Powered By Blogger

Monday, February 14, 2011

உலகக் கோப்பை அனுபவங்கள்

1983-ல் இருந்து இதுவரை ஏழு உலகக்கோப்பை போட்டிகளைப் பார்த்திருந்தாலும் நேரடியாகப் பார்த்து விமர்சனம் செய்வது இதுவே முதல் முறை. அதனால்தானோ என்னவோ முன்பு கிரிக்கெட் போட்டிகளைக் காண சேப்பாக்கத்துக்கு சென்றதை விட அதிக த்ரில்.அந்த அனுபவங்களில் சில.

கிரிக்கெட்டின் வளர்ச்சி எந்த வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ, அதே வேகத்தில் கிரிக்கெட்டுக்கும் மீடியாவுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது. 1998ல் முதல் முறையாக கிரிக்கெட் கவர் செய்ய போகும்போது பெவிலியனுக்கு மேலேயே ப்ரெஸ் பாக்ஸ் இருந்தது. வீரர்களை கிட்டே இருந்து பார்க்கலாம். அவர்களோடு பேசவோ, கைகுலுக்கவோ செய்யலாம். ஆனால் இப்போது. பெவிலியனுக்கு நேர் எதிரே ஒரு கண்ணாடிக் கூண்டை  பிரஸ் பாக்ஸ் என்ற பெயரில் [ இதுபற்றிக் கேட்டால் உங்களுக்கு ஏசி பண்ணித் தரத்தான் இது என்கிறார்கள்.]அமைத்திருக்கிறார்கள். வீரர்களுக்கும் எங்களுக்கும் அரை கிலோமீட்டர் தூரம். பைனாக்குலர் வைத்துதான் பார்க்க முடியும் மற்றபடி அந்த அறைக்குள் இருக்கும் எல்.சி.டி டிவிக்கள்தான் எங்கள் துணை.

வீரர்களோடு பேசவேண்டுமென்றால் ஒரே வழி பிரஸ் மீட்டில் பேசுவதுதான். இந்த அழகில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ‘உங்களுக்கு என்னப்பா கிரிக்கெட் பிளேயர்ஸோட எல்லாம் ஜாலியா பேசுவீங்க ‘ என்று சொல்வதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் கஷ்டப்படும் ஆத்மாக்கள் என்று உண்டென்றால் அது பத்திரிக்கை போட்டோகிராபர்கள்தான். கடந்த சனிக்கிழமை நடந்த தென் ஆப்ரிக்கா-ஜிம்பாப்வே பயிற்சி ஆட்டத்துக்கு நாங்களெல்லாம் நேரடியாய் நுழைந்துவிட்டோம். ஆனால் போட்டோகிராபர்கள் பாவம். ஐ.சி.சி. நியமித்த மீடியா கோ ஆர்டினேட்டரான ஒரு பெண்ணின் வகுப்பை ஒவ்வொரு போட்டியன் றும் ஒரு மணிநேரம் அட்டெண்ட் செய்யவேண்டும் என்பது விதியாம். அதோடு மைதானத்தில் போட்டி நடக்கும்போது ஒரு இடத்தில் உட்கார வேண்டும், லெதர்கோட் அணிந்துதான் உள்ளே செல்ல வேண்டும் என்றெல்லாம் ஏக கெடுபிடி.அவ்ர்கள் வெயிலில் வேர்க்கவைக்கும் கோட் அணிந்து நிற்கும்போது நாங்கள் ஏசி பாக்ஸில் பெப்ஸி குடிக்கும்போது வருத்தம் நெஞ்சம் கொஞ்சம் கனக்கிறது

Tuesday, January 18, 2011

wrapper of my book about history of Indian cricket

Friday, January 7, 2011

தாதாவுக்கு அவமானம்

இந்திய கிரிக்கெட் அணியை நம்பர் ஒன் ஆக்கியதில் சவுரவ் கங்குலிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.போராடவேண்டும் என்ற வெறியை இந்திய வீரர்களின் மனதில் ஊட்டிவளர்த்தவர் சவுரவ்
                     அப்படிப்பட்டவர் இன்று ஏலத்துக்கு கொஉவந்து யாரும் வாங்காமல் அவமானப்படுத்தியது பெரும் அவமானம்.பேசாமல் அவரும் கும்ப்ளேவைப் போல் நான் ஏலத்துக்கு வரவில்லை என்று அறிவித்திருக்கலாம். 
                    எல்லாம் சரி தாதாவை தங்கள் மண்ணின் மைந்தனாகப் பார்க்கும் கொல்கட்டாவாசிகள் இதை எப்படி ஏற்பார்கள்?ஷாருக்கானால் அங்கே கால் வைக்க முடியுமா .பொறுத்திருந்து பார்ப்போம்

விடைபெறுங்கள் டிராவிட்

  சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் டிராவிட்டுக்கு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டிய காலம் வந்துவிட்டது
                        பேட்டிங் வரிசையில் இந்தியாவின் பெரும்சுவர்,வெளிநாட்டுப் போட்டிகளில் எல்லாம் இந்தியாவுக்கு சரிவு ஏற்படும்போது தாங்கிப் பிடித்தவர், கேப்டனாக யார் இருந்தாலும் கோஷ்டி மனப்பான்மை பாராமல் தோள் கொடுத்தவர் எல்லாவற்றுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்களைப் பிடித்தவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. ஆனாலும் எனக்கு என்னவோ இப்போது டிராவிட் வெளியேறாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியமே அவரை டெஸ்ட் போட்டியில் இருந்தும் நீக்கி அசிங்கப் படுத்தி விடுமோ என்று தோன்றுகிறது.
    கவாஸ்கர், கபில்தேவ்,அசாருதீன்,கங்குலி என்று இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாய் வலம் வந்த பலருக்கு கடைசிக் காலம் நன்றாக இருந்ததில்லை. இதற்க்குக் காரணம் தங்கள் பார்மை இழந்த பிறகும் கிரிக்கெட்டில் அவர்கள் தொடர நினைத்ததுதான். புதிய திறமையான வீரர்கள் பலர் வந்த நிலையில் மூத்த வீரர்கள் எதையும் சாதிக்காமல் வாழ்க்கையை தொடர முயன்றபோது ரசிகர்கள் அவர்களைக் கைவிட்டனர்.இந்த நேரத்தில் கிரிக்கெட் போர்டும் கழுத்தில் கத்தியை வைத்து இதுதான் கடைசித் தொடர் என்று அறிவிக்குமாறு மிரட்டி வழியனுப்பியது.இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம் சவுரவ் கங்குலி. தென் ஆப்ரிக்க தொடரைப் பார்க்கும்போது எங்கே அதே நிலை டிராவிட்டுக்கும் வருமோ என்று சந்தேகமாக இருக்கிறது
                    யுவராஜ் சிங்,ரெய்னா,முரளி விஜய் ,கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் பலர் சாதிக்க காத்திருக்கும்போது டிராவிட் இந்த தொடரில் சொதப்பியது பலருக்கும் எரிச்சலை மூட்டியிருக்கலாம். இது மேலும் தொடராமல் பார்த்துக் கொள்வது டிராவிட்டுக்கு நல்லது. இங்கிலாந்துக்கு எடிராக இந்திய அணி ஜூன் மாதம் ஆடப் போகிறது. இதை தனது கடைசித் தொடர் என்று இப்போதே டிராவிட் அறிவிப்பது நல்லது. அப்போதுதான் கும்ப்ளேவைப் போல அவருக்கும் கவுரவமான ஒரு ஓய்வு கிடைக்கும்