Powered By Blogger

Wednesday, May 4, 2022

ஐபிஎல்லை கலக்கும் 150 கிமீ வேக காஷ்மீர் புயல்

 

ஐபிஎல்லை கலக்கும் 150 கிமீ வேக காஷ்மீர் புயல்

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு மாணிக்கத்தை இந்திய கிரிக்கெட் கண்டெடுக்கும். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், நடராஜன் என்று ஐபிஎல்லில் கண்டெடுக்கப்பட்ட மாணிக்கங்களின் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் உம்ரான் மாலிக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடும் இவரது சொந்த ஊர் ஜம்மு காஷ்மீர்.

 

ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான பந்தை வீசியது, தொடர்ந்து 5 பந்துகளை 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது என பல்வேறு சாதனைகளை இந்த ஐபிஎல்லில் நிகழ்த்தியிருக்கிறார் 22 வயதான உம்ரான் மாலிக்.

 

 சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வசதிகள் ஏதும் சிறுவயதில் உம்ரான் மாலிக்குக்கு கிடைத்ததில்லை. தீவிரவாதத்தோடு சதா போராடிக்கொண்டிருக்கும் ஜம்முதான் உம்ரான் மாலிக்கின் சொந்த ஊர். அவரது அப்பா ஒரு சாதாரண பழ வியாபாரி. சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட உம்ரான் மாலிக், தினமும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு மைதானத்துக்கு கிளம்பிவிடுவார்.

 

 “என் மகனின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருந்ததில்லை. அவன் கேட்ட விஷயங்களை எல்லாம் எப்படியாவது கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிக் கொடுத்துவிடுவேன். அதேநேரத்தில் கிரிக்கெட்டில் காட்டும் அதே ஆர்வத்தை படிப்பிலும் காட்டவேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டேன்” என்கிறார் உம்ரான் மாலிக்கின் அப்பா அப்துல் ரஷித்.

 

அப்பாவின் ஊக்குவிப்பும், நண்பர்களின் ஆதரவும் இருந்தாலும், பெரிய மைதானங்களிலோ, முறையான கிரிக்கெட் பந்திலோ ஆடும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக உம்ரான் மாலிக்குக்கு கிடைக்கவில்லை. தனது 17 வயதுவரை சாதாரண ரப்பர் பந்துகளில்தான் உம்ரான் மாலிக் ஆடினார். அதுவும் பகல் நேரத்தில் அல்ல. பள்ளி முடிந்ததும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவர் கிரிக்கெட் ஆடினார்.

 

17 வயதுக்குப் பிறகுதான் கிரிக்கெட் பந்துகளில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அப்படி ஒருநாள் மாலையில் சிமெண்ட் பிட்ச்சில் பந்து வீசிக்கொண்டு இருந்தபோது, ரந்தீர் சிங் மனாஸ்  என்பவரின் பார்வையில் அவர் பட்டுள்ளார். அவர் பந்து வீசும் ஸ்டைலும், வேகமும் ரந்தீரை கவர அவரை அழைத்துப் பேசியுள்ளார்.

 

 “இவ்வளவு சிறப்பாக பந்து வீசுகிறாயே. யார் நீ. எந்த அகாடமியில் பயிற்சி பெறுகிறாய்?” என்று உம்ரான் மாலிக்கை கேட்டுள்ளார் ரந்தீர் சிங்.

 

 “பயிற்சி மையமா?... அதைப்பற்றியெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை. வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் ஆடுவதோடு சரி” என்று உம்ரான் மாலிக் பதில் அளித்துள்ளார். முறையாக பயிற்சி பெறாமலேயே இப்படியா என்று ஆச்சரியப்பட்ட  ரந்தீர் சிங், தனது பயிற்சி மையத்தில் உம்ரான் மாலிக்குக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.  

 

வேகமாக பந்து வீசினால்ம், அதை டெலிவரி செய்வதிலும், கடைசி கட்டத்தில் பந்தை ரிலீஸ் செய்வதிலும் ஆரம்ப காலகட்டத்தில் உம்ரான் மாலிக் சில தவறுகளைச் செய்துவந்தார். அந்த தவறுகளை நீக்கி அவரை மெருகேற்றினார் ரந்தீர் சிங்.

இந்த நேரத்தில் 19 வயதுக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் அணிக்கான தேர்வு நடப்பதாக தெரியவந்ததும் அணித்தேர்வு நடக்கும் இடத்துக்கு நேரில் சென்றார். ஆனால் மாவட்ட அளவிலான போட்டிகளிலோ அல்லது கிளப் கிரிக்கெட் போட்டிகளிலோ ஆடாத உம்ரான் மாலிக்கை ஆரம்பத்தில் யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் ஆடிவிட்டு வரும்படி அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஆனால் உம்ரான் மாலிக் விடவில்லை. ஒருமுறையாவது தான் பந்து வீசுவதை பார்க்கும்படி தேர்வாளர்களிடம் கெஞ்சி இருக்கிறார். இதனால் போனால் போகிறதென்று ஒரு முறை பந்துவீச்க் காட்டுமாறு சொல்லியிருக்கிறார்கள் தேர்வாளர்கள். அவர் பந்து வீசிய வேகத்தைக் கண்டதும் ஒருகணம் உறைந்துநின்ற தேர்வாளர்கள், மறுபேச்சு பேசாமல் அணியில் சேர்த்துள்ளனர். அன்றுமுதல் அவரது கிராஃப் ஏறத் தொடங்கியது.

 

ஜம்மு காஷ்மீர் அணிக்காக சில போட்டிகளில் ஆடிய உம்ரான் மாலிக் மீது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பார்வை பட, அந்த அணியில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கடைசி சில போட்டிகளில் மட்டுமே உம்ரான் மாலிக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சில வாய்ப்புகளிலேயே உம்ரான் மாலிக் மிரட்ட, ஹைதராபாத் அணி அவரைத் தக்க வைத்தது. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினின் மேற்பார்வையில் அவருக்கு பயிற்சி அளித்து பட்டை தீட்டியது.

 

கடந்த ஆண்டு பார்த்தது வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சரே இந்த ஆண்டுதான் என்பதைப் போல இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தி வருகிறார் உம்ரான் மாலிக். இந்த ஆண்டில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

 

விக்கெட்களைவிட தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசும் உம்ரான் மாலிக்கின் ஆற்றல்தான் கிரிக்கெட் ரசிகர்களையும், வல்லுநர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் கடந்த 11-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153.1 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் மிரளச் செய்துள்ளார் உம்ரான் மாலிக். கடந்த 15 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் வீசப்பட்ட மிகவும் வேகமான பந்தாக இது அமைந்துள்ளது. அத்துடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடிக்கப்படும் 20-வது ஓவரில் ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் உம்ரான் மாலிக் பந்து வீசியது அவரது பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது. அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன.

 

எப்படியோ இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதாக ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார்.

  

 

 

 

 

 

ஷவர்மா ஆபத்தா?

 


இளைய தலைமுறையில் ஈசி உணவாக ஷவர்மா மாறிவிட்டது. ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு ஷவர்மா கடையைப் பார்க்க முடிகிறது.

ஒரு நீண்ட கம்பியில்  கூம்பு வடிவில் பதப்படுத்தப்பட்ட சிக்கன் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பின்புறம் நெருப்பு. அந்த சூட்டில் சிக்கன் வேக, கேட்பவர்களுக்கு அங்கிருந்து சிக்கன் சுரண்டி எடுத்து அதனுடன் கொஞ்சம் மையோனைஸ், கொஞ்சம் கோஸ், கொஞ்சம் தக்காளி என கலந்து கொத்தி சப்பாத்தி போன்ற குபூஸில் வைத்து சுருட்டித் தருகிறார்கள். வாய்க்குள் ருசியாக போகிறது. இதையே 2 குபூஸ்களின் நடுவில் சிக்கன் கலவையை நிரவித் தருவதை பிளேட் ஷவர்மா என்கிறார்கள்.

மெக்சிகன் ஷவர்மா என்று அதில் காரத்தை கலந்து தருகிறார்கள்.

ஷவர்மாவின் துவக்கம் துருக்கி அங்கிருந்து பெய்ரூட், மெக்சிகோ என்று பரவி இப்போது தமிழ் நாடு வீதிகளில் மூலைக்கு மூலை இருக்கிறது.

இந்த ஷவர்மா உடலுக்கு நல்லதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காரணம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் இறந்திருக்கிறார்.

“ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் சிக்கனை ஒருசில கடைகளில் நன்றாக வேகவைப்பதில்லை. அது மட்டுமில்லாமல் சில கடைகளில் முதல் நாள் விற்பனையாகாத சிக்கன் கறியை அப்படியே ஃப்ரீசரில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துகிறார்கள்.  இதனால் அவை ஜீரணமாவதில் பிரச்சினைகள் ஏற்படும்” என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.  

ஷவர்மாவை தொடர்ந்து சாப்பிடும் இளம் பருவத்தினரின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகளும் இதனால் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நடந்த ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் இறப்புக்கு என்ன காரணம்?

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஷவர்மா தயாரிக்க பயன்படுத்தப்படும் சிக்கன், பல கடைகளில் சரியாக வேகவைக்கப்படுவதில்லை. இந்த சூழலில் அவற்றை தயாரிக்க, முழுக்க முழுக்க தரமான இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். ஷவர்மா கடைகளில் சுகாதார விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று கூறினார்.

இறப்புக்கு காரணம் சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மாதான் என்று கூறப்படுகிறது.

ஷவர்மா சாப்பிடுங்கள். நிறைய விற்பனையாகும் கடைகளில் சாப்பிடுங்கள். அவர்களிடம் பழையது இருக்காது.

சுத்தமான கடைகளில் சாப்பிடுங்கள். அங்கே சுகாதார சிக்கல் இருக்காது

குறைவாக சாப்பிடுங்கள். உங்கள் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது.

பாமாயில் பஞ்சம் வருகிறதா?

 


இந்தியாவில் இது விலைவாசி உயர்வு சீசன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்று ஒருபுறம் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மறுபுறம் அரிசி, காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து வருகின்றன.

இதெல்லாம் போதாதென்று இப்போது சமையல் எண்ணெயின் விலையும் வரலாறு காணாத அளவில் வேகமாக உயர்ந்து வருகிறது. அத்துடன் நிற்கவில்லை, விரைவில் பாமாயில் விலையும் ஆகாயத்தை தொடும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இந்தோனேசியா.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக அளவில் சமையல் எண்ணெய்யை பயன்படுத்தும் நாடாக உள்ளது.  2021- 22 நிதியாண்டில் இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் உற்பத்தி 10 மில்லியன் டன்னாக உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு தேவைப்படும் சமையல் எண்ணெய்யோ 23 மில்லியன் டன். அதனால் சுமார் 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மக்களின் அன்றாட சமையலுக்கு தேவைப்படும் எண்ணெய்யை பல்வேறு நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

 

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளை பாமாயிலுக்காகவும், அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளை சோயாபீன் எண்ணெய்க்காகவும், உக்ரைன், ரஷ்யா  ஆகிய நாடுகளை சூரியகாந்தி எண்ணெய்க்காகவும் இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது. இதில் தற்போது உக்ரைன் போர் நடந்து வருவதால் அந்நாடுகளில் இருந்து கிடைக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கு  ஏற்கெனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இப்போது பாமாயிலுக்கும் பிரச்சினை வந்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு   8.3 மில்லியன் டன் பாமாயில் தேவைப்படுகிறது. இதில் பாதிக்கும் மேல், அதாவது 4 மில்லியன் டன்னுக்கும் மேற்பட்ட பாமாயிலை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். மலேசியாவில் இருந்து 3.8 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம்.

தற்போது இந்தோனேஷியாவில் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமான பாமாயில் இல்லை என்று கூறி, அதன்  ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது அந்த நாட்டு அரசு.  ஏப்ரல் 28-ம் தேதியில் இருந்து எந்த நாட்டுக்கும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தோனேஷியாவில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டுக்கு அடுத்ததாக அதிக அளவில் பாமாயில் தயாரிக்கும் தாய்லாந்திடம் இருந்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளும் இதேபோல் தாய்லாந்திடம் பேசி வருவதால் எந்த அளவுக்கு அந்நாட்டிடம் இருந்து கூடுதல் எண்ணெய்யை வாங்க முடியும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

 

 “பாமாயில் விலை ஏறினால் என்ன? நான் பாமாயிலை பயன்படுத்துவது இல்லையே.. அதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவர் ஒருவர் நேரடியாக பாமாயிலை பயன்படுத்தாவிட்டாலும் அவருக்குத் தெரியாமலேயே மறைமுகமாக நிறைய பாமாயிலை பயன்படுத்துகிறார். 

 

 சாக்லேட், பிஸ்கெட், நூடுல்ஸ், ஷாம்பு, சோப் போன்ற பல பொருட்களை தயாரிக்க பாமாயில் தேவைப்படுகிறது. இதனால் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த பொருட்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு மட்டுமாவது கொஞ்சம் பாமாயில் அனுப்பும்படி அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

இது ஒருபுறம் இருக்க பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு உள்ள தட்டுப்பாட்டால்  மற்ற எண்ணைய்களை மக்கள் வாங்கத் தொடங்குவார்கள். அதனால் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் அடுத்த 2 மாதங்களில் சமையல் எணெய்களின் விலை 25 சதவீதம் வரை உயரலாம் என்று கணிக்கப்படுகிறது.

 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள Indian Vegetable Oil Producers அமைப்பின் தலைவர் சுதாகர் ராவ் தேசாய், “மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் விலை உயரக்கூடும். இந்தோனேசியாவில் நிலைமை சீராகி, அந்நாட்டில் இருந்து பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலேயே எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமையல் எண்ணெய்க்கு மற்ற நாடுகளை சார்ந்தே வாழவேண்டிவரும்” என்கிறார்.

 

அரசு நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்… விலை உயர்வை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நாமும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 

 

The Kashmir Files – பாஜகவின் 2024 தேர்தல் வியூகமா?

 


வரவேற்புகள், வரிச்சலுகைகள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் பாராட்டு.. படம் பார்க்க பாஜக ஆளும் மாநில அரசுகள் அளிக்கும் அரசு விடுமுறைகள் என ஒரு பக்கம் இந்தத் திரைப்படத்தை பாஜகவும் வலதுசாரிகளும் கொண்டாடுகிறார்கள்.

மறுபக்கம் புறக்கணிப்புகள், எதிர்ப்புகள்..வரலாறு திரிபு குற்றசாட்டுகள்… இஸ்லாமியருக்கு எதிரானது என்ற விமர்சனங்கள்….என்று இந்தியாவையே இரண்டாக பிரித்திருக்கிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்.

ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு மிகப்பெரிய பதிலை இப்படம் அளித்திருக்கிறது.

1990-களில் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காஷ்மீரில் இருந்து வெளியேறிய உயர் சாதி இந்துக்களின் கதைதான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. டெல்லியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர், தனது தாத்தாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக காஷ்மீரில் உள்ள சொந்த கிராமத்துக்கு செல்கிறார். தனது பெற்றோர் ஒரு விபத்தில் இறந்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு, அங்கு சென்ற பிறகுதான் காஷ்மீரில் இந்து பண்டிதர்களுக்கு எதிராக நடந்த பயங்கரவாத சம்பவங்களும், அதில் தனது பெற்றோர் கொல்லப்பட்டதும் தெரியவருகிறது. அப்போது நடந்த சம்பவங்களை விவரிக்கிறது திரைக்கதை.

  ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ படத்தின் ( முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் தாஷ்காண்ட் நகரில் மரணமடைந்தது குறித்தது) மூலம் ஏற்கெனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த    விவேக் அக்னிஹோத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், புனித் ஹிஸ்ஸார், பல்லவி ஜோஷி  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மார்ச் 11ல்  ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெளியான நாளே சர்ச்சை கிளம்பிவிட்டது.  ஊடக விவாதங்களுக்கு தலைப்பாக மாறியது இந்தப் படம்.  படத்தை பாஜகவினரும் வலதுசாரிகளும் பாராட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் வரலாற்றை திரித்து சொல்கிறது, இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறது என்று விமர்சனங்களும் கடுமையாக எழுந்துள்ளன.

இப்படத்தை அரசு ஊழியர்கள் பார்க்க வசதியாக, அவர்களுக்கு அரை நாள் விடுப்பு அளித்து அசாம் மாநில  முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த படத்தை பார்ப்பதற்காக அரசு ஊழியர்கள் தாராளமாக அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுப்பை அங்கீகரிக்க, அடுத்த நாள் காலை படம் பார்த்ததற்கான டிக்கெட்டை சமர்ப்பித்தாலே போதும்” என்று கூறியுள்ளார்.

பாஜக பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீர் விஷயத்தில் நீண்ட நாட்களாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை ‘தி காஷ்மீர் பைல்ஸ் வெளிக்கொண்டு வந்திருக்கிறது” என்று பேசினார்.  இந்தியப் பிரிவினையின் யதார்த்தத்தை வைத்து இதுவரை எந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் புதிய படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பற்றிய விவாதம் பெருமளவில் எழுந்துள்ளதை அறிவீர்கள். எப்போதும் கருத்துச் சுதந்தரம் பற்றிப் பாடம் எடுப்பவர்கள், கடந்த ஐந்தாறு நாட்களாக, ஆத்திரமடைந்து, உண்மைகள் மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் இந்தப் படத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி, இப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதாக செய்திகள் வெளியானது.

உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகள் இப்படத்துக்கு வரி விலக்கு அளித்துள்ளன.  தமிழகத்தில் பாஜக சார்பில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி இப்படத்துக்கு ஆதரவுகள் வரிசைகட்டி நிற்கின்றன.

படத்துக்கு  எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் இப்படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்தித்துவாவாதிகளின் ஆயுதமாக இப்படம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.  

காஷ்மீர் அரசியல் மட்டுமில்லாமல் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தையும் தவறாக காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாணவர்களின் போராட்டங்களுக்கு புகழ்பெற்றது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். அங்கு படிக்கும் மாணவர்களை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க இந்தப் படம் முயற்சிக்கிறது என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்தில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் பாஜக மாநிலங்களில் உள்ள ஆதரவும் எதிர்ப்பும் இங்கு இல்லை.

 ’இப்படத்தைப் பற்றி விமர்சித்து வீணாக அதற்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம்’ என்று தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் ஒரு பக்கம் வலதுசாரிகளின் கொள்கைகளுக்கு விளம்பரமாகவும் சமூக நல்லிணக்கத்தைக் கொல்லும் விஷமாகவும் பார்க்கப்படுகிறது.  இந்தப் படத்தை எதிர்த்து வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பாஜகவினரும் வலதுசாரிகளும் இந்தக் கருத்தை மறுக்கிறார்கள். காஷ்மீரின் உண்மை வரலாறு இப்போதுதான் வெளி வருகிறது என்கிறார்கள்.

இன்னும் இரண்டு வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள சூழலில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளிவருவது வட மாநிலங்களில் பாஜகவுக்கு இந்துக்களின் ஆதரவை வலுப்படுத்தும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

2024 தேர்தலுக்கு எந்தவிதமான களத்தை பாஜக கட்டமைக்க உள்ளது என்பதையும் அதன் வியூகம் என்னவாக இருக்கப் போவது என்பதையும் இந்தத் திரைப்படத்துக்கு பாஜகவின் மிகப் பெரிய ஆதரவு உணர்த்துகிறது.

அடுத்த இரண்டு வருடங்களில் காஷ்மீர் ஃபைல்ஸ் சாயலில் மேலும் பல ஊடக முயற்சிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

 

சிஎஸ்கே சொதப்புவது ஏன்?

 


“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  என்ன அச்சு?” - தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ள கேள்வி இது. ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 2020-ம் ஆண்டைத் தவிர தாங்கள் ஆடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ப்ளே ஆஃப் சுற்றுவரை முன்னேறிய அணி என்ற பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உண்டு.

இப்படி பல  பெருமைகளைக் கொண்ட  சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று 6 போட்டிகளில் ஆடி, அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  புள்ளிப் பட்டியலிலும் 9-வது இடத்தில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தோல்விகளுக்கு என்ன காரணம்  என்று பார்ப்போம்:

 தோனியின் தவறான முடிவு:

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் தான் நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றி முடிவெடுக்க தோனிக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் அதை அவர் அறிவித்த நேரம்தான் தவறு. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றபோதே இந்த முடிவை அவர் அறிவித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஏலத்தின்போதே ஒரு புதிய கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியிருக்கும். ஆனால் அணித் தேர்வு முடிந்தபின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம்  மட்டுமின்றி, வீரர்கள் மத்தியிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பம் அணியின் சரிவைத் தொடங்கிவைத்தது.

ஜடேஜாவின் அனுபவமின்மை:

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதும், அந்த இடத்தில் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜாவைப் பொறுத்தவரை என்றுமே அவர் கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. இந்திய அணி ஆடும் போட்டிகளில்கூட மற்ற வீரர்கள் எல்லாம் அடிக்கடி ஆலோசனைகளில் கலந்துகொண்டாலும், ஜடேஜா அவ்வளவாக டீம் மீட்டிங்கில் பங்கேற்க மாட்டார். தான் உண்டு தனது ஆட்டம் உண்டு என்று இருப்பார். ஐபிஎல் தொடருக்கு வெளியில்கூட பெரிய அளவில் அவர் கேப்டனாக செயல்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, ஒரு பெரிய பாறாங்கல்லை  தலையில் ஏற்றி வைத்துபோல் அவரை சுமைகள் அழுத்தின. இது அவரது பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கடுமையாக பாதித்து. கூடவே ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக அணியில் அவரது பங்களிப்பும் குறைந்துபோனது.

தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லை:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சாதிப்பதற்கு அந்த அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய அளவில் எந்த வேகப்பந்து வீச்சாளரும் சோபிக்கவில்லை. ஐபிஎல் ஏலத்தில் ரூ.14 கோடி கொடுத்து தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. ஆனால் அவருக்கு துணையாக பெரிய அளவில் வேகப்பந்து வீச்சாளர்களை சிஎஸ்கே வாங்கவில்லை. துரதிருஷ்டவசமாக தீபக் சாஹர் காயம் அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பலவீனப்படுத்தியது.  

ஒருபுறம் இப்படி இருக்கும்போது, ஏற்கெனவே வாங்கிய வீரர்களையும் சிஎஸ்கே ஒழுங்காக பயன்படுத்தவில்லை. உதாரணமாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசியதுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடிய ஹங்கர்கேகரை 1.5 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய முகேஷுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது சிஎஸ்கே.

வயதும் ஒரு தடைதான்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ‘டாடீஸ் ஆர்மி’ என்றும் ஒரு பெயர் உள்ளது. அதிலுள்ள வீரர்களில் பலரும் 30 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இப்படி பெயர் வைத்து சிஎஸ்கேவை பலரும் கிண்டலடிப்பார்கள். ஆனால் இந்த முறை 30 பிளஸ் என்பதையும் கடந்து 35 பிளஸ் வயதைக் கடந்த வீரர்களின் அணியாக சென்னை மாறியுள்ளது. தோனி, பிராவோ, ராயுடு, உத்தப்பா என்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பல வீரர்கள் அணியில் உள்ளனர். இதனால் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் பீல்டிங்கில் சென்னை அணி சொதப்புகிறது.

கழுத்தை நெரிக்கும் மும்பை மைதானங்கள்:

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தை மனதில் வைத்து சிஎஸ்கே அணிக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். சேப்பாக்கம் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் வாங்காமல் மித வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் வாங்கியது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் திடீரென மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களுக்கு மாற்றப்பட, சேப்பாக்கத்தை மனதில் வைத்து வாங்கிய வீரர்கள் சோபிக்க முடியாமல் போனது.

பிளம்மிங்கின் பழைய  போர்முறைகள்

மற்ற அணிகளெல்லாம் காலத்துக்கு ஏற்றார்போல பயிற்சியாளர்களை மாற்றிக்கொண்டு இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இன்னும் பிளம்மிங்கை பயிற்சியாளராக வைத்துள்ளது. பிளம்மிங்கின் பல போர்முறைகல் பழையகால கிரிக்கெட்டுக்கு மட்டுமே ஏற்றதாக உள்ளதால் அணி பின்னடைவை சந்திப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஐபிஎல்லில் வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில், மேற்சொன்ன விஷயங்களில் திருத்தங்கள் செய்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலாவது  சென்னை மீண்டும் சாம்பியனாக எழுந்து வரலாம்.  

சாதிப்பாரா சந்திரசேகரன் - ஏர் இந்தியாவின் தலைவரான தமிழர்

 


ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லக்கூட ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களை மாணவர்கள்  இப்போது பயன்படுத்துகிறார்கள். ஆனால் 1960-களில் தினமும் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்தான் இன்றைக்கு 10 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவர் பதவையை அலங்கரிக்கும் நடராஜன் சந்திரசேகரன். இப்போது டாடா குழுமத்தின் தலைவர் பதவியுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடி வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மோகனூரில் 1963-ம் ஆண்டு பிறந்தவர்  சந்திரசேகரன்.  அப்பா வழக்கறிஞர். சந்திரசேகரனின் பெற்றோருக்கு அவரையும் சேர்த்து 6 குழந்தைகள். சந்திரசேகரனின் தாத்தா இறந்த பிறகு, அவர்களது குடும்பத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட வேண்டி வந்தது. ஆனாலும் சந்திரசேகரன் படிப்பைத் தொடர்ந்தார்.

கிராமத்தில் 10-ம் வகுப்புவரை படிப்பு. பிறகு கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி கல்லூரியில் இளங்கலை படிப்பு. கல்லூரி காலம் முடிந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது. விவசாயத்தில் ஈடுபடலாமா என்று யோசித்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். விவசாய அனுபவம் அவருக்கு ஒரு திருப்பு முனை.  சுமார் 6 மாத காலம் அங்கு இருந்த பிறகு தனக்கும் விவசாயத்துக்கும் சரிப்பட்டு வராது என்பதைக் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி ஆர்.இ.சியில் எம்சிஏ.

1987-ல் ஒரு சாதாரண கம்ப்யூட்டர் புரோக்ராமராகத்தான் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் சந்திரசேகரன் சேர்ந்தார். 22 வருடங்களுக்குப் பிறகு அவரது திறமை மற்றும் கடும் உழைப்பினால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் 2009ல் தலைமைப் பதவிக்கு உயர்ந்தார்.  டிசிஎஸ்ஸின் தலைவராக இருந்த 2015-15 ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 16.5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. உலகின் 4 மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உருவெடுத்தது.

இந்தச் சூழலில் மற்றொரு திருப்பு முனை. டாடா குடும்பத்தினருக்கும் – டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து மிஸ்ட்ரி நீக்கப்பட, டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பு சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் மிக முக்கியமான பதவி.

டாடா நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன் பொறுப்பேற்றபோது டாடா நிறுவனம் மிக மோசமான நிலையில் இருந்தது. மிஸ்ட்ரிக்கும் குழுமத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் டாடாவின் இமேஜ் அதல பாதாளத்தில் சரிந்திருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாடும் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. நஷ்டத்தை நோக்கி அது சென்றுகொண்டு இருந்தது. டாடா டெலிகாம் நிறுவனமோ, ஐரோப்பிய நாடுகளுடன் முரண்பட்டுக் கிடந்தது.  டாடா மின்சக்தி நிறுவனமும் கடனில் மூழ்கிக் கிடந்தது.

பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த சிக்கல்களில் இருந்து டாடா நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டார் சந்திரசேகரன்.

அவர் எடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்று பல்லாயிரம் கோடி நஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருந்த டாடா டெலிகம்யூனிகஷேன் நிறுவனத்தை ஏர்டெல்லிடம் விற்றது. இது டாடா நிறுவனத்தின் பெரிய நஷ்டத்தை நிறுத்தியது.

தொடர்ந்து அவர் எடுத்த முடிவுகள் டாடா நிறுவனத்தை சரிவுகளிலிருந்து சமாளித்து சாதனைப் பாதைக்கு திருப்பியது.

அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக டாடாவின் ‘பிக் பாஸ்கெட்’  நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். கரோனா காலகட்டத்தில் டாடா நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதில்,  டெலிகாம் மற்றும் மின்சக்தி துறையிலும் டாடா நிறுவனத்தை மீண்டுவரச் செய்தார். இப்படி பல்வேறு வழிகளில் டாடா நிறுவனத்தை ‘பழைய பன்னீர்செல்வமாய்’ மாற்றிய சந்திரசேகரனுக்கு இந்திய தொழில் துறையில் ஆற்றிய பணிகளுக்காக  மத்திய அரசு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தது.

டாடா நிறுவனத்தில் சந்திரசேகரனின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அத்துடன் டாடா நிறுவனத்துக்கு அவர் மீட்டுக் கொண்டுவந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக வழங்கியுள்ளது.

சந்திரசேகரனின்  வெற்றிகளுக்கு அவரது ஓட்டமும் ஒரு காரணம்.  அவருக்கு ஓடப் பிடிக்கும். சொந்த ஊரான மோகனூரோ, நியூயார்க்கோ, சென்னையோ, மும்பையோ…  எந்த ஊராக இருந்தாலும் சரி. தினமும் காலை 5 மணிக்கு எழுந்து அவர் நீண்டதூரம்  ஓடுவார்.  தடைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதே இல்லை. இதனாலேயே அவருக்கு மாரத்தான் மனிதர் என்ற பட்டப் பெயரும் உள்ளது. வார்த்தகத்திலும் இந்த தடைகளை வெல்ல, ஓட்டத்தின்போது தான் கற்ற பாடங்களையே பயன்படுத்துகிறார் சந்திரசேகரன்.

டாடா நிறுவனத்தின் ஊழியர் கூட்டமொன்றில் இதுபற்றிக் கூறியுள்ள சந்திரசேகரன், “ஒருவரது வளர்ச்சியில், அவரது தனிப்பட்ட ஆற்றலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் மாரத்தான் போட்டியில் பங்கெடுப்பதற்காக சுமார் 6 மாதங்கள் கடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் போட்டி நாளில் மழை, சீதோஷ்ண நிலை, போட்டி நடக்கும் இடத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போட்டியின் முடிவு மாறும். அதனால்  முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் நமது ஆற்றலை மேம்படுத்துவதில்தான் நாம் நமது திறமையைக் காட்டவேண்டும்” என்கிறார்.

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை டாடா மீண்டும் கைப்பற்றுவதில் முக்கிய சக்தியாக இருந்தார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்திடம் வந்திருக்கிறது. ரத்தன் டாட்டா இருந்த பொறுப்பு இப்போது சந்திரசேகரனிடம் வந்திருக்கிறது. விமானப் போக்குவரத்து துறை கடுமையான நஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் ஏர் இந்தியாவை கையிலெடுத்திருக்கிறார் இந்த சாதனைத் தமிழர்.

சாதிப்பாரா சந்திரசேகரன் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. சாதிப்பார் என்றே அவரது கடந்த கால சரித்திரம் பதில் கூறுகிறது.

 

 

 

 

 

 

 

 

கலைஞனுக்கு மரியாதை – கேரள அரசின் செயல்

 


திரைக் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் கேரள அரசோ அல்லது மக்களோ என்றுமே குறை வைத்ததில்லை.   பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் வீடு விஷயத்தில் அது மீண்டும் ஒருமுறை உண்மையாகி இருக்கிறது.

கேரளாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறையும்,  கதாசிரியருக்கான விருதை 2 முறையும், சிறந்த படத்துக்கான தேசிய விருதை 2 முறையும் இவர் வென்றுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக 2005-ம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதை வென்ற இவர், பின்னர் பத்ம விபூஷண் விருதாலும் கவுரவிக்கப்பட்டார்.  ‘எலிப்பத்தாயம்’, ’மதிலுகள்’, ‘விதேயன் என்று இவர் இயக்கிய பல படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளி வந்துள்ளன. இதனாலேயே கேரள மக்கள் தங்கள் கவுரவத்தின் சின்னமாக அடூர் கோபாலகிருஷ்ணனை பார்க்கிறார்கள்.

இந்த அளவுக்கு கேரள மக்களின் அன்புக்கு பாத்திரமான அடூர் கோபாலகிருஷ்ணனின் பூர்வீக வீடு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ‘மணக்கலா’ என்ற இடத்தில் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில்,  சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அந்த வீட்டை இடிப்பதற்கான பணிகள் தொடங்க இருந்த நிலையில், உள்ளூர் மக்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் சிறுவயதில் வளர்ந்த வீட்டை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்பது அவர்களின் கோஷமாக இருந்தது. பின்னர் போலீஸார் தலையிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போதைக்கு வீட்டை இடிக்க மாட்டோம் என்று அடூர் கோபாலகிருஷ்ணனின் மருமகன் (சகோதரி மகன்) வாக்குறுதி அளிக்க, போராட்டக்காரர்கள் பின்வாங்கினர்.

அதேநேரத்தில்  அடூர் கோபாலகிருஷ்ணன் கல்சுரல் ஸ்டடி சென்டர் என்ற அமைப்பு, இந்த வீட்டை இடிக்க அனுமதிக்க கூடாது என்று கேரள அரசிடம் வலியுறுத்தியது.   இதைத்தொடர்ந்து அந்த வீட்டை அரசுடைமையாக்கி அதை புராதன சின்னமாக அறிவிக்கும் முயற்சிகளில் கேரள அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கலாச்சார துறை இயக்குநருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 கேரள மக்கள் அடூர் கோபாலகிருஷ்ணன் மீது வைத்துள்ள பாசத்தை மெச்சும் முன், அவர்களுக்கு அடூர் செய்த உதவியையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். “ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கும் திட்டத்துக்காக, பணக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு நிலத்தை வழங்க வேண்டும்” என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

மற்றவர்கள் ஏற்றார்களோ இல்லையோ, அடூர் கோபால கிருஷ்ணன் இதை ஏற்றுக்கொண்டார்.  அடூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கடந்த பிப்ரவரி மாதம் வழங்கினார். அந்த அன்புக்கு கேரள மக்களும் அரசும் காட்டும் பிரதிபலனாகவும் இது இருக்கலாம்.

 

 

 

சிஎஸ்கேவின் கதை

 


1.ஸ்டார்ட்டிங் பாயிண்ட்

இந்திய கிரிக்கெட்டை உச்சாணிக் கொம்புக்கு கொண்டுபோன ஆண்டு 1983. இந்த ஆண்டில்தான் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று புகழின் உச்சத்தைத் தொட்டது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றபோது இந்திய வீரர்களுக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?... வெறும் 2,100 ரூபாய். இதில் போட்டியில் ஆடுவதற்கான சம்பளம் ரூ.1,500. தினசரி அலவன்ஸ் ரூ.600.

ஆனால் இன்று சாதாரண ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடும் வீரர்கள்கூட லட்சங்களிலும் கோடிகளிலும் பணத்தை அள்ளிச் செல்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் காட்டில் இப்படி பண மழை பெய்வதற்கு முக்கிய காரணம் ஐபிஎல். இத்தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைக்கும் பணத்தைப் பார்த்து மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களெல்லாம் வாயைப் பிளக்கின்றன.

2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்விதான் இந்த ஐபிஎல் தொடருக்கு வித்திட்டது. இந்த தொடரில் முதல் சுற்றிலேயே இலங்கை மற்றும் வங்கதேச அணிகளிடம் தோற்று இந்தியா வெளியேற, அதற்கு புத்துணர்ச்சியூட்டும் வழிகளை கிரிக்கெட் வல்லுநர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

இந்த காலகட்டத்தில் சுபாஷ் சந்திரா (ஜீ தொலைக்காட்சியின் அப்போதைய உரிமையாளர்)  என்பவருக்கு சொந்தமான எஸ்ஸெல் ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடட் நிறுவனம் ஐசிஎல் (இந்தியன் கிரிக்கெட் லீக்) என்ற கிரிக்கெட் தொடரை தொடங்குவதாக அறிவித்தது.  1977களில் கெர்ரி பாக்கர் (Kerry Packer) என்பவரால் தொடங்கப்பட்ட உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் இத்தொடரை நடத்த சுபாஷ் சந்திரா திட்டமிட்டார். இத்தொடரை நடத்துவதற்கான முக்கிய பொறுப்பில் கபில்தேவை நியமித்தார்.

கபில்தேவும், சுபாஷ் சந்திராவும் இணைந்து மிகப்பெரிய கனவுடன் இத்தொடரை தொடங்கினர்.  9 அணிகளை நியமித்து வீரர்களையும் தேர்வு செய்தனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை ரசிக்கவில்லை. கிரிக்கெட் ஆட்டத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒருவர் ஐசிஎல்  என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை நடத்தக்கூடாது என்று கூறி, இதில் விளையாடும் வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.  அதே நேரத்தில் அதற்கு மாற்றாக மற்றொரு தொடரை நடத்த தீர்மானித்தது.  இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அப்போதைய துணைத் தலைவரான லலித் மோடியிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்தது.

வர்த்தக உலகில் ஏற்கெனவே பல வெற்றிகளைக் குவித்தவரான லலித் மோடி, தன் ஒட்டுமொத்த பிசினஸ் உத்திகளையும் கிரிக்கெட்டில் கொட்டினார். அவரது மூளையில் அப்போது உதயமான தொடர்தான் ஐபிஎல்.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், மொகாலி, ஹைதராபாத் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு அணியையும் ஏலத்தில் விடுவதென்றும், அதிலிருந்து கிடைக்கும் பணத்தை பிசிசிஐயின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது என்றும் திட்டமிடப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட இந்த ஏலத்தில் சென்னையை மையமாகக் கொண்ட அணியை  91 மில்லியன் டாலர்களைக் கொடுத்து (672 கோடி ரூபாய்) இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்கியது. அந்த அணிக்கு வைக்கப்பட்ட பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஒரு படை என்றால் அதற்குத் தலைவன் இருக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் என்று அணிக்கு பெயர் வைத்தாயிற்று. அந்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அதாவது சிறந்த ராஜாக்களைக் கொண்ட அணிக்கு அதிசிறந்த ராஜாவாக ஒரு தலைவன் தேவையல்லவா… சிஎஸ்கே நிர்வாகம் யோசிக்கத் தொடங்கியது.

(சிங்கத்தின் கர்ஜனை தொடரும்)

 

2. தோனிக்காக நடந்த ஏலம்

என்ன விலை கொடுத்தாலும் சரி... தோனியை வாங்கியே தீரவேண்டும்என்ற திட்டத்துடன்  முதலாவது ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றனர் சிஎஸ்கே நிர்வாகக் குழுவினர்.   2007-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தோனி கோப்பையை வென்று கொடுத்த காலம் அது.   சிஎஸ்கே நிர்வாகத்தைப் போலவே தோனியை வாங்குவதில் மற்ற அணிகளும் ஏக தீவிரம் காட்டின.

இந்த ஏலத்தில் பிசிசிஐ ஒரு முக்கிய விதியை விதித்திருந்தது. அதன்படி சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்தர் சேவக், யுவராஜ் சிங் ஆகியோர் ’லெஜண்ட்ஸ்’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். தாங்கள் இருக்கும் நகரத்தைச் சேர்ந்த அணிகளுக்காக இந்த வீரர்கள் ஆடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி சச்சின் மும்பை இந்தியன்ஸுக்கும், யுவராஜ் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், ராகுல் திராவிட் டெக்கான் சார்ஜர்ஸ் (ஹைதராபாத்) அணிக்கும் சென்றுவிட்டார். மேலும்  கங்குலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சேவாக் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் ஒப்பந்தமானார்.

  அப்போது தோனி லெஜண்டாக அறிவிக்கப்படவில்லை. அதனாலேயே அவருக்கென்று எந்த அணியும் இல்லை. அதேபோல் சென்னைக்கென்று எந்த லெஜண்ட் வீரர்களும் இல்லை. இப்படி நாடில்லாத ராஜாவாக தோனியும், ராஜா இல்லாத நாடாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருந்தன. தோனியை சூப்பர் கிங்காக சிஎஸ்கே தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம்.

லெஜண்ட் வகை வீரர்களை வைத்திருக்கும் அணிகள், தங்களுக்காக வாங்கும் மற்ற வீரர்களில் அதிக விலைக்கு யாரை ஏலத்தில் எடுக்கிறார்களோ அதிலிருந்து 15 சதவீதம் அதிக தொகையை லெஜெண்ட்ஸுக்கு கொடுக்க வேண்டும் என்பது மற்றொரு விதியாக இருந்தது.

முதலாவது ஐபிஎல் ஏலத்தில் தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பல்வேறு அணிகளும் அவருக்காக குரல் கொடுத்தன. ஏலம் களை கட்டத் தொடங்கியது. 1 மில்லியன் டாலருக்கு மேல் தோனியின் ரேட் ஏற மற்ற அணிகள் பின்வாங்கின. ஆனால் சென்னையும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனியை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டின. இதனால் தோனியின் மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தோனியின் ரேட் ஏறத் தொடங்கியதும் மும்பை அணி யோசிக்கத் தொடங்கியது.  ஏலம் மேலும் அதிகரித்து தோனிக்கு 15 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டிவந்தால், அதைவிட 15 சதவீதம் அதிகமாக, அதாவது 16.5 கோடி ரூபாயை ‘லெஜண்ட்’ வீரரான சச்சினுக்கு கொடுக்க வேண்டி வரும். ஒவ்வொரு அணிக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையே 60 கோடி ரூபாய்தான். இதில் சச்சினுக்கும், தோனிக்கும் மட்டுமே 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மற்ற வீரர்களை வாங்க பணம் இருக்காதே என்று யோசித்தது.

இதன் காரணமாக கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பின்வாங்க, 11.33 கோடி ரூபாய்க்கு தோனியை வாங்கியது சென்னை ரூப்பர் கிங்ஸ். படைத்தலைவனை வாங்கியாயிற்று… இனி படை வீரர்களை வாங்க வேண்டாமா…

அதற்கான ஏல யுத்தம் தொடங்கியது.

சிங்கம் கர்ஜிக்கும்

 

3. ‘மஜா ஆயேகா தேக்?’

இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கு நெருக்கமானவர்  யார் என்று கேட்டால், சிறு குழந்தைகூட ‘சின்ன தல ரெய்னா’வின் பெயரைச் சொல்லும். அந்த அளவுக்கு ஆரம்ப காலம்தொட்டே இருவரும் நண்பர்கள்.  பிற்காலத்தில் தனக்கு மகள் பிறந்த தகவலையே ரெய்னா மூலமாகத்தான் தோனி தெரிந்துகொண்டார் எனும்  அளவுக்கு ஆழமான நட்பு அவர்களுடையது.

தோனி – ரெய்னா நட்பைப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளும் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர். அதனாலேயே சென்னை அணியில் தோனிக்குத் துணையாக ரெய்னாவைவும் எப்படியாவது இழுத்துப் போட  வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர்.

இந்த ஏலத்தில் 55 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாகக்  கொண்டு ரெய்னாவுக்கான ஏலம் தொடங்கியது. தோனியை ஏலத்தில் எடுக்க முடியாமல் தவறவிட்ட மும்பை அணி, ரெய்னாவையாவது வாங்கியாக வேண்டும் என்று தீவிரம் காட்டியது. மும்பையைப் போலவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரெய்னாவுக்காக முஷ்டியை உயர்த்தியது. ஆனால் இந்த முறையும் வெற்றி சிஎஸ்கேவுக்குத்தான். 2.6 கோடி ரூபாய்க்கு ரெய்னாவைக் கைப்பற்றியது சிஎஸ்கே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே இந்த ஏலத்தை மிகுந்த ஆர்வத்தோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார் சுரேஷ் ரெய்னா. மகேந்திர சிங் தோனியை சென்னை வாங்கியதைத் தொடர்ந்து தன்னையும் அவர்கள் வாங்க வேண்டுமே என்று அவரது இதயம் படபடத்தது. சென்னை தன்னை ஏலத்தில் எடுத்தால், தோனியுடன் இன்னும் நெருக்கமாக வாய்ப்பு கிடைக்குமே என்ற ஆசை அவருக்கு.

 சென்னை அணி தன்னை வாங்கியது தெரிந்ததும் உற்சாகத்தில் குதித்தார் ரெய்னா. அவரது மகிழ்ச்சியைக் கூட்டும் விதமாக அடுத்த நிமிடமே அவரது செல்போன் சிணுங்கியது.   தோனியிடம் இருந்துதான் அந்த எஸ்எம்எஸ் வந்திருந்தது.

 ‘மஜா ஆயேகா தேக்?’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் தோனி. ரெய்னாவின் மகிழ்ச்சி கூடியது. தன்னைப் போலவே தோனியும் தாங்கள் இணைந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டதை நினைத்து அவர் கண்கலங்கினார்.

ரெய்னாவைத் தொடர்ந்து மேத்யூ ஹெய்டன், முத்தையா முரளிதரன், மைக்கேல் ஹஸ்ஸி, ஸ்டீபன் பிளம்மிங் , அஸ்வின், முரளி விஜய் என்று மேலும் பல வீரர்களை ஏலக் குழுவினர் வாங்க சென்னையின் சிங்கப் படை முழுமையடைந்தது. எதிர்காலத்தில் பல வெற்றிகளைக் குவித்து தமிழ் ரசிகர்களின் மனதில் மட்டுமின்றி உலக ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு இது அமரப் போகிறது என்று அப்போது இந்த வீரர்களுக்கு தெரியாது.

 

4. எம்.ஜி.ஆர் ஸ்டைலில்  ஒரு வெற்றி

தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாட்களில் ஒன்று ஏப்ரல் 19. கடந்த 2008-ம் ஆண்டில் இந்த நாளில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ், தனது முதலாவது ஐபிஎல் போட்டியை சந்தித்தது. போட்டியின் இந்தப் பக்கம் இருந்தது ‘தல’ தோனியின் படை என்றால், எதிர்ப்பக்கம்  இருந்தது அப்போதைய ‘தளபதி’ யுவராஜ் சிங்கின் ‘பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்’ அணி. இப்படி  ‘தல’யும் ‘தளபதி’யும் மோதிக்கொண்டதால்  சென்னையின் முதல் ஆட்டத்திலேயே அனல் பறந்தது.

 ‘மிஸ்டர் கிரிக்கெட்’ என அக்காலத்தில் வர்ணிக்கப்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி, இப்போட்டியில் சென்னையின் சிங்கப் பாய்ச்சலைக் காட்டினார். வெறும் 54 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் அவர் 116 ரன்களைக் குவிக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 240 ரன்களைக் குவித்தது சென்னை. மறுபுறத்தில் பஞ்சாப் அணி 207 ரன்களை மட்டுமே எடுக்க, முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்தது சென்னை. முதல் போட்டியில் இருந்த இந்த ரன் குவிக்கும் வேகம் அடுத்தடுத்த போட்டியிலும் சென்னை அணிக்கு கை கொடுத்தது.

ஹஸ்ஸி, தோனி, மேத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் தாக்குதலை முன்னெடுக்க, அதிக ரன்களைக் குவிக்கும் அணியென பெயர் வாங்கியது  சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் அணியின் வெற்றிக்கு பேட்டிங்குடன் நல்ல பந்துவீச்சும் வேண்டுமே.. அந்த விஷயத்தில் ஆரம்பம் முதல் இன்றுவரை சொதப்புவது சென்னைக்கு வழக்கம். முதல் தொடரில் முரளிதரனைத் தவிர  நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாதது சென்னையின் பயணத்தை பாதித்தது. இறுதிப் போட்டிவரை முன்னேறிய சென்னை அணி,  ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல முடியாததால் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருந்து சறுக்கியது.

முதல் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸால்,  2009-ம் ஆண்டில் நடந்த 2-வது ஐபிஎல் தொடரில் அரை இறுதி வரை மட்டுமே முன்னேற முடிந்தது. முதல் 2 முறையும் கோப்பையை வெல்லாத மற்ற பல அணிகளின் நிர்வாகங்களும், தங்கள் அணிக்குள் பல மாற்றங்களைச் செய்தன. ஒருசில அணிகள் கேப்டன்கள் மற்றும் முக்கிய வீரர்களின் தலையை உருட்டின.  ஆனால் சென்னை அணியின் நிர்வாகம் எதையும் செய்யவில்லை. அணியின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாகக் காத்திருந்தது. தாங்கள் விதைத்தது நிச்சயம் முளைக்கும் என்று நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

 பழைய எம்.ஜி.ஆர் படங்களின் சண்டைக் காட்சிகளில் ஒரு விஷயத்தை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன்கள் எம்.ஜி.ஆரை முதல் அடி அடிப்பார்கள். அவரும் அடிவாங்கி ரத்தத்தை துடைத்துக்கொள்வார்.  இரண்டாவது முறையும் எதிராளியின் அடியை அவர் வாங்கிக்கொள்வார். ஆனால் மூன்றாவது முறை சும்மா இருக்க மாட்டார். எதிராளியின் கையைத் தடுத்து முறுக்கி, மறுகையால் ஓங்கி ஒரு குத்து விடுவார்… எதிராளிகள்  சுருண்டுவிடுவார்கள். சிஎஸ்கே விஷயத்திலும் அதுதான் நடந்தது. முதல் இரண்டு தொடர்களில் எதிராளிகளிடம் அடிவாங்கிச் சுணங்கிய சிஎஸ்கே, 3-வது முறை தடுத்துத் தாக்கியது. எதிராளிகள்      சிதறினர்.

இறுதிப் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை. இந்த முதல் வெற்றியின் ருசியை  கூட்டும் விதமாக அதே ஆண்டு நடந்த உலக அளவிலான சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வாகை சூடியது. இப்படி ஒரே ஆண்டில் கிடைத்த இரட்டை வெற்றியால் சென்னையின் மதிப்பு உயர்ந்தது. சென்னை அணியைப் போலவே கேப்டன் தோனியின் மதிப்பும் கூடிக்கொண்டே இருந்தது. 2011-ம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற அது உச்சத்தை தொட்டது.

2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடக்கூட நேரம் இல்லாமல் அடுத்த ஐபிஎல் போட்டியை சந்திக்க சென்னைக்கு பறந்து வந்தார் மகேந்திரசிங் தோனி.

 

5. பிராவோவின் வருகை

ஐபிஎல் தொடரின் முக்கிய விதிப்படி  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். வேண்டுமென்றால்  ‘மேட்ச் தி கார்ட்’ முறையைப் பயன்படுத்தி மேலும் 2 வீரர்களைத் தக்கவைக்கலாம்.  இந்த விதிப்படி 2011-ல் நடந்த ஏலத்தில் புதிதாக உருவான  கொச்சி மற்றும் புனே அணிகளையும்  சேர்த்து 10 அணிகள் கலந்துகொண்டன.

 இந்த ஏலத்துக்கு முன்னதாகவே  தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மோர்க்கெல் ஆகிய 4 வீரர்களைத் தக்கவைத்தது சென்னை. சேப்பாக்கம் மைதானத்தை தங்கள் மைதானமாகக் கொண்டு அடிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்மைதானத்துக்கு சாதகமான வீரர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்தது. சென்னை மைதானத்துக்கு அதிவேகப் பந்துவீச்சாளர்களெல்லாம் தேவையில்லை. ஓரளவு சுமார் வேகத்தில் போடும் மிதவேகப் பந்துவீச்சாளர்களோ, சுழற்பந்து வீச்சாளர்களோ போதும் என்பதால் அதற்கேற்றார்போல் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஹெய்டன் உள்ளிட்டவர்கள் அணியில் இருந்து விடைபெற, அவர்களுக்கு பதிலாக பஃப் டுபிள்ஸ்ஸியையும், பிராவோவையும் ஏலத்தில் அலாக்காக தூக்கியது. புதிய அணி தேர்வு செய்யப்பட்டதும், போட்டிக்கான பயிற்சிகளைத் தொடங்க பறந்து வந்தார் தோனி.

      “மீண்டும் ஒரு கோப்பையை வெல்ல வாய்ப்புக் கிடைத்தால் எதை  விரும்புவீர்கள்? உலகக் கோப்பையா, ஐபிஎல் கோப்பையா அல்லது சாம்பியன்ஸ் லீக் கோப்பையா?” 

-ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்த தோனியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி இது.

 “நான் 3 கோப்பைகளையுமே வெல்ல விரும்புகிறேன். அதில் முதல் கட்டமாக இம்முறை மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்” – என இதற்கு பதிலளித்தார் தோனி.

சொன்னதைப் போலவே இம்முறையும் எதிரணிகளுக்கு தோனியும் அவரது சகாக்களும்   டஃப் கொடுத்தனர்.  பொதுவாக ஒரு அணி 2 முறை கோப்பையை வென்றால், மூன்றாவது முறை கொஞ்சம் மிதப்பில் இருக்கும். அதனால் சில தவறுகளைச் செய்யும்.  

ஆனால் 2 வெற்றித் தொடர்களுக்குப் பிறகும் சென்னை அணியோ, அதன் தலைவன் தோனியோ தலைக்கனத்தில் மிதக்கவில்லை. மாறாக அடுத்தடுத்த வெற்றிகளுக்கு திட்டமிட்டனர்.   அணித்தேர்வின்போது சேப்பாக்கம் மைதானத்துக்கு ஏற்றவாறு பார்த்துப் பார்த்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதால், சென்னையை அசைக்க முடியவில்லை. லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் நடந்த ஒரு போட்டியில்கூட தோற்காமல் அதைத் தங்கள் கோட்டையாக மாற்றி முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் ஆகிய 3 வீரர்களும் 400 ரன்களுக்கு மேல் விளாச, அஸ்வின் 20 விக்கெட்களையும், டக் போலிங்கர் 17 விக்கெட்களையும் கொய்ய இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இம்முறை இறுதிப் போட்டியில் சென்னையிடம் அடி வாங்கிய அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு.

கொஞ்சம் விட்டிருந்தால் 2012-ம் ஆண்டிலும் சென்னை அணி வெற்றியை ருசித்திருக்கும்.  அந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆடியது சென்னை. முதலில் ஆடிய சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்தது. ஹஸ்ஸி 54 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 73 ரன்களையும் குவித்தனர். இத்தனை பெரிய ஸ்கோரை கொல்கத்தாவால் சேஸ் செய்யவே முடியாது என்று அனைவரும் நினைத்த நேரத்தில், அதை மாற்றி எழுதினார்  மன்விந்தர் பிஸ்லா. 48 பந்துகளில் அவர் 89 ரன்களைக் குவிக்க, மறுபுறம் காலீஸ்  69 ரன்களைச் சேர்க்க, வெற்றி தேவதை கொல்கத்தாவை முத்தமிட்டாள்.

3-வது முறையாக கோப்பையை தொடும் நேரத்தில் கடைசி ஓவரில் வெற்றி கைநழுவிப் போக துடித்தன சென்னை சிங்கங்கள். இந்த தோல்விக்கும் சேர்த்து அடுத்த முறை கோப்பையை வெல்வோம் என்ற வைராக்கியத்தில் சென்னை அணி கலைந்து சென்றது. ஆனால் அடுத்த முறை சென்னையை எதிர்நோக்கி புதிய சவால் காத்திருந்தது.  அந்தச் சவாலின் பெயர் சூதாட்டம்..

6. சூதாட்டத்தின் நிழலில்

வீரர்களை அடிக்கடி மாற்றும் பழக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்ததில்லை. மற்ற  அணிகளெல்லாம்  ஆண்டுக்கு ஒருமுறை வீரர்களை மாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில் சிஎஸ்கே மட்டும் தங்கள் வீரர்களை மாற்றாமல் கூட்டுக் குடும்பமாக   வைத்திருந்தது. 2013-ம் ஆண்டிலும் சென்னையின் இந்த அணுகுமுறை மாறவில்லை. 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆடிய 16 வீரர்களை அப்படியே 2013-ம் ஆண்டிலும் தக்கவைத்தது சென்னை.  வேகப்பந்து வீச்சில் மட்டும் கூடுதல் வலிமையைச் சேர்ப்பதற்காக ஜெசன் ஹோல்டர், டிர்க் நெனஸ் ஆகியோரைச் சேர்த்திருந்தது.

முதல் போட்டியில் மும்பை அணியிடம் தோற்றபோதிலும் சென்னையின் முன்னேற்றத்துக்கு இந்த முறையும் பங்கம் ஏற்படவில்லை. எப்போதும்போல் லீக் ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்து முன்னேறியது.

ஆடுகளத்தில் சென்னை அணி பீடுநடை போட்டாலும், மைதானத்துக்கு வெளியே இந்த ஆண்டு சென்னைக்கு சிக்கல் எழத் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது சூதாட்டத்தின் சந்தேக நிழல் படியத் தொடங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களாக இருந்த ஸ்ரீகாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் சூதாட்ட தரகர்களுடன் பேசியதற்கும், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கும் ஆதாரம் இருப்பதாக டெல்லி போலீஸார் பதிவுசெய்த வழக்குதான் இந்த சூதாட்டப் புகார்களுக்கு தொடக்கப் புள்ளி.  இந்த புகார்களின் அடிப்படையில் 3 வீரர்களும் கைது செய்யப்பட,   ஐபிஎல்லில்  புயல் வீசியது.

இதைத் தொடர்ந்து  சூதாட்ட புரோக்கராக செயல்பட்ட விது தாரா சிங், வைர வியாபாரியான பிரியங் செபானி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதில் விது தாரா சிங்கிடம் நடத்திய  விசாரணையில், அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியாக கருதப்பட்டவரும்,  அப்போதைய பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இருவரும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் இருந்ததாக  போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மே 24-ம் தேதி குருநாத் மெய்யப்பன்  போலீஸாரின் விசாரணைக்கு  அழைக்கப்பட்டார். விசாரணையின் இறுதியில் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத்  தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பினர். பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. அதே நேரத்தில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் தலைமை நிர்வாகி அல்ல என்றும் நிர்வாகக் குழுவில் ஒரு சாதாரண உறுப்பினராகவே அவர் இருந்தார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.   இருப்பினும் சென்னையைச் சுற்றியிருந்த சந்தேக நிழல்கள் அகலாமல் இருந்தன.

இப்படி ஆட்டத்துக்கு வெளியில் சென்னை அணியின் கழுத்தை பலரும் நெறித்திருந்த நேரத்திலும் சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மே 26-ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை, சென்னை சிங்கங்கள் எதிர்கொண்டன.

 ஒருபக்கம் வலுவான மும்பை அணி, மறுபக்கம் சூதாட்டப் புகார்கள் என ஒரே நேரத்தில் 2 விஷயங்களை எதிர்த்து சென்னை அணி போராடவேண்டி இருந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களைச் சேர்த்தது. சென்னை வெற்றிபெற 149 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னையின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை இது மிகவும் சாதாரண இலக்குதான். ஊதித் தள்ளிவிடலாம்தான்.

ஆனால் மைதானத்துக்கு வெளியே சூதாட்டப் புகாரால் சென்னை அணிக்கு இருந்த நெருக்கடி ஆட்டத்தில் எதிரொலித்தது. எந்தக் கட்டத்திலும் பதறாத தோனி மட்டும், இப்பொதும் ஒருபுறம் நங்கூரம் அடித்து நின்றார். 63 ரன்களைச் சேர்த்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால் மறுபுறம் விக்கெட்கள் சரிய 20 ஓவர்களில் சென்னையால் 120 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது சென்னை.

 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியைவிட, அணியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். “அணி மீதோ அல்லது அணியின் உரிமையாளர்கள் மீதோ புகார்கள் வந்தால், குறிப்பிட்ட அந்த அணிக்கு தடை விதிக்கப்படும்” என்று பிசிசிஐ விதியில் குறிப்பிடப்பட்டிருந்ததே இதற்கு காரணம். இந்தச் சூழலில் சூதாட்டப் புகார்கள் குறித்து விசாரிக்க மூவர் குழுவை நியமித்து மே 26-ம் தேதி உத்தரவிட்டது பிசிசிஐ.

7.சிங்கங்களுக்கு வந்த சோதனை

2013-ம் ஆண்டின் ஐபிஎல்லுக்குப் பிறகு, அடுத்த 2 தொடர்களில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறினாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் வீரர்களும் ரசிகர்களும் சோர்ந்தனர். அதே நேரத்தில் சூதாட்டம் தொடர்பான விசாரணையும் சூடுபிடிக்கத் தொடங்கியது.  விசாரணை வளையத்தில்  குருநாத் மெய்யப்பன் சிக்கியிருந்ததால், எங்கே அந்த நெருப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொசுக்கிவிடுமோ என்று அதன் நிர்வாகிகள் கவலைப்பட்டனர்.

சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. பல்வேறு காரணங்களால் அவருக்கு எதிர் தரப்பில் இருந்த சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒன்றுகூடி பொதுக்குழுவில்  நெருக்கடி கொடுத்தன. இந்த எதிர்க்குழுவுக்கு சரத் பவார் தலைமை தாங்கினார். சீனிவாசனை பதவியில் இருந்து இறக்கி,  தனது ஆதரவாளரான சஷாங்க் மனோகரை அந்த இடத்தில் அமரவைப்பது சரத்பவாரின் லட்சியமாக இருந்தது.

சீனிவாசன் தரப்புக்கும், சரத்பவார் தரப்புக்கும் இடையே  பிசிசிஐ முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா பாலமாகச் செயல்பட்டார். இரு தரப்புடனும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்த அருண் ஜெட்லி, ராஜீவ் சுக்லா, அனுராக் தாக்குர் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மிக நீ…ண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு  சூதாட்ட புகார் தொடர்பான விசாரணை முழுமையாக முடியும்வரை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சில காலம் ஒதுங்கியிருக்க (பதவி விலக அல்ல, பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க) சீனிவாசன் ஒப்புக்கொண்டார். ஆனால் சரத்பவார் தரப்பினரிடம் பதவியை ஒப்படைக்க முடியாது என்பதிலும் பிடிவாதமாய் இருந்தார்.  இதனால் இடைக்கால பொறுப்பாளராக ஜக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டார். பிசிசிஐ நியமித்த குழு, மெய்யப்பனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ராவும் சூதாட்ட விஷயத்தில் தவறு ஏதும் செய்யவில்லை என அறிக்கை சமர்ப்பித்தது.

மும்பை உயர் நீதிமன்றம் இந்த அறிக்கையை நிராகரிக்க, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது பிசிசிஐ. இடைப்பட்ட காலத்தில் மூவர் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவராக மீண்டும் சீனிவாசன் பொறுப்பேற்றார். அதை எதிர்த்தும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

அதே நேரத்தில்  சூதாட்ட புகார் பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முட்கல் கமிட்டி, 2014-ம் ஆண்டில்   தனது அறிக்கையை அளித்தது. அதில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்தியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்த 10 அம்ச திட்டத்தையும் பரிந்துரைத்தது. “சூதாட்ட ஊழல் கண்காணிப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தலாம், விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்த 10 அம்ச திட்டத்தில் இருந்தன. இந்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் மூக்கை நுழைக்கத் தொடங்கியது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் மீண்டும் கீழிறக்கப்பட்டார். அப்போதே அடுத்த அடி தங்கள் மீதுதான் விழும் என்று சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்த்தது.

சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்த்ததைப் போலவே, சென்னை சிங்கங்களுக்கு சோதனை வந்தது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தோனியும், தோழர்களும் கலங்கிப் போனார்கள்.

  8. தடைக்காலத்தில் தவித்த ‘தல’யின் படை

தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு மிகவும் வேதனையளித்த ஆண்டு 2016. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்த கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த ஆண்டு மிகுந்த வேதனையை அளித்தது. சூதாட்ட பிரச்சினையால் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஆடவில்லை என்பதே இந்த வேதனைக்கு காரணம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு மாற்றாக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல்லில் சேர்க்கப்பட்டன. ஒருதாய் பிள்ளைகளாய் ஒரே அணியில் இருந்த சிஎஸ்கே வீரர்கள் இந்த இரு அணிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. இதன்படி தோனி, பப் டுபிளெஸ்ஸி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகிய வீரர்கள் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடினர். இதில் புனே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.  ஜடேஜா, பிராவோ, மெக்கல்லம், ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஆடினர். தங்கள் மனம் கவர்ந்த அனியான சென்னையை விட்டு மற்ற அணிகளில் ஆடுவது அந்த வீரர்களின் மனதைப் பிசைந்தது.

இதுபற்றி பின்னாளில் கருத்து தெரிவித்த மஹேந்திர சிங் தோனி, “2016-ம் ஆண்டில்   சென்னைக்காக ஆடாமல் புனே அணிக்காக ஆடும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. அதிலும் போட்டியில் ஆடுவதற்காக புனே அணியின் சீருடையை அணிந்து சென்றபோது மஞ்சள் நிற சீருடையை அணியாமல் இருந்தது மனதை வருத்தியது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 ஆண்டுகள் ஆடியிருந்தேன். திடீரென்று அந்த பந்தம் அறுந்துபோனது மனதை அழுத்தியது. மிகவும் சோகமாக இருந்தது. அதே நேரத்தில் நான் ஒரு தொழில்முறை ஆட்டக்காரன் என்பதால் என் மனதை தேற்றிக்கொண்டேன். என் அப்போதைய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக முழுமனதுடன் விளையாடத் தயாரானேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரான ட்வைன் பிராவோ, “உலகின் தலைசிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய நிலையில், 2016-ல் அவரது தலைமை இல்லாமல் ஆடுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது” என்கிறார்.

இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைய, சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது.

அடுத்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இப்படியாக 2 ஆண்டுகள் தடைக்காலம் முடிய 2018-ம் ஆண்டில் சென்னை அணி மீண்டும் உயிர் பெற்றது. இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு முன்னதாகவே தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்தது. இந்த சூழலில் ஏலத்துக்கு முன் அணியின் நிர்வாகத்தை தொடர்புகொண்ட தோனி, என்ன விலை கொடுத்தாவது தனக்கு பழைய சென்னை அணி வீரர்களை பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். “சிஎஸ்கே என்பது வெறும் அணி மட்டுமல்ல. அது ஒரு குடும்பம். இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு மீண்டும் வேண்டும்” என்பதே சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தோனி விடுத்த கோரிக்கையின் சாராம்சம். இதை மனதில் வைத்துக்கொண்டு ஏலத்துக்கு தயாரானது சிஎஸ்கே நிர்வாகம்.

9. காவிரி பிரச்சினையால் வந்த சிக்கல்…

துடிப்பான இளம் வீரர்கள் வேண்டுமா அல்லது தோனிக்குப் பிடித்த பழைய வீரர்கள் வேண்டுமா என்ற கேள்வி எழுந்த சூழலில் தோனிக்கு சாதகமான முடிவை எடுத்தது சிஎஸ்கே நிர்வாகம். 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் பழைய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது.

ரைட் டு மேட்ச் முறையில் பப் டுபிளெஸ்ஸி, ட்வைன் பிராவோ ஆகியவர்கள் முதலில் மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து முரளி விஜய், ஷேன் வாட்சன், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர்,   ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், அம்பட்டி ராயுடு ஆகியோரும் வாங்கப்பட்டனர். இதில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோரைத் தவிர மற்றவர்கள்  30 வயதைக் கடந்தவர்கள். இதனால் ஏலத்துக்குப் பின்னர் ‘டாடீஸ் ஆர்மி’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் அடித்தனர். ஆனால் சிஎஸ்கே நிர்வாகமும் தோனியும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. வெற்றிக்கு இந்தப் படை போதும் என்று நம்பிக்கையுடன் இருந்தது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி பங்கேற்ற முதல் போட்டி 2018 ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை எதிர்கொண்டது. முதலில் ஆடிய மும்பை அணி 165 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய சென்னை 84 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்தது. சென்னையை விட்டு ஆட்டம் கைவிட்டுப் போனதாக அனைவரும் கருதிய நிலையில் அதற்கு உயிர்கொடுத்தார் பிராவோ. கடைசி கட்டத்தில் வெறும் 30 பந்துகளில் பிராவோ 68 ரன்களைக் குவிக்க, கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது சென்னை.

அடுத்த ஆட்டம் சென்னையில் நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சிஎஸ்கே ஆடும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. சிஎஸ்கே நிர்வாகமும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மைதானம் முழுக்க மஞ்சள் நிறமாய் மாறி இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் காவிரிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுத்தது.  “விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையில் சென்னையில் கிரிக்கெட் எதற்கு?” என்ற கேள்வியுடன் தமிழர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போட்டியை நடத்த விடமாட்டோம் என்று எச்சரித்தன. அதையும் மீறி சென்னையில் ஆட்டத்தை நடத்த பிசிசிஐ முடிவெடுக்க, போலீஸாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்தச் சூழலில் போட்டி நடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் பெரிய அளவில் சாலை மறியல் நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் அணிகளை சேப்பாக்கம் மைதானத்துக்குள் கொண்டு செல்லவே போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டனர். போட்டியின்போதும் ரசிகர்கள் சிலர் இடையூறு செய்தனர்.

பல இன்னல்களுக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது. அதேநேரத்தில் பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் இப்போட்டி நடத்தப்பட்டதால், சென்னையில் இனியும் போட்டிகளை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து சென்னை அணி பங்கேற்ற போட்டிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டன. மிகுந்த மனச்சுமையுடன் சென்னையை விட்டுச் செல்வதாக ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிஎஸ்கே ரசிகர்களும் தங்கள் வீரர்களை கண்ணீருடன் அனுப்பிவைத்தனர்.

 

 

சிஎஸ்கேவின் கதை -10

திருப்பி அடித்த சென்னை சிங்கங்கள்

சென்னையில் ஆட முடியாவிட்டாலும் 20218-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள்  சிஎஸ்கே வீரர்கள். 2 ஆண்டு தடைக்காலத்துக்குப் பிறகு மீண்டும் ஆடவந்த நிலையில் அந்த சுணக்கம் சற்றும் வெளிப்படாத வகையில் சென்னை அணி கோப்பையை வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் நடந்த  ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசி ஓவரில் வெற்றியை இழந்தது.

இப்படி தொடர் வெற்றிகளால் ஐபிஎல் சாம்ராஜ்யத்தில் தங்கள் கொடியை பறக்கவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸுக்கு  2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி மிகப்பெரிய சவாலாய் அமைந்தது. கொரோனா காரணமாக அந்த ஆண்டில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்கவில்லை. அதற்கு பதிலாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்தது.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இந்திய மைதானங்களை கருத்தில்கொண்டு, அதிலும் குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கருத்தில்கொண்டு அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். சென்னை மைதானத்துக்கு மிகப்பெரிய அளவில் வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை என்பதால் மித வேகப் பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் அணியில் அதிகமாக கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஆண்டில் போட்டி நடந்த சார்ஜா, துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் இந்த அணித்தேர்வு கைகொடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தார். தோனியின் வலதுகரமாக விளங்கிய அவரது திடீர் விலகல் சிஎஸ்கே வீரர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

போட்டிக்கு முன்னதாக வீரர்கள் தங்கும் அறையை ரெய்னா பார்த்ததாகவும் அப்போது தோனி தங்கும் அறையில் மட்டும் பால்கனி இருப்பதைப் பார்த்த ரெய்னா, தனக்கும் அதுபோன்ற அறை வேண்டும் என்று கேட்டதாகவும், அணி நிர்வாகம் அதை ஏற்க மறுத்ததால் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தொடருக்கு முன்பாக ரெய்னாவுக்கும், தோனிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்தான் அவர் பாதியில் வெளியேறினார் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் ரெய்னாவின் இந்த திடீர் விலகல், சிஎஸ்கே அணியை கடுமையாக பாதித்தது. இத்தொடரில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், புள்ளிப் பட்டியலின் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டது. முதல் அணியாக இத்தொடரில் இருந்து வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறாத ஒரே தொடர் இந்தத் தொடர்தான்.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதும், அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று பலரும் தெரிவித்தனர். தோனியேகூட இனி ஆடமாட்டார்  என்று கூறப்பட்டது. 2020 தொடர்தான் தோனியின் கடைசி தொடர் என்றும் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடைசி சில போட்டிகளின்போது எதிரணிகளைச் சேர்ந்த வீரர்கள் தோனியிடம் இருந்து அவரது ஜெர்சியை பரிசாக வாங்கினர்.

ஆனால் அந்த தொடர் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, ‘இப்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை’ என்று அறிவித்தார். தோனியைப் போலவே சிஎஸ்கே அணியும் மற்றவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. ஒருசில் வீரர்களை மட்டுமே மாற்றினர்.  ‘சிஎஸ்கே நிர்வாகத்துக்கு அடிபட்டும் புத்தி வரலியே’ என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் தனது அணியை முழுமையாக நம்பியது. பழைய அணியையே இந்த முறையும் களத்தில் இறக்கியது.

தங்களை நம்பிய அணி நிர்வாகத்தை வீரர்களும் கைவிடவில்லை.  ‘டாடீஸ் ஆர்மி’ என்று வயதை வைத்து எல்லோராலும் கிண்டலிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது அதேவேகத்தில் 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் தட்டித் தூக்கியது.

இந்த ஆண்டு முதல் 7போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னை தோற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவ்வளவுதான் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இதுப்போல் தாங்கள் கிண்டல் அடிக்கப் படும்போதெல்லாம் அதே வேகத்தில் வென்று எதிர்வினையாற்றுவது சென்னையின் வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டுவரும் என்று எதிர்பார்ப்போம்.