Powered By Blogger

Sunday, July 22, 2018

வெறுங்கையோடு திரும்பிய மெஸ்ஸி




கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா   அணிகள் தோற்றுவிட்டு, வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால் எப்படி இருக்கும்? அதே போன்ற நிலையில் இருக்கிறது உலகக் கோப்பை கால்பந்து. சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதியைக்கூட எட்டாத நிலையில், பெல்ஜியம், ரஷ்யா  அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி  கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.
அணிகளின் நிலைதான் இப்படியென்றால், இந்த உலகக் கோப்பையின் கதாநாயகனாக வர்ணிக்கப்பட்ட அர்ஜென்டினா வீரர்  லயோனல் மெஸ்ஸியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.  உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5 முறை வென்றவர்,  அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்களை அடித்தவர்,  கிளப் கால்பந்தில் நூற்றுக்கணக்கான  கோல்களைக் குவித்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட மெஸ்ஸி, இம்முறை  கோப்பையை சொந்தமாக்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தின் மோசமான க்ளைமேக்ஸைப் போல இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் இமேஜ் தகர்ந்து போனது.
ஐஸ்லாந்து அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 12 யார்டுகள் (36 அடிகள்) தூரத்தில் இருந்து அடிக்கக்கூடிய பெனாலிடி கிக்கையே கோலாக மாற்ற முடியாமல் மெஸ்ஸி திணற, அர்ஜென்டினா ஆடிப்போனது.  முதல் சறுக்கலில் இருந்து அவர் சுதாரித்து எழுவதற்குள், 2-வது சுற்றுப் போட்டியில் பிரான்ஸிடம் பரிதாபமாகத் தோற்றது.  கோல்மழை பொழிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி, வெறும் ஒரு கோல் மட்டும் அடித்து கால் உடைந்தவரைப்போல் சொந்த ஊர் திரும்பினார்.  ஆடம்பரமாக வழியனுப்பி வைக்கப்பட்டவர் ஊரறியாமல் சொந்த ஊர் சேர்ந்தார்.     பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்காமல் வீட்டுக்கு திரும்பினார்.
அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் மாற, அர்ஜென்டினா ரசிகர்களே மெஸ்ஸியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  “அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால் பார்சிலோனா கிளப்புக்காக உயிரைக் கொடுத்து ஆடும் மெஸ்ஸி, அதில் பாதி ஆற்றலைக்கூட  அர்ஜென்டினாவின்  வெற்றிக்காக பயன்படுத்தியதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.  2005-ம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவுக்காக ஆடிவரும் அவர் ஒரு கோப்பையைக்கூட நாட்டுக்காக வாங்கிக் கொடுக்கவில்லை என்பது அவர்களின் ஆதங்கம். 4 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில்  ஆடியுள்ள அவர், ஒரு முறைகூட நாக் அவுட் சுற்றில் கோல் அடிக்கவில்லை என்பதை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள் அவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, மெஸ்ஸியின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் அவரைக் கைவிடவில்லை. குறிப்பாக அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டிகோ மரடோனாகூட, உலகக் கோப்பை தோல்விக்கு மெஸ்ஸியைவிட அணியின் மற்ற வீரர்களைத்தான் குற்றம் சாட்டியுள்ளார். “மெஸ்ஸி  இல்லாவிட்டால்  எங்கள் அணி மிகவும் சாதாரண அணிதான். 2-வது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீரர்கள் மெஸ்ஸியின் முன்னேற்றத்தை  போராடித் தடுத்தனர்.  அதனால்தான் அர்ஜெண்டினா தோல்வியைத் தழுவியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரடோனாவைப் போலவே மெஸ்ஸியின் மற்ற தீவிர ரசிகர்களின் கருத்தும் இதனை ஒட்டியே அமைந்துள்ளன. “இந்த உலக்கோப்பை தொடரில் எதிரணிகள் அனைத்தும் மெஸ்ஸியை முடக்கிப் போடுவதில் கூடுதல் கவனம் செலுத்தின. அதனால் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. அப்படியும் அவர் தீவிரமாக போராடி கோல் அடிப்பதற்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அதை வீணடித்து விட்டனர்” என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
மெஸ்ஸிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துவரும் நிலையில் அவர்  சர்வதேச கால்பந்தில் இனியும் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  2016-ம் ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா (அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடர்) கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் பெனாலிடி ஷூட் அவுட் முறையில் தோல்வியைத் தழுவியது அர்ஜென்டினா. இதை தாங்கிக்கொள்ள முடியாத மெஸ்ஸி,  சர்வதேச கால்பந்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளால் மீண்டும் அணிக்குள் கால்வைத்தார்.   தகுதிச் சுற்றில் சிறப்பாக ஆடி அர்ஜென்டினாவை உலகக் கோப்பைக்கு தகுதிபெற வைத்தார். இப்போது உலகக் கோப்பையில் மிக மோசமான தோல்வியை அர்ஜென்டினா பெற்ற நிலையில்  சர்வதேச கால்பந்தில் இருந்து விலகும் முடிவை மெஸ்ஸி மீண்டும் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 “மெஸ்ஸிக்கு இப்போது 31 வயதாகிறது. அடுத்த உலகக் கோப்பையில் அவர் ஆடவேண்டுமானால் இன்னும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.  இப்போதுள்ள வேகம் அப்போதும்  தொடருமா என்று  தெரியாது. எனவே நல்ல நிலையில் இருக்கும்போதே அவர் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். கிளப் கால்பந்தில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்” என்று கால்பந்து வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் அவர்கள் கூறும்போது, “அர்ஜென்டினாவுக்காக இதுவரை  8 பயிற்சியாளர்களின் கீழ் மெஸ்ஸி ஆடியுள்ளார். ஆனால் மெஸ்ஸியை மையப் புள்ளியாக வைத்து திட்டம் தீட்டி கோப்பைகளை வெல்ல எந்த பயிற்சியாளராலும் முடியவில்லை. இது மெஸ்ஸியின் தோல்வியல்ல, அர்ஜெண்டினா பயிற்சியாளர்களின் தோல்வி. எனவே இனியும் அந்த அணியில் தொடர்ந்து தனது ஆற்றலை அவர் வீணடிக்கக் கூடாது.கடைசி கட்டத்தில் பார்சிலோனா அணிக்காக மட்டும் ஆடி தனது புகழை நிலைநாட்ட வேண்டும்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். சதா மெஸ்ஸியையே நம்பியிருக்கும் அர்ஜென்டினாவும் இதன் மூலம் மாற்றுத் திட்டத்தை தேடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
அதே நேரத்தில் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தருவதை லட்சியமாக கொண்டுள்ள மெஸ்ஸி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து வரை அணியில் தொடர்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னைச் சுற்றி கேள்விகளும், விமர்சனங்களும் சுற்றிவரும் நிலையில் கடந்த ஞாயிறன்று தனது பார்சிலோனா கிளப்புக்கு  பயிற்சிக்காக சென்றுள்ளார் மெஸ்ஸி.  அவரது அடுத்தகட்ட நகர்வை நோக்கி கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment