இந்தியாவின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் என்றால் அந்த மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. பொதுப்பணித்துறையில் கடைநிலை ஊழியராக இருந்த அவருக்கு 6 குழந்தைகள். இதில் கடைக்குட்டியாகப் பிறந்தவர்தான் மீராபாய் சானு. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கடந்த வாரம் பெண்களுக்கான பளு தூக்குதலில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்.
காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 86 மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ (மொத்தம் 196) எடையைத் தூக்கி சானு புதிய காமன்வெல்த் சாதனையை படைத்தபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் சானுவை நன்கறிந்த உறவினர்களுக்கும் கிராமத்தினருக்கும் அது ஒரு விஷயமே இல்லை. காரணம் 12 வயது சிறுமியாக இருந்தபோதே கிலோக்கணக்கிலான விறகுக் கட்டைகளை தலையில் சுமந்து 2 கிலோமீட்டர் தினமும் நடந்து சென்றவர் மீராபாய் சானு.
“வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று அவள் பெற்றுள்ள வெற்றிக்கு அதுதான் அடிப்படையாக இருந்தது” என்கிறார் மீராபாய் சானுவின் அண்ணன் சனதோம்பா.
தான் உண்டு தன் வறுமையுண்டு என்றிருந்த மீராபாயை பளுதுக்கும் போட்டிக்கு கவர்ந்திழுத்தவர் குஞ்சராணி தேவி. மணிப்பூரைச் சேர்ந்த இவர், பளுதூக்கும் போட்டியில் சாதனைகளைப் படைக்க, அதைப் பார்த்து மீராபாய் சானுவுக்கும் இதே விளையாட்டில் ஆர்வம் பிறந்தது. கால்பந்து வீரரான அவரது அண்ணன் சனதோம்பாவும் அதற்கு ஆதரவளித்தார். ஆனால் பயிற்சி மையமோ அவரது வீட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. இதற்காக தினமும் ரயிலில் பயணிக்க வேண்டி இருந்தது.
தன் ஆரம்ப நாட்களைப் பற்றி கூறும் மீராபாய் சானு, “பயிற்சி மையத்தில் சேர்ந்ததும் நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் சார்ட்டைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்கிறார். ஆனால் இந்த வறுமையால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. மாறாக இது அவரை வீறுகொண்டு எழச் செய்தது. வறுமைக்கும், சக போட்டியாளர்களுக்கும் எதிராக இவர் கடுமையாகப் போராடினார். அந்த போராட்டம் அவரை சாதனைப் படிக்கட்டில் ஏற்றியது.
2011-ம் ஆண்டு சர்வதேச இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உலக அளவில் தடம் பதித்தார். இதைத் தொடர்ந்து சீனியர் லெவலில் முன்னேறிய அவர், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இம்முறை காமன்வெல்த் போட்டிக்கு செல்லும்போதே, கடந்த முறை தான் வாங்கிய பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என்று சூளுரைத்தார். சொன்னபடியே இப்போது தங்கப் பதக்கத்தை கொண்டுவந்து விட்டார். அவரது அடுத்த டார்கெட், வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்வது. அதுவும் நிறைவேற வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment