நவம்பர் 24
இந்தியாவில் ஹாக்கி தொடங்கிய கதை
-----------------------------------------------------------
கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கவுரவத்தை தேடித்தந்த விளையாட்டு என்று ஹாக்கியைச் சொல்லலாம். ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வாங்கித் தந்த பெருமை ஹாக்கி விளையாட்டுக்கு உண்டு.
உலக அளவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹாக்கி விளையாட்டு தோன்றியதாகவும், இவ்விளையாட்டு முதலில் எகிப்தியர்களால் ஆடப்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது ஹாக்கி விளையாட்டு அறிமுகமானது. ஆரம்பத்தில் இங்கு தங்கியிருந்த இங்கிலாந்து ராணுவ வீரர்கள் பொழுதுபோக்குக்காக ஹாக்கி விளையாட்டை ஆடியுள்ளனர். இதைப் பார்த்த இந்திய இளைஞர்களுக்கும் ஹாக்கி விளையாட ஆசை வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களும் ராணுவ வீரர்களிடம் ஹாக்கி விளையாட்டை கற்றுள்ளனர்.
இந்தியாவின் முதலாவது தொழில் ரீதியிலான ஹாக்கி கிளப் 1885-86-ல் கொல்கத்தாவில் உருவானது. பின்னர் மும்பை, பஞ்சாப் ஆகிய ஊர்களிலும் ஹாக்கி கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து முதலில் வங்கத்திலும், பின்னர் மும்பை, ஒரிஸா, பிஹார், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஹாக்கி கூட்டமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்குள்ள அணிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடி, தங்கள் ஹாக்கி திறனை மேம்படுத்தியுள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து ஹாக்கி கூட்டமைப்புகளும் 1925-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குவாலியர் நகரில் கூடி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பை தொடங்கியுள்ளன. இந்தியாவுக்கென்று பொதுவாக ஒரு ஹாக்கி அணியை இந்த கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் அதிகாரபூர்வமான அணி முதல் முறையாக நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப் பயணத்தின்போது, நியூஸிலாந்துக்கு எதிராக 21 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் டிராவில் முடிய 1 போட்டியில் மட்டுமே இந்திய அணி தோற்றது. இத்தொடரில் இந்திய வீரர்கள் அடித்த கோல்களின் எண்ணிக்கை 192.
-----------------------------------------------------------------------------
நவம்பர் 25
பவுன்சரால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்
மக்களை மகிழ்விக்கும் விஷயங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டி. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின்போது சோகமான சில சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட சோக சம்பவங்களில் ஒன்றுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூஸின் மறைவு.
ஆஸ்திரேலிய அணியில் தனது 20-வது வயதில் நுழைந்த பிலிப் ஹியூஸ், அந்த அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் 1,535 ரன்களையும், 25 ஒருநாள் போட்டிகளில் 826 ரன்களையும் குவித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக அவர் ஆடினார். 2014-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங் செய்துகொண்டு இருந்தார் பிலிப் ஹியூஸ். தொடக்க ஆட்டக்காரராக அவர் அரை சதத்தை கடக்க, அவரை அவுட் ஆக்கும் முயற்சியில் பவுன்சர் பந்து ஒன்றை வீசியுள்ளார் நியூ சவுத் வேல்ஸ் அனியின் வேகப்பந்து வீச்சாளரான சீன் அபாட். எதிர்பாராத வகையில் அந்த பந்து ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அடுத்த கணமே அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு பிறகு (நவம்பர் 27) நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார் பிலிப் ஹியூஸ். அவரது மரணம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹியூஸ் அணிந்த 64-ம் எண்கொண்ட ஜெர்ஸிக்கும் ஆஸ்திரேலிய அணி ஓய்வு அளித்தது. ஹியூஸை கவுரவிக்கும் வகையில் அந்த எண் கொண்ட உடையை ஆஸ்திரேலியாவில் இனி எந்த வீரரும் அணிய மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
-----------------------------------
நவம்பர் 26
மெஸ்ஸியை நிராகரித்த கால்பந்து அணிகள்
கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை தற்போதைய நம்பர் 1 வீரனாக கருதப்படுபவர் லயோனல் மெஸ்ஸி. 2020-ம் ஆண்டில் மட்டும் அவர் ஈட்டியுள்ள வருமானம் 926 கோடி ரூபாய். இந்த அளவுக்கு புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளவே பலரும் தயங்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா?... ஆனால் அதுதான் உண்மை. அதற்கு காரணம் அவரைப் பாதித்த நோய்.
அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்கு தனது கால்பந்து திறமையை உயர்த்தியுள்ளார். ஆனால் இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு கிளப்புகளும், அவரை அணியில் சேர்த்து பணம் கொடுத்து உதவ மறுத்தன.
இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இது தொடர்பாக உடனே ஒப்பந்தம் போட இரு தரப்பும் முடிவெடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை. இதனால் அப்போது கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். உலகின் முன்னணி கால்பந்து வீரனாக உயர்ந்த நிலையிலும், அன்று தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி. -----------------------------------------------------
நவம்பர் 27
ரசிகர்களை நோகடித்த கவாஸ்கரின் சாதனை
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்தியா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டியாக இருந்துள்ளது. குறிப்பாக 1975-ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பையில் நத்தை வேகத்தில் ரன்களைக் குவித்து எதிரணிகளுக்கு தங்கத் தட்டில் வைத்து வெற்றியை காணிக்கையாக்கி உள்ளது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் செய்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. முதலாவது உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 174 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்களை மட்டுமே அடித்தார் என்பதுதான் அந்த சா(வே)தனை.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், பலமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் (அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து. 335 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், ஏக்நாத் சோல்கரும் களம் இறங்கினர். டெஸ்ட் போட்டிகளில் சதங்களாக குவித்துவந்த கவாஸ்கர், இந்தியாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கவாஸ்கரோ, டொக் வைத்து ஆடி ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தார்.
கவாஸ்கரின் ஆட்டம் மற்ற வீரர்களையும் பாதிக்க, 60 ஓவர்களின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ‘டொக்’கே பிரதானம் என்று கடைசிவரை அவுட் ஆகாமல் மைதானத்தில் நின்ற கவாஸ்கர், 174 பந்துகளை எதிர்கொண்டு, ஒரே பவுண்டரியுடன் 36 ரன்களைக் குவித்தார்.