ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம். பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒவ்வொருவராக தோற்று பின்வாங்கிக்கொண்டே வர, தங்கப் பதக்கத்துக்கான மோதலில் 2 டாக்டர்கள் எஞ்சியிருக்கிறார்கள். ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணரான ஹீனா சித்து. மற்றொருவர் ஆஸ்திரேலியாவின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான லினா கலியபோவிச்.
பரபரப்பான இறுதிக் கட்டத்தில் ஹீனாசித்துவின் கண்கள் பார்வையாளர்கள் வரிசையில் நிற்கும் தன் கணவர் ரோணக் பண்டிட்டைத் தேடுகிறது. ஜில்லென்ற புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி ஹீனா சித்துவை வாழ்த்துகிறார் ரோணக். “இந்த முறை நீ தங்கப் பதக்கத்துடன் புதிய கமன்வெல்த் சாதனையையும் படைக்கப் போகிறாய்” என்று 2 நாட்களுக்கு முன் ரோணக் சொன்னது நினைவில் வர, மிகுந்த தன்னம்பிக்கையுடன் விழியைக் கூர்மையாக்கி டார்கெட்டைக் குறிவைத்து டிரிக்கரை அழுத்துகிறார். சீறிப்பாய்ந்த தோட்டா, துல்லியமாக இலக்கை அடைகிறது. 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், 38 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வெல்கிறார் சித்து. அதுவும் 2 நாட்களுக்கு முன் கணவர் ரோணக் சொன்னதைப் போல் காமன்வெல்த் சாதனையுடன். இதற்கு 2 நாட்கள் முன்புதான் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார் ஹீனா சித்து.
“இந்த வெற்றி எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. என் கணவரும் பயிற்சியாளருமான ரோணக் பண்டிட்டுக்கு இதில் சரிபாதி பங்கு இருக்கிறது” என்று பதக்கம் வென்ற மகிழ்சியில் விழிகளில் கசிந்த நீரைத் துடைத்துக்கொண்டே கூறுகிறார் ஹீனா சித்து. இவை வெறும் வார்த்தைகள் அல்ல. ஹீனாவின் இந்த வெற்றிக்காக ரோணக் செய்த தியாகம் அதிகம். ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார்’ என்பர்கள். ஆனால் ஹீனா சித்துவைப் பொறுத்தவரை அவரது வெற்றிக்கு காரணம் கணவர் ரோணக்.
ஹீனாவின் வாழ்க்கையில் அவர் ரோணக்கை காதலிப்பதற்கு முன்பே துப்பாக்கியைக் காதலித்திருக்கிறார். அவரது மாமா துப்பாக்கி விற்பனை மற்றும் அதை ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வந்ததால், சிறு வயதில் இருந்தே ஹீனாவுக்கு துப்பாக்கி மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பில் படிக்கும்போதே உள்ளூர் போட்டி ஒன்றில் முதல் முறையாகப் பங்கேற்ற ஹீனாவுக்கு, துப்பாக்கி சுடுதலில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
டாக்டர் ஆவதை லட்சியமாகக் கொண்டு தினமும் 14 மணிநேரம் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தவர், மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ரிலாக்ஸ் மட்டுமல்லாமல் அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. மருத்துவ கல்லூரியில் சீட் பெற தனது மதிப்பெண்ணுடன் சேர்த்து விளையாட்டில் பெறும் பதக்கங்களும் உதவும் என்று அவர் கருதியதும் இதற்கு மற்றொரு காரணம்.
இப்படி பல்வேறு காரணங்களுக்காக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டாலும், ஆரம்ப காலம் முதலே வெற்றி தேவதை அவரை அரவணக்கத் தொடங்கினார். 2006-ம் ஆண்டு தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற ஹீனா சித்து அதைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். இதனால் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பிறகும், பல் மருத்துவ நிபுணர் ஆன பிறகும் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று வகை சூடினார். 2009-ம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
2012-ம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட போதுதான் அவர் ரோணக் பண்டிட்டை சந்தித்தார். ஹீனாவுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த உக்ரைன் பயிற்சியாளர்தான் ரோணக்குக்கும் பயிற்சியாளர். ரோணக்கைப் பொறுத்தவரை அவர் அந்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளுக்காக தன்னை பட்டை தீட்டிக் கொள்ள உக்ரைன் பயிற்சியாளரிடம் வந்திருந்தார். வந்த இடத்தில் பயிற்சியுடன் சேர்ந்து ரோணக் - ஹீனா சித்து ஜோடியின் காதலும் வளர்ந்தது.
பயிற்சியாளர் சொல்லிக்கொடுப்பதை விட ரோணக்கின் அருகாமையும், உத்வேக வார்த்தைகளும் ஹீனாவுக்கு அதிக தெம்பைக் கொடுத்தன. தன்னுடன் ரோணக்கும் லண்டன் வரவேண்டும் என்று விரும்பினார். ரோணக்கும் அதைத் தட்டாமல் சொந்த செலவில் லண்டன் சென்று அவருக்கு உற்சாகமூட்டினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஹீனாவல் 12-வது இடத்தையே பெற முடிந்தது. ஆனால் பதக்கம் போனாலும் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
அவர்களின் காதலைத் தெரிந்துகொண்ட ரோணக் பண்டிட்டின் தந்தை அசோக் பண்டிட், திருமணத்துக்கு மகிழ்ச்சியுடன் பச்சைக் கொடி காட்டினார். காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றவரான அசோக் பண்டிட்டுக்கு தனது மருமகளும் ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
லண்டன் ஒலிம்பிக் போட்டி முடிந்து ஓராண்டுக்கு பிறகு ஹீனா - ரோணக்கின் திருமணம் முடிந்தது. இந்த திருமணம் முடிந்ததும் ரோணக் பண்டிட் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். ‘இனி போட்டிகளில் பங்கேற்பதற்காக துப்பாக்கியை தொடுவதில்லை. என் மனைவியை ஒரு பெரிய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆக்குவதே எனது லட்சியம்’ என்பதுதான் அந்த முடிவு. காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற ரோணக்கின் அந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஹீனாவால் ஜெயிக்க முடியாவிட்டல் இருவரது எதிர்காலமும் பாழாகுமே என்று கூறினார்கள்.
ஆனால் ரோணக் எதற்கும் கவலைப்படவில்லை. ஹீனாவுக்கு முழுநேர பயிற்சியாளராகவும், உதவியாளராகவும் மாறினார். வீட்டு வேலைகளில் ஒன்றுகூட அவரை நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார். சதா சர்வ நேரமும் துப்பாக்கி சுடுதலைப் பற்றியே சிந்திக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது பயிற்சியும் தியாகமும் வீண் போகவில்லை இந்த கமன்வெல்த் போட்டியில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஹீனா, பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக முன்னேறி வருகிறார்.
“என் வெற்றிகளுக்கு முழு காரணம் என் கணவர்தான். அவர் இல்லாவிட்டல் எனக்கு வெற்றிகள் கிடையாது. அவரது உதவியுடன் மேலும் பல பதக்கங்களைக் குவிப்பேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஹீனா. நமக்கும் அதுதான் வேண்டும்.
No comments:
Post a Comment