Powered By Blogger

Sunday, July 22, 2018

குழந்தைகளை விளையாட வைப்பது எப்படி?



இந்த தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு சிரிப்பு வரலாம். “குழந்தைங்களை படிக்க வைக்கறதுதானே கஷ்டம். விளையாட வைக்கிறது கஷ்டமா என்ன?” என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால் மாலை நேரங்களில் உங்கள் வீட்டருகே உள்ள தெருக்களிலோ, பூங்காக்களுக்கோ சென்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் சத்தத்தால் நிறைந்திருந்த அவை இப்போது நிசப்தமாக இருப்பதை பார்க்க முடியும். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட  பூங்காக்கள் இன்று பெரியவர்கள் வாக்கிங் செல்வதற்கான  இடமாக மாறிக்கொண்டிருப்பதை உணர முடியும். சிறு வயதில் ஓடியாடி விளையாட வேண்டிய பல குழந்தைகள் கல்விச் சுமையின் பிடியிலும், ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் தொழில்நுட்ப விளையாட்டுகளின் பிடியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
‘மாலை முழுதும் விளையாட்டு’ என்ற  மகாகவி பாரதியின் வாக்கு, இன்று  வீடியோ கேம், கம்ப்யூட்டர், செல்போன் விளையாட்டுகள் என்று சுருங்கிப் போய் குழந்தைகளின் உடல் நலனுக்கே கேடாக அமைந்துள்ளன.  இதனால் பல்வேறு பாதிப்புகளை இளைய சமுதாயம் சந்திக்கிறது.
குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
எடை அதிகரிக்கும்:
வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், செல்போன் விளையாட்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் ஆட்டங்களாக இருப்பதால் உடல் உழைப்புக்கு அதிக வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ஏற்கெனவே ஃபாஸ்ட் புட் போன்றவற்றால் எடை அதிகரிக்கும் குழந்தைகள், உடல் உழைப்பின்மையால் மேலும் குண்டாகும் அபாயம் உள்ளது.
கண்பார்வை பாதிக்கும்:
உடல் உழைப்புகள் நிறைந்த ஆட்டங்களில் ஈடுபட்டால் குழந்தைகளுக்கு அசதியால் இரவில் நல்ல உறக்கம் வரும். ஆனால் அப்படி ஆடாததால் பல குழந்தைகளுக்கு தூக்கம் கெடுகிறது.  . மேலும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போனின் திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதால் கண் பார்வையும் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளை தனிமைப்படுத்தும்:
குழுவாக மற்ற குழந்தைகளுடன் ஆடாததால் அவர்களை தனிமை சூழ்ந்துகொள்கிறது. இதனால் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது போன்ற விஷயங்களை கற்கும் வாய்ப்பு குறைவதுடன், தனிமையில் மூழ்குகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் படிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்துவதால் வீட்டில் நடக்கும் விஷயங்களைக்கூட அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால்  உலகம் தெரியாத குழந்தைகளாகவும் அவர்கள் மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
வன்முறை எண்ணம் அதிகரிக்கும்:
பெரும்பாலான வீடியோ கேம்கள் வன்முறை நிறைந்த விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணங்கள் தோன்றவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் பெரும்பாலான குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இவற்றில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டுமானால், அவர்களை நாம் வீட்டுக்கு வெளியில் சென்று ஆடும் விளையாட்டுகளை ஆட ஊக்குவிக்க வேண்டும். அதற்கு சில வழிகள்:
அக்கம் பக்கத்தினருடன் பழகுங்கள்:
நம் குழந்தைகள் கூண்டுக்கிளிகளாக இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டுமானால், முதலில் பெற்றோர்களாகிய நாம் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும்.  அக்கம் பக்கத்தினருடன் பழக வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரும். பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் அவர்கள் விளையாட ஆரம்பிப்பார்கள். மேலும் நம் குழந்தைகள் வெளியில் விளையாடும்போது பக்கத்து வீட்டுக்காரர்களும் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும்.
அழுக்கைப் பற்றிய கவலையை அகற்றுங்கள்:
உடைகளை அழுக்காக்கிக்கொண்டு வரும் பிள்ளைகளைத் திட்டும் வழக்கம் பலருக்கும் உண்டு. இந்த திட்டுகளுக்கு பயந்தே பெரும்பாலான குழந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்க்கிறார்கள். நமக்கு ஆரோக்கியமான குழந்தைகள் வேண்டுமா, ‘அல்லது’ அவர்களின் தூய்மையான ஆடைகள் வேண்டுமா என்பதை நீங்கள் முதலில் முடிவு செய்யுங்கள். ‘விளையாடுவதால் உடைகள் கொஞ்சம் அழுக்கானாலும் கவலையில்லை’ என்பதை அவர்கள் மனதில் பதியவையுங்கள். அல்லது அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதற்காகவே சில பிரத்யேக உடைகளை எடுத்து வையுங்கள்.
தொழில்நுட்ப சாதனங்களை ஒதுக்கி வையுங்கள்:
வீட்டில் உள்ள டிவி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை தினசரி 2 மணிநேரமாவது ஒதுக்கி வையுங்கள். அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள். அவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். இது உங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
நட்பு வட்டத்தை உருவாக்குவோம்:
முன்பெல்லாம் ஊரில் உள்ள மொத்த குழந்தைகளும் ஆற்றங்கரையிலோ, மைதானங்களிலோ ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க முடியும். இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுபோன்ற நட்பு வட்டம் இல்லை. பள்ளியில் நண்பர்கள் இருந்தாலும், வீட்டருகில் உள்ள பகுதிகளில் அவர்கள் தனிமையாகவே இருக்கிறார்கள். இந்த சூழலை பெற்றோர்கள்தான் மாற்ற வேண்டும். அவர்களுக்கு வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுடன் நட்பு உருவாகச் செய்ய வேண்டும்.
விளையாட்டைப் பற்றியும்  பேசுங்கள்:
குழந்தைகளிடம் படிப்பை பற்றி மட்டும் பேசினால் போதாது. ‘கணக்கு பாடத்தில் எத்தனை மார்க் வாங்கியிருக்கே?’ என்று கேட்பதைப் போலவே ‘தெருவோர கிரிக்கெட்டில் எத்தனை ரன் எடுத்தே?’ என்றும் கேட்கப் பழகுங்கள். கிரிக்கெட், கால்பந்து, கபடி, ஏன்... கோலிக்குண்டு விளையாட்டைப் பற்றிக்கூட சொல்லிக் கொடுங்கள். பத்திரிகைகளில் வெளியாகும் விளையாட்டுப் பக்கங்களை படிக்க வையுங்கள்.
பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்:
நம்மில் எத்தனை பேர் விளையாடுவதற்காக குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கிறோம்.    சினிமாவுக்கும், டியூஷனுக்கும், பள்ளிக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதில் காட்டும் ஆர்வத்தில் 10 சதவீதத்தைக்கூட நாம் குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதில் காட்டுவதில்லை. இந்த நிலையை இனியாவது மாற்றுவோம். தினமும் 1 மணிநேரமாவது குழந்தைகளை அவர்களின் நண்பர்களுடன் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வோம். நண்பர்களுடன் அவர்கள் விளையாடுவதால் உடல் வலிமையாவதுடன் விட்டுக்கொடுத்தல் போன்ற பழக்கங்களும் அவர்களுக்குள் ஏற்படும்.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரத்தைக் குறையுங்கள்:
நகரத்தில் வாழும் 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் நாளொன்றுக்கு சுமார் 7.5 மணிநேரத்தை தொலைக்காட்சிகள், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேம்கள் மற்றும் செல்போன்களில் கழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தனை நேரமும் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே டிவி, கம்ப்யூட்டர் செல்போன் போன்றவற்றின் பயன்பாட்டை முடிந்தவரை குறையுங்கள். நாளொன்றுக்கு அதிகபட்சம் 3 மணி நேரம்தான் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதை வழக்கமாக்கி, அதற்கென ஒரு கால அட்டவணையை வகுத்து வையுங்கள்.
இதையெல்லாம் செய்தால் உங்கள் குழந்தைகளும் அறிவாற்றலுடன் ஆரோக்கியம் மிக்கவர்களாகவும் வளர்வார்கள்.

வெறுங்கையோடு திரும்பிய மெஸ்ஸி




கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா   அணிகள் தோற்றுவிட்டு, வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால் எப்படி இருக்கும்? அதே போன்ற நிலையில் இருக்கிறது உலகக் கோப்பை கால்பந்து. சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதியைக்கூட எட்டாத நிலையில், பெல்ஜியம், ரஷ்யா  அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி  கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.
அணிகளின் நிலைதான் இப்படியென்றால், இந்த உலகக் கோப்பையின் கதாநாயகனாக வர்ணிக்கப்பட்ட அர்ஜென்டினா வீரர்  லயோனல் மெஸ்ஸியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.  உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5 முறை வென்றவர்,  அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்களை அடித்தவர்,  கிளப் கால்பந்தில் நூற்றுக்கணக்கான  கோல்களைக் குவித்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட மெஸ்ஸி, இம்முறை  கோப்பையை சொந்தமாக்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தின் மோசமான க்ளைமேக்ஸைப் போல இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் இமேஜ் தகர்ந்து போனது.
ஐஸ்லாந்து அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 12 யார்டுகள் (36 அடிகள்) தூரத்தில் இருந்து அடிக்கக்கூடிய பெனாலிடி கிக்கையே கோலாக மாற்ற முடியாமல் மெஸ்ஸி திணற, அர்ஜென்டினா ஆடிப்போனது.  முதல் சறுக்கலில் இருந்து அவர் சுதாரித்து எழுவதற்குள், 2-வது சுற்றுப் போட்டியில் பிரான்ஸிடம் பரிதாபமாகத் தோற்றது.  கோல்மழை பொழிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி, வெறும் ஒரு கோல் மட்டும் அடித்து கால் உடைந்தவரைப்போல் சொந்த ஊர் திரும்பினார்.  ஆடம்பரமாக வழியனுப்பி வைக்கப்பட்டவர் ஊரறியாமல் சொந்த ஊர் சேர்ந்தார்.     பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்காமல் வீட்டுக்கு திரும்பினார்.
அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் மாற, அர்ஜென்டினா ரசிகர்களே மெஸ்ஸியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  “அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால் பார்சிலோனா கிளப்புக்காக உயிரைக் கொடுத்து ஆடும் மெஸ்ஸி, அதில் பாதி ஆற்றலைக்கூட  அர்ஜென்டினாவின்  வெற்றிக்காக பயன்படுத்தியதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.  2005-ம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவுக்காக ஆடிவரும் அவர் ஒரு கோப்பையைக்கூட நாட்டுக்காக வாங்கிக் கொடுக்கவில்லை என்பது அவர்களின் ஆதங்கம். 4 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில்  ஆடியுள்ள அவர், ஒரு முறைகூட நாக் அவுட் சுற்றில் கோல் அடிக்கவில்லை என்பதை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள் அவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, மெஸ்ஸியின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் அவரைக் கைவிடவில்லை. குறிப்பாக அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டிகோ மரடோனாகூட, உலகக் கோப்பை தோல்விக்கு மெஸ்ஸியைவிட அணியின் மற்ற வீரர்களைத்தான் குற்றம் சாட்டியுள்ளார். “மெஸ்ஸி  இல்லாவிட்டால்  எங்கள் அணி மிகவும் சாதாரண அணிதான். 2-வது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீரர்கள் மெஸ்ஸியின் முன்னேற்றத்தை  போராடித் தடுத்தனர்.  அதனால்தான் அர்ஜெண்டினா தோல்வியைத் தழுவியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரடோனாவைப் போலவே மெஸ்ஸியின் மற்ற தீவிர ரசிகர்களின் கருத்தும் இதனை ஒட்டியே அமைந்துள்ளன. “இந்த உலக்கோப்பை தொடரில் எதிரணிகள் அனைத்தும் மெஸ்ஸியை முடக்கிப் போடுவதில் கூடுதல் கவனம் செலுத்தின. அதனால் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. அப்படியும் அவர் தீவிரமாக போராடி கோல் அடிப்பதற்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அதை வீணடித்து விட்டனர்” என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
மெஸ்ஸிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துவரும் நிலையில் அவர்  சர்வதேச கால்பந்தில் இனியும் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  2016-ம் ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா (அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடர்) கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் பெனாலிடி ஷூட் அவுட் முறையில் தோல்வியைத் தழுவியது அர்ஜென்டினா. இதை தாங்கிக்கொள்ள முடியாத மெஸ்ஸி,  சர்வதேச கால்பந்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளால் மீண்டும் அணிக்குள் கால்வைத்தார்.   தகுதிச் சுற்றில் சிறப்பாக ஆடி அர்ஜென்டினாவை உலகக் கோப்பைக்கு தகுதிபெற வைத்தார். இப்போது உலகக் கோப்பையில் மிக மோசமான தோல்வியை அர்ஜென்டினா பெற்ற நிலையில்  சர்வதேச கால்பந்தில் இருந்து விலகும் முடிவை மெஸ்ஸி மீண்டும் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 “மெஸ்ஸிக்கு இப்போது 31 வயதாகிறது. அடுத்த உலகக் கோப்பையில் அவர் ஆடவேண்டுமானால் இன்னும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.  இப்போதுள்ள வேகம் அப்போதும்  தொடருமா என்று  தெரியாது. எனவே நல்ல நிலையில் இருக்கும்போதே அவர் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். கிளப் கால்பந்தில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்” என்று கால்பந்து வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் அவர்கள் கூறும்போது, “அர்ஜென்டினாவுக்காக இதுவரை  8 பயிற்சியாளர்களின் கீழ் மெஸ்ஸி ஆடியுள்ளார். ஆனால் மெஸ்ஸியை மையப் புள்ளியாக வைத்து திட்டம் தீட்டி கோப்பைகளை வெல்ல எந்த பயிற்சியாளராலும் முடியவில்லை. இது மெஸ்ஸியின் தோல்வியல்ல, அர்ஜெண்டினா பயிற்சியாளர்களின் தோல்வி. எனவே இனியும் அந்த அணியில் தொடர்ந்து தனது ஆற்றலை அவர் வீணடிக்கக் கூடாது.கடைசி கட்டத்தில் பார்சிலோனா அணிக்காக மட்டும் ஆடி தனது புகழை நிலைநாட்ட வேண்டும்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். சதா மெஸ்ஸியையே நம்பியிருக்கும் அர்ஜென்டினாவும் இதன் மூலம் மாற்றுத் திட்டத்தை தேடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
அதே நேரத்தில் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தருவதை லட்சியமாக கொண்டுள்ள மெஸ்ஸி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து வரை அணியில் தொடர்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னைச் சுற்றி கேள்விகளும், விமர்சனங்களும் சுற்றிவரும் நிலையில் கடந்த ஞாயிறன்று தனது பார்சிலோனா கிளப்புக்கு  பயிற்சிக்காக சென்றுள்ளார் மெஸ்ஸி.  அவரது அடுத்தகட்ட நகர்வை நோக்கி கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சகோதர சண்டையை தவிர்ப்பது எப்படி?





‘ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருப்பாங்களேன்னு 2 குழந்தைங்களைப் பெத்தோம். ஆனா இப்ப ஒவ்வொரு விஷயத்துக்கும் அதுங்க அடிச்சுக்கறதைப் பார்க்கும்போது ஏன்தான் 2 குழந்தைங்களை பெத்தோமோன்னு இருக்கு” - என்று புலம்பும் பெற்றோர்கள் பலரைப் பார்த்திருப்போம். 2 குழந்தைகளைப் பெற்றவர்களுக்கே இந்த நிலை என்றால் அதற்கும் மேல் குழந்தைகளைப் பெற்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சதா சண்டையிட்டுக் கொள்ளும் குழந்தைகளை சமாதானப்படுத்தவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.
ஆனால் பெற்றோர்கள் நினைத்தால் இந்த சகோதர சண்டைகளைக் குறைத்து, வீட்டில் அமைதியை கொண்டுவர முடியும். அதற்கு அவர்கள் முதலில் செய்யவேண்டிய விஷயம் குழந்தைகள் மத்தியில் ஒருவர் மீது மற்றவர் பொறாமை கொள்ளாமல் பார்த்துக் கொள்வதுதான். அப்படி பொறாமை ஏற்படாமல் இருக்க, முதலில் நாம் அவர்களை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும்.
“உன்னைவிட அவன் சின்னப் பையன்தானே, ஆனா பாரு எவ்வளவு பொறுப்பா ஸ்கூல்ல இருந்து வந்ததும் அவனோட பொருட்களை அந்தந்த இடத்துல வைக்கறான். ஆனா மூத்தவனான நீ, எல்லாத்தையும் கண்ட இடத்தில போட்டுட்டு விளையாடப் போயிடறே. இனியாவது அவனைப் பார்த்து கத்துக்கோ” என்று எப்போதாவது கூறியிருப்போம். இதில், ‘அவனைப் பார்த்து கத்துக்கோ’ என்ற அந்த ஒரு வார்த்தை சகோதர யுத்தத்துக்கான விதையை குழந்தைகளின் மனதில் ஊன்றுகிறது. ‘நம்மைவிட அவனை அம்மா உசத்தியாக சொல்லிவிட்டாளே’ என்ற பொறாமை கோபமாக மாறி சகோதரர்களுடன் சண்டையிட தூண்டுகிறது. எனவே எந்த கட்டத்திலும் ஒரு குழந்தையோடு மற்ற குழந்தையை ஒப்பிடாதீர்கள்.
பொறாமையைப் போலவே அன்புக்கான ஏக்கமும் குழந்தைகளைப் பிரிக்கும். ‘பெற்றோர்களிடம் இருந்து நமக்கு முழுமையாக கிடைக்கவேண்டிய அன்பை சகோதரனோ சகோதரியோ தட்டிப் பறிக்கிறார்களோ என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் கொஞ்சம்கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுடனும் குறிப்பிட்ட நேரத்தை செலவு செய்து அனைவரும் தங்களுக்கு முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணரவைக்க வேண்டும்.
பொதுவாக வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் வயதும் வித்தியாசமான இருக்கும். வயதுக்கு ஏற்ப அவர்களின் தேவைகளும் வித்தியாசப்படும். சிறிய குழந்தைக்கு கார்ட்டூன் சேனல் பிடிக்கும், அதே நேரத்தில் வயதில் மூத்த குழந்தைக்கோ விளையாட்டுச் சேனலில் கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். வீட்டில் இருக்கும் ஒரே டிவியில் எதைப் பார்ப்பது என்ற போட்டியில் அடுத்த மோதல் தொடங்கும்.
இதுபோன்ற சூழல்களில் இருவரின் மனதும் புண்படாதவாறு பெற்றோர்கள் செயல்பட வேண்டும். அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தலாம். இளைய மகனுக்கோ, மகளுக்கோ மாலை 6 மணியில் இருந்து 8 மணிவரை டிவி பார்க்கும் உரிமையை வழங்கலாம். அந்த நேரத்தில் மூத்த குழந்தை படிக்க வேண்டும். 8 மணிக்கு பிறகு இளையவர்கள் சாப்பிட்டு தூங்கச் செல்லவேண்டும். அந்த நேரத்தில் மூத்த குழந்தை டிவி பார்க்கலாம் என்ற விதியை உருவாக்குங்கள். அதேபோல் சனிக்கிழமை ஒருவர் ப்ளே ஸ்டேஷனைப் பயன்படுத்தினால், ஞாயிற்றுக்கிழமை அதன் உரிமையை மற்றவருக்கு வழங்க வேண்டும். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இருவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் இளைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை பெரிய குழந்தைகளிடம் விட்டு விடுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ, சகோதர சண்டைக்கு இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. இதனால் மூத்த குழந்தைகள் மனதில், “நானென்ன அவனுக்கு காவல்காரனா’ என்ற எண்ணம் தோன்ற, சிறியவர்களுக்கு ‘நான் என்ன அண்ணனின் அடிமையா?’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். இது நிச்சயம் அவர்களுக்குள் மனக்கசப்புகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்வது நல்லது.
முடிந்தவரை அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் வீட்டில் குடும்ப சகிதமாக பாட்மிண்டன், கேரம் போர்டு, கிரிக்கெட் போன்ற ஆட்டங்களை அடிக்கடி ஆடுங்கள். அப்படி ஆடும்போதெல்லாம் அவர்களை இரு அணிகளில் பிரித்து வைக்காமல், இருவரும் ஒரே அணியில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் விளையாட்டின்போது காட்டும் ஒற்றுமை வாழ்க்கையிலும் தொடரும்.
உங்கள் குழந்தைகள் தவறு செய்தால்கூட அவர்களை உடல்ரீதியாக தண்டிக்காதீர்கள். மென்மையாக அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். பெற்றோரிடம் அதிகம் அடிவாங்கும் குழந்தைகள் மனதில் அதிக வன்முறை உணர்வு தோன்றும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறை உணர்வுகூட சகோதர சண்டைக்கு காரணமாகலாம். எனவே முடிந்தவரை அவர்களை மென்மையாக கையாளுங்கள்.
குழந்தைகளுக்குள் சிறு சண்டைகள் ஏற்பட்டால் முடிந்தவரை அவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும். நாட்டாமை செய்ய யாரும் வராவிட்டால், அவர்களாகவே சிறிது நேரத்துக்கு பிறகு சமாதானமாகி விடுவார்கள். மீறி சண்டை முற்றி, நீங்கள் தலையிடும் நிலை ஏற்பட்டாலும் சண்டையை யார் தொடங்கியது என்பது போன்ற விசாரணைகளில் ஈடுபட வேண்டாம். முடிந்தவரை சமாதானம் செய்வதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும்முன் சில நிமிடங்களாவது, குடும்ப உறுப்பினர்கள் மனம்விட்டு பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அந்த நேரத்தில் அவர்கள் மனதில் பதியவிடுங்கள்.
குழந்தைகள் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் குழந்தைகளும் செய்வார்கள். எனவே வீட்டில் சண்டையில்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டுமானால், முதலில் நாம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். அம்மாவும் - அப்பாவும் தொட்டதற்கெல்லாம் சண்டை பிடிப்பதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்குள், சண்டை போடும் மனோபாவம் வளரும். இதனால் நாம் தப்பான ஒரு ரோல் மாடலாகி குழந்தைகளை சண்டையிட தூண்டலாம். அதனால் முடிந்தவரை பெற்றோர்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கோபப்பட வேண்டிய நேரத்தில்கூட நாம் அமைதியாக இருந்தால் குழந்தைகளுக்கும் நம் மீது மரியாதை பிறக்கும். அந்த நேரத்தில் அவர்களை அழைத்து, கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். விட்டுக்கொடுத்தலில் இருக்கும் நன்மையைச் சொல்லி புரியவையுங்கள். இவற்றையெல்லாம் செய்தால் நிச்சயம் உங்கள் இல்லம் அமைதிப் பூங்காவாக மாறும்.

தீபா கர்மகாரின் ஓராண்டு போராட்டம்