1892-ம் ஆண்டு, ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டை ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், அக்கல்லூரியில் மாணவராக இருந்தார் வில்லியம் ஜி.மோர்கன். மற்ற மாணவர்கள் எல்லோரும் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட, மோர்கனுக்கு அதில் அதிக விருப்பம் இல்லாமல் இருந்தது. இவ்விளையாட்டில் மாணவர்கள் பந்தை கடத்திச் செல்லும் சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலும், இவ்விளையாட்டை ஆட மாணவர்கள் அதிக ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியிருந்ததாலும், கூடைப்பந்து ஆட்டத்தை அவர் விரும்பவில்லை. மாணவர்கள் அதிக அளவில் ஆற்றலை செலவழிக்காமல், அதே நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சிக்கு உதவும் வகையில் ஒரு விளையாட்டை உருவாக்க விரும்பினார்.
பின்னர் அதே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராக சேர்ந்ததும், உள் விளையாட்டு அரங்கில் ஆடும் புதிய விளையாட்டை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தினார். அப்படி நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால். கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து, டென்னிஸ் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வலை, கைப்பந்து விளையாட்டில் இருந்து கைகளைப் பயன்படுத்தும் முறை மற்றும் பேஸ்பால் விளையாட்டில் இருந்து சில விதிகள் என பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கி, அவற்றை ஒன்றாக கலந்து 1895-ம் ஆண்டில் அவர் வாலிபால் விளையாட்டை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் ‘மிண்டோனெட்’ என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டு, மிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும், ஒய்எம்சிஏ அங்கத்தினரிடமும் பிரபலமடைந்தது. பின்னாளில் ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர். ஆல்பிரட் ஹல்ஸ்டெட், இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால்’ என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் இவ்விளையாட்டில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் இல்லை. வலையில் இருபுறமும் ஆடும் அணிகளில் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலைதான் இருந்தது. இதனால் இவ்விளையாட்டை ஒரே நேரத்தில் பலரும் ஆடினார்கள்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வந்த வாலிபால், 1913-ம் ஆண்டில் ஆசியாவுக்குள் அடியெடுத்து வைத்தது. தொடக்கத்தில் இங்கு நடந்த வாலிபால் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 16 வீரர்கள் இடம்பெற்றனர். 1916-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வாலிபால் போட்டிகள் தொடங்கியபோதிலும், இந்தியாவில் 1951-ம் ஆண்டு இந்திய வாலிபால் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட பிறகே இந்த ஆட்டம் பிரபலமடைந்தது.
திருத்தப்பட்ட விதிகளின் கீழ் வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம். இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது வெளியில் உள்ள உபரி வீரர்களை மாற்று வீரர்களாக களத்தில் இறக்கலாம். வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும் முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இரு அணிகளும் தலா ஒரு செட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் 15 புள்ளிகளைக் கொண்ட 3-வது செட் போட்டி நடத்தப்படும்.
1964-ம் ஆண்டுமுதல் வாலிபால் விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் ஆடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகள் இப்போட்டியில் அதிக முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.