திரைப்படங்களின் க்ளைமேக்ஸ் காட்சியில் என்னதான் காயம்பட்டாலும், ஹீரோ தனது இலக்கை அடைவதைப்போல் காமன்வெல்த் போட்டியில் தன் இலக்கை அடைந்திருக்கிறார் சதீஷ்குமார் சிவலிங்கம். சில மாதங்களுக்கு முன் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார் சதீஷ்குமார். இருப்பினும் அதையும் மீறி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சதீஷ்குமார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு இது காமன்வெல்த் விளையாட்டில் பெறும் 2-வது தங்கப் பதக்கம்.
பளுதூக்கும் போட்டியில் தானும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையை சதீஷ்குமாருக்கு ஏற்படுத்தியவர் அவரது அப்பா சிவலிங்கம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிவலிங்கம், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி வரை முன்னேறினார். சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதை தனது அடுத்த லட்சியமாக அவர் வைத்திருந்தார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அவரால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை. குடும்பத்தை காப்பாற்ற முதலில் ராணுவத்திலும் பின்னர் தனியார் நிறுவனத்திலும் சேர்ந்து பணியாற்றினார்.
தனது ஒலிம்பிக் கனவுகள் பாதியிலேயே நின்றுவிட்டதே என்ற ஏக்கத்துடன் இருந்தபோதுதான் அவரிடம் வந்து நின்றார் 8-ம் வகுப்பு படிக்கும் மகன் சதீஷ்குமார். “உங்களைப் போலவே பளு தூக்குதலில் சாதனை படைக்க விரும்புகிறேன். பள்ளிகளுக்கிடையே நடக்கும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் நான் கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார் சதீஷ்குமார். இதைக் கேட்டதும் சிவலிங்கத்தின் கண்களில் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சம் பரவியது. மகனை ஆரத் தழுவிக்கொண்டார். தன்னால் முடியாததை தன் மகனை வைத்து நிறைவேற்ற விரும்பியவர், ஒரு வாரம் கடுமையான பயிற்சியை வழங்கியுள்ளார்.
அந்த ஒரு வார பயிற்சியிலேயே தன் முதல் போட்டியில் 40 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார் சதீஷ்குமார். ஒரு வாரம் பயிற்சி பெற்றதிலேயே இந்த அளவுக்கு சிறப்பாக பளு தூக்கும் தன் மகன், சரியான முறையில் பயிற்சி பெற்றால் எப்படி இருக்கும் என்று நினைத்த சிவலிங்கம், சதீஷ்குமாரை அருகில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். தானும் பயிற்சி கொடுத்துள்ளார்.
பளுதூக்கும் போட்டியில் ஒருவர் சாதிக்க வேண்டுமானால், வெறும் பயிற்சிகள் மட்டும் போதாது. போஷாக்கான உணவும் வேண்டும். தானும் ஒரு பளு தூக்கும் வீரர் என்பதால், இதை நன்குணர்ந்த சிவலிங்கம் தினசரி கால் கிலோ கறி, அரை லிட்டர் பால், 2 முட்டைகள் என்று கொடுத்து சதீஷ்குமாரை கவனித்து வந்துள்ளார். சதீஷ்குமாரும் இதற்கு ஏற்றார்போல் பயிற்சிபெற்று தேசிய அளவிலான போட்டிகளில் கவனத்தை செலுத்தினார்.
படிப்படியாக வளர்ந்து தேசிய அளவில் பதக்கங்களை வென்ற அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததுடன் பாட்டியாலாவில் தங்கி பயிற்சி பெற வாய்ப்பும் கிடைத்தது. பொதுவாக பலரும் விளையாட்டு கோட்டாவில் வேலை கிடைத்ததுடன் விளையாட்டை விட்டுவிடுவார்கள். ஆனால் சதீஷ்குமார் அப்படிச் செய்யவில்லை. தன் குடும்பத்தைக்கூட மறந்து பயிற்சி மையமே கதியென்று கிடந்தார். இதைப்பற்றி கூறும் அவரது தந்தை சிவலிங்கம், “சதீஷ்குமார் சதா பயிற்சி என்று இருப்பதால் ஊருக்கே வருவதில்லை. நாங்கள் தான் எப்போதாவது நேரம் கிடைக்கும்போது அவரை சென்று சந்திப்போம். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் மங்களூருக்கு வந்தபோது, அவரைப் போய் பார்த்தோம்” என்கிறார்.
இப்படி குடும்பத்தையும் மறந்து கடுமையாக பயிற்சி பெற்றதன் பலந்தான், காமன்வெல்த் போட்டியில் அவருக்கு 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் 2 முறை தங்கம் வென்றாலும் இந்த முறை பெற்ற தங்கத்தை சிறப்பானதாக கருதுகிறார் சதீஷ்குமார். இதுபற்றி கூறும் அவர், “தொடையில் ஏற்பட்ட காயத்தால், என்னால் இந்த காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக ஆடமுடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதை என் பெற்றோரிடம்கூட தெரிவிக்காமல் இருந்தேன். இருப்பினும் என் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களின் உதவியால் இந்த முறையும் பதக்கம் வெல்ல முடிந்தது” என்கிறார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றாலும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை தன் வாழ்க்கை லட்சியமாக வைத்துள்ளார் சதீஷ்குமார். “ஒலிம்பிக்கில் சதீஷ்குமார் சாதிக்க வேண்டுமென்றால் இன்னும் அதிக எடையைத் தூக்கவேண்டும் அதற்கு அவருக்கு உதவ, ஒரு நல்ல பிசியோதெரபிஸ்டை அரசு நியமிக்க வேண்டும்” என்கிறார் சதீஷ்குமாரின் அப்பா சிவலிங்கம். அரசு செய்யும் என்று நம்புவோமாக.
No comments:
Post a Comment