915-ம் ஆண்டுமுதல் கதர்
உடையைத் தவிர வேறு எதையும் அணிவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் காந்தி. வேட்டி, சட்டை, தலைக்கு ஒரு டர்பன்
என்ற எளிய உடைக்கு அவர் மாறினார்.
இந்த காலகட்டத்தில்தான் 1921-ம் ஆண்டில்
சென்னையில் இருந்து மதுரை நகருக்கு ரயிலில் வந்துள்ளார் காந்தி. அப்போது அவர்
பயணித்துள்ள ரயில் பெட்டியில் இருந்த மக்களில் பலரும் வெளிநாட்டு உடைகளை
அணிந்துள்ளனர். அவர்களிடம், “நீங்கள் ஏன் கதர் ஆடையை அணியக் கூடாது” என்று காந்தி
கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், “கதரடைகளின் விலை அதிகமாக உள்ளது. அது எங்களுக்கு
கட்டுப்படியாகவில்லை. ஆனால் ஆங்கிலேயர்களின் உடை விலை குறைவாக உள்ளது” என்று கூறியுள்ளனர்.
அதே சமயம்
இந்த ரயில் பயணத்தின்போது ஜன்னல் வழியே அவர் பார்த்த காட்சிகளில் ஏழை விவசாயிகள்
பலரும் வெறும் கோவணத்துடன் வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்த 2 சம்பவங்களும்
காந்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறைந்த விலையில்
கதர் உடைகள் கிடைக்க வேண்டுமென்றால் அதன் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்று
காந்தி முடிவெடுத்தார். மேலும் சாதாரண மனிதர்களுக்காக தான் போராடும்போது, அவர்கள் அணியும்
உடையையே அணியவேண்டும் என்றும் முடிவெடுத்தார்.
அன்று எடுத்த
முடிவின் விளைவாகத்தான் இடுப்பில் ஒரு சிறிய வேட்டி, அதற்கு மேல் ஒரு துண்டு என அவரது உடையின்
பாணி மாறியது. மதுரை மேலவாசி வீதியில் உள்ள கட்டிடத்தில் தன் புதிய கோலத்துடன் 1921-ம் ஆண்டு செப்டம்பர்
22-ம் தேதி முதல் முறையாக மக்கள் முன் காட்சியளித்தார்.
காந்தியின்
இந்த உடையை வைத்து, அவரை ‘அரை நிர்வாண பக்கிரி’ என்று ஆங்கிலேயர்கள் கிண்டலடித்தனர். ஆனால் காந்தியின் மன
உறுதியை அவர்களால் மாற்ற முடியவில்லை. தனது கடைசி காலம்வரை அந்த உடையுடனேயே
இருந்து சாதாரண மக்களுக்காக உழைத்தார். காந்தியின் அந்த அரையாடைக்கு இன்றுடன் 100 வயதாகிறது. இந்த
புதிய உடை மாற்றத்தில் தமிழகத்துக்கும் பங்கு உண்டு என்பதில் தமிழகர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.
No comments:
Post a Comment