Powered By Blogger

Wednesday, May 4, 2022

இம்ரான் கான் போட்ட கணக்கு!

 


உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவுக்கு ஏகப்பட்ட நெருக்கடி. நம்ம ஊர் நாட்டாமை கணக்காக, “ரஷ்யாவோட இனி யாரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது” என்று அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் உத்தரவிட்டுள்ளன. அவர்கள் தயவில் வாழும் மற்ற சில நாடுகளும் இதற்கு கட்டுப்பட, நேரு காலம்தொட்டு ரஷ்யாவுடன் நெருங்கிப் பழகிய இந்தியா இவ்விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது.

இந்தச் சூழலில் உக்ரைன் மீது போர் தொடுத்த நாளிலேயே ரஷ்யாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ’அவராச்சும் வந்தாரே’ என்று ரஷ்யாவும் இம்ரான் கானுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இதில் உச்சி குளிர்ந்து போன இம்ரான்கான், “எனக்கு ரொம்ப எக்சைட்மெண்டா இருக்கு’ என்று உருகியிருக்கிறார்.

 ஆனால் இந்த உருக்கத்துக்கு  விலையாக 55 மில்லியன் டாலர்களை இழக்க வேண்டியிருக்கும் என்று அப்போது இம்ரான் கான் நினைத்திருக்க மாட்டார்.  புடினை இம்ரான் கான் சந்தித்து பேசிய சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு 55 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா.

ரஷ்யாவைச் சுற்றி இத்தனை பிரச்சினை இருக்க, இந்த நேரத்தில்   இம்ரான் கான் அந்நாட்டுக்குப் பறந்ததற்கு இந்தியாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.  பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனுடன் நெருக்கமான நாடாக இந்தியா இருந்துள்ளது. ஆனால் சோவியத் யூனியன் உடைந்து, ரஷ்யா தனி நாடான பிறகு,   அமெரிக்காவின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா நகரத் தொடங்கியது. அதேநேரத்தில் ரஷ்யாவையும் இந்தியா விட்டுக்கொடுக்கவில்லை. இப்படி ஒரே நேரத்தில் இரு பெரும் வல்லரசுகளின் தோழனாக இந்தியா இருப்பது பாகிஸ்தானின் கண்ணை உறுத்தியது.

தாலிபான் மற்றும் தீவிரவாதிகள் பிரச்சினைக்குப் பிறகு, இனியும் அமெரிக்காவோடு சேர்ந்து போக முடியாது என்று முடிவெடுத்த பாகிஸ்தான், ரஷ்யாவுடன் நெருங்க முயற்சிக்கிறது. அதற்கு சீனாவும் உதவி செய்கிறது.  இந்தச் சூழலில், ரஷ்யாவுக்கு இக்கட்டான நிலை இருக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் காண்பித்தால் ரஷ்யாவின் ஆதரவைப் பெறலாம் என்று இம்ரான் கான் நினைப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்யா மீது பல  நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து எரிபொருளைப் பெறவும்  இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இம்ரான் கான் போட்ட கணக்கு இப்படி இருக்க, போர்ச் சூழலில் அவர் ரஷ்யாவுக்குச் சென்றது இருவேறு கருத்துகளை ஏற்படுத்தி உள்ளது.   பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான ‘டான்’, “ஏற்கெனவே மேற்கத்திய நாடுகள் மத்தியில் பாகிஸ்தானுக்கு நல்ல பெயர் இல்லை. இந்த சூழலில் ரஷ்யாவுக்கு இம்ரான் கான் சென்றுள்ளது அந்த கெட்ட பெயரை மேலும் அதிகரிக்கிறது. ரஷ்யாவுக்கு இம்ரான் கான் சென்றது தவறில்லை. ஆனால் இந்த பயணத்துக்கு அவர் தேர்ந்தெடுத்த நேரம்தான் சரியில்லை” என்று குறிப்பிட்டுள்ளது. 

அதே நேரத்தில் மற்றொரு பத்திரிக்கையான ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’, “ரஷ்யாவுடனான நெருக்கத்தை அதிகரிக்க இந்தப் பயணம் உதவும். இதன்மூலம் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் ரஷ்யாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இம்ரான் கானின் ரஷ்ய பயணம் பற்றி அந்நாட்டு மக்களிடமும் இதேபோன்று மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய பயணத்தில் இம்ரான் கான் போட்ட கணக்கு சரியாகுமா அல்லது அவரது கணக்குகள் தவறாகி பாகிஸ்தானுக்கு சிக்கல்கள் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

  

No comments:

Post a Comment