விளையாட்டு ரசிகர்களின் கவனமெல்லாம் கால்பந்து போட்டிகளிலேயே இருக்க, சத்தமே இல்லாமல் கடந்த வாரம் துருக்கியில் மெர்சின் நகரில் நடந்த ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலக சாலஞ்ச் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தீபா கர்மகார்.
சாதாரணமாக காலில் ஒரு முள் குத்தினாலே நம்மால் தாங்க முடியாது. 2 நாட்களாவது விந்தி விந்தி நடப்போம். அதில் மூட்டு வலி வேறு வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். நடப்பதையே குறைத்துக் கொள்வோம். ஆனால் ஆண்டீரியர் குரூசியேட் லிகமென்ட் (anterior cruciate ligament) என்ற முழங்காலில் தசைநார் கிழிந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வலது முட்டியில் அறுவைச் சிகிச்சையும் செய்த நிலையில் இந்த தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு வாங்கித் தந்திருக்கிறார் தீபா. இதற்காக அவர் சந்தித்த போராட்டம் கொஞ்சமல்ல.
2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும், இந்திய விளையாட்டு ரசிகர்களின் செல்ல வீராங்கனையாய் உருவெடுத்த தீபாவுக்கு, 2017-ம் ஆண்டு ஒரு இருண்ட காலம். ஒலிம்பிக்கில் தவற விட்ட பதக்கத்தை அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் தீவிரமாக பயிற்சி செய்துகொண்டு இருந்த அவருக்கு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வலது முழங்காலில் லேசாக வலி எடுக்கத் தொடங்கியது. சுளுக்கு ஏதாவது பிடித்திருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பத்தில் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார் தீபா. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வலி அதிகமாகிக்கொண்டே சென்றது. டாக்டர்களைச் சந்தித்தபோது, அவருக்கு முழங்காலில் தசைநார் கிழிந்திருப்பதாகவும், அதைச் சரிசெய்ய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயம் என்றும் கூறினார்கள்.
கால்களை நம்பியிருக்கும் விளையாட்டு, ஜிம்னாஸ்டிக். அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டால் மீண்டும் ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் தீபாவுக்கு முதலில் எழுந்தது. ஆனால் பயிற்சியாளர்களும் டாக்டர்களும் கொடுத்த நம்பிக்கையால் கடந்த ஏப்ரல் மாதம் துணிந்து அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் தீபா. இந்த அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த தீபாவை அனைவரும் பரிதாபமாகப் பார்த்தார்கள். ‘சிரமமாக இருந்தால் ஒரு சக்கர நாற்காலியில் போய் விருதை வாங்கிக்கொள்’ என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் ஜிம்னாஸ்டிக் அரங்கில் துள்ளிக் குதித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தான், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து விருது வாங்கும் படம் பத்திரிகைகளில் வெளியாவதை தீபா விரும்பவில்லை. நடந்து சென்றே விருதை வாங்குவதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டு விருதைப் பெற்றார்.
“அன்றைய தினம் நான் கஷ்டப்பட்டு நடந்து சென்றதைப் பார்த்து பலரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, என் நிலையைப் பார்த்து மிகவும் வருந்தினார். என்னை பரிவோடு விசாரித்த அவர், இந்த இக்கட்டான நிலையில் இருந்து என்னால் மீள முடியும் என்று நம்பிக்கை அளித்தார். அவரைப்போல் பலரும் எனக்கு ஆறுதல் கூறினர். இத்தனை ஆதரவு இருந்ததைப் பார்த்ததும், எனக்கு தெம்பு வந்தது. மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, ஜிம்னாஸ்டிக் உலகில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று இதைப்பற்றி கூறுகிறார் தீபா கர்மகார்.
மீண்டு வரவேண்டும் என்ற உறுதி தீபாவின் மனதில் இருந்தாலும், ஆரம்பத்தில் அவரால் காலை மடக்கக்கூட முடியவில்லை. துள்ளிக் குதித்து விளையாடியவர் குனியக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதை நினைத்து கண்ணீர் சிந்தினார். இருப்பினும் இந்த நிலையை எதிர்த்து போராடி வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியை அவர் கைவிடவில்லை. பிசியோதெரபிஸ்டின் உதவியால் மைதானத்தில் படுத்து முதலில் கால்களை வளைக்க பயிற்சி எடுத்தார். ஆரம்பத்தில் அது கஷ்டமாக இருந்தபோதிலும் போகப் போக கால்கள் அவர் சொன்ன பேச்சைக் கேட்டன. முதல் நாளில் எந்த அளவுக்கு கால்களை வளைக்க முடிகிறதோ, அடுத்த நாள் அதைவிட கொஞ்சம் அதிகமாக வளைப்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.
இடைப்பட்ட காலத்தில் காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பியன்சிப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டி என பல போட்டிகள் தீபா பங்கேற்காமலேயே கடந்து போயின. இதைப்பற்றி கவலைப்பட்டாலும், தான் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயிற்சி பெற்றுள்ளார் தீபா.
இதைப்பற்றி கூறும் அவர், “ காலில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த ஆண்டு பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இழந்தேன். இந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தால் எனக்கு நிச்சயம் பதக்கம் கிடைத்திருக்கும். ஆனால் எல்லாமே தள்ளிப்போனது. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என் பயிற்சியாளருடன் சேர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போதெல்லாம் அடுத்த முறை ஏதாவது போட்டியில் பங்கேற்றால் கூட்டத்தோடு ஒருவராகச் செல்லாமல், நிச்சயம் பதக்கம் வெல்லும் வீராங்கனையாகச் செல்லவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அந்த வெறிதான் இன்று பதக்கமாக மின்னுகிறது” என்கிறார் தீபா.
உலக சாலஞ்ச் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள அவரின் அடுத்த லட்சியமாக அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டி உள்ளது. “சீனா, ஜப்பான் போன்ற நாட்டு வீராங்கனைகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கட்டும் சவாலாக இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். இருப்பினும் அவர்களின் சவாலை எதிர்கொண்டு பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று உறுதியாக சொல்கிறார் தீபா.
எத்தனையோ சவால்களை வென்ற அவர், இந்தச் சவாலையும் நிச்சயம் கடப்பார் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment