வாஷிங்டன் சுந்தருக்கு 18 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்தியாவின் கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களில் இப்போது அவரும் ஒருவர். ஆல்ரவுண்டரான வாஷிங்டனை 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. பணத்தால் மட்டுமே இவரது வெற்றியை கணக்கிட முடியாது. டி 20 போட்டியில் மிகக் குறைந்த வயதில் ஆடிய இந்திய வீரர், ஒருநாள் போட்டிகளில் ஆடும் 7-வது இளம் இந்திய வீரர் என பல சாதனைகள் இவர் பின்னால் வரிசை கட்டி நிற்கின்றன.
ஆனால் அவரைப் பார்த்தால் அத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றே தெரியாது. அத்தனை அமைதி. இந்த சிறிய வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தமாக தடம் பதித்தது எப்படி என்று கேட்டால், தன் அப்பா சுந்தரை கைகாட்டுகிறார்.
“என் ஒவ்வொரு முயற்சியிலும் துணைநின்றவர் அப்பாதான். நான் ஒரு போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும், சதம் அடித்தாலும் அவர் என்னுடன் உறுதியாக இருந்தார். அவர் இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது” என்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
வாஷிங்டன் சுந்தரின் அப்பா சுந்தரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள அவர், தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடச்செல்லும்போதெல்லாம் மகன் வாஷிங்டனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். போட்டியின்போது கிடைக்கும் இடைவேளைகளில் அவர் வாஷிங்டனுக்கு டென்னிஸ் பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சி அளித்துள்ளார். அந்த நேரத்தில் வாஷிங்டனின் ஸ்டைலை வைத்து, அவரால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்று கணித்திருக்கிறார் சுந்தர். இதைத்தொடர்ந்து வாஷிங்டனை தீவிர கிரிக்கெட்டில் அவர் ஈடுபடுத்தியுள்ளார்.
பின்னர் சுந்தரின் நண்பரும் தமிழக அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான டபிள்யூ.வி.ராமனின் மேற்பார்வையில் வாஷிங்டனின் பேட்டிங் மெருகேற்றப்பட்டுள்ளது. பேட்டிங்கில் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சிலும் கெட்டிக்காரராக உருவெடுத்துள்ளார் வாஷிங்டன். தமிழகத்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெங்கட்ரமணாவின் பயிற்சியால் வாஷிங்டனின் சுழற்பந்து வீச்சில் மெருகு கூட, கிரிக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து 2016-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் தன் சிக்கனமான பந்து வீச்சாலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இருப்பினும் அவர் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கியது கடந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியின்போதுதான். அந்தத் தொடரில் புனே அணிக்காக 11 போட்டிகளில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்களை வீழ்த்தினார். பல அதிரடி பேட்ஸ்மேன்களைக் கொண்ட இந்த தொடரில் சராசரியாக ஒரு ஓவருக்கு வெறும் 6.16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதுபற்றி கூறும் வாஷிங்டன் சுந்தர், “புனே அணிக்காக ஆடியதில் எனக்கு 2 குருநாதர்கள் கிடைத்தனர். ஒருவர் மகேந்திர சிங் தோனி. மற்றொருவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். தான் பந்து வீசும்போது, ஸ்டம்புக்கு பின்னல் தோனியை போன்ற திறமைவாய்ந்த ஒரு ஜாம்பவான் நிற்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவாக இருக்கும். அந்தக் கனவு எனக்கு ஐபிஎல் மூலம் நிறைவேறியது. ஐபிஎல் போட்டிகளில் நான் பந்து வீசியபோது ஒரு குருநாதராகவும் இருந்து தோனி ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார். அவரைப் போலவே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் எனக்கு உந்துசக்தியாக இருந்தார். தொடர்ந்து 11 போட்டிகளில் எனக்கு வாய்ப்பளித்து, என் திறமையை வெளியில் தெரியவைத்தார்” என்கிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் சாதித்ததால், இந்த ஆண்டு பெங்களூரு அணி, அவரை 3.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
சென்னைப் பையனாக இருந்துகொண்டு, ஐபிஎல்லில் பெங்களூருவுக்கு ஆடுவது வருத்தமாக இல்லையா என்று கேட்டால், “ஒரு சென்னைப் பையனாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அட முடியததில் வருத்தம்தான். அதே நேரத்தில் கிறிஸ் கெயில், ஏ.பி.டிவில்லியர்ஸ், கோலி போன்ற பெரிய நட்சத்திரங்கள் ஆடிய பெங்களூரு அணிக்காக ஆடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இந்திய அணியின் கேப்டனான கோலியின் தலைமையில் அந்த அணியில் ஆடுவதில் கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் எனக்கு எதைச் செய்தாலும் அது நல்லதுக்காகத்தான் என்று நம்புகிறேன். இதுவும் நல்லதுக்காகத்தான் இருக்கும்” என்கிறார் வாஷிங்டன்.
பொதுவாக ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையான ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புவார்கள். உதாரணமாக புஜாரா, டெஸ்ட் போட்டிகளிலும், யுவராஜ் சிங் குறுகிய கால போட்டிகளிலும் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். ஆனால் வாஷிங்டன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
“கிரிக்கெட்டில் ஒவ்வொரு வகையான ஆட்டமும் ஒரு வகையான சவால். நான் சவால்களை நேசிக்கிறேன். ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என்று உறுதியுடன் கூறுகிறார் வாஷிங்டன் சுந்தர்.
இதுவரை 12 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள வாஷிங்டன் பேட்டிங்கில் 532 ரன்களைக் குவித்ததுடன் 30 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 1 ஒருநாள் போட்டியிலும் பல்வேறு டி20 போட்டிகளிலும் ஆடியுள்ள சுந்தர், இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய உள்ளது.
“பெரிய அளவில் லட்சியத்தை வைத்துக்கொண்டு எனக்கு நானே நெருக்கடியை கொடுக்க விரும்பவில்லை. அதே நேரம் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் 100 சதவீதம் பயன்படுத்துவேன். இந்திய ரசிகர்களுக்கு பிடித்த வீரனாக உருவெடுப்பேன்” என்று உறுதியுடன் சொல்லும் வாஷிங்டனின் சுந்தரின் கனவுகள் நனவாகட்டும்.