இந்த தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு சிரிப்பு வரலாம். “குழந்தைங்களை படிக்க வைக்கறதுதானே கஷ்டம். விளையாட வைக்கிறது கஷ்டமா என்ன?” என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால் மாலை நேரங்களில் உங்கள் வீட்டருகே உள்ள தெருக்களிலோ, பூங்காக்களுக்கோ சென்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் சத்தத்தால் நிறைந்திருந்த அவை இப்போது நிசப்தமாக இருப்பதை பார்க்க முடியும். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பூங்காக்கள் இன்று பெரியவர்கள் வாக்கிங் செல்வதற்கான இடமாக மாறிக்கொண்டிருப்பதை உணர முடியும். சிறு வயதில் ஓடியாடி விளையாட வேண்டிய பல குழந்தைகள் கல்விச் சுமையின் பிடியிலும், ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் தொழில்நுட்ப விளையாட்டுகளின் பிடியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
‘மாலை முழுதும் விளையாட்டு’ என்ற மகாகவி பாரதியின் வாக்கு, இன்று வீடியோ கேம், கம்ப்யூட்டர், செல்போன் விளையாட்டுகள் என்று சுருங்கிப் போய் குழந்தைகளின் உடல் நலனுக்கே கேடாக அமைந்துள்ளன. இதனால் பல்வேறு பாதிப்புகளை இளைய சமுதாயம் சந்திக்கிறது.
குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
எடை அதிகரிக்கும்:
வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், செல்போன் விளையாட்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் ஆட்டங்களாக இருப்பதால் உடல் உழைப்புக்கு அதிக வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ஏற்கெனவே ஃபாஸ்ட் புட் போன்றவற்றால் எடை அதிகரிக்கும் குழந்தைகள், உடல் உழைப்பின்மையால் மேலும் குண்டாகும் அபாயம் உள்ளது.
கண்பார்வை பாதிக்கும்:
உடல் உழைப்புகள் நிறைந்த ஆட்டங்களில் ஈடுபட்டால் குழந்தைகளுக்கு அசதியால் இரவில் நல்ல உறக்கம் வரும். ஆனால் அப்படி ஆடாததால் பல குழந்தைகளுக்கு தூக்கம் கெடுகிறது. . மேலும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போனின் திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதால் கண் பார்வையும் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளை தனிமைப்படுத்தும்:
குழுவாக மற்ற குழந்தைகளுடன் ஆடாததால் அவர்களை தனிமை சூழ்ந்துகொள்கிறது. இதனால் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது போன்ற விஷயங்களை கற்கும் வாய்ப்பு குறைவதுடன், தனிமையில் மூழ்குகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் படிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்துவதால் வீட்டில் நடக்கும் விஷயங்களைக்கூட அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் உலகம் தெரியாத குழந்தைகளாகவும் அவர்கள் மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
வன்முறை எண்ணம் அதிகரிக்கும்:
பெரும்பாலான வீடியோ கேம்கள் வன்முறை நிறைந்த விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணங்கள் தோன்றவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் பெரும்பாலான குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இவற்றில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டுமானால், அவர்களை நாம் வீட்டுக்கு வெளியில் சென்று ஆடும் விளையாட்டுகளை ஆட ஊக்குவிக்க வேண்டும். அதற்கு சில வழிகள்:
அக்கம் பக்கத்தினருடன் பழகுங்கள்:
நம் குழந்தைகள் கூண்டுக்கிளிகளாக இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டுமானால், முதலில் பெற்றோர்களாகிய நாம் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். அக்கம் பக்கத்தினருடன் பழக வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரும். பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் அவர்கள் விளையாட ஆரம்பிப்பார்கள். மேலும் நம் குழந்தைகள் வெளியில் விளையாடும்போது பக்கத்து வீட்டுக்காரர்களும் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும்.
அழுக்கைப் பற்றிய கவலையை அகற்றுங்கள்:
உடைகளை அழுக்காக்கிக்கொண்டு வரும் பிள்ளைகளைத் திட்டும் வழக்கம் பலருக்கும் உண்டு. இந்த திட்டுகளுக்கு பயந்தே பெரும்பாலான குழந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்க்கிறார்கள். நமக்கு ஆரோக்கியமான குழந்தைகள் வேண்டுமா, ‘அல்லது’ அவர்களின் தூய்மையான ஆடைகள் வேண்டுமா என்பதை நீங்கள் முதலில் முடிவு செய்யுங்கள். ‘விளையாடுவதால் உடைகள் கொஞ்சம் அழுக்கானாலும் கவலையில்லை’ என்பதை அவர்கள் மனதில் பதியவையுங்கள். அல்லது அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதற்காகவே சில பிரத்யேக உடைகளை எடுத்து வையுங்கள்.
தொழில்நுட்ப சாதனங்களை ஒதுக்கி வையுங்கள்:
வீட்டில் உள்ள டிவி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை தினசரி 2 மணிநேரமாவது ஒதுக்கி வையுங்கள். அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள். அவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். இது உங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
நட்பு வட்டத்தை உருவாக்குவோம்:
முன்பெல்லாம் ஊரில் உள்ள மொத்த குழந்தைகளும் ஆற்றங்கரையிலோ, மைதானங்களிலோ ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க முடியும். இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுபோன்ற நட்பு வட்டம் இல்லை. பள்ளியில் நண்பர்கள் இருந்தாலும், வீட்டருகில் உள்ள பகுதிகளில் அவர்கள் தனிமையாகவே இருக்கிறார்கள். இந்த சூழலை பெற்றோர்கள்தான் மாற்ற வேண்டும். அவர்களுக்கு வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுடன் நட்பு உருவாகச் செய்ய வேண்டும்.
விளையாட்டைப் பற்றியும் பேசுங்கள்:
குழந்தைகளிடம் படிப்பை பற்றி மட்டும் பேசினால் போதாது. ‘கணக்கு பாடத்தில் எத்தனை மார்க் வாங்கியிருக்கே?’ என்று கேட்பதைப் போலவே ‘தெருவோர கிரிக்கெட்டில் எத்தனை ரன் எடுத்தே?’ என்றும் கேட்கப் பழகுங்கள். கிரிக்கெட், கால்பந்து, கபடி, ஏன்... கோலிக்குண்டு விளையாட்டைப் பற்றிக்கூட சொல்லிக் கொடுங்கள். பத்திரிகைகளில் வெளியாகும் விளையாட்டுப் பக்கங்களை படிக்க வையுங்கள்.
பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்:
நம்மில் எத்தனை பேர் விளையாடுவதற்காக குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கிறோம். சினிமாவுக்கும், டியூஷனுக்கும், பள்ளிக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதில் காட்டும் ஆர்வத்தில் 10 சதவீதத்தைக்கூட நாம் குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதில் காட்டுவதில்லை. இந்த நிலையை இனியாவது மாற்றுவோம். தினமும் 1 மணிநேரமாவது குழந்தைகளை அவர்களின் நண்பர்களுடன் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வோம். நண்பர்களுடன் அவர்கள் விளையாடுவதால் உடல் வலிமையாவதுடன் விட்டுக்கொடுத்தல் போன்ற பழக்கங்களும் அவர்களுக்குள் ஏற்படும்.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரத்தைக் குறையுங்கள்:
நகரத்தில் வாழும் 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் நாளொன்றுக்கு சுமார் 7.5 மணிநேரத்தை தொலைக்காட்சிகள், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேம்கள் மற்றும் செல்போன்களில் கழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தனை நேரமும் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே டிவி, கம்ப்யூட்டர் செல்போன் போன்றவற்றின் பயன்பாட்டை முடிந்தவரை குறையுங்கள். நாளொன்றுக்கு அதிகபட்சம் 3 மணி நேரம்தான் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதை வழக்கமாக்கி, அதற்கென ஒரு கால அட்டவணையை வகுத்து வையுங்கள்.
இதையெல்லாம் செய்தால் உங்கள் குழந்தைகளும் அறிவாற்றலுடன் ஆரோக்கியம் மிக்கவர்களாகவும் வளர்வார்கள்.