மகாபாரதப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டாலும், முக்கிய போட்டி என்னவோ அர்ஜுனனுக்கும் - கர்ணனுக்கும் இடையில்தான் இருந்தது. அதுபோலத்தான் இந்த உலகக் கோப்பையிலும். நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொண்டாலும், போர்ர்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோவுக்கும் - அர்ஜென்டினா வீரர் லயொனல் மெஸ்ஸிக்கும் இடையில்தான் முக்கிய போட்டி நடைபெற்று வருகிறது. தங்களில் சிறந்த வீரர் யார் என்பதை நிரூபிக்க இரு வீரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இந்த இரு வீரர்களில் உலகக் கோப்பையில் முதலில் களத்தில் இறங்கியவர் ரொனால்டோ. முன்னாள் சாம்பியனான பலம்வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக, குறிப்பாக உலகின் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் டேவிட் டீ குயாவுக்கு எதிராக சோச்சி நகரில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ரொனால்டோவை மட்டுமே நம்பி போர்ச்சுக்கல் களம் இறங்கியது. ஆனால் ரொனால்டோவோ கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் இந்த முதல் போட்டியில் பங்கேற்றார். இதற்கு காரணம் அவருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு.
போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான ரொனால்டோ, ஸ்பெயினின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர், முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவர் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் வருமானவரித் துறையுடன் சமரச தீர்வு காண்பதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்த ரொனால்டோ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. (ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள் ஸ்பெயின் அணிக்கு எதிராகவே தனது அணியை வழிநடத்த வேண்டிய நிலை ரொனால்டோவுக்கு. இந்த மனச்சோர்வால் ரொனால்டோ மைதானத்தில் பதறி நிற்பாரோ என்று ரசிகர்கள் கலங்கி நிற்க, அதற்கு கொஞ்சம்கூட இடம் கொடுக்காமல் மைதானத்தில் கால்வைத்த விநாடி முதல் சிறுத்தையாய் சீறிப்பாய்ந்தார். 33 வயதான நிலையிலும் ஒரு இளம் வீரனுக்குரிய வேகத்தில் மைதானமெங்கும் வியாபித்து நின்ற ரொனால்டோ, ‘காலா’ ஸ்டைலில் ‘வேங்கையன் மகனாய்’ ஒற்றை ஆளாக ஸ்பெயினை துவைத்தெடுத்தார்.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்தை துளைத்து சீறிப்பாய்ந்த ரொனால்டோவை, ஸ்பெயினின் நாச்சோ பெர்னாண்டஸ் தடுக்கி விட போர்ச்சுக்கல்லுக்கு பெனாலிடி கார்னர் கிடைத்தது. இதைப் பயன்படுத்தி முதல் கோலை அடித்த ரொனால்டோ, போர்ச்சுக்கல்லுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இந்த கோலை அடித்ததும் தன் தாடையை தடவியவாறே மைதானத்தில் ஓடிய ரொனால்டோ, கால்பந்து உலகின் தற்போதைய ஆடு (GOAT) அதாவது எக்காலத்துக்குமான சிறந்த வீரன் ( GREATEST OF ALL TIME) தான்தான் என்பதை சமிக்ஞை மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ரொனால்டோவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, ஒட்டுமொத்த ஸ்பெயின் அணியும் வரிந்து கட்டிக்கொண்டு ஆடி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தது. இதைத்தொடர்ந்து 44-வது நிமிடத்தில் ஒரு பீல்டு கோல் அடித்து போர்ச்சுக்கல்லை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவந்தார் ரொனால்டோ. ஆனால் அதிரடியான ஸ்பெயின் அணியோ அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 3-2 என முன்னிலை பெற்றது. தனது அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்க மூர்க்கமாய் போராடினார் ரொனால்டோ. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் முன்னேறும்போது, ஸ்பெயின் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். 88-வது நிமிடத்தில் வேகமாய் முன்னேறிய ரொனால்டோவை கோல் எல்லை அருகே ஸ்பெயின் வீரர்கள் தள்ளிவிட 25 யார்ட் (75 அடிகள்) தூரத்தில் இருந்து ஃப்ரீ கிக் அடிக்கும் வாய்ப்பு ரொனால்டோவுக்கு கிடைத்தது.
கோல்கீப்பர் மற்றும் வீரர்களைக் கொண்ட பாதுகாப்புச் சுவரை உடைத்து இம்முறையும் கோல் அடித்த ரொனால்டோ, தனியொருவராய் போராடி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். மேலும் இப்போட்டியில் 3 கோல்களை அடித்ததன் மூலம் தொடர்ந்து 4 உலகக் கோப்பைகளில் கோல்களை அடித்த 4-வது வீரர், உலகக் கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த ஐரோப்பிய வீரர் என்று அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்தார். இந்த போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ரொனால்டோ, “நாங்கள் இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியாளர், அவ்வளவுதான். மற்றபடி நாங்கள் கோப்பையை வெல்வோம் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் எனது அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது லட்சியம்” என்று கூறியுள்ளார்.
ரொனால்டோவின் கதை இப்படி இருக்க அவரது போட்டியாளரான லயோனல் மெஸ்ஸியின் கதை வேறு மாதிரியாகப் போனது. முதல் முறையாக உலகக் கோப்பையில் கலந்துகொள்ளும் ஐஸ்லாந்து அணியை முதல் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் 12 யார்ட் தூரத்தில் இருந்து அடிக்கக்கூடிய பெனாலிடி ஷூட்டை மெஸ்ஸி வீணடிக்க, மிகச்சிறிய அணியுடன் டிரா செய்யவேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு ஏற்பட்டது. இதனால் மெஸ்ஸியின் திறமை குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். “கிளப் கால்பந்தில் சிறப்பாக ஆடும் மெஸ்ஸி, தனது தாய்நாட்டுக்காக எதையும் பெரிதாக சாதிப்பதில்லை” என்பது அவர்களின் புகாராக உள்ளது. ஆனால் மெஸ்ஸியின் ஆதரவாளர்களோ, இது வெறும் ஆரம்பம்தான், போகப் போக மெஸ்ஸி தனது திறமையை நிரூபிப்பார். அர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுக்கொடுப்பார்’ என்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சூற்றில் வெற்றி ரொனால்டோவுக்குதான். தங்கக் காலணிக்கான ரேஸிலும் இப்போதைக்கு அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
No comments:
Post a Comment