இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தராமல் பல ஆண்டுகளாக டேக்கா கொடுத்துக்கொண்டிருந்த விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக்ஸ். முரட்டுக்காளையாய் இந்தியாவுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த அந்த விளையாட்டையும் நாம் இப்போது அடக்கிவிட்டோம். மெல்பர்ன் நகரில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சரித்திரம் படைத்தது. பெண்களுக்கான தனிநபர் வால்ட் பிரிவில் அந்த பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் ஹைதராபாதைச் சேர்ந்த அருணா ரெட்டி.
அருணா ரெட்டியின் இந்த வெற்றியில் அவரது அப்பா நாராயண ரெட்டியின் பங்கு மிகவும் அதிகம். அக்கவுண்டண்டாக இருந்த அவருக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகம். ஆனால் சிறு வயதில் யாரும் அவரை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவில்லை. அதனால் தனக்குப் பிறக்கும் மகனை ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தை பிறக்கவில்லை. 2 மகள்கள் பிறந்தார்கள். அதற்காக அவர் கவலைப்படவில்லை. மகன் இல்லாவிட்டால் என்ன? என் மகள்களில் ஒருவரை மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக்கி காட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதன்படி தன் மகள்களில் ஒருவரான அருணா ரெட்டியை இளம் வயதிலேயே கராத்தேவில் சேர்த்தார்.
“பெண் குழந்தைக்கு கராத்தே எதற்கு” என்று நண்பர்கள் சிலர் கேள்வி கேட்டபோதும் அவர் சட்டை செய்யவில்லை. தன் மகளால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் கராத்தே பயிற்சியின்போது, அவரது உடல் மொழியைப் பார்த்த நாராயண ரெட்டிக்கு, அந்த விளையாட்டை விட ஜிம்னாஸ்டிக்கில் தன் மகளால் அதிகம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2002-ம் ஆண்டில் யுகேஜி படிக்கும் தன் மகள் அருணாவை, அவர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் ஈடுபடுத்தினார்.
கராத்தேவை விட ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் அருணாவை ஈடுபடுத்துவதில் நாராயண ரெட்டிக்கு அதிக எதிர்ப்பு இருந்தது. அதிலும் அருணாவின் அம்மா சுபத்ராவும், அக்கா பவானியுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் பிள்ளைக்கு இத்தனை கடுமையான உடற்பயிற்சிகளைக் கொண்ட விளையாட்டு தேவைதானா என்று அருணாவின் அம்மா கேள்வி எழுப்பினார். ஆனால் நாராயண ரெட்டி எதற்கும் சளைக்கவில்லை. தன் மகளை ஜிம்னாஸ்டிக் வீரங்கனையாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்தார்.
ஹைதராபாதில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் சுவர்ணலதா என்பவர் அருணாவுக்கு முதலில் பயிற்சி கொடுத்தார். பின்னர் ரவீந்தர், பிர்ஜ் மோகன் ஆகியோர் அவரை மேலும் மெருகூட்டினர். அருணா ரெட்டியின் வீட்டில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் பயிற்சி மையம் இருந்தது. தினமும் அதிகாலையில் பஸ் பிடித்து பயிற்சி மையத்துக்கு போய் திரும்பி வந்து பின்னர் மீண்டும் பள்ளிக்கு கிளம்புவதும், மலையில் மீண்டும் பள்ளி விட்டு வந்ததும் பயிற்சி மையத்துக்கு செல்வதும் அருணா ரெட்டிக்கு அலுப்பைத் தந்தது. “இந்த விளையாட்டெல்லாம் வேண்டாமே அப்பா’ என்று தன் அப்பாவிடம் கெஞ்சிப் பார்த்தார். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாய் இருந்தார்.
சில ஆண்டுகளிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார் அருணா. இதனால் அவருக்கே இந்த விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமானது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது ஆர்வம் அதிகரித்த நேரத்தில், 2010-ம் ஆண்டில் மாரடைப்பால் நாராயண ரெட்டி காலமானார். இதனால் பயிற்சிக்கு பணமில்லாமல் தவித்தார் அருணா. முதலில் அருணா ஜிம்னாஸ்டிக்ஸில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்திருந்த அவரது அக்கா பவானி ரெட்டி இப்போது தோள் கொடுத்தார். மேற்கொண்டு பயிற்சி பெற தேவையான உதவிகளை செய்தார்.
No comments:
Post a Comment