பெண்கள் கல்வி கற்பது இன்றைக்கு வேண்டுமென்றால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகள் மிகுந்த 19-ம் நூற்றாண்டில் இது மிகவும் கடினமான காரியம். இந்த காலகட்டத்திலேயே மருத்துவம் படித்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்தி கோபால் ஜோஷி.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே நகரில், வசதியான குடும்பத்தில் 1865-ம் ஆண்டு பிறந்தவர் யமுனா. அவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளனர். ஆனால் ஆங்கிலேய அரசு விதித்த கடுமையான வரிகளால், கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் செல்வத்தை இழந்த யமுனாவின் குடும்பம், அவர் பிறந்த சில ஆண்டுகளேயே ஏழ்மை நிலையை எட்டியது. இந்நிலையில் யமுனாவுக்கு 9 வயதாக இருந்தபோது, அவரைவிட 21 வயது மூத்தவரான கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அக்காலத்தில் திருமணத்துக்கு பிறகு பெண்களின் பெயரை மாற்றும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்தின்படி யமுனாவின் பெயர் ஆனந்தி கோபால் ஜோஷி என்று மாற்றப்பட்டது.
தானே நகரில் இருந்த தபால் ஆபீஸில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார் கோபால் ஜோஷி. ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்தவரான கோபால் ஜோஷி, தன் புது மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். ஆனந்திக்கு படிப்பில் அதிக ஆசை இருப்பதை அறிந்த கோபால் ஜோஷி, அவரை நன்றாகப் படிக்கவைத்தார்.
ஆனந்திக்கு 14 வயதில் ஒரு குழந்தை பிறந்துள்ளது., ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நோயுற்ற காரணத்தால், பிறந்த 10 நாட்களிலேயே அந்த குழந்தை இறந்துள்ளது. குழந்தையை இழந்த ஆனந்தியும், அவரது கணவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் தங்கள் குழந்தை பிழைத்திருக்குமே என்று சொல்லிச் சொல்லி அழுது தீர்த்தனர்.
இந்த சமயத்தில் ஆனந்தியின் மனதில் ஒரு ஆசை எழுந்துள்ளது. தனக்கு நேர்ந்ததைப் போல் மற்றவர்களுக்கு நேராமல் இருக்க, தானே ஒரு டாக்டராக வேண்டும் என்பதே அந்த ஆசை. இந்த ஆசையை தயக்கத்துடன் தன் கணவரிடம் கூறியுள்ளார் ஆனந்தி.
மனைவியின் விருப்பத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவரது தோளை ஆதரவாகப் பற்றியுள்ளார் கோபால் ஜோஷி. “உனக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதற்கு தேவையான தகுதி உனக்கு உள்ளது என்று நம்பினால் மேற்கொண்டு படி. உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபால் ஜோஷி. அத்துடன் தன் மனைவி டாக்டருக்கு படிக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைக்க திட்டமிட்ட கோபால், அதற்கு உதவுமாறு கூறி அமெரிக்கன் மெஷினரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதிக்க, மனைவியை ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது உறவினர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட நம் சமூகத்தில் ஆண்களே கடல்தாண்டி போகக்கூடாது என்று கூறுவார்கள். இந்த சூழலில் பெண்ணான உன் மனைவியை எப்படி கடல் கடந்து அனுப்பலாம்” என்று பலரும் கோபால் ஜோஷியை எதிர்த்துள்ளனர். ஆனால் இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பினார் கோபால் ஜோஷி. அவரும் கனவுகளை சுமந்தபடி கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் புறப்பட்டு சென்றார் ஆனந்தி.
அமெரிக்காவுக்கு சென்ற ஆனந்திக்கு, பென்ஸில்வேனியா நகரில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இருந்த காலகட்டத்திலேயே அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் ஆனந்தி. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள குளிர்ச்சியான சீதோஷண நிலை அவரது உடல்நிலையை மேலும் பாதித்தது. அங்கு அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் படிப்பை அவர் கைவிடவில்லை. நோயுடன் போராடியவாறே அவர் மருத்துவப் படிப்பை முடித்தார்.
இந்தியாவைச் சேர்த்த பெண் ஒருவர் முதன்முதலாக மருத்துவப் படிப்பை முடித்தது அந்நாளில் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆனந்தியை பாராட்டி, பல்வேறு பத்திரிகைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. ஆனந்தியைப் பற்றியும், அவரது சாதனையைப் பற்றியும் கேள்விப்பட்ட விக்டோரியா மகாராணி, பால கங்காதர திலகர் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அமெரிக்காவில் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில் 1886-ம் ஆண்டு, ஆனந்தி இந்தியாவுக்கு திரும்பினார். துறைமுகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஆனந்திக்கு கோலாப்பூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இந்த மருத்துவமனையில் சேர்ந்து ஏராளமான இந்தியர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆர்வமாக இருந்தார் ஆனந்தி. ஆனால் இந்த சமயத்தில்தான் விதி விளையாடியது.
ஏற்கெனவே காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்தி, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிறிது நாட்களிலேயே மேலும் மோசமாக பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தனது 22-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்னதாக அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் சிந்தியது. இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் காசநோய் காரணமாக இளம் வயதிலேயே, தன் கனவை நனவாக்க முடியாமல் அவர் உயிரிழந்தார்.
ஆனந்தி கோபால் ஜோஷி இளம் வயதில் மறைந்தாலும், ஏராளமான இந்தியப் பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக விளங்கினார். அவரைப் பின்பற்றி பலர் மருத்துவத் துறையில் நுழைந்து சாதனை படைத்துள்ளனர்.
வாழ்க்கைப் பாதை
இந்தியாவின் முதல் பெண் டாக்டரான ஆனந்தி கோபால் ஜோஷி, 1865-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பிறந்தார். 1883-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கு மருத்துவம் படித்து 1886-ல் இந்தியாவுக்கு திரும்பினார். ஏழைகளுக்கு இளம் இலவசமாக மருத்துவம் பார்ப்பதை லட்சியமாக கொண்டிருந்த ஆனந்தி, அது நிறைவேறாமலேயே தனது 21-வது வயதில் காலமானார். இந்தியாவில் காலமான அவரது அஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வந்துள்ளது. மகாராஷ்டிர அரசு இவரது பெயரில் பெல்லோஷிப் வழங்கி வருகிறது.
No comments:
Post a Comment