Powered By Blogger

Tuesday, February 28, 2012

சீனியர்களின் பவர்ப்ளே



ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளுடன் நம் வீரர்கள் மைதானத்தில்  ஆக்ரோஷமாக மோதினால் ரசிக்கலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே தங்களுக்குள்ளாகவே மோதினால்?... இந்திய கிரிக்கெட்டில் இப்போது அதுதான் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணி, சீனியர்கள் ஜூனியர்கள் என்று இரு பிரிவுகளாக தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கிறது.

இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க சுழற்சிமுறையில் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது என்ற டோனியின் அணுகுமுறையே மோதலுக்கு முக்கியக் காரணம். ஒருநாள் தொடருக்கு முன் நிருபர்களைச் சந்தித்த டோனி, ‘‘2014 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த உலகக் கோப்பையில் சச்சின், ஷேவாக், காம்பீர் போன்ற மூத்த வீரர்களோ, நானோ விளையாடுவது நிச்சயமில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிட்சுகளில் ஆட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு இந்த தொடர்தான் சரியான நேரம். எனவே சச்சின், ஷேவாக், காம்பீர் ஆகிய மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும். அந்த இடத்தில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.’’என்று அறிவித்தார்.

இதன்படியே முதல் போட்டியில் ஷேவாக்கையும், இரண்டாவது போட்டியில் காம்பீரையும் விலக்கிய டோனி, மூன்றாவது போட்டியில் சச்சினை விலக்க  பிரச்னை ஆரம்பமானது. 100வது சதத்தை நீ..........ண்ட நாட்களாக நெருங்கிக்கொண்டிருக்கும் சச்சினை கிரிக்கெட் கடவுளாகவே கருதும் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் இந்திய கிரிக்கெட்டின் மும்பை லாபி என்று வர்ணிக்கப்படும் கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் இதை கடுமையாக எதிர்த்தனர். ‘குறிப்பாக போட்டிக்கு முன் வர்ணனையாலர் என்ற வகையில் பேசிய ரவி சாஸ்திரி, ‘‘100வது சதத்தை நெருங்கும் ஒரு வீரர் அணியில் இருப்பதே ஒரு பெருமை. அவரது ஆட்டத்தை பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஓய்வு கொடுக்கிறோம் என்ற பெயரில் சும்மா உட்கார வைப்பது சரியல்ல. சச்சின் இல்லாததால் இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்க நிறைய வாய்ப்புகள் உள்ளன’’ என்றார். ஆனால் வர்ணனையை டோனி கேட்டிருப்பாரோ என்னவோ அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அன்றைய தினம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட காம்பீரும், ரவி சாஸ்திரிக்கு பதில் சொல்வதைப் போல் ‘‘ஆட்டத்தில் ஜெயிக்க பெயர்பெற்ற வீரர்களைவிட திறமையான வீரர்கள்தான் முக்கியம்’’ என்று கூறினார். அதோடு சீக்கிரம் முடியவேண்டிய ஆட்டத்தை கடைசி ஓவர் வரை இழுத்த டோனியையும் இவர் விமர்சிக்க அணிக்குள் ஏதோ சரியில்லாததுபோல் பட்டது. காம்பீரின் கமென்டை நிராகரித்த டோனி, ‘‘ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கும். 47 ஓவரில் ஆட்டத்தை முடிப்பது காம்பீரின் ஸ்டைல் என்றால் கடைசி ஓவரில் ஜெயிப்பது என் ஸ்டைல். இதே ஆட்டத்தை 25 ஓவரில் முடிப்பது ஷேவாக்கின் ஸ்டைல்’’ என்று காம்பீர் எழுப்பிய பிரச்னைக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக முதலில் கூறிய டோனி, அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘‘மூத்த வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புகிறர்கள். அவர்கல் அதிக ரன்கலை விடுவதால்தான்  இளைய வீரர்களை பயன்படுத்துகிறோம்’‘ என்று சொல்ல பிரச்னை இன்னும் பெரிதாகியுள்ளது. டோனியின் இந்த கருத்தால் மூத்தவீரர்கள் பலரும் அப்செட் ஆகியதாக தெரிகிறது. அணியை பொறுத்தவரை இலம் வீரர்கல் பலரும் டோனிக்கு ஆதரவாக இருந்தாலும் டெல்லியைச் சேர்ந்த காம்பீர் ஷேவாகுக்கு நண்பர் என்பதால் அவரது பக்கம்தான் நிற்கிறாராம். அவர்கலுடன் இப்போது சச்சினும், ஜாஹிர்கானும்  சேர்ந்துகொள்ள டிரெஸ்ஸிங் ரூமில் எந்த நேரமும் அனல் வீசுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில், டோனி ஆடாததால் யார் கேப்டன் என்று புரியாத சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக டோனி இல்லாதபோது ஷேவாக்தான் கேப்டனாக இருப்பார். ஆனால் இந்தமுறை அவர்தான் கேப்டன் என்பது ஆட்டம் தொடங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்தான் அறிவிக்கப்பட்டதாம். அப்படி அறிவிக்கப்பட்ட பிறகு ஷேவாக்கை சந்தித்த டோனி மூன்று சீனியர்களில் யாராவது ஒருவருக்கு ஓய்வளிக்க வேண்டும். அந்த இடத்தில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதை மறுத்த ஷேவாக், ‘அப்படி நடந்தால் நான் மைதானத்துக்கே வரமாட்டேன்.’ என்று கூறிவிட்டாராம். அதனால்தான் வேறு வழியின்றி ஷேவாக் விருப்பப்படி அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்இந்த போட்டியில் துடிப்பாக பீல்ட் செய்த ஷேவாக், நிருபர்களைப் பார்த்து ‘இன்றைய ஆட்டத்தைப் பார்த்தால் நான் துடிப்பான பீல்டராக தெரிகிறேனா’ என்று கேட்டு மறைமுகமாக டோனிக்கு பதிலளித்துள்ளார்.

டோனிக்கும் ஷேவாக்குக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு கேப்டன் பதவி ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ‘‘சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ஷேவாக்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துணைக் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் அணியில் இருந்தே நீக்கப்பட்டார் ஷேவாக். அந்த நேரத்தில் தனது அதிரடியான பேட்டிங்கால் தேர்வுக்குழுவின் கவனத்தைக் கவர்ந்த டோனி, கேப்டனானார். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்ததால் அந்த இடத்தில் நிலைத்துவிட்டார். ஆனால் அணியின் வெற்றிக்காக பல போட்டிகலில் சிறப்பாக ஆடியும் தனக்கு கேப்டன் பதவி கிடைக்காததால் வெறுத்துப்போன ஷேவாக் இப்போது அணியின் தோல்விகளைப் பயன்படுத்தி டோனியிடம் இருந்து பதவியைக் கைப்பற்ற போர்க்கொடி தூக்கியுள்ளார்’’ என்கிறார் ஒரு கிரிக்கெட் விமர்சகர்.

அதே நேரத்தில் டோனி மீதும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ‘‘டோனிக்கு ஒரு வீரரைப் பிடித்துவிட்டால் அவர் என்னதான் சொட்ய்ஹப்பினாலும் தொடர்ந்து வாய்ப்பளிப்பார். ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து ரன் குவிக்கத் தவறிய ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகியோரை அவர் அணியில் வைத்திருப்பதே இதற்கு நல்ல உதாரணம். இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றால் இதற்கு முந்தைய தொடர்களில் ரன்களைக் குவித்த  ரஹானேவுக்கும், மனோஜ் திவாரிக்கும் வாய்ப்பு தராதது ஏன்?’’ என்று கேட்கிறார் மற்றொரு கிரிக்கெட் விமர்சகர்.

கிரிக்கெட் மைதானத்தில் மோதவேண்டிய வீரர்கள் பிரஸ் மீட்டில் மோதிக்கொண்டிருக்க, அணி தோற்றுக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் வாரியமோ வீரர்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என்று ரசிகர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறது. கங்குலி_ சாப்பல் மோதலையும் முன்பு இப்படித்தான் சமாளித்ததி கிரிக்கெட் வாரியம். அதற்கு தண்டனையாக 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இப்போதும் அதேபோல் செய்யாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவின் வெற்றிகளைத் தொடரவேண்டும்.





Tuesday, February 14, 2012

அபினவ் பிந்திரா: தங்கத்தை சுட்ட விரல்கள்!

கண்களில் குறைபாடு உள்ள ஒரு குழந்தை, தன் தந்தையிடம், “நான் துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புகிறேன்” என்று கூறினால் என்ன பதில் கிடைக்கும்?
“மகனே துப்பாக்கியில் குறி பார்த்து சுடுவதற்கு நல்ல கண் பார்வை அவசியம். அதனால் அது உனக்கு சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது துறையை தேர்ந்தெ டுத்துக் கொள்!” என்று ஆலோ சனை கூறி, அவனுக்கு ஏற்ற வேறு ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுக்கச் சொல்வார்.
ஆனால் அபினவ் பிந்திராவின் அப்பாவான அபிஜித் பிந்திரா, அப்படி செய்யவில்லை. ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட தன் மகன், அந்த விளையாட்டில் சிறந்து விளங்க என்ன செய்வதென்று யோசித்தார். துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததுடன், வீட்டிலேயே அவன் பயிற்சிபெற வசதியாக ஒரு சிறிய பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்தார். அந்த தந்தை கொடுத்த ஊக்கம்தான் நமக்கு அபினவ் பிந்திரா என்ற துப்பாக்கி சுடும் நாயகனைத் தந்தது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமே வெல்லாமல் இருந்த இந்தியாவின் ஏக்கமும் தீர்ந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைபிள் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப் பதக்கம்.
1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டேராடூனில் பிறந்த அபினவ் பிந்திராவுக்கு மற்ற வீரர்களுக்கு கிடைக்காத ஒரு வசதி இருந்தது. அது பணவசதி. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக அவரது தந்தை இருந்தார். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வமாக இருந்த அபினவுக்கு அவரது தந்தை ஒரு பொம்மைத் துப்பாக்கியை பரிசளிக்க, அதிலேயே குறிபார்த்து சுடத் தொடங்கினார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது என்பதை அவரது தந்தை உணர்ந்தார்.
இதைத் தொடர்ந்து அமித் பட்டாசார்ஜீ, லெப்டினென்ட் கர்னல் தில்லான் ஆகியோரிடம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் அபினவ் பிந்திரா. கேட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா, சிறப்பாக வழிகாட்டும் குருநாதர்கள் என்று கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபினவ் பிந்திரா துப்பாக்கி சுடும் பிரிவில் வேகமாக வளரத் தொடங்கினார்.
“1995-ம் ஆண்டு தனது 13 வய தில் பிந்திரா என்னிடம் பயிற்சிபெற வந்தார். ஏர் ரைபிள் பிரிவில் அதிக ஆர்வம் கொண்ட பிந்திரா, அதிலுள்ள நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்காக பல நாட் கள் வகுப்பு முடிந்த பிறகும் என் வீட்டுக்கு வந்து கூடுதலாக கற்பார். ஏழே மாதங்களில் ஒரு துடிப்புள்ள வீரனாக தயாரான அவர், பஞ்சாபில் நடந்த சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி யில் தங்கம் வென்றார். அதே ஆண்டு அகமதாபாதில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 600-க்கு 600 புள்ளிகள் பெற்று தங்கம் வென்ற அவர், அதன்பிறகு திரும் பிப் பார்க்கவே இல்லை. நாட்டுக் காக பல பதக்கங்களை அவரது விரல்கள் குவித்து வருகிறது” என்று பெருமையுடன் சொல் கிறார் அபினவ் பிந்திராவின் பயிற்சியாளர் தில்லான்.
2000-ம் ஆண்டில் தனது 18 வயதில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர், இளம் வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் என்ற பெயரைப் பெற்றார். இந்தப் போட்டியில் அவர் பதக்கம் எதையும் பெறாவிட்டாலும் அனுப வத்தைக் கொடுத்தது. சர்வதேச போட்டிகளில் ஜெயிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது, மன உறுதியும் தேவை என்பதை தன் அனுபவத்தால் உணர்ந்த அபினவ் பிந்திரா, போட்டிகளுக்கு முன் சிவப்பு எறும்புகளுக்கு நடுவில் தூங்குவது, ஸ்கை டைவிங் செய்வது என்று வித்தியாசமான பயிற்சிகளையும் மேற்கொண்டார். இந்த பயிற்சிகள் தான் தேசிய போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டிவரை அவருக்கு பல தங்கப் பதக் கங்களை அள்ளிக்கொடுத்தது.
விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணம் செய்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார். இந்த தங்க மகனை கவுரவிக்கும் விதமாக ரியோ ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பை அபினவுக்கு அரசு வழங்கியுள்ளது. இந்த தங்க மகன் தங்கத்தைச் சுட்டு தாயகம் திரும்ப வாழ்த்துவோம்.
இதுவரை சாதித்தவை
* 2008-ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்
* 2006-ல் நடந்த உலக ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம்
* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம்
* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள்
* 2000-ல் அர்ஜுனா விருது
* 2001-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது
* 2009-ல் பத்மபூஷண் விருது.
விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணம் செய்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார்.

’சிங்”கம் கர்ஜிக்கட்டும்



இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிகவும் சோதனைக் காலம். ஆஸ்திரேலிய அணியியிடம் இருந்து இந்திய அணி அடிமேல் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும்விட ஒரு பெரிய அடியை இந்தியக் கிரிக்கெட்டுக்கு புற்றுநோய் கொடுத்திருக்கிறது. இக்கட்டான நேரத்தில் எல்லாம் அணியைக் காப்பாற்ற வல்லமை படைத்த யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் புற்றுநோயாம்! அணிக்காக போராடவேண்டியவி இப்போது புற்றுநோயோடு போராடிக்கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்களில் இரண்டு வகை உண்டு. தனக்காக ஆடி சாதனைகளைக் குவித்து அணியைப் பற்றி கவலைப்படாத வீரர்கள் ஒருவகை. சாதனைகளைப் பற்றியே கவலைப்படாமல் அணிக்கு தேவையான நேரத்தில் தேவையானவற்றை செய்யும் வீரர்கள் மற்றொரு வகை. இதில் யுவராஜ் சிங் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

 இந்திய அணி உலகக் கோப்பையையும், 20 ட்வென்டி கோப்பையையும் வென்றபோது அந்த இரண்டு தொடர்களிலும் யுவராஜ்தான் தொடர் நாயகன். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்ததைத் தவிர அவருக்கென்று சொல்லிக்கொள்ள சாதனைகள் ஏதுமில்லை. அணியின் வெற்றிகள்தான் அவரது கனவு. தன்னைவிட ஜூனியரான டோனியின் தலிமையில் ஆடுமாறு கிரிக்கெட் வாரியம் கூறியபோதும் ஒரு முணுமுணுப்புகூட இல்லாமல் அதை ஏற்றுக்கொண்ட வீரர் யுவராஜ் சிங். இந்த பக்குவத்துக்கு காரணம் தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதாக அவருக்கு கொடுத்த வாக்குறுதி.

யுவராஜின் அப்பா யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரைதான். ஹரியானாவைச் சேர்ந்த இவர் கபில்தேவுக்கு இணையாக வேகப்பந்தில் கலக்கியவர். இருவரும் ஒரே சமயத்தில் வாய்ப்புதேடி கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளைத் தட்டினர். இருவரில் கபில்தேவுக்கு முதலில் வாய்ப்பளித்த தெர்ர்வுக்குழு யோக்ராஜை மட்டும் காக்கவைத்தது. அதற்கு காரணம் தேர்வுமுறை.

ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் குறிப்பிட்ட சில வீரர்கலை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்ற விதிமுறையை கிரிக்கெட் வாரியம் அப்போது வைத்திருந்தது.70களின் இறுதியில் கபில்தேவ் அணிக்குள் நுழைய வடக்கு மண்டலத்துக்கான கோட்டா முடிந்தது. அதனால் யோக்ராஜ் காக்க வைக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டுகளில் சிறப்பாக அடியதால் அவருக்கு வாய்பலித்தே ஆகவேண்டிய நிலை. அதனால் போனால் போகிறதென்று  1981ல் ஒரு டெஸ்ட் மேட்சில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் டெஸ்ட்டில் எந்த வீரருக்கும் ஒரு பதட்டம் வருவது இயற்கைதானே? அது யோக்ராஜுக்கும் வந்தது. அவரால் அந்த டெஸ்டில் ஒரு விகெட்டை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதுதான் சமயமென்று கிரிக்கெட் வாரியம் அவரைக் கழற்றிவிட முதல் டெஸ்டே அவருக்கு கடைசி டெஸ்ட் ஆனது.

துவண்டு போனார் யோனார் யோக்ராஜ் சிங். இந்திய அணியில் இடமில்லாததால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து அதன் விசையை அழுத்த முயன்றபோதுதான் மகன் யுவராஜ் சிங்கின் படம் கண்ணில் பட்டுள்ளது. தன்னால் முடியாததை தன் மகனை வைத்து முடிப்பேன் என்று சவால் விட்டுல்லார் யோக்ராஜ் சிங். மகனுக்கு தானே பவுலிங் போட்டு பயிற்சியளித்துள்ளார்

சிறுவயதில் கிரிக்கெட்டுக்கு இணையாக ரோலார் ஸ்கேட்டிங்கிலும் ஆர்வமாக இருந்துல்லார் யுவராஜ் சிங். ஒருமுறை பள்ளியில் நடந்த ரோலார் ஸ்கேட்டிங் விளையாட்டில் யுவராஜுக்கு முதல்பரிசாக வெள்ளிக்கோப்பை கிடைக்க அதை ஆசையோடு அப்பாவிடம் காட்டியிருக்கிறார். தான் எதிலும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்பும் தந்தை கோப்பையைப் பார்த்தால் தன்னை உச்சி முகர்ந்து பாராட்டுவார் என்று அவர் எதிர்பாத்திருந்தார். ஆனால் அதற்கு நேர் எதிராக அந்த கோப்பையையும், ரோலார் ஸ்கேட்டிங் ஷூவையும் தெருவில் வீசியிருக்கிறார் யோக்ராஜ் சிங்.

‘‘கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. படிப்புகூட எனக்கு இரண்டாம் பட்சம்தான்.’’ என்று யுவராஜுக்கு அவர் கட்டளை இட்டுல்ளார். அன்று முதல் யுவராஜுக்கு வாழ்க்கையே கிரிக்கெட் என்றாகிப் போனது. வீட்டில் இருந்தால் அம்மா செல்லம் கொடுத்து கெடுத்துவிடுவார் என்று சண்டிகரில் முன்னால் சுழற்பந்து வீச்சாளர் பிஷன்சிங் பேடி நடத்திவந்த கிரிக்கெட் பயிற்சிமுகாமில் அவரை சேர்த்துவிட்டார். யுவராஜின் கிரிக்கெட் திறமைகள் அங்கே மெருகூட்டப்பட்டது.

19 வயதிலேயே ஒரு இளம் புயலாக 2000_ம் ஆண்டில் இந்திய அணிக்குள் நுழைந்தார் யுவராஜ். உள்ளூரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஜெயிக்கும் இந்திய அணி எப்போதும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தோற்பது 2001ம் ஆண்டுவரை சகஜமாக இருந்தது. அதற்கு காரணம் அங்குள்ள பிட்சுகள். சாதாரணமாக இந்திய பிட்சுகலில் ஒரு பந்துவீச்சாளர் என்னதான் அழுத்தம் கொடுத்து பந்துவீசினாலும் அது பேட்ஸ்மேனின் முட்டிக்கு கீழேதான் எழும்பும். ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் பிட்சுகளில் பந்துகள் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே எழும்பும். இதை சமாளிக்கத் தெரியாமல் இந்திய வீரர்கள் எளிதில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிவிடுவார்கள். ஆனால் யுவராஜ் இந்திய அணியில் தடம் பதித்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இடுப்புக்கு மேலே பந்து வீசினால் அதைத் துணிந்து சிக்சருக்கு விரட்டுவது யுவராஜின் பாணி. இவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ற வீரர்கலௌம் இதைக் கையாள வெளிநாடுகளில் இந்தியா ஜெயிக்கத் தொடங்கியது. கிரிக்கெட்டில் வீழ்த்தமுடியாதவராக கருதப்பட்ட யுவராஜுக்கு காதலிகளும் குவிந்தனர். தீபிகா படுகோன், மந்திரா பேடி, ப்ரீத்தி ஜிந்தா என்று பலருடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் ஒரு காதல் மன்னனாகவும் வலம்வந்தார்.

யுவராஜ் வளர வளர ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியாவின் புகழும் வளர்ந்தது. நேட்வெஸ்ட் தொடர், 20 ட்வென்டி உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை என்று இந்தியா சாம்பியன்பட்டங்களாக அள்ளியது. ஒர்நாள் போட்டிக்கான சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்குக்கு தொடர் நாயகன் பட்டமும் கிடைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. உலக்கக் கோப்பையை இந்தியா வென்ற ஒரு வாரத்திலேயே இரவு நேரங்களில் இருமலால் பாதிக்கப்பட்டார் யுவராஜ் சிங். மருத்துவ பரிசோதனை செய்ய வீட்டில் வற்புறுத்தியபோது கேட்கவில்லை. உலகக் கோப்பையைத் தொடர்ந்துவந்த ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப் போய்விட்டார்.

 ஆனால் நோயின் கடுமை அவரை ஒழுங்காக ஆட விடவில்லை. மூச்சிறைக்கத் தொடங்கியது. டாக்டரிடம் சென்றபோது அவரது நுரையீரலில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனாலதான் இருமல் வருவதாகவும் கண்டறியப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு நடுவிலும் கிரிக்கெட் போட்டிகலில் விளையாடுவதை யுவராஜ் நிறுத்தவில்லை. ஆனால் நோயின் கடுமையால் அவரால் முன்போல சிறப்பாக பீல்டிங் செய்ய முடியவில்லை.
‘‘இருமலுக்காக பல ஊசிகள் போடுவதால் அவன் கைகளின் நரம்புகள் அதிக வலியைக் கொடுத்தன உடம்பும் கொஞ்சம் ஊதிவிட்டது. அதனால் அவன் வலிகளுடன்தான் போட்டிகளில் ஆடப்போவான். அதனாலேயே அவனால் சரியாக பீல்டிங் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ‘பார்ட்டி பாய்’ என்று முத்திரை குத்தப்படிருந்த யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்குப் பின் ஏராளமான பார்ட்டிகளில் கலந்துகொள்வதாகவும், அதனாலேயே பீல்டிங்கில் அவர் வேகம் குறைந்துவிட்டதாகவும் பத்திரிகைகள் எழுதின. இது உடல் வலியை விட அதிகமாக யுவராஜை சோர்வாக்கியது’’ என்று கூறுகிறார் அவரது தாய் ஷப்னம் சிங்
. இந்நேரத்தில் அந்த கட்டி புற்றுநோயின் ஆரம்ப நிலை என்று டாக்டர்கள் சொல்ல உடைந்துபோய்விட்டார் யுவராஜ்.உற்சாகமான மனிதராக நம் கண்முன் வளையவந்த யுவராஜ் தனக்கு வந்த நோயை நினைத்து வருந்தி பல நாட்கள் அறையிலேயே முடங்கிக் கிடந்ததாக அவரது தாய் கூறுகிறார். இது ஆரம்ப நிலையில் இருப்பதால் 10 வாரங்களுக்கு கீமோதெரபி செய்தாலே குணப்படுத்தலாம் என்று டாக்டர்கள் தைரியம் சொல்ல இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார் யுவராஜ் சிங்.

‘‘பிரபல சைக்கிள் பந்தய வீரர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புற்றுநோய் வந்தபோது அவரை குணப்படுத்திய டாக்டர்தான் இப்போது யுவராஜ் சிங்கிற்கும் சிகிச்சை அளித்து வருகிறர். புற்றுநோயை வென்று உலக சைக்கிள் சாம்பியனாக பட்டம் வென்ற ஆம்ஸ்ட்ராங்கின் வரலார்றை அவன் படித்து வருகிறான். அதேபோல் தானும் மீண்டுவந்து ஜெயிப்பேன் என்று யுவராஜ் உறுதியாகப் பேசுகிறான் என் மகன் ஒரு சிங்கம். எந்த ஒரு சவாலையும் மீண்டு வரும் திறமை அவனுக்கு உண்டு. இந்த சவாலையும் அவன் நிச்சயம் மீண்டுவருவான். அந்த நம்பிக்கையுடன் காத்திருப்போம்’’ என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் பேட்டி கொடுத்துள்ளார்.
நமக்கு வேண்டியதும் அதுதான். யுவராஜ் சிங்கம் மீண்டும் கர்ஜிக்கட்டும்.