Powered By Blogger

Tuesday, December 1, 2020

விளையாட்டாய் சில கதைகள் - நவம்பர் 24 - 27

 நவம்பர் 24

இந்தியாவில் ஹாக்கி தொடங்கிய கதை
-----------------------------------------------------------
கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கவுரவத்தை தேடித்தந்த விளையாட்டு என்று ஹாக்கியைச் சொல்லலாம். ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வாங்கித் தந்த பெருமை ஹாக்கி விளையாட்டுக்கு உண்டு.
உலக அளவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹாக்கி விளையாட்டு தோன்றியதாகவும், இவ்விளையாட்டு முதலில் எகிப்தியர்களால் ஆடப்பட்டதாகவும்  கூறப்பட்டாலும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது ஹாக்கி விளையாட்டு அறிமுகமானது.  ஆரம்பத்தில் இங்கு தங்கியிருந்த இங்கிலாந்து ராணுவ வீரர்கள் பொழுதுபோக்குக்காக ஹாக்கி விளையாட்டை ஆடியுள்ளனர். இதைப் பார்த்த இந்திய இளைஞர்களுக்கும் ஹாக்கி விளையாட ஆசை வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களும் ராணுவ வீரர்களிடம் ஹாக்கி விளையாட்டை கற்றுள்ளனர்.
இந்தியாவின் முதலாவது தொழில் ரீதியிலான ஹாக்கி கிளப் 1885-86-ல் கொல்கத்தாவில் உருவானது. பின்னர்  மும்பை, பஞ்சாப் ஆகிய ஊர்களிலும் ஹாக்கி கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து முதலில் வங்கத்திலும், பின்னர் மும்பை, ஒரிஸா, பிஹார், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஹாக்கி கூட்டமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்குள்ள அணிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடி, தங்கள் ஹாக்கி திறனை மேம்படுத்தியுள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து ஹாக்கி கூட்டமைப்புகளும்    1925-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குவாலியர் நகரில் கூடி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பை தொடங்கியுள்ளன.   இந்தியாவுக்கென்று பொதுவாக ஒரு ஹாக்கி அணியை இந்த கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் அதிகாரபூர்வமான அணி முதல் முறையாக நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப் பயணத்தின்போது, நியூஸிலாந்துக்கு எதிராக 21 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் டிராவில் முடிய 1 போட்டியில் மட்டுமே இந்திய அணி தோற்றது. இத்தொடரில் இந்திய வீரர்கள் அடித்த கோல்களின் எண்ணிக்கை 192.
-----------------------------------------------------------------------------
நவம்பர்  25
பவுன்சரால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்
மக்களை மகிழ்விக்கும்  விஷயங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டி. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின்போது சோகமான சில சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட சோக சம்பவங்களில் ஒன்றுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூஸின் மறைவு.  
ஆஸ்திரேலிய அணியில் தனது 20-வது வயதில் நுழைந்த பிலிப் ஹியூஸ், அந்த அணிக்காக   26 டெஸ்ட் போட்டிகளில் 1,535 ரன்களையும், 25 ஒருநாள் போட்டிகளில் 826 ரன்களையும் குவித்தார்.   இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக அவர் ஆடினார். 2014-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில்  தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங் செய்துகொண்டு இருந்தார்  பிலிப் ஹியூஸ். தொடக்க ஆட்டக்காரராக அவர் அரை சதத்தை கடக்க, அவரை அவுட் ஆக்கும் முயற்சியில் பவுன்சர் பந்து ஒன்றை வீசியுள்ளார் நியூ சவுத் வேல்ஸ் அனியின் வேகப்பந்து வீச்சாளரான  சீன் அபாட்.    எதிர்பாராத வகையில் அந்த பந்து ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது.  அடுத்த கணமே அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு பிறகு (நவம்பர் 27) நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார் பிலிப் ஹியூஸ்.  அவரது மரணம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹியூஸ் அணிந்த 64-ம் எண்கொண்ட ஜெர்ஸிக்கும் ஆஸ்திரேலிய அணி ஓய்வு அளித்தது. ஹியூஸை கவுரவிக்கும் வகையில் அந்த எண் கொண்ட உடையை ஆஸ்திரேலியாவில் இனி எந்த வீரரும் அணிய மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
-----------------------------------
நவம்பர் 26
மெஸ்ஸியை நிராகரித்த கால்பந்து அணிகள்
கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை தற்போதைய நம்பர் 1 வீரனாக கருதப்படுபவர் லயோனல் மெஸ்ஸி. 2020-ம் ஆண்டில் மட்டும் அவர் ஈட்டியுள்ள வருமானம் 926 கோடி ரூபாய்.  இந்த அளவுக்கு புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளவே பலரும் தயங்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா?... ஆனால் அதுதான் உண்மை. அதற்கு காரணம் அவரைப் பாதித்த நோய்.

அர்ஜென்டினாவில்   ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்கு தனது கால்பந்து திறமையை உயர்த்தியுள்ளார். ஆனால் இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு கிளப்புகளும், அவரை அணியில் சேர்த்து பணம் கொடுத்து உதவ மறுத்தன.
 
இந்த  நிலையில்தான்  பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இது தொடர்பாக உடனே ஒப்பந்தம் போட இரு தரப்பும் முடிவெடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை. இதனால் அப்போது கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். உலகின் முன்னணி கால்பந்து வீரனாக உயர்ந்த நிலையிலும், அன்று தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி.  -----------------------------------------------------
நவம்பர் 27
ரசிகர்களை நோகடித்த கவாஸ்கரின் சாதனை
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.  ஒரு காலகட்டத்தில் இந்தியா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டியாக இருந்துள்ளது. குறிப்பாக 1975-ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பையில் நத்தை வேகத்தில் ரன்களைக் குவித்து எதிரணிகளுக்கு தங்கத் தட்டில் வைத்து வெற்றியை காணிக்கையாக்கி உள்ளது.  அந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் செய்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.   முதலாவது உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக  174 பந்துகளை எதிர்கொண்டு   36 ரன்களை மட்டுமே அடித்தார் என்பதுதான் அந்த  சா(வே)தனை.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில்,  பலமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.   நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில்  (அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து. 335 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், ஏக்நாத் சோல்கரும் களம் இறங்கினர்.   டெஸ்ட் போட்டிகளில் சதங்களாக குவித்துவந்த கவாஸ்கர், இந்தியாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.    ஆனால் கவாஸ்கரோ, டொக் வைத்து ஆடி ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தார்.  
கவாஸ்கரின் ஆட்டம்  மற்ற வீரர்களையும்  பாதிக்க, 60 ஓவர்களின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது.  202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.   ‘டொக்’கே பிரதானம் என்று கடைசிவரை அவுட் ஆகாமல் மைதானத்தில் நின்ற கவாஸ்கர், 174 பந்துகளை எதிர்கொண்டு, ஒரே பவுண்டரியுடன் 36 ரன்களைக் குவித்தார்.  

விளையாட்டாய் சில கதைகள் - நவம்பர் 28 - டிசம்பர் 1

 நவம்பர் 28

அமெரிக்காவின் முதல் கார் பந்தயம்
அமெரிக்காவில் 1890-களில் கார்கள் அறிமுகமாகிக்கொண்டு இருந்த நேரம். தங்கள் செய்தித்தாள் சார்பில் ஒரு கார் பந்தயத்தை நடத்தினால் என்ன என்ற எண்ணம் ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் நிறுவனத்துக்கு தோன்றியுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் கார்களை பிரபலப்படுத்த இந்த பந்தயம் உதவும் என்று கார் விற்பனையாளர்களும்  நினைத்ததால்  இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.  
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 1895-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி  கார் பந்தயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு 5 ஆயிரம் டாலர்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இத்தொகை மிகவும் அதிகமாகும். இருப்பினும் அமெரிக்காவில் கார்கள் மிகவும் குறைவாக இருந்ததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே  இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு,  1895-ம் ஆண்டு, நவம்பர் 28-ம் தேதி முதல் முறையாக அமெரிகாவில் கார் பந்தயம் நடத்தப்பட்டது. ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் 6 கார்கள் பங்கேற்றன.  சிகாகோவில் இருந்து இவான்ஸ்டன் நகரம் வரையிலான 87 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
 போட்டியில் பங்கேற்ற கார்கள்  புதிதாக இருந்தபோதிலும், சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருந்தன.  இதனால் நத்தை வேகத்திலேயே கார்கள் நகர்ந்தன. இறுதியில் 7 மணி நேரம் 53 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்த கார் முதல் பரிசை தட்டிச் சென்றது. பிராங் துரியா என்பவர் இந்த காரை ஓட்டிச் சென்றார். அமெரிக்காவில் நடந்த முதல் கார் பந்தயம் இதுவாகும்.
------------------------------------
டிசம்பர் 29
காலி மைதானத்தில் நடந்த கால்பந்து
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களே இல்லாமல்  மைதானங்களில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக கடந்த ஆண்டிலேயே ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து போட்டியை நடத்தியுள்ளது வட கொரிய அரசு. தென் கொரியா மற்றும் வடகொரியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிதான் இப்படி ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்நாடுகளிடையே இருந்த பகை.

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தச் சூழலில் கடந்த ஆண்டு வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் தென் கொரிய – வடகொரிய அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் யாரும் மைதானத்துக்கு வரக் கூடாது என்று தடை விதித்துள்ளது வட கொரிய அரசு. இதனால் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடத்துள்ளது.
 மைதானத்துக்கு செல்லாவிட்டாலும் தொலைக்காட்சியிலாவது போட்டியைக் காணலாமே என்று  ரசிகர்கள் நினைத்திருக்க, அதற்கும் வடகொரிய அரசு தடை விதித்தது. அத்துடன் போட்டியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படி ஏக கெடுபிடியுடன் நடந்த போட்டி, 0-0 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
இப்போட்டியைப் பற்றி கருத்து தெரிவித்த தென் கொரிய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவரான சோய் யங்-இல், “கிட்டத்தட்ட போர்க்களத்தில் நின்றதைப் போல் இருந்தது. போட்டியின்போதோ, அல்லது அதற்கு முன்போ, வடகொரிய வீரர்கள் யாடும் எங்கள் வீரர்களுடன் பேசக்கூட இல்லை. எங்கள் வீரர்களின் கண்களைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை” என்கிறார்.
----------------------------
நவம்பர் 30
உள்ளூர் மோதலால் கிடைத்த வீரர் 
அசாமில் உள்ள இருபாரி பசார் கிராமத்தினருக்கும், காலா பஹாட் கிராமத்தினருக்கும் இடையே முன்பு அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இருபாரி பசார் கிராமத்து இளைஞர்கள்தான். இதற்கு முடிவுகட்ட விரும்பிய அவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு கராத்தே ஆசிரியரை அழைத்துவந்து பயிற்சி பெற்றனர்.
இப்படி பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான  பதாம் தாபா, உள்ளூரில் மிகப்பெரிய கராத்தே வீரராக உருவெடுத்தார்.  தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டார். ஆனால் அவரால் பதக்கங்களை வெல்ல முடியவில்லை. தான் கண்ட கனவுகளை எல்லாம் தன் 2 மகன்கள்  நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார். அதே நேரத்தில் கராத்தேவை விட குத்துச்சண்டை போட்டியில்தான் அதிக புகழ் கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு அத்துறையில் பயிற்சி அளித்தார். அப்படி பயிற்சி அளிக்கப்பட்ட மகன்களில் ஒருவர்தான் இந்தியாவின் முன்னணி குத்துசண்டை வீரராக இருக்கும்  ஷிவா தாபா. 
 சிறுவயதில்   தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகளின் மீதுதான் ஷிவா தாபாவின் கவனம் இருந்தது. இந்த நிலையில்தான் மைக் டைசனின் குத்துச்சண்டை போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தார். அவரது வேகமும் துடிப்பும், தானும் ஒரு குத்துச்சண்டை வீரனாக வேண்டும் என்ற கனவை ஷிவா தாபாவுக்குள் விதைத்தது.
அன்றிலிருந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார் ஷிவா தாபா. தினமும் காலை 3 மணிக்கு எழும் ஷிவா தாபா, 7 மணிவரை குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவார்.   அவருக்கு  பயிற்சியளிக்க குவாஹாட்டிக்கு இடம்பெயர்ந்த பதாம் தாபா, சொற்ப வருமானத்தில் மகன்களுக்கு பயிற்சியளித்தார். அவர்களும் ஏமாற்றவில்லை. மூத்தவர் மாநில அளவிலான போட்டிகளில் ஜெயிக்க, இளையவரான ஷிவா தாபா, பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
--------------------------------------------
 டிசம்பர்  1
21 ஓவர்களில் சுருண்ட இந்தியா
உலகப் போர் காரணமாக 1939 முதல் 1945 வரை சர்வதேச அளவில் அதிக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமா, அல்லது பிரிட்டிஷ்காரர்களோடு கிரிக்கெட்டுக்கும் குட்பை சொல்லுமா என்ற கேள்வி அக்காலத்தில் எழுந்தது. ஆனால் இந்தியா கிரிக்கெட்டை விடவில்லை. மாறாக உள்ளூர் போட்டிகளை நிறைய நடத்தி, பல இளம் வீரர்களை உருவாக்கியது.
இந்தச் சூழலில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து அழைப்பு வந்தது. கிரிக்கெட் உலகில் நிகரில்லாத சக்ரவர்த்தியாக டான் பிராட்மேன் துள்ளித் திரிந்த காலம் அது. வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த லாலா அமர்நாத்தின் தலைமையில், மங்கட், ஹசாரே, ஜே.கே.இரானி போன்ற வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
கிரிக்கெட் ஆடாமல் பல ஆண்டுகளாக காய்ந்து கிடந்த டான் பிராட்மேன், இந்திய அணி வருவதைக் கேள்விப்பட்டதும் புத்துணர்ச்சி பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முன் தனது ரன் வேட்கையை தீர்க்க ஆவலுடன் காத்திருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை அவர் குவித்தார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடியது.
பிராட்மேனின் பேட்டிங்கிற்கு நிகராக பந்துவீச்சில் இந்தியாவை துவட்டி எடுத்தார் எர்னி டோஷாக் என்ற பந்துவீச்சாளர் 2.3 ஓவர்களில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்த இந்திய அணி 21.3 ஓவர்களில் 58 ரன்களில்  சுருண்டது. அந்த வகையில் குறைந்த ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆன நாட்களில் ஒன்றாக டிசம்பர் 1 விளங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

விளையாட்டாய் சில கதைகள் - நவம்பர் 20 - 23

 

Rajesh Muthusamy
Mon 11/16/2020 6:38 PM
sir pls..
Sudhir P. M.
Mon 11/16/2020 10:14 AM
  •  Rajesh Muthusamy
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
நவம்பர் 20
முதல் போட்டியில் சதம் அடித்த விஸ்வநாத்
-----------------------------------------------------------------------------
இந்திய கிரிக்கெட்டை கவாஸ்கர் ஆக்கிரமித்திருந்த காலத்தில், சில போட்டிகளில் அவரையும் கடந்து  ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் குண்டப்பா விஸ்வநாத். ரசிகர்களை மட்டுமின்றி கவாஸ்கரையும் இவரது பேட்டிங் ஸ்டைல்  கவர்ந்திருந்தது.  அதனால்தான் கவாஸ்கர் தன் மகனுக்கு விஸ்வநாத்தின் பெயரையும் சேர்த்து ரோஹன் ஜெய்விஷ்வா  என்று பெயரிட்டார். இப்படி கவாஸ்கரையே கவர்ந்த விஸ்வநாத், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த நாள் இன்று (20-11-1969).
பேட்டிங்கில் பெரியவராக இருந்தாலும், உயரத்தில் குள்ளமானவர் விஸ்வநாத்.   பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்கான தேர்வு நடைபெற்றபோது, விஸ்வநாத்தின்  உயரத்தைப் பார்த்த தேர்வாளர்கள்,  அவரால் பவுன்சர் பந்துகளைச் சமாளிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டனர். ஆனால் பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்காகவும், ரஞ்சி போட்டிகளில் கர்நாடக அணிக்காகவும் அவர் அதிக சதங்களை விளாசினார். அனைத்துவகை பந்துகளையும் அடித்து நொறுக்கினார்.
ரஞ்சி போட்டிகளில் சாதித்ததால், இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.  1969-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் களம் இறங்கினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில்  ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கவலையோடு பெவிலியன் திரும்பிய  அவரை அழைத்த அப்போதைய இந்திய  கேப்டன் பட்டோடி, “கவலைப்படாதீர்கள். அடுத்த இன்னிங்ஸில் நீங்கள் சதம் அடிப்பீர்கள்” என்று   ஆறுதல் கூறினார். அவரது ஆறுதல் வார்த்தை அடுத்த 2 நாட்களில் நிறைவேறியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வநாத்  137 ரன்களை விளாசினார். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்களை விஸ்வநாத் அடித்துள்ளார். இதில் 12 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------

நவம்பர்   21
இந்தியாவின் முதல் ஓட்ட வீராங்கனை
---------------------------------------------------------------------
சர்வதேச தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்று கொடுத்தவர்கள் பெண்கள்தான். பி.டி உஷா, ஷைனி வில்சன், வல்சம்மா, அஞ்சு ஜார்ஜ், டுட்டி சந்த் என்று இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில் இந்திய வீராங்கனைகள்  சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீலிமா கோஷ்.
1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 17 வயது பெண்ணாக நீலிமா கோஷ் பங்கேற்றார். அந்தக் காலத்தில் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு இந்திய  சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. பெண்கள் வெளியில் வருவதே பாவம் என்ற சூழல் இருந்தது.  இந்தச் சூழலில் சமூகத்தின் எதிர்ப்பை புறம்தள்ளி கடும் பயிற்சியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நீலிமா கோஷ் தகுதி பெற்றார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் நீலிமா கோஷுடன்  மேரி டிசோசா என்ற மற்றொரு வீராங்கனையும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இருப்பினும் நீலிமா கோஷ் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதலில் நடந்ததால், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையை  அவர் பெற்றார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 13.8 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த நீலிமா கோஷ்,  இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். அடுத்து நடந்த 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில், முதலிடம் பெற்ற வீராங்கனையை விட  2 விநாடிகள் பின்தங்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் நீலிமா கோஷ் பதக்கங்களை வெல்லாவிட்டாலும், இந்தியப் பெண்களாலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நவம்பர் -  22
கிரிக்கெட் ஹெல்மெட்  பிறந்த  கதை
-------------------------------------------------------------------
இன்றைய தினம் கிரிக்கெட்  போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டுக்கு அடுத்து முக்கிய தேவையாக இருக்கும் விஷயம் ஹெல்மெட்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களின் தலையில் காயம் ஏற்படாதவாறு அவர்களை ஹெல்மெட்கள் காக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்கள்  மட்டுமின்றி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடும்போதும் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என சட்டம் இயற்றுமாறு சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் கிரிக்கெட் அறிமுகமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகே ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 1930-களில் ஹெல்மெட் போன்ற ஒரு நவீன தலைக்கவசத்தை அணிந்து பாஸ்டி ஹெண்டிரன் என்ற இங்கிலாந்து வீரர் ஆடியுள்ளார். 3 தொப்பிகள் மற்றும் கால்காப்பின் சில பாகங்களைக் கொண்டு இந்த தலைக்கவசத்தை அவரது மனைவி உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
 
நவீன கிரிக்கெட் உலகில் ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வரத் தொடங்கியது 1970-களில்தான்  இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டென்னிஸ் அமிஸ்,   உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளின்போது, பைக் ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சற்று மாற்றி வடிவமைத்து,  கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது  ரசிகர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். ஆனால் இந்த தொடரின்போது அவரது தலையை ஒரு பந்து தாக்கியபோது, அவர் காயமின்றி தப்ப, ஹெல்மெட்டின் அவசியத்தை மற்ற வீரர்களும் உணர்ந்தனர். இதைத்தொடர்ந்து  டோனி கிரேக், ஜாகிர் அப்பாஸ் , கவாஸ்கர் போன்ற வீரர்களும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட்களை வடிவமைத்து அணிந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு நவீன மாற்றங்களுடன் ஹெல்மெட்கள் வரத் தொடங்கின.  
இன்றைய காலகட்டத்தில் அதிநவீன பிளாஸ்டிக்குகள் மற்றும் பைபர்களால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் எடை 750 கிராம்தான். ஆனால் விலைமதிப்பிலாத பல வீரர்களின் உயிரை அவை காக்கின்றன
----------------------------------------------------------------------------------------------------------------------
நவம்பர் 23
நம்பர் 1 கிரிக்கெட் தம்பதி
டென்னிஸ், தடகளம், நீச்சல் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்துகொள்வது அடிக்கடி நடக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது குறைவு. இந்தச் சூழலில்   சர்வதேச கிரிக்கெட் உலகின் ஒரே காதல் தம்பதியாக  வலம் வருகிறார்கள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும், அந்நாட்டு பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரான அலிஸா ஹீலியும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே, அதாவது ஸ்டார்க்கின் 9-வது வயதிலேயே அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார் அலிஸா ஹீலி. பிரபல ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான இயான் ஹீலியின் மருமகள்தான் அலிஸா ஹீலி. தன் மாமாவைப் பின்பற்றி தானும் விக்கெட் கீப்பராக விரும்பிய அலிஸா, சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைய, அங்கேதான் ஸ்டார்க்கை முதல் முறையாக சந்தித்துள்ளார்.

இப்போது வேகப்பந்து வீச்சாளராக உள்ள ஸ்டார்க், அப்போது சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விக்கெட் கீப்பராக பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் சிறுவயதில் இன்றாக பயிற்சி பெற, காதல் தீ  பற்றிக்கொண்டுள்ளது. பிற்காலத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விக்கெட் கீப்பராக அலிஸா இணைய, வேகப்பந்து வீச்சாளராக மாறி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இருவரின் பாதை மாறினாலும், காதல் மாறவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் அலிஸாவை மணமுடித்துள்ளார் ஸ்டார்க்.
இருவரும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால், இந்த தம்பதி ஒன்றாக இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அலிஸா கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் நேரத்தில் ஸ்டார்க் வீட்டிலும், அலிஸா வீட்டில் இருக்கும் நேரங்களில் ஸ்டார்க் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதிலும் பிஸியாக இருப்பதால் இவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனால்தானோ என்னவோ எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறது இந்த ஜோடி.