Powered By Blogger

Tuesday, May 1, 2018

நிறைவேறிய அப்பாவின் கனவு


 இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தராமல் பல ஆண்டுகளாக டேக்கா கொடுத்துக்கொண்டிருந்த விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக்ஸ். முரட்டுக்காளையாய் இந்தியாவுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த அந்த விளையாட்டையும் நாம் இப்போது அடக்கிவிட்டோம். மெல்பர்ன் நகரில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சரித்திரம் படைத்தது. பெண்களுக்கான தனிநபர் வால்ட் பிரிவில் அந்த பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் ஹைதராபாதைச் சேர்ந்த அருணா ரெட்டி.
அருணா ரெட்டியின் இந்த வெற்றியில் அவரது அப்பா நாராயண ரெட்டியின் பங்கு மிகவும் அதிகம். அக்கவுண்டண்டாக இருந்த அவருக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகம். ஆனால் சிறு வயதில் யாரும் அவரை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவில்லை. அதனால் தனக்குப் பிறக்கும் மகனை ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தை பிறக்கவில்லை. 2 மகள்கள் பிறந்தார்கள். அதற்காக அவர் கவலைப்படவில்லை. மகன் இல்லாவிட்டால் என்ன? என் மகள்களில் ஒருவரை மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக்கி காட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதன்படி தன் மகள்களில் ஒருவரான அருணா ரெட்டியை இளம் வயதிலேயே கராத்தேவில் சேர்த்தார்.
“பெண் குழந்தைக்கு கராத்தே எதற்கு” என்று நண்பர்கள் சிலர் கேள்வி கேட்டபோதும் அவர் சட்டை செய்யவில்லை. தன் மகளால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் கராத்தே பயிற்சியின்போது, அவரது உடல் மொழியைப் பார்த்த நாராயண ரெட்டிக்கு, அந்த விளையாட்டை விட ஜிம்னாஸ்டிக்கில் தன் மகளால் அதிகம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2002-ம் ஆண்டில் யுகேஜி படிக்கும் தன் மகள் அருணாவை, அவர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் ஈடுபடுத்தினார்.
கராத்தேவை விட ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் அருணாவை ஈடுபடுத்துவதில் நாராயண ரெட்டிக்கு அதிக எதிர்ப்பு இருந்தது. அதிலும் அருணாவின் அம்மா சுபத்ராவும், அக்கா பவானியுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் பிள்ளைக்கு இத்தனை கடுமையான உடற்பயிற்சிகளைக் கொண்ட விளையாட்டு தேவைதானா என்று அருணாவின் அம்மா கேள்வி எழுப்பினார். ஆனால் நாராயண ரெட்டி எதற்கும் சளைக்கவில்லை. தன் மகளை ஜிம்னாஸ்டிக் வீரங்கனையாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்தார்.
ஹைதராபாதில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் சுவர்ணலதா என்பவர் அருணாவுக்கு முதலில் பயிற்சி கொடுத்தார். பின்னர் ரவீந்தர், பிர்ஜ் மோகன் ஆகியோர் அவரை மேலும் மெருகூட்டினர். அருணா ரெட்டியின் வீட்டில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் பயிற்சி மையம் இருந்தது. தினமும் அதிகாலையில் பஸ் பிடித்து பயிற்சி மையத்துக்கு போய் திரும்பி வந்து பின்னர் மீண்டும் பள்ளிக்கு கிளம்புவதும், மலையில் மீண்டும் பள்ளி விட்டு வந்ததும் பயிற்சி மையத்துக்கு செல்வதும் அருணா ரெட்டிக்கு அலுப்பைத் தந்தது. “இந்த விளையாட்டெல்லாம் வேண்டாமே அப்பா’ என்று தன் அப்பாவிடம் கெஞ்சிப் பார்த்தார். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாய் இருந்தார்.
சில ஆண்டுகளிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார் அருணா. இதனால் அவருக்கே இந்த விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமானது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது ஆர்வம் அதிகரித்த நேரத்தில், 2010-ம் ஆண்டில் மாரடைப்பால் நாராயண ரெட்டி காலமானார். இதனால் பயிற்சிக்கு பணமில்லாமல் தவித்தார் அருணா. முதலில் அருணா ஜிம்னாஸ்டிக்ஸில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்திருந்த அவரது அக்கா பவானி ரெட்டி இப்போது தோள் கொடுத்தார். மேற்கொண்டு பயிற்சி பெற தேவையான உதவிகளை செய்தார். 

விறகுக்கட்டை சுமந்தவர் சாதனையை சுமக்கிறார்



இந்தியாவின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் என்றால் அந்த மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. பொதுப்பணித்துறையில் கடைநிலை ஊழியராக இருந்த அவருக்கு 6 குழந்தைகள். இதில் கடைக்குட்டியாகப் பிறந்தவர்தான் மீராபாய் சானு. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கடந்த வாரம் பெண்களுக்கான பளு தூக்குதலில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்.
காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 86 மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ (மொத்தம் 196) எடையைத் தூக்கி சானு புதிய காமன்வெல்த் சாதனையை படைத்தபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் சானுவை நன்கறிந்த உறவினர்களுக்கும் கிராமத்தினருக்கும் அது ஒரு விஷயமே இல்லை. காரணம் 12 வயது சிறுமியாக இருந்தபோதே கிலோக்கணக்கிலான விறகுக் கட்டைகளை தலையில் சுமந்து 2 கிலோமீட்டர் தினமும் நடந்து சென்றவர் மீராபாய் சானு.
“வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று அவள் பெற்றுள்ள வெற்றிக்கு அதுதான் அடிப்படையாக இருந்தது” என்கிறார் மீராபாய் சானுவின் அண்ணன் சனதோம்பா.
தான் உண்டு தன் வறுமையுண்டு என்றிருந்த மீராபாயை பளுதுக்கும் போட்டிக்கு கவர்ந்திழுத்தவர் குஞ்சராணி தேவி. மணிப்பூரைச் சேர்ந்த இவர், பளுதூக்கும் போட்டியில் சாதனைகளைப் படைக்க, அதைப் பார்த்து மீராபாய் சானுவுக்கும் இதே விளையாட்டில் ஆர்வம் பிறந்தது. கால்பந்து வீரரான அவரது அண்ணன் சனதோம்பாவும் அதற்கு ஆதரவளித்தார். ஆனால் பயிற்சி மையமோ அவரது வீட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. இதற்காக தினமும் ரயிலில் பயணிக்க வேண்டி இருந்தது.
தன் ஆரம்ப நாட்களைப் பற்றி கூறும் மீராபாய் சானு, “பயிற்சி மையத்தில் சேர்ந்ததும் நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் சார்ட்டைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்கிறார். ஆனால் இந்த வறுமையால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. மாறாக இது அவரை வீறுகொண்டு எழச் செய்தது. வறுமைக்கும், சக போட்டியாளர்களுக்கும் எதிராக இவர் கடுமையாகப் போராடினார். அந்த போராட்டம் அவரை சாதனைப் படிக்கட்டில் ஏற்றியது.
2011-ம் ஆண்டு சர்வதேச இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உலக அளவில் தடம் பதித்தார். இதைத் தொடர்ந்து சீனியர் லெவலில் முன்னேறிய அவர், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இம்முறை காமன்வெல்த் போட்டிக்கு செல்லும்போதே, கடந்த முறை தான் வாங்கிய பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என்று சூளுரைத்தார். சொன்னபடியே இப்போது தங்கப் பதக்கத்தை கொண்டுவந்து விட்டார். அவரது அடுத்த டார்கெட், வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்வது. அதுவும் நிறைவேற வாழ்த்துவோம்.

கணவரின் தியாகமும் ஹீனா வென்ற தங்கமும்



ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம். பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒவ்வொருவராக தோற்று பின்வாங்கிக்கொண்டே வர, தங்கப் பதக்கத்துக்கான மோதலில் 2 டாக்டர்கள் எஞ்சியிருக்கிறார்கள். ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணரான ஹீனா சித்து. மற்றொருவர் ஆஸ்திரேலியாவின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான லினா கலியபோவிச்.
பரபரப்பான இறுதிக் கட்டத்தில் ஹீனாசித்துவின் கண்கள் பார்வையாளர்கள் வரிசையில் நிற்கும் தன் கணவர் ரோணக் பண்டிட்டைத் தேடுகிறது. ஜில்லென்ற புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி ஹீனா சித்துவை வாழ்த்துகிறார் ரோணக். “இந்த முறை நீ தங்கப் பதக்கத்துடன் புதிய கமன்வெல்த் சாதனையையும் படைக்கப் போகிறாய்” என்று 2 நாட்களுக்கு முன் ரோணக் சொன்னது நினைவில் வர, மிகுந்த தன்னம்பிக்கையுடன் விழியைக் கூர்மையாக்கி டார்கெட்டைக் குறிவைத்து டிரிக்கரை அழுத்துகிறார். சீறிப்பாய்ந்த தோட்டா, துல்லியமாக இலக்கை அடைகிறது. 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், 38 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வெல்கிறார் சித்து. அதுவும் 2 நாட்களுக்கு முன் கணவர் ரோணக் சொன்னதைப் போல் காமன்வெல்த் சாதனையுடன். இதற்கு 2 நாட்கள் முன்புதான் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார் ஹீனா சித்து.
“இந்த வெற்றி எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. என் கணவரும் பயிற்சியாளருமான ரோணக் பண்டிட்டுக்கு இதில் சரிபாதி பங்கு இருக்கிறது” என்று பதக்கம் வென்ற மகிழ்சியில் விழிகளில் கசிந்த நீரைத் துடைத்துக்கொண்டே கூறுகிறார் ஹீனா சித்து. இவை வெறும் வார்த்தைகள் அல்ல. ஹீனாவின் இந்த வெற்றிக்காக ரோணக் செய்த தியாகம் அதிகம். ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார்’ என்பர்கள். ஆனால் ஹீனா சித்துவைப் பொறுத்தவரை அவரது வெற்றிக்கு காரணம் கணவர் ரோணக்.
ஹீனாவின் வாழ்க்கையில் அவர் ரோணக்கை காதலிப்பதற்கு முன்பே துப்பாக்கியைக் காதலித்திருக்கிறார். அவரது மாமா துப்பாக்கி விற்பனை மற்றும் அதை ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வந்ததால், சிறு வயதில் இருந்தே ஹீனாவுக்கு துப்பாக்கி மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பில் படிக்கும்போதே உள்ளூர் போட்டி ஒன்றில் முதல் முறையாகப் பங்கேற்ற ஹீனாவுக்கு, துப்பாக்கி சுடுதலில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
டாக்டர் ஆவதை லட்சியமாகக் கொண்டு தினமும் 14 மணிநேரம் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தவர், மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ரிலாக்ஸ் மட்டுமல்லாமல் அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. மருத்துவ கல்லூரியில் சீட் பெற தனது மதிப்பெண்ணுடன் சேர்த்து விளையாட்டில் பெறும் பதக்கங்களும் உதவும் என்று அவர் கருதியதும் இதற்கு மற்றொரு காரணம்.
இப்படி பல்வேறு காரணங்களுக்காக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டாலும், ஆரம்ப காலம் முதலே வெற்றி தேவதை அவரை அரவணக்கத் தொடங்கினார். 2006-ம் ஆண்டு தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற ஹீனா சித்து அதைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். இதனால் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பிறகும், பல் மருத்துவ நிபுணர் ஆன பிறகும் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று வகை சூடினார். 2009-ம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
2012-ம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட போதுதான் அவர் ரோணக் பண்டிட்டை சந்தித்தார். ஹீனாவுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த உக்ரைன் பயிற்சியாளர்தான் ரோணக்குக்கும் பயிற்சியாளர். ரோணக்கைப் பொறுத்தவரை அவர் அந்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளுக்காக தன்னை பட்டை தீட்டிக் கொள்ள உக்ரைன் பயிற்சியாளரிடம் வந்திருந்தார். வந்த இடத்தில் பயிற்சியுடன் சேர்ந்து ரோணக் - ஹீனா சித்து ஜோடியின் காதலும் வளர்ந்தது.
பயிற்சியாளர் சொல்லிக்கொடுப்பதை விட ரோணக்கின் அருகாமையும், உத்வேக வார்த்தைகளும் ஹீனாவுக்கு அதிக தெம்பைக் கொடுத்தன. தன்னுடன் ரோணக்கும் லண்டன் வரவேண்டும் என்று விரும்பினார். ரோணக்கும் அதைத் தட்டாமல் சொந்த செலவில் லண்டன் சென்று அவருக்கு உற்சாகமூட்டினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஹீனாவல் 12-வது இடத்தையே பெற முடிந்தது. ஆனால் பதக்கம் போனாலும் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
அவர்களின் காதலைத் தெரிந்துகொண்ட ரோணக் பண்டிட்டின் தந்தை அசோக் பண்டிட், திருமணத்துக்கு மகிழ்ச்சியுடன் பச்சைக் கொடி காட்டினார். காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றவரான அசோக் பண்டிட்டுக்கு தனது மருமகளும் ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
லண்டன் ஒலிம்பிக் போட்டி முடிந்து ஓராண்டுக்கு பிறகு ஹீனா - ரோணக்கின் திருமணம் முடிந்தது. இந்த திருமணம் முடிந்ததும் ரோணக் பண்டிட் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். ‘இனி போட்டிகளில் பங்கேற்பதற்காக துப்பாக்கியை தொடுவதில்லை. என் மனைவியை ஒரு பெரிய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆக்குவதே எனது லட்சியம்’ என்பதுதான் அந்த முடிவு. காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற ரோணக்கின் அந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஹீனாவால் ஜெயிக்க முடியாவிட்டல் இருவரது எதிர்காலமும் பாழாகுமே என்று கூறினார்கள்.
ஆனால் ரோணக் எதற்கும் கவலைப்படவில்லை. ஹீனாவுக்கு முழுநேர பயிற்சியாளராகவும், உதவியாளராகவும் மாறினார். வீட்டு வேலைகளில் ஒன்றுகூட அவரை நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார். சதா சர்வ நேரமும் துப்பாக்கி சுடுதலைப் பற்றியே சிந்திக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது பயிற்சியும் தியாகமும் வீண் போகவில்லை இந்த கமன்வெல்த் போட்டியில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஹீனா, பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக முன்னேறி வருகிறார்.
“என் வெற்றிகளுக்கு முழு காரணம் என் கணவர்தான். அவர் இல்லாவிட்டல் எனக்கு வெற்றிகள் கிடையாது. அவரது உதவியுடன் மேலும் பல பதக்கங்களைக் குவிப்பேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஹீனா. நமக்கும் அதுதான் வேண்டும்.