Powered By Blogger

Tuesday, February 28, 2012

சீனியர்களின் பவர்ப்ளே



ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளுடன் நம் வீரர்கள் மைதானத்தில்  ஆக்ரோஷமாக மோதினால் ரசிக்கலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே தங்களுக்குள்ளாகவே மோதினால்?... இந்திய கிரிக்கெட்டில் இப்போது அதுதான் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணி, சீனியர்கள் ஜூனியர்கள் என்று இரு பிரிவுகளாக தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கிறது.

இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க சுழற்சிமுறையில் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது என்ற டோனியின் அணுகுமுறையே மோதலுக்கு முக்கியக் காரணம். ஒருநாள் தொடருக்கு முன் நிருபர்களைச் சந்தித்த டோனி, ‘‘2014 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த உலகக் கோப்பையில் சச்சின், ஷேவாக், காம்பீர் போன்ற மூத்த வீரர்களோ, நானோ விளையாடுவது நிச்சயமில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிட்சுகளில் ஆட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு இந்த தொடர்தான் சரியான நேரம். எனவே சச்சின், ஷேவாக், காம்பீர் ஆகிய மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும். அந்த இடத்தில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.’’என்று அறிவித்தார்.

இதன்படியே முதல் போட்டியில் ஷேவாக்கையும், இரண்டாவது போட்டியில் காம்பீரையும் விலக்கிய டோனி, மூன்றாவது போட்டியில் சச்சினை விலக்க  பிரச்னை ஆரம்பமானது. 100வது சதத்தை நீ..........ண்ட நாட்களாக நெருங்கிக்கொண்டிருக்கும் சச்சினை கிரிக்கெட் கடவுளாகவே கருதும் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் இந்திய கிரிக்கெட்டின் மும்பை லாபி என்று வர்ணிக்கப்படும் கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் இதை கடுமையாக எதிர்த்தனர். ‘குறிப்பாக போட்டிக்கு முன் வர்ணனையாலர் என்ற வகையில் பேசிய ரவி சாஸ்திரி, ‘‘100வது சதத்தை நெருங்கும் ஒரு வீரர் அணியில் இருப்பதே ஒரு பெருமை. அவரது ஆட்டத்தை பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஓய்வு கொடுக்கிறோம் என்ற பெயரில் சும்மா உட்கார வைப்பது சரியல்ல. சச்சின் இல்லாததால் இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்க நிறைய வாய்ப்புகள் உள்ளன’’ என்றார். ஆனால் வர்ணனையை டோனி கேட்டிருப்பாரோ என்னவோ அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அன்றைய தினம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட காம்பீரும், ரவி சாஸ்திரிக்கு பதில் சொல்வதைப் போல் ‘‘ஆட்டத்தில் ஜெயிக்க பெயர்பெற்ற வீரர்களைவிட திறமையான வீரர்கள்தான் முக்கியம்’’ என்று கூறினார். அதோடு சீக்கிரம் முடியவேண்டிய ஆட்டத்தை கடைசி ஓவர் வரை இழுத்த டோனியையும் இவர் விமர்சிக்க அணிக்குள் ஏதோ சரியில்லாததுபோல் பட்டது. காம்பீரின் கமென்டை நிராகரித்த டோனி, ‘‘ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கும். 47 ஓவரில் ஆட்டத்தை முடிப்பது காம்பீரின் ஸ்டைல் என்றால் கடைசி ஓவரில் ஜெயிப்பது என் ஸ்டைல். இதே ஆட்டத்தை 25 ஓவரில் முடிப்பது ஷேவாக்கின் ஸ்டைல்’’ என்று காம்பீர் எழுப்பிய பிரச்னைக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக முதலில் கூறிய டோனி, அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘‘மூத்த வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புகிறர்கள். அவர்கல் அதிக ரன்கலை விடுவதால்தான்  இளைய வீரர்களை பயன்படுத்துகிறோம்’‘ என்று சொல்ல பிரச்னை இன்னும் பெரிதாகியுள்ளது. டோனியின் இந்த கருத்தால் மூத்தவீரர்கள் பலரும் அப்செட் ஆகியதாக தெரிகிறது. அணியை பொறுத்தவரை இலம் வீரர்கல் பலரும் டோனிக்கு ஆதரவாக இருந்தாலும் டெல்லியைச் சேர்ந்த காம்பீர் ஷேவாகுக்கு நண்பர் என்பதால் அவரது பக்கம்தான் நிற்கிறாராம். அவர்கலுடன் இப்போது சச்சினும், ஜாஹிர்கானும்  சேர்ந்துகொள்ள டிரெஸ்ஸிங் ரூமில் எந்த நேரமும் அனல் வீசுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில், டோனி ஆடாததால் யார் கேப்டன் என்று புரியாத சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக டோனி இல்லாதபோது ஷேவாக்தான் கேப்டனாக இருப்பார். ஆனால் இந்தமுறை அவர்தான் கேப்டன் என்பது ஆட்டம் தொடங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்தான் அறிவிக்கப்பட்டதாம். அப்படி அறிவிக்கப்பட்ட பிறகு ஷேவாக்கை சந்தித்த டோனி மூன்று சீனியர்களில் யாராவது ஒருவருக்கு ஓய்வளிக்க வேண்டும். அந்த இடத்தில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதை மறுத்த ஷேவாக், ‘அப்படி நடந்தால் நான் மைதானத்துக்கே வரமாட்டேன்.’ என்று கூறிவிட்டாராம். அதனால்தான் வேறு வழியின்றி ஷேவாக் விருப்பப்படி அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்இந்த போட்டியில் துடிப்பாக பீல்ட் செய்த ஷேவாக், நிருபர்களைப் பார்த்து ‘இன்றைய ஆட்டத்தைப் பார்த்தால் நான் துடிப்பான பீல்டராக தெரிகிறேனா’ என்று கேட்டு மறைமுகமாக டோனிக்கு பதிலளித்துள்ளார்.

டோனிக்கும் ஷேவாக்குக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு கேப்டன் பதவி ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ‘‘சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ஷேவாக்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துணைக் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் அணியில் இருந்தே நீக்கப்பட்டார் ஷேவாக். அந்த நேரத்தில் தனது அதிரடியான பேட்டிங்கால் தேர்வுக்குழுவின் கவனத்தைக் கவர்ந்த டோனி, கேப்டனானார். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்ததால் அந்த இடத்தில் நிலைத்துவிட்டார். ஆனால் அணியின் வெற்றிக்காக பல போட்டிகலில் சிறப்பாக ஆடியும் தனக்கு கேப்டன் பதவி கிடைக்காததால் வெறுத்துப்போன ஷேவாக் இப்போது அணியின் தோல்விகளைப் பயன்படுத்தி டோனியிடம் இருந்து பதவியைக் கைப்பற்ற போர்க்கொடி தூக்கியுள்ளார்’’ என்கிறார் ஒரு கிரிக்கெட் விமர்சகர்.

அதே நேரத்தில் டோனி மீதும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ‘‘டோனிக்கு ஒரு வீரரைப் பிடித்துவிட்டால் அவர் என்னதான் சொட்ய்ஹப்பினாலும் தொடர்ந்து வாய்ப்பளிப்பார். ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து ரன் குவிக்கத் தவறிய ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகியோரை அவர் அணியில் வைத்திருப்பதே இதற்கு நல்ல உதாரணம். இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றால் இதற்கு முந்தைய தொடர்களில் ரன்களைக் குவித்த  ரஹானேவுக்கும், மனோஜ் திவாரிக்கும் வாய்ப்பு தராதது ஏன்?’’ என்று கேட்கிறார் மற்றொரு கிரிக்கெட் விமர்சகர்.

கிரிக்கெட் மைதானத்தில் மோதவேண்டிய வீரர்கள் பிரஸ் மீட்டில் மோதிக்கொண்டிருக்க, அணி தோற்றுக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் வாரியமோ வீரர்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என்று ரசிகர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறது. கங்குலி_ சாப்பல் மோதலையும் முன்பு இப்படித்தான் சமாளித்ததி கிரிக்கெட் வாரியம். அதற்கு தண்டனையாக 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இப்போதும் அதேபோல் செய்யாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவின் வெற்றிகளைத் தொடரவேண்டும்.





No comments:

Post a Comment