நவம்பர் 28
அமெரிக்காவின் முதல் கார் பந்தயம்
அமெரிக்காவில் 1890-களில் கார்கள் அறிமுகமாகிக்கொண்டு இருந்த நேரம். தங்கள் செய்தித்தாள் சார்பில் ஒரு கார் பந்தயத்தை நடத்தினால் என்ன என்ற எண்ணம் ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் நிறுவனத்துக்கு தோன்றியுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் கார்களை பிரபலப்படுத்த இந்த பந்தயம் உதவும் என்று கார் விற்பனையாளர்களும் நினைத்ததால் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 1895-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கார் பந்தயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு 5 ஆயிரம் டாலர்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இத்தொகை மிகவும் அதிகமாகும். இருப்பினும் அமெரிக்காவில் கார்கள் மிகவும் குறைவாக இருந்ததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, 1895-ம் ஆண்டு, நவம்பர் 28-ம் தேதி முதல் முறையாக அமெரிகாவில் கார் பந்தயம் நடத்தப்பட்டது. ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் 6 கார்கள் பங்கேற்றன. சிகாகோவில் இருந்து இவான்ஸ்டன் நகரம் வரையிலான 87 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற கார்கள் புதிதாக இருந்தபோதிலும், சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருந்தன. இதனால் நத்தை வேகத்திலேயே கார்கள் நகர்ந்தன. இறுதியில் 7 மணி நேரம் 53 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்த கார் முதல் பரிசை தட்டிச் சென்றது. பிராங் துரியா என்பவர் இந்த காரை ஓட்டிச் சென்றார். அமெரிக்காவில் நடந்த முதல் கார் பந்தயம் இதுவாகும்.
------------------------------------
டிசம்பர் 29
காலி மைதானத்தில் நடந்த கால்பந்து
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களே இல்லாமல் மைதானங்களில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக கடந்த ஆண்டிலேயே ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து போட்டியை நடத்தியுள்ளது வட கொரிய அரசு. தென் கொரியா மற்றும் வடகொரியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிதான் இப்படி ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்நாடுகளிடையே இருந்த பகை.
தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தச் சூழலில் கடந்த ஆண்டு வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் தென் கொரிய – வடகொரிய அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் யாரும் மைதானத்துக்கு வரக் கூடாது என்று தடை விதித்துள்ளது வட கொரிய அரசு. இதனால் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடத்துள்ளது.
மைதானத்துக்கு செல்லாவிட்டாலும் தொலைக்காட்சியிலாவது போட்டியைக் காணலாமே என்று ரசிகர்கள் நினைத்திருக்க, அதற்கும் வடகொரிய அரசு தடை விதித்தது. அத்துடன் போட்டியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படி ஏக கெடுபிடியுடன் நடந்த போட்டி, 0-0 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
இப்போட்டியைப் பற்றி கருத்து தெரிவித்த தென் கொரிய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவரான சோய் யங்-இல், “கிட்டத்தட்ட போர்க்களத்தில் நின்றதைப் போல் இருந்தது. போட்டியின்போதோ, அல்லது அதற்கு முன்போ, வடகொரிய வீரர்கள் யாடும் எங்கள் வீரர்களுடன் பேசக்கூட இல்லை. எங்கள் வீரர்களின் கண்களைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை” என்கிறார்.
----------------------------
நவம்பர் 30
உள்ளூர் மோதலால் கிடைத்த வீரர்
அசாமில் உள்ள இருபாரி பசார் கிராமத்தினருக்கும், காலா பஹாட் கிராமத்தினருக்கும் இடையே முன்பு அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இருபாரி பசார் கிராமத்து இளைஞர்கள்தான். இதற்கு முடிவுகட்ட விரும்பிய அவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு கராத்தே ஆசிரியரை அழைத்துவந்து பயிற்சி பெற்றனர்.
இப்படி பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான பதாம் தாபா, உள்ளூரில் மிகப்பெரிய கராத்தே வீரராக உருவெடுத்தார். தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டார். ஆனால் அவரால் பதக்கங்களை வெல்ல முடியவில்லை. தான் கண்ட கனவுகளை எல்லாம் தன் 2 மகன்கள் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார். அதே நேரத்தில் கராத்தேவை விட குத்துச்சண்டை போட்டியில்தான் அதிக புகழ் கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு அத்துறையில் பயிற்சி அளித்தார். அப்படி பயிற்சி அளிக்கப்பட்ட மகன்களில் ஒருவர்தான் இந்தியாவின் முன்னணி குத்துசண்டை வீரராக இருக்கும் ஷிவா தாபா.
சிறுவயதில் தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகளின் மீதுதான் ஷிவா தாபாவின் கவனம் இருந்தது. இந்த நிலையில்தான் மைக் டைசனின் குத்துச்சண்டை போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தார். அவரது வேகமும் துடிப்பும், தானும் ஒரு குத்துச்சண்டை வீரனாக வேண்டும் என்ற கனவை ஷிவா தாபாவுக்குள் விதைத்தது.
அன்றிலிருந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார் ஷிவா தாபா. தினமும் காலை 3 மணிக்கு எழும் ஷிவா தாபா, 7 மணிவரை குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவார். அவருக்கு பயிற்சியளிக்க குவாஹாட்டிக்கு இடம்பெயர்ந்த பதாம் தாபா, சொற்ப வருமானத்தில் மகன்களுக்கு பயிற்சியளித்தார். அவர்களும் ஏமாற்றவில்லை. மூத்தவர் மாநில அளவிலான போட்டிகளில் ஜெயிக்க, இளையவரான ஷிவா தாபா, பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
--------------------------------------------
டிசம்பர் 1
21 ஓவர்களில் சுருண்ட இந்தியா
உலகப் போர் காரணமாக 1939 முதல் 1945 வரை சர்வதேச அளவில் அதிக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமா, அல்லது பிரிட்டிஷ்காரர்களோடு கிரிக்கெட்டுக்கும் குட்பை சொல்லுமா என்ற கேள்வி அக்காலத்தில் எழுந்தது. ஆனால் இந்தியா கிரிக்கெட்டை விடவில்லை. மாறாக உள்ளூர் போட்டிகளை நிறைய நடத்தி, பல இளம் வீரர்களை உருவாக்கியது.
இந்தச் சூழலில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து அழைப்பு வந்தது. கிரிக்கெட் உலகில் நிகரில்லாத சக்ரவர்த்தியாக டான் பிராட்மேன் துள்ளித் திரிந்த காலம் அது. வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த லாலா அமர்நாத்தின் தலைமையில், மங்கட், ஹசாரே, ஜே.கே.இரானி போன்ற வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
கிரிக்கெட் ஆடாமல் பல ஆண்டுகளாக காய்ந்து கிடந்த டான் பிராட்மேன், இந்திய அணி வருவதைக் கேள்விப்பட்டதும் புத்துணர்ச்சி பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முன் தனது ரன் வேட்கையை தீர்க்க ஆவலுடன் காத்திருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை அவர் குவித்தார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடியது.
பிராட்மேனின் பேட்டிங்கிற்கு நிகராக பந்துவீச்சில் இந்தியாவை துவட்டி எடுத்தார் எர்னி டோஷாக் என்ற பந்துவீச்சாளர் 2.3 ஓவர்களில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்த இந்திய அணி 21.3 ஓவர்களில் 58 ரன்களில் சுருண்டது. அந்த வகையில் குறைந்த ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆன நாட்களில் ஒன்றாக டிசம்பர் 1 விளங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
No comments:
Post a Comment