Powered By Blogger

Saturday, March 24, 2018

நான் சவால்களை நேசிக்கிறேன் - கிரிக்கெட் இளம் புயல் வாஷிங்டன் சுந்தர்


வாஷிங்டன் சுந்தருக்கு 18 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்தியாவின் கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களில் இப்போது அவரும் ஒருவர். ஆல்ரவுண்டரான வாஷிங்டனை 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. பணத்தால் மட்டுமே இவரது வெற்றியை கணக்கிட முடியாது. டி 20 போட்டியில் மிகக் குறைந்த வயதில் ஆடிய இந்திய வீரர், ஒருநாள் போட்டிகளில் ஆடும் 7-வது இளம் இந்திய வீரர் என பல சாதனைகள் இவர் பின்னால் வரிசை கட்டி நிற்கின்றன.
ஆனால் அவரைப் பார்த்தால் அத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றே தெரியாது. அத்தனை அமைதி. இந்த சிறிய வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தமாக தடம் பதித்தது எப்படி என்று கேட்டால், தன் அப்பா சுந்தரை கைகாட்டுகிறார்.
“என் ஒவ்வொரு முயற்சியிலும் துணைநின்றவர் அப்பாதான். நான் ஒரு போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும், சதம் அடித்தாலும் அவர் என்னுடன் உறுதியாக இருந்தார். அவர் இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது” என்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
வாஷிங்டன் சுந்தரின் அப்பா சுந்தரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள அவர், தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடச்செல்லும்போதெல்லாம் மகன் வாஷிங்டனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். போட்டியின்போது கிடைக்கும் இடைவேளைகளில் அவர் வாஷிங்டனுக்கு டென்னிஸ் பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சி அளித்துள்ளார். அந்த நேரத்தில் வாஷிங்டனின் ஸ்டைலை வைத்து, அவரால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்று கணித்திருக்கிறார் சுந்தர். இதைத்தொடர்ந்து வாஷிங்டனை தீவிர கிரிக்கெட்டில் அவர் ஈடுபடுத்தியுள்ளார்.
பின்னர் சுந்தரின் நண்பரும் தமிழக அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான டபிள்யூ.வி.ராமனின் மேற்பார்வையில் வாஷிங்டனின் பேட்டிங் மெருகேற்றப்பட்டுள்ளது. பேட்டிங்கில் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சிலும் கெட்டிக்காரராக உருவெடுத்துள்ளார் வாஷிங்டன். தமிழகத்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெங்கட்ரமணாவின் பயிற்சியால் வாஷிங்டனின் சுழற்பந்து வீச்சில் மெருகு கூட, கிரிக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து 2016-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் தன் சிக்கனமான பந்து வீச்சாலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இருப்பினும் அவர் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கியது கடந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியின்போதுதான். அந்தத் தொடரில் புனே அணிக்காக 11 போட்டிகளில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்களை வீழ்த்தினார். பல அதிரடி பேட்ஸ்மேன்களைக் கொண்ட இந்த தொடரில் சராசரியாக ஒரு ஓவருக்கு வெறும் 6.16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதுபற்றி கூறும் வாஷிங்டன் சுந்தர், “புனே அணிக்காக ஆடியதில் எனக்கு 2 குருநாதர்கள் கிடைத்தனர். ஒருவர் மகேந்திர சிங் தோனி. மற்றொருவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். தான் பந்து வீசும்போது, ஸ்டம்புக்கு பின்னல் தோனியை போன்ற திறமைவாய்ந்த ஒரு ஜாம்பவான் நிற்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவாக இருக்கும். அந்தக் கனவு எனக்கு ஐபிஎல் மூலம் நிறைவேறியது. ஐபிஎல் போட்டிகளில் நான் பந்து வீசியபோது ஒரு குருநாதராகவும் இருந்து தோனி ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார். அவரைப் போலவே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் எனக்கு உந்துசக்தியாக இருந்தார். தொடர்ந்து 11 போட்டிகளில் எனக்கு வாய்ப்பளித்து, என் திறமையை வெளியில் தெரியவைத்தார்” என்கிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் சாதித்ததால், இந்த ஆண்டு பெங்களூரு அணி, அவரை 3.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
சென்னைப் பையனாக இருந்துகொண்டு, ஐபிஎல்லில் பெங்களூருவுக்கு ஆடுவது வருத்தமாக இல்லையா என்று கேட்டால், “ஒரு சென்னைப் பையனாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அட முடியததில் வருத்தம்தான். அதே நேரத்தில் கிறிஸ் கெயில், ஏ.பி.டிவில்லியர்ஸ், கோலி போன்ற பெரிய நட்சத்திரங்கள் ஆடிய பெங்களூரு அணிக்காக ஆடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இந்திய அணியின் கேப்டனான கோலியின் தலைமையில் அந்த அணியில் ஆடுவதில் கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் எனக்கு எதைச் செய்தாலும் அது நல்லதுக்காகத்தான் என்று நம்புகிறேன். இதுவும் நல்லதுக்காகத்தான் இருக்கும்” என்கிறார் வாஷிங்டன்.
பொதுவாக ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையான ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புவார்கள். உதாரணமாக புஜாரா, டெஸ்ட் போட்டிகளிலும், யுவராஜ் சிங் குறுகிய கால போட்டிகளிலும் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். ஆனால் வாஷிங்டன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
“கிரிக்கெட்டில் ஒவ்வொரு வகையான ஆட்டமும் ஒரு வகையான சவால். நான் சவால்களை நேசிக்கிறேன். ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என்று உறுதியுடன் கூறுகிறார் வாஷிங்டன் சுந்தர்.
இதுவரை 12 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள வாஷிங்டன் பேட்டிங்கில் 532 ரன்களைக் குவித்ததுடன் 30 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 1 ஒருநாள் போட்டியிலும் பல்வேறு டி20 போட்டிகளிலும் ஆடியுள்ள சுந்தர், இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய உள்ளது.
“பெரிய அளவில் லட்சியத்தை வைத்துக்கொண்டு எனக்கு நானே நெருக்கடியை கொடுக்க விரும்பவில்லை. அதே நேரம் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் 100 சதவீதம் பயன்படுத்துவேன். இந்திய ரசிகர்களுக்கு பிடித்த வீரனாக உருவெடுப்பேன்” என்று உறுதியுடன் சொல்லும் வாஷிங்டனின் சுந்தரின் கனவுகள் நனவாகட்டும்.

அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம்’ - பி.டி.உஷாவின் பதக்கப் பட்டறை


கடல் அலைகளைப் போலத்தான் சில சாதனை மனிதர்களும். சிறிதுநேரம்கூட ஓய்வெடுக்க மாட்டார்கள். புதிது புதிதாக சாதனைகளைப் படைக்க தொடர்ந்து தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சாதனை மனிதர்களில் ஒருவர், ‘பையோளி எக்ஸ்பிரஸ்’ என்று இந்தியர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் தங்க மங்கை பி.டி.உஷா.
சர்வதேச தடகள வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்த பிடி.டி.உஷா, ஆசிய போட்டிகள் உட்பட சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக வாங்கிக் குவித்த பதக்கங்கள் ஏராளம். 1979-ம் ஆண்டுமுதல் இந்தியாவுக்காக பல போட்டிகளில் ஓடி சாதனை படைத்த உஷா, 2000-ம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் உஷாவின் மனம் அவரை ஓய்வெடுக்க விடவில்லை. ‘எத்தனை பதக்கங்கள் வென்றால் என்ன, இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கத்தைக்கூட பெற முடியவில்லையே’ என்ற ஏக்கம் அவரது இதயத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது. 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் நூலிழையில் (நூறில் ஒரு பங்கு விநாடியில்) வெண்கலப் பதக்கத்தை இழந்த ஏக்கம் பல நாட்கள் அவரைத் தூங்க விடாமல் செய்தன.
இப்படி பல நாட்கள் சென்ற நிலையில்தான் மின்னலாய் அவருக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. ‘ஒலிம்பிக்கில் நம்மால் பதக்கம் வாங்கித்தர முடியாவிட்டால் என்ன. அப்படி பதக்கம் வாங்கித் தரக்கூடிய புதிய வீராங்கனைகளை உருவாக்குவோம்’ என்பதே அந்த எண்ணம். உடனடியாக அந்த எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினார். அப்படி உருவானதுதான் ‘உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ்’. 2002-ம் ஆண்டில் கொயிலாண்டியில் மிகச்சிறிய வாடகைக் கட்டிடத்தில் தொடங்கிய இந்த பள்ளி, இன்று கோழிக்கோடை அடுத்துள்ள கினலூரில் 30 ஏக்கர் இடம், சிந்தடிக் டிராக், உலகத் தரம்வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம் என்று மாநில அரசு மற்றும் பொதுமக்களின் உதவியால் வளர்ந்து நிற்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த 15 ஆண்டுகளில் பிரபல ஓட்ட வீராங்கனை டிண்டு லுகா உட்பட உட்பட 8 சர்வதேச வீராங்கனைகளை இந்தியாவுக்கு இப்பள்ளி அளித்துள்ளது. உஷாவின் இந்த பயிற்சிப் பட்டறையில் உருவான வீராங்கனைகள், சர்வதேச போட்டிகளில் இதுவரை 61 பதக்கங்களை இந்தியாவுக்காக வென்றுள்ளனர்.
இந்த பள்ளி உருவான விதம் குறித்து பி.டி.உஷாவை சந்தித்து பேசினோம். “எத்தனை சர்வதேச போட்டிகளில் ஜெயித்தாலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது எனக்கு ஒரு மனக்குறைதான். நான் மட்டும் அல்ல மில்கா சிங், ஸ்ரீராம் சிங் போன்றவர்கள்கூட ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தவர்கள்தான். எங்களில் யாராவது ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால் தடகளத்தில் இந்தியாவின் நிலை இன்று மாறியிருக்கும். எங்களுக்கு கிடைத்த வெற்றியால் கவரப்பட்டு மேலும் பலர் தடகளத்தில் சாதித்திருப்பார்கள்.
ஒலிம்பிக்கில் என்னால் சாதிக்க முடியாததை, நான் உருவாக்கும் வீராங்கனைகளை வைத்து சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில்தான் இந்தப் பள்ளியைத் தொடங்கினேன். என் கணவர் ஸ்ரீனிவாசனும் இதற்கு பேருதவியாக இருந்தார். முதலில் 5 மாணவிகளுடன் கொயிலாண்டியில் வாடகைக் கட்டிடத்தில் மிகச்சிறிய அளவில் இந்த பள்ளியைத் தொடங்கினேன். எனக்குத் தெரிந்த தொழிலதிபர்கள் பலரும் இதற்கு உதவி செய்தனர். அவர்கள் தந்த உதவியால் இந்தப் பள்ளி மெல்ல மெல்ல வளர்ந்தது.
முதலில் இந்த பள்ளியை யாரும் அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் ஏதோ விளையாட்டாக இதை நடத்துவதாக நினைத்தார்கள். ஆனால் அதைப் பொய்யாக்க கடுமையாக போராடினேன். என்னிடம் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் நான் பணம் எதையும் பெற்றதில்லை. இலவசமாக தங்குமிடம் வழங்கி தடகளப் பயிற்சி அளித்ததுடன் அருகில் உள்ள பள்ளியில் அவர்கள் படிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தேன். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் என்னுடைய மாணவிகள் சாதனைகளைப் படைக்கத் தொடங்கியதும், எங்கள் பள்ளி மீது கவனம் திரும்பியது. கேரள மாநில அரசும் எங்களுக்கு உதவ முன்வந்தது.
இதைத் தொடர்ந்து கினலூரில் கேரள அரசு எங்களுக்கு இடத்தைக் கொடுத்ததுடன், 2008-ம் ஆண்டில் இங்கு இடம்பெயர்ந்தோம். 5 வீராங்கனைகளுடன் தொடங்கிய எங்கள் பள்ளியில் இன்று 15 மாணவிகள் உள்ளனர். இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இங்கு தங்கி பயிற்சிபெறத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். தடகளப் பயிற்சி மட்டுமின்றி அவர்களின் பள்ளி கல்லூரி படிப்புகளையும் கவனித்துக் கொள்கிறோம்.
எங்கள் மாணவிகளில் ஒருவரான டிண்டு லுகா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். அவர் உட்பட எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகள் சர்வதேச போட்டிகளில் இதுவரை 61 பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இந்த பள்ளி மேலும் வளர அனைவரின் உதவியும் தேவை” என்றார் உஷா.
ஆரம்பத்தில் தொழிலதிபர்கள் மற்றும் மாநில அரசின் உதவிகளுடன் இந்த பள்ளி நடந்து வந்தாலும், தற்போது புதிதாக ‘கிரவுட் பண்டிங்’ என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் பி.டி.உஷா. “இந்த திட்டத்தின்படி, உங்களால் முடிந்த பணத்தை செலுத்தி எங்களிடம் பயிற்சி பெறும் தடகள வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர் ஆகலாம். இதற்கு வருமான வரி விலக்கு உண்டு என்பது ஒருபுறம் இருந்தாலும், நம்மாலும் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஏதோ செய்ய முடிந்தது என்ற திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். பணம் மட்டும்தான் என்றில்லை. விளையாட்டு உபகரணங்கள், பர்னிசர்கள் என்று எதை வேண்டுமானாலும் கொடுத்து உதவலாம். உங்களுக்கு தெரிந்து யாராவது இளம் விளையாட்டு வீரர்கள் போதிய உதவியின்றி தவித்தால் அதையும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம். மொத்தத்தில் இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் ஒரு இயக்கமாகவே இதை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்” என்கிறார் உஷா.
ஆரம்பத்தில் கொயிலாண்டிக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த உஷாவின் சிஷ்யைகள் தற்போது சர்வதேச தரத்திலான சிந்தடிக் ஓடுதளத்தில் (கடந்த ஆண்டு பிரதமர் மோடி இதைத் திறந்து வைத்தார்) பயிற்சி பெற்று வருகிறார்கள். தினசரி காலை 4 மணியில் இருந்து அவர்களின் பயிற்சி தொடங்குகிறது. உஷாவைத் தவிர அவருக்கு உதவியாக மேலும் 2 பயிற்சியாளர்கள் இங்கு உள்ளனர்.
தன்னுடைய காலத்தில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் என எல்லா வகையிலான ஓட்டத்திலும் கலந்துகொண்டவர் பி.டி.உஷா. “குறிப்பிட்ட ஏதாவது ஒரு ஓட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் என்னால் ஒலிம்பிக்கில் சாதித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னிடம் பயிற்சி பெற வருபவர்களுக்கு ஏற்ற தடகள விளையாட்டு எது என்பதை அறிந்து குறிப்பிட்ட அந்த விளையாட்டில் அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கிறேன்” என்கிறார்.
ஒலிம்பிக்கில் தன்னால் பெற முடியாத பதக்கத்தை 2020-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் தன் மாணவிகள் மூலம் பெற வேண்டும் என்பதே உஷாவின் தற்போதைய லட்சியமாக உள்ளது. அதற்கு அவர் நம்புவது டிண்டு லுகாவையும், ஜிஸ்னா மேத்யூவையும்தான்.
“800 மீட்டர் ஓட்டத்தில் டிண்டுவும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூவும் என் கனவை நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன். அதைத்தவிர வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் என் மாணவிகள் பதக்கத்தை அள்ளி வருவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் உஷா.
உங்களிடம் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காத இளம் வீராங்கனைகளுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன என்று கேட்டதற்கு, “கடுமையாக முயற்சி செய்யுங்கள். எந்தக் கட்டத்திலும் தளராதீர்கள். சில தோல்விகள் வந்தாலும் சோர்ந்து விடாமல் கடுமையாக முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்” என்றார் உஷா.
ஜெயித்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
உஷாவிடம் பயிற்சி பெற (பாக்ஸ் மேட்டர்)
ஒவ்வொரு ஆண்டும் கினலூரில் உள்ள தனது பள்ளியில் தடகளத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை தன் பள்ளியில் சேர்க்கிறார் உஷா. இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும் பிப்ரவரி 9-ம் தேதி காலையில் நடக்கிறது. திறமையும், விருப்பமும் இருப்பவர்கள் தங்கள் பயோ டேட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அன்றைய தினம் காலை 8 மணிக்குள் நேரில் அணுகலாம். இதுபற்றி மேலும் தகவல்களை பெற விரும்புபவர்கள் உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸின் +91 496 2645811, +91 496 2645812 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் ushaschool@rediffmail.com என்ற ஈமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். 

குல்தீப் யாதவின் வெற்றிப் பாதை



“ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நாளை நீ ஆடப் போகிறாய். உன்னிடமிருந்து 5 விக்கெட்களையாவது நான் எதிர்பார்க்கிறேன்” - தர்மசாலாவில் உள்ள ஓட்டல் அறையில் குல்தீப் யாதவைப் பார்த்து இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியபோது இரவு மணி 10.
“நீங்கள் நினைப்பதுபோல் நிச்சயமாக செயல்படுவேன்” என்று கும்ப்ளேவை வழியனுப்பி வைத்தாலும் குல்தீப்பின் மனது அடித்துக்கொண்டு இருந்தது. “எத்தனை நாட்களாக காத்திருந்து கிடைத்த வாய்ப்பு இது. இதை நாம் நிச்சயமாக தவற விடக் கூடாது” என்று அவரது மனம் சொன்னது. கண்கள் தூக்கத்தை இழந்தன. புரண்டு புரண்டு படுத்தவர், அதிகாலை 3 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்தார். விடியலை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது மனது தூங்க மறுத்தது. பந்தை எடுத்தார். பாதுகாப்பு விதிப்படி வெளியே செல்லக்கூடாது என்பதால் தனது கட்டிலிலேயே பந்தை வீசி பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த நாள் காலை களம் புகுந்தவர், தன் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 68 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இப்படி முதல் போட்டிக்கு முன்தினம் இரவு தூக்கம் இல்லாமல் பயிற்சி செய்தவர்தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலரை தூக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். குல்தீப் யாதவின் வெற்றிகளுக்கு அவரது பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டேவும் ஒரு முக்கிய காரணம். வேகப்பந்து வீச்சாளராக தன்னிடம் பயிற்சி பெற வந்த குல்தீப் யாதவை ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாற்றிக் காட்டியவர் அவர்தான்.
இதுபற்றி கூறும் கபில்தேவ் பாண்டே, “குல்தீப் யாதவுக்கு வாசிம் அக்ரமை மிகவும் பிடிக்கும். அவரைப் போல் தானும் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளனுக்கு ஏற்ற உடல் வலிமை குல்தீப் யாதவிடம் இல்லை என்பதை நான் கண்டுகொண்டேன். அதனால் அவனை ஒரு சுழற்பந்து வீச்சாளராக்க முடிவு செய்தேன். இதுபற்றி கூறியதும் குல்தீப் யாதவ் என்னிடம் கோபம் கொண்டான். பின்னர் அரைமனதாக ஒப்புக்கொண்டான். அதன் பிறகும் நான் இல்லாத நேரங்களில் அவன் வேகப்பந்து வீசி பயிற்சி செய்திருக்கிறான். காலம் செல்லச் செல்ல அவனுக்கு சுழற்பந்து வீச்சு பிடித்துப் போனது.
சுழற்பந்து வீச்சாளராக அவன் வீசிய முதல் பந்தே ஒரு சைனா மேன் பந்துதான். அவனிடம் இப்படி ஒரு ஆற்றல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரமித்துப் போய்விட்டேன். பின்னர் தொடர்ந்து அதே முறையில் பந்து வீசச் சொல்லி அவனை உற்சாகப்படுத்தினேன். அவனிடம் உள்ள நல்ல குணமே, ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதை உடனடியாக கற்றுக்கொள்வான். அடுத்த நாளைக்கு தள்ளிப் போட மாட்டான்” என்கிறார் கபில்தேவ் பாண்டே.
வேகப்பந்து வீச்சில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு மாறியதும் குல்தீப் யாதவின் கண்கள், அக்ரமை விட்டு ஷேன் வார்னேவை பார்க்கத் தொடங்கிவிட்டது. வார்னேயின் பந்து வீச்சு வீடியோக்களை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினார் குல்தீப் யாதவ். தனது பந்து வீச்சு முறையில் தவறு இருப்பதுபோல தோன்றும்போதெல்லாம், அவரது வீடியோக்கள்தான் குல்தீப்புக்கு பாடம் நடத்தியுள்ளன.
பந்துவீச்சில் குல்தீப் யாதவுக்கு உள்ள ஆற்றலைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ், 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தங்கள் அணியில் அவரைச் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தளர்ந்து போகாத குல்தீப், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். இந்த நேரத்தில்தான் 2014-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட குல்தீப் யாதவ், 6 போட்டிகளில் 14 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதில் ஒரு போட்டியில் ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.
இந்த சாதனையைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த அணியில் ஏற்கெனவே சுனில் நரைன், பிராட் ஹாக், யூசுப் பதான் ஆகிய ஜாம்பவான்கள் இருந்ததால் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் அதைப்பற்றி வருத்தப்படவில்லை. தனது வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்தார்.
கொல்கத்தா அணியில் இணைந்த பிறகு, வார்னேயின் வீடியோக்கள் செய்ததை பிராட் ஹாக் செய்தார். கொல்கத்தா அணியின் சீனியர் பந்துவீச்சாளரான பிராட் ஹாக்கிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினார் குல்தீப் யாதவ். இதுபற்றி பேட்டி ஒன்றில், “பந்துவீச்சு பயிற்சியில் 50 சதவீதத்தை நான் வார்னேவிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றால், மீதிப் பாதியை பிராட் ஹாகிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். இப்போதுகூட அடிக்கடி ஸ்கைப் மூலம் ஹாகைத் தொடர்புகொண்டு என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்கிறேன். வார்னேவிடம் இருந்து ரிஸ்ட் பந்து வீச்சையும், ஹாகிடம் இருந்து சைனா மேன் பந்துவீச்சு நுணுக்கங்கங்களையும் நான் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
பிராட் ஹாக் என்றில்லை தன்னைவிட மூத்த பந்து வீச்சாளர்கள் யாரை சந்தித்தாலும், அவர்களிடம் இருந்து பந்து வீச்சு நுணுக்கத்தை கற்றுக்கொள்ள குல்தீப் யாதவ் தயங்குவதில்லை. அவருடைய அந்த வேட்கைதான் இறு உலகமே கண்டு பயப்படும் அளவுக்கு ஒரு சிறந்த பந்து வீச்சாளராக அவரை மாற்றியுள்ளது.
2016-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், துலீப் கோப்பை கிரிக்கெட்டிலும் தடம் பதித்து 3 போட்டிகளில் 17 விக்கெட்களை அள்ளினார். அது இந்திய அணியில் இணைய குல்தீப்புக்கு பாதை வகுத்துக் கொடுத்தது. இந்திய அணியில் சேர்ந்த பிறகு கும்பிளேவால் பட்டை தீட்டப்பட்டு இன்று நட்சத்திர பந்து வீச்சாளராக மின்னுகிறார்.
குல்தீப்பின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் சாஹல். பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான கூட்டணி எப்படி ஒரு அணியின் ரன்கள் உயர முக்கிய காரணமாக இருக்குமோ, அதேபோல் பந்து வீச்சாளர்கள் இடையிலான கூட்டணி, எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாஹலும், குல்தீப் யாதவும் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளதால் மைதானத்தில் இணைந்து செயல்பட்டு எதிரணிகளை மிரட்டி வருகிறார்கள். இந்த நட்சத்திர ஜோடியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.