Powered By Blogger

Tuesday, October 27, 2020

விளையாட்டாய் சில கதைகள்

 

22-10-2020

10 நாட்கள் நீடித்த மெகா கிரிக்கெட் டெஸ்ட்

 கிரிக்கெட் போட்டிகளின் மைக்ரோ வடிவமான டி20 கிரிக்கெட் போட்டிகளை ஐபிஎல் வடிவில் இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பரபரப்பான இந்த  காலகட்டத்தில் 5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க பலருக்கும் பொறுமை இல்லை. ஆனால் 1939-ம் ஆண்டு 10 நாட்களுக்கு நீடித்த டெஸ்ட் போட்டி ஒன்று நடந்திருக்கிறது. உலகிலேயே நீண்ட நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதியுள்ளன.

அந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளை  குறிப்பிட்ட நாட்களில் முடிக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு அணி வெற்றி பெறும்வரை ஆட்டம் தொடரும். இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி, 1939-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 530 ரன்களையும் இங்கிலாந்து 316 ரன்களையும் எடுத்தது. அடுத்த இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 481 ரன்களைச் சேர்க்க, வெற்றி பெற 696 ரன்களை எடுக்கவேண்டிய நிலையில் இங்கிலாந்து ஆடவந்தது. இங்கிலாந்து வீரர்கள் பொறுமையாயாயா...க ஆடிக்கொண்டே போக, போட்டி 10-வது நாளைத் தொட்டது. அன்றைய தினத்தின் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 654 ரன்களை எடுத்திருந்தது.

போட்டி 11-வது நாள் தொடர்ந்தாலும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பலின் கேப்டனுக்கு பொறுமையில்லை. உடனே வராவிட்டால் கப்பல் புறப்பட்டு விடும் என்று அவர் மிரட்ட, வேறு வழியின்றி போட்டி டிராவில் முடிக்கப்பட்டது. வெற்றிக்கு வெறும் 42 ரன்களே தேவை என்பதால், இங்கிலாந்து வீரர்கள் அரைமனதுடன் இங்கிலாந்து திரும்பினர்.  இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் எட்ரிச் அதிகபட்சமாக 219 ரன்களைக் குவித்தார்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------

23-10-2020 

தந்தைக்கு கொடுத்த வாக்கு

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, ரொனால்டினோ என்று கால்பத்து உலகில் இப்போது ஏராளமான ஹீரோக்கள் இருக்கலாம். ஆனால் கடந்த நூற்றாண்டின் கால்பந்து  ஹீரோ பீலேதான். கிரிக்கெட்டுக்கு பிராட்மேன் எப்படியோ, அப்படித்தான் கால்பந்து உலகின் பிதாமகனாக பீலே கருதப்படுகிறார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து சக்ரவர்த்தியான பீலே, முதல்தர போட்டிகளில் அடித்த கோல்களின்  எண்ணிக்கை 1,282.  கால்பந்து உலகை கோல்மழையால் நனையவைத்த பீலேவின் பிறந்தநாள் இன்று (23-10-1940).

 

பீலேவைப் போலவே அவரது தந்தை டான் டின்ஹோவும் ஒரு கால்பந்து வீரர்தான். பிரேசில் நாட்டில் பல கிளப்புகளுக்காக ஆடியுள்ள அவர், தனது மகனும் தன்னைப் போலவே ஒரு கால்பந்து வீரனாக உருவெடுக்க வேண்டும் என்ரு விரும்பி, அவருக்கு பயிற்சி கொடுத்தார்.  ஒரு போட்டியில் ஆடும்போது டின்ஹோவின் கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்குகூட செல்லமுடியாத நிலை வர, பீலேவின் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.

தங்கள் குடும்பம் கஷ்டப்படுவதற்கே கால்பந்துதான் காரணம் என்று கருதிய பீலேவின் தாயார், அவர் கால்பந்து ஆடுவதற்கு தடை விதித்தார். ஆனால் அதையும் மீறி தந்தை கொடுத்த உற்சாகத்தால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்தார் பீலே. 1950-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பராகுவே அணியிடம் பிரேசில் தோற்றபோது, பீலேவின் தந்தை கதறி அழுதுள்ளார். அப்போது அவரைத் தேற்றிய பீலே, “கவலைப்படாதீர்கள் அப்பா...  நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை வாங்கித் தருவேன்” என்று கூறியுள்ளார்.

தந்தைக்கு கொடுத்த வாக்குப்படியே 1958, 1962 மற்றும் 1970 ஆண்டுகளில் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தார் பீலே. உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்காக அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 12.

 

--------------------------------------------------------------------------------------------------------------

24-10-2020 

 சைக்கிள் திருட்டும் முகமது அலியின் குத்தும்

 

குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் முகமது அலி. தான் பங்கேற்ற 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56 முறை வெற்றிகளைக் குவித்த முகமது அலி,   இந்த அளவுக்கு உயர முக்கிய காரணம்  சிறுவயதில் அவரது சைக்கிள் திருடுபோனதுதான்.

 

முகமது அலியின் இயற்பெயர்  காஸியஸ் மார்செலஸ் கிளே. தனது 12-வது வயது வரை சண்டை என்றால் என்னவென்றே தெரியாத அமைதியான ஒரு சிறுவனாகத்தான் காஸியஸ் கிளே இருந்துள்ளார். அந்த வயதில் கிளேவுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக அவரது சைக்கிள் இருந்துள்ளது. ஓய்வு நேரங்களில் தனக்கு பிடித்தமான சைக்கிளில் ஊர் சுற்றுவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழலில் ஒரு நாள் கிளேவின் சைக்கிள் திருடுபோனது.

 

சிறுவனான கிளேவால் இதை தாங்க முடியவில்லை. இந்தச் சூழலில்தான் தனது குடியிருப்பில் ஜோ மார்டின் என்ற போலீஸ்காரர் வசிப்பது அவருக்கு தெரியவந்தது. அவரிடம் சென்ற கிளே, தனது சைக்கிளைத் திருடியவனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார். அவனை கண்டுபிடித்தால் என்ன செய்வாய் என்று ஜோ மார்டின் கேட்க, கன்னத்தில் ஓங்கி அறைவேன் என்று கிளே கூறியுள்ளார்.

 

திருடனை அடிக்க வேண்டுமானால் முதலில் உன் உடலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீ விரும்பினால் என்னுடைய குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் சேரலாம்” என்று கூறி அழைத்துச் சென்ற ஜோ மார்டின், அவருக்கு குத்துச்சண்டையில் பயிற்சியளிக்க தொடங்கினார். அவருக்கும் குத்துச்சண்டையில் ஆர்வம் பிறந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்றவர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னாளில் கிளேவுக்கு அவர் தொலைத்த சைக்கிள் கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் தொலைந்துபோன சைக்கிளால் கிளே உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக புகழ்பெற்றார்.

 

-----------------------------------------------------------------------------------------------

25-10-2020 

அக்விப் ஜாவித்திடன் சரணடைந்த இந்தியா

இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த நாட்களை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் தலைகுனிய வைத்த நாட்களையும் நம்மால் அத்தனை சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அப்படி தலைகுனிவுக்கு ஆளான நாட்களில் ஒன்றுதான் அக்டோபர் 25, 1991. கிரிக்கெட்டில் இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானிடம் இந்திய அணி மரண அடியை வாங்கிய நாள் இது.

2000-க்கு முன்புவரை ஷார்ஜா நகரில் அடிக்கடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் 1991-ம் ஆண்டில் நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றன. அக்டோபர் 25-ம் தேதி, இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.  முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. அடுத்தது இந்தியாவின் முறை.

 

பாகிஸ்தான் அணியில் அப்போது இம்ரான் கான், வாசிம் அக்ரம், வகார் யூனுஸ் ஆகிய 3 பேர்தான் புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களாய் இருந்தனர். இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களை அடிப்பது பற்றியே திட்டமிட்டு வர, அன்றைய தினம் புதுப் புயலாய் இந்திய அணியைத் தாக்கினார் அக்விப் ஜாவித்.

 

ஒரே ஓவரில் அடுத்தடுத்த 3 பந்துகளில் ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர் என்று முன்னணி வீரர்களை அவர் வீழ்த்த, இந்தியா நிலைகுலைந்தது. சஞ்சய் மஞ்சரேக்கர் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 52 ரன்களைச் சேர்க்க, தட்டுத் தடுமாறி 190 ரன்களில் ஆட்டம் இழந்தது இந்தியா.  10 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அக்விப் ஜாவித், ஒரு ஹாட்ரிக்குடன்  7 விக்கெட்டுகளைக் கொய்து பாகிஸ்தானின் ஹீரோவாக மாறினார். இன்றைய நாள்வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான மிகச்சிறந்த பந்துவீச்சாக இது கருதப்படுகிறது.

 

-------------------------------------------------------------

 

26-10-2020 

பனிக்காலத்தால் உருவான கூடைப்பந்து

கனடா நாட்டில் பிறந்து 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்  உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் நிஸ்மித்.  ஸ்பிரிங்பீல்ட் என்ற கல்லூரியில் பணியாற்றிய அவர், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் தினமும் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.  

 பனிக்காலங்களின்போது  வெளியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வராமல் இருந்தனர். இப்படியே இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டார் நிஸ்மித்.  இந்நிலையில் மானவர்கள் உள்லரங்கிலேயே ஆடும் வகையில் அவர் உருவாக்கிய விளையாட்டுதான் கூடைப்பந்து.

 

ஒரு கூடையை எடுத்து, அதன் அடிப்பாகத்தை வெட்டியவர், அதை கல்லூரி விடுதியின் பால்கனியில் மாட்டினார். அந்த கூடைக்குள் துல்லியமாக பந்தை நுழைக்கும் வீரர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். காலப்போக்கில் மாணவர்களுக்கு இதில் ஆர்வம் வர, அதை 2 அணிகள் ஆடும் ஆட்டமாக மாற்றியுள்ளார் நிஸ்மித். இதற்காக செவ்வக வடிவில் ஒரு மைதானத்தை அமைத்து அதன் 2 புறங்களிலும் தலா ஒரு கூடையைத் தொங்கவிட்டார். மைதானத்தில் மோதும் 2 அணிகளும், எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக்கு சென்று அங்குள்ள கூடைக்குள் பந்தை போடுவதை இலக்காக கொண்ட ஆட்டமாக கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கினார்.   இதன்படி 1891-ம் ஆண்டில்   ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் முதல் முறையாக கூடைப்பந்து விளையாடப்பட்டது.

 

 

 

No comments:

Post a Comment