Powered By Blogger

Tuesday, December 1, 2020

விளையாட்டாய் சில கதைகள் - 28 - 31

 நவம்பர் 16

கிரிக்கெட் உலகில் சச்சினின் கடைசி நாள்
நவீன கிரிக்கெட்டின் பிராட்மேன் என்று சச்சினைச் சொல்லலாம்.  இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாக போற்றப்பட்ட  சச்சினைப் பார்த்து பயப்படாத பந்துவீச்சாளர்களே இல்லை.  1989-ம் ஆண்டு 16 வயது சிறுவனாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த சச்சின், இந்தியாவுக்காக அடித்த ரன்கள் கணக்கில் அடங்காதவை. 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள்,  463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 18,426 ரன்கள் என்று ரன் இயந்திரமாய் செயல்பட்ட சச்சின், தன் துடிப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதைக் கட்டிப் போட்டார்.  பல சாதனைகளை முறியடித்தார்.
 எந்த விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டல்லவா? சச்சினின் கிரிக்கெட் பயணத்துக்கும் அந்த முடிவு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி  கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின். அவரது கடைசி போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்றது.
பின்னாளில் இந்த நாளைப் பற்றி ரசிகர்களுக்கு சச்சின் எழுதியுள்ள கடிதத்தில், “  ஓய்வைப் பற்றி  நீண்ட நாட்களாக  நான் நினைத்திருந்தாலும் அன்றைய நாளுக்காக என்னை நான் தயார்படுத்திக்கொள்ளவில்லை. அன்றைய தினம் மைதானத்துக்குள் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் ஏதோ ஒரு சோகம் என்னை அழுத்தியது.  என் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொள்வதைப் போல உணர்ந்தேன்.
 அந்த நேரத்தில் பல விஷயங்கள் என் தலையை அழுத்தின. என்னால்  உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை கட்டுப்படுத்துவதற்காக நான் போராடவும் இல்லை. கண்ணீரால் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். அந்த சமயத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் என் மனதில் அமைதி பரவியது. நான் வலுப்பெற்றதைப் போல் உணர்ந்தேன். நான் பெற்ற எல்லாவற்றுக்கும் நன்றியுள்ளவனாக உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-----------------------

நவம்பர் 17
வீரர்களுக்கு பயிற்சியளிக்க உருவான விளையாட்டு
உலகின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக்.  கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காக கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.   இருப்பினும் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் நாம் காணும் நவீன ஜிம்னாஸ்டிக் போட்டியை உருவாக்கியவர்கள்   ஜெர்மனியைச்  சேர்ந்த ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக்   மற்றும் பிரட்ரிக் லட்விக் ஜான்.
பண்டைய கால விளையாட்டான ஜிம்னாஸ்டிக்கைப் பற்றி  ஆய்வு செய்துவந்த   ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக், அதில் மேலும் சில விஷயங்களைச் சேர்த்து 1793-ம் -ம் ஆண்டில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.  ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய அந்தப் புத்தகம், பின்னர் “Gymnastics for Youth: or a Practical Guide to Healthful and Amusing Exercises for the use of Schools” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த புத்தகத்தை பின்பற்றி நவீன ஜிம்னாஸ்டிக் போட்டியை வடிவமைத்தவர்  பிரட்ரிக் லட்விக் ஜான். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் தந்தை என்று கருதப்படும் இவர், 1800-களில் புரூஷிய  ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர்   பணியாற்றிய காலத்தில் புரூஷிய ராணுவம் ஒரு போரில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியில் இருந்து ராணுவ வீரர்களை மீட்கவும், அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை அளிக்கவும்  ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக் எழுதிய புத்தகத்தைப் பின்பற்றி, ராணுவ வீரர்களுக்கு 1811-ம் ஆண்டுமுதல்  ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை அளித்தார்.
 இது நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு 1881-ம் ஆண்டில், ஜிம்னாஸ்டிக் விளையாட்டு, அமைப்பு ரீதியான ஒரு விளையாட்டாக உருவெடுத்தது.   1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் போட்டி அறிமுகமானது.  
---------------------------
நவம்பர் 18
துப்பாக்கி முனையில் மலர்ந்த காதல்
விளையாட்டுத் துறையில் இந்தியாவில் இருக்கும் முக்கியமான தம்பதிகளில் ரோனக் பண்டிட் - ஹீனா சித்து ஜோடியும் ஒன்று. இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் ஒருவர் ஹீனா சித்து. சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஹீனா சித்து பதக்கங்களாக வாங்கிக் குவிக்க, அதற்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குகிறார் அவரது கணவரும் பயிற்சியாளருமான ரோனக் பண்டிட்.  
2012-ம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட போதுதான் ஹீனா சித்து,   ரோணக் பண்டிட்டை சந்தித்தார். ஹீனாவுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த உக்ரைன் பயிற்சியாளர்தான் ரோணக்குக்கும் பயிற்சியாளர். ரோணக்கைப் பொறுத்தவரை அவர் அந்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளுக்காக தன்னை பட்டை தீட்டிக் கொள்ள உக்ரைன் பயிற்சியாளரிடம் வந்திருந்தார். வந்த இடத்தில் பயிற்சியுடன் சேர்ந்து ரோணக் - ஹீனா சித்து ஜோடியின் காதலும் வளர்ந்தது.
பயிற்சியாளர் சொல்லிக்கொடுப்பதை விட ரோணக்கின் அருகாமையும், உத்வேக வார்த்தைகளும் ஹீனாவுக்கு அதிக தெம்பைக் கொடுத்தன. தன்னுடன் ரோணக்கும் லண்டன் வரவேண்டும் என்று விரும்பினார். ரோணக்கும் அதைத் தட்டாமல் சொந்த செலவில் லண்டன் சென்று அவருக்கு உற்சாகமூட்டினார். இந்த காலகட்டத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
அவர்களின் காதலைத் தெரிந்துகொண்ட ரோணக் பண்டிட்டின் தந்தை அசோக் பண்டிட், திருமணத்துக்கு மகிழ்ச்சியுடன் பச்சைக் கொடி காட்டினார்.   திருமணம் முடிந்ததும் ரோணக் பண்டிட் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். ‘இனி போட்டிகளில் பங்கேற்பதற்காக துப்பாக்கியை தொடுவதில்லை. என் மனைவியை ஒரு பெரிய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆக்குவதே எனது லட்சியம்’ என்பதுதான் அந்த முடிவு.   இந்த முடிவின் விளைவாக இன்று  ஹீனா சித்து போட்டிகளில் பதக்கங்களாக குவிக்க, ஒரு பயிற்சியாளராக இருந்து அவரை மேலும் பட்டைதீட்டி வருகிறார் ரோனக்.

நவம்பர் 19
பொறுமையை சோதித்த டென்னிஸ் போட்டி
டென்னிஸ் போட்டிகள் பொதுவாக 3 மணிநேரம் வரை நடக்கும். ஆடவர்கள்  இடையிலான போட்டி சில சமயம்  4 மணிநேரம் வரை இழுக்கும். ஆனால் விம்பிள்டனில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த டென்னிஸ் போட்டி, இந்த  நேரக் கணக்கையெல்லாம் கடந்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்ஸ் நாட்டின் நிகோலஸ் மகுத் இடையே நடந்த  இந்த டென்னிஸ் போட்டி, 11 மணிநேரம் 5 நிமிடங்களுக்கு நீடித்து ரசிகர்களின் பொறுமையைச் சோதித்துள்ளது.
2010-ம் ஆண்டு  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்  ஜூன் 24-ம் தேதி இந்த நீண்ட டென்னிஸ் யுத்தம் தொடங்கியது. முதல் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் போட்டி முடியாததால் 2-வது நாளிலும், அன்றும் முடியாததால் 3-வது நாளிலும் போட்டி தொடர்ந்தது. இறுதியில் 6-4, 3-6, 6-7(7), 7-6(3), 70-68 ஜான் இஸ்னர் வெற்றி பெற்றார்.
இந்த நீண்ட நெடிய டென்னிஸ் போட்டியில், கடைசி செட் ஆட்டம் மட்டும் 8 மணிநேரம் 11 நிமிடங்களுக்கு நீடித்தது.   இப்போட்டியில் ஆடியதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள இஸ்னர், “தான் ஒரு மிகச்சிறந்த போராளி என்பதை இப்போட்டியின் மூலம் மகுத் எடுத்துக் காட்டியுள்ளார். உண்மையில் இந்த போட்டியை இத்தனை தூரம் எடுத்து வந்திருப்பதன் மூலம் மகுத்தும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த முறை சந்திக்கும்போது அவரை குறுகிய நேரத்தில் வெற்றிகொள்ள முயல்வேன்” என்று கூறியுள்ளார்.
2010-ம் ஆண்டைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு இதே வீரர்கள் மீண்டும் விம்பிள்டனில் சந்தித்துள்ளனர். அப்போது ஏற்கெனவே வாக்களித்தபடி 3 மணி நேரத்துக்குள் இஸ்னர்  7-6(4), 6-2, 7-6(6) என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment