Powered By Blogger

Monday, October 31, 2022

கங்குலியை வீழ்த்தியது பாஜகவா? சீனிவாசனா?

 

கங்குலியை வீழ்த்தியது பாஜகவா? சீனிவாசனா?

சவுரவ் கங்குலிக்கென்று ஒரு ராசி உண்டு. சரசரவென்று புகழின் உச்சிக்கு போவார். ஆனால் எந்த வேகத்தில் மேலே ஏறினாரோ, அதே வேகத்தில் கீழே இறக்கப்படுவார். 1990-களில்  சாதாரண பேட்ஸ்மேனாக இந்திய அணிக்குள் நுழைந்த கங்குலி,  சில ஆண்டுகளிலேயே கேப்டன் பதவியைப் பெற்றார். ஆனால் தோனியைப்போல் தான் விரும்பும் வரையில் இப்பதவியில் அவரால் நீடிக்க முடியவில்லை. சில  ஆண்டுகளில்  கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.  இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக வீற்றிருந்த கங்குலிக்கு, பதவி நீட்டிப்பு வழங்காமல் அவரை வெளியேற்றி இருக்கிறார்கள்.

 “கங்குலியை பாஜகவில் சேர்க்க முயற்சி நடந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அரசியலில் இணையமாட்டேன் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். அதனால்தான் அவரது பதவியை பாஜகவினர் பறித்திருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டி இருக்கிறது மம்தாவின் திருணாமூல் காங்கிரஸ் கட்சி. பாரதிய ஜனதா கட்சியோ இந்த குற்றச்சாட்டை அவசரமாக மறுத்திருக்கிறது. உண்மையில் பாஜகவில் சேராததால்தான் சவுரவ் கங்குலியின் பதவி பறிபோனதா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான சீனிவாசன்தான் அவரை வீழ்த்தினார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 2 தரப்பும் சொல்வதை விலாவரியாக பார்ப்போம்…

தமிழகத்தில் ரஜினிகாந்த் எப்படியோ, அப்படித்தான் மேற்கு வங்கத்தில் சவுரவ் கங்குலி. ‘தாதா’,  ‘பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா’ ‘பெங்கால் டைகர்’ என்று பல பெயர்களில் வங்காள மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். இந்த புகழுரைக்கு ஏற்ற வகையில் எந்த இடத்திலும் தனது கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார் கங்குலி.

இதற்கு உதாரணமாக 2 சம்பவங்களைச் சொல்லலாம்.

 

2002-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மும்பையின் வாங்கடே மைதானத்தில் இந்த தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்திய அணி ஒரு ஓவரில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப், வெற்றிக்குத் தேவையான ரன்களைக் கொடுக்காமல் இந்தியாவைத் தோற்கடித்தார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாங்கடே மைதானத்தில் தன் சட்டையை கழற்றி சுழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயல் இந்தியாவுக்கு அவமானம் என்று கருதிய கங்குலி, அதற்கு பழிவாங்கக் காத்திருந்தார். அதே ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை இந்தியா வெற்றிகொள்ள அதே ஆவேசத்துடன் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. இங்கிலாந்துக்காரர்களால் இதை ஜீரணிக்கை முடியவில்லை.

 

“கிரிக்கெட்டின் மெக்காவாக நாங்கள் கருதும், லார்ட்ஸ் மைதானத்தில், மரியாதை இல்லாமல் எப்படி சட்டையைக் கழற்றலாம்?” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜெப்ரி பாய்காட் கங்குலியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கங்குலி, “உங்களுக்கு வேண்டுமானால் லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்காவாக இருக்கலாம். ஆனால் மும்பை மைதானம்தான் எங்களின் கிரிக்கெட் மெக்கா” என்றார்.

 

இரண்டாவது சம்பவம் கொல்கத்தாவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின்போது நடந்தது.

இந்த போட்டியின்போது கங்குலியை பேட்டி எடுத்த ரவி சாஸ்திரி, “மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் பெயரில் ஸ்டாண்ட் உள்ளது. ஆனால் கொல்கத்தா மைதானத்தில் உங்கள் பெயரில் ஸ்டாண்ட் இல்லையே ?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கங்குலி, “அங்கு ஸ்டாண்ட்தான் சச்சினுக்கு. ஆனால் இங் மைதானமே எனக்கு சொந்தம்” என்றார்.

 

இப்படி தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் குணத்துக்காகவே வங்காளிகள் மத்தியில் சவுரவின் இமேஜ் உயர்ந்து நிற்கிறது. இந்த காரணத்தாலேயே தமிழகத்தில் ரஜினியைப் போல் மேற்கு வங்கத்தில் கங்குலியை இழுக்க முயன்றுள்ளது. இந்த சூழலில்தான் ஜெக்மோகன் டால்மியாவின் ஆதரவாளர்களின் ஆதரவுடன் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தைக் கைப்பற்றியுள்ளார் சவுரவ் கங்குலி. இந்த நெரத்தில் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா கங்குலியுடன்  நெருங்கியுள்ளார்.  3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூட்டணி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கைப்பற்றியது. பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளராக அமித் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

இந்த நட்பை வைத்து அவரை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. ஆனால் ரஜினியைப் போல் கங்குலியும் கழுவும் நீரில் நழுவும் மீனாக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் பாஜகவை ஆதரிக்கவில்லை. அக்கட்சியும் தோல்வியைத் தழுவியது. அந்த கோபத்தில்தான் இப்போது கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறது திருணாமூல் காங்கிரஸ்.

 

 ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் விசாரித்தால் வேறு ஒரு தகவலைச் சொல்கிறார்கள். “கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பவர் கிரிக்கெட் சார்ந்த வேறு எந்த லாபம் தரும் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் கங்குலி பல விளம்பரப் படங்களில் நடித்தார். இதில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் ஒன்று.  அவர் நடித்த விளம்பரப் படங்களில் இருந்த நிறுவனங்கள் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இது கிரிக்கெட் வாரியத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுதான் அவருக்கு பதவி நீட்டிப்பு வாழங்கப்படாததற்கான காரணம்” என்று வாரிய உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.

 

அதுபோல் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்துகொண்டு  சர்ச்சைக்குரிய பல கருத்துகளை அவர் தெரிவித்ததும் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் பிசிசிஐ உறுப்பினர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை பல கோஷ்டிகள் உள்ளன. இதில் டால்மியா கோஷ்டியும், முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் கோஷ்டியும் முக்கியமானவை. இந்த 2 கோஷ்டிகளுக்கும் நடுவே சரத் பவார் கோஷ்டியும் உள்ளது. இதில் கங்குலி, டால்மியா கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்துள்ளார் என்.சீனிவாசன். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கங்குலியின் கடந்த கால செயல்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தனக்கு பதவி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை.

 

  இதனால் கங்குலி அப்செட் ஆகியுள்ளார். அவரைச் சமாதானப்படுத்தும் நோக்கில்  ஐபிஎல் போட்டிகளுக்கான தலைவர் பதவியை வழங்குவதாக கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை கங்குலி ஏற்கவில்லை. பொதுவாக ஒரு தலைவர் பதவியில் இருந்து விலகும்போது அடுத்த தலைவரின் பெயரை அவர்தான் முன்மொழிவார். ஆனால் அந்த நடைமுறையையும் கங்குலி பின்பற்றவில்லை. அடுத்த தலைவரை முன்மொழியாமல் கூட்டத்தில் இருந்து அவர் வெளியேற, ரோஜர் பின்னியை அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

 

ரோஜர் பின்னியை தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் அவர் அமைதியானவர், தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காதவர் என்பது. முன்பு ஒரு முறை பின்னி தேர்வுக் குழுவில் இருந்த காலத்தில் அவரது மகன் ஸ்டூவர்ட் பின்னியை இந்திய அணியில் சேர்ப்பது குறித்த விவாதம் வந்துள்ளது. அப்போது, “என் மகனின் பெயர் விவாதிக்கப்படும்போது நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது” என்று கூறி தேர்வுக் குழு கூட்டம் நடந்த அறையில் இருந்து வெளியேறினார் பின்னி.

 

பின்னியின் அந்த குணம், இப்போது தலைவர் பதவியை கைப்பற்ற அவருக்கு உதவி செய்துள்ளது. மேலும் தலைவராக வருபவர் தங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தில் உள்ள கோஷ்டிகளின் விருப்பமும் அவர் தலைவரானால் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

 

எது எப்படியோ, கிரிக்கெட் வாரியத்தில் காங்குலியின் தலை உருண்டிருப்பதால்  மழிச்ச்சியில் இருக்கிறார்கள் கோலியின் ரசிகர்கள்தான். இந்திய அணியில் தனிக்காட்டு ராஜாவான கோலியிடம் ஆலோசிக்காமாலேயே   அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் கங்குலியின் கை இருந்ததாக கூறப்பட்டதே இதற்கு காரணம்.

 

தான் கீழே விழும்போதெல்லாம், அதேவேகத்தில் எழுந்து வருவது கங்குலியின் குணம். இப்போதைக்கு அவர் வீழ்ந்தாலும், பாழைய டால்மியாவின் ஆதரவாளர்கள் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்கள் உதவியுடன் தாதா மீண்டு வருவாரா, பதிலடி கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

    

 

ஐஎன்எஸ் விக்ராந்த்

 

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தால் கட்டப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான  IAC-1  இந்திய கப்பல்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் இந்திய கப்பல்படையில் அது விரைவில் தன் பணியைத் தொடங்கவுள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பலைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்…

முன்பெல்லாம் ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல்களையே  போர்களில் இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் முதல் முறையாக விக்ராந்த் கப்பலை இந்தியா தயாரித்துள்ளது. இந்த போர்க்கப்பலை தயாரித்ததன் மூலம் இத்தகைய கப்பல்களை தயாரிக்கும் ஆற்றல் வாய்ந்த 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது.

இந்தியக் கப்பல் படைக்காக 1961-ம் ஆண்டுமுதல் 1997-ம் ஆண்டுவரை பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடம் இருந்து வாங்கிய இக்கப்பல் 1971-ம் ஆண்டில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்தது. அந்த போர்க்கப்பலின் நினைவாக இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட IAC-1 போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது.

 

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை உருவாக்க 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

40 ஆயிரம் டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பல், 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக் 29 கே வகை போர் விமானங்கள்,  கமோவ்-31 வகை ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இந்த போர்க்கப்பலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

23 ஆயிரம் டன் ஸ்டீல், 2,500 கிலோமீட்டர் நீள மின்சார கேபிள்கள், 150 கிலோமீட்டர் நீள பைப்லைன்கள், 2,000 வால்வுகள் உள்ளிட்டவை ஐஎன்எஸ்  விக்ராந்த் போர்க்கப்பலை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

2,300 கம்பார்ட்மென்ட்களைக் கொண்ட இந்த விமானம்தாங்கி கப்பலில் 1,500 கப்பல்படை வீரர்கள் பயணிக்க முடியும்.

இந்த விமானம் தாங்கி கப்பலைக் கட்ட 5 ஆண்டுகள் ஆகியுள்ளன.

இந்த கப்பலை உருவாக்கும் முயற்சியில் சுமார் 50 நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 பணியாளர்கள் தினந்தோறும் பணியாற்றினர். மறைமுகமாக இந்த கப்பலுக்கான பணிகளில் 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்திய கப்பல்படையின் பணியில் ஈடுபடுத்தப்பட்டதும், இந்தியாவின் 2-வது விமானம்தாங்கி கப்பல் என்ற பெருமையையை ஐஎன்எஸ் விக்ராந்த் பெறும். இந்திய கப்பல்படையிடம் ஏற்கெனவே ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற போர்க்கப்பல் உள்ளது.

 

 

 

73 வயதில் கிடைத்த வேலை -அரசரான சார்லஸ்

 


’73 வயதான வேலையில்லா மனிதருக்கு இப்போது வேலை கிடைத்துவிட்டது’ –இங்கிலாந்தின் அரசராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றபோது இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட தலைப்பு இது. இங்கிலாந்து அரசர்களிலேயே மிக அதிக வயதில் பதவியேற்பவர் சார்லஸ் என்பதுதான் இந்த தலைப்புக்கான அர்த்தம்

 

கூடவே மூன்றாம் சார்லஸ் மீது இங்கிலாந்து மக்கள் வைத்திருக்கும் மரியாதைக்கான எடுத்துக்காட்டாகவும் இதைக் கருதலாம். இங்கிலாந்தை கடந்த 70 ஆண்டுகாலம் ஆண்ட ராணி எலிசபெத்தை, அந்நாட்டு மக்கள் மிகவும் விரும்பினார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக மூன்றாம் சார்லஸ் மீது மக்களுக்கு அத்தனை விருப்பமில்லை. சார்லஸைவிட அவரது முதல் மனைவியான டயானா மீதுதான் இங்கிலாந்து மக்களுக்கு அன்பு அதிகம்.டயானாவை சார்லஸ் விவாகரத்து செய்திருக்க கூடாது என்று இன்னும் அங்குள்ளவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.   

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே திருமணமான கமீலாவை சார்லஸ் காதலியாக வைத்திருந்ததும் பிறகு அவரைத் திருமணம் செய்துக் கொண்டதும் கூட இங்கிலாந்து மக்களுக்கு சார்லஸ் மீது வெறுப்பு ஏற்பட காரணம்.    

மக்களின் இந்த வெறுப்பை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சிகளில் மூன்றாம் சார்லஸ் ஈடுபட்டுள்ளார். பல தொண்டு அமைப்புகளை அவர் நடத்தி வருகிறார். தான் இப்போது அரசராகி விட்டாலும், தனது நண்பர்கள் அந்த அமைப்புகளை தொடர்ந்து நடத்துவார்கள் என்று கூறியுள்ளார் சார்லஸ்.  தன் பொறுப்புகளை உணர்ந்துள்ளதாகவும் அதன்படி நடப்பேன் என்றும் உறுதி கூறியுள்ளார் சார்லஸ். இருப்பினும் பதவியேற்பு விழாவின்போது பணியாளர்களிடம் கடுகடுப்பாக அவர் நடந்த விதம் இங்கிலாந்து மக்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.

 

மக்களிடம் மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ, இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்பதால் ஏராளமான சொத்துகளும், உரிமைகளும் சார்லஸுக்கு கிடைக்கவுள்ளன. அவற்றில் சில…

இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்றதுடன்,  ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து  உள்ளிட்ட 14 நாடுகளுக்கும் அரசர் ஆகியுள்ளார் சார்லஸ். 1703-ம் ஆண்டில் கட்டப்பட்ட பக்கிங்காம் அரண்மனைதான் இனி அவரது வசிப்பிடம். 39 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் 775 அறைகள் உள்ளன. இதில் 52 அறைகள் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இப்போது உலகிலேயே வாகனங்களை ஓட்டுவதற்கு டிரைவிங் லைசன்ஸ் தேவைப்படாத ஒரே நபர் இங்கிலாந்து அரசர்தான்.  லைசன்ஸ் மட்டுமின்றி தனது வாகனத்துக்கு நம்பர் பிளேட்டைக்கூட அவர் பொருத்த வேண்டியதில்லை.

இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்றுள்ளதால், உலகில் உள்ள எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இல்லாமல் சார்லஸால் செல்ல முடியும். இங்கிலாந்து மக்களுக்காக பாஸ்போர்ட்கள் அரசர் அல்லது அரசியின் பெயரால் வழங்கப்படுவதால் அவருக்கு இந்த சலுகை உள்ளது.

எல்லோரும் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் சார்லஸ் மட்டும் 2 பிறந்தநாள்களை கொண்டாடுவார். அவரது உண்மையான பிறந்தநாள் நவம்பர் 14-ம் தேதி வருகிறது. அது பனிக்காலம் என்பதால் மக்களால் அந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடியாது. எனவே கோடைகாலத்தில் ஒரு நாள் குறிக்கப்பட்டு அன்றைய தினம் அவரது பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்படும்.

இங்கிலாந்தில் அரசர் வசிக்கும் பக்கிங்காம்  அரண்மனையின் அடித்தளத்தில்,  அரசர் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக ஒரு ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அரசர் மட்டும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

 

நம் நாட்டு அரசர்களை பழங்காலத்தில் புலவர்கள் புகழ்ந்து பாடுவது வழக்கம். அந்த வழக்கம் இங்கிலாந்தில் இன்னும் உள்ளது. அரசரைப் புகழ்ந்து பாடுவதற்காகவே ஒரு புலவர் பணியில் அமர்த்தப்பட்டு அவருக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டுமுதல் சைமன் ஆர்மிடேஜ் என்பவர் இங்கிலாந்து அரண்மனையின் புலவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசருக்காக பாடல்களை இயற்றுவது அவரது கடமை.

இங்கிலாந்து நாட்டின் அரசமைப்பு சட்டப்படி எந்த சூழலிலும் அரசரை யாராலும் கைது செய்ய முடியாது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப்படி எலிசபெத் ராணியின் தனிப்பட்ட  சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்கள்.  இப்போது எலிசபெத் ராணியின் வாரிசாக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்பதால், அவரது அத்தனை சொத்துகளும் மூன்றாம் சார்லஸைச் சென்று சேரும்.

இந்திய ஜனாதிபதியைப் போலவே பொதுத்தேர்தலில் வெல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நாட்டின் பிரதமராக நியமிப்பது அந்நாட்டு அரசரின் உரிமைகளில் ஒன்றாகும். அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் கூடும் நாளில் அதன் உறுப்பினர்கள் மத்தியில் அரசர்  உரையாற்றுவார்.

மற்ற நேரங்களில் பக்கிங்காம் அரண்மனையை சுற்றிவருவார்.

   

ஒரு நாயகன் உருவாகிறான்! - ரிஷப் பந்த்

 


 

“என் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முக்கிய மேட்ச் வின்னராக ரிஷப் பந்த் உருவெடுப்பார். அதற்குறிய அனைத்து தகுதிகளையும் அவரிடம் நான் பார்க்கிறேன்.ஆனால் தனது ஆற்றலை வெளிப்படுத்த அவருக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது”  

 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை. அவர் குறிப்பிட்ட இளம் ஆட்டக்காரர் ரிஷப் பந்த்.

 

இத்தனைக்கும் அந்த போட்டியில் ரிஷப் பந்த் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 56 பந்துகளில் 32 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதிலும் தவறான நேரத்தில் அவசரப்பட்டு ஷாட் அடித்து கேட்ச் கொடுத்திருந்தார். அதனால் அவரை அன்று எல்லோருமே திட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த சூழலில்தான் ரிஷப் பந்த்தைப் பற்றி இப்படி ஒரு கருத்தை தெரிவித்தார் சவுரவ் கங்குலி. அன்றைக்கு பந்த்தைப் பற்றி அவர் அப்படி சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் இன்று கங்குலி கணித்ததைப் போலவே இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து நிற்கிறார் ரிஷப் பந்த்.

 

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்கும் என்று யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். வெற்றிபெற 260 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இந்திய அணி 38 ரன்களுக்கெல்லாம் ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய அனுபவ நாயகர்களின் விக்கெட்களை இழந்திருந்தது. ஆட்டம் அவ்வளவுதான் என்று எல்லோரும் சேனலை மாற்றிய நேரத்தில் பிட்ச்சில் நங்கூரம் பாய்ச்சி நின்றார் ரிஷப் பந்த்.

 

சூர்யகுமார் யாதவ் மற்றும்  ஹர்திக் பாண்டியாவின் துணையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட அவர், பின்னர் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டார். 113 பந்துகளில் அவர் அடித்த 125 ரன்களின் உதவியால் இந்தியா ஆட்டத்தையும் தொடரையும் வென்றது. இதனால் ஒரு சாதாரண வீரர் என்ற இமேஜைக் கடந்து சவுரவ் கங்குலி அன்று சொன்னபடி ஒரு மேட்ச் வின்னராக விஸ்வரூபம் எடுத்து நின்றார் ரிஷப் பந்த்.

 

 ஒருநாள் போட்டியில் வேண்டுமென்றால் இவரது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இதுவாக இருக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கெனவே இதுபோன்ற இன்னிங்ஸ்களை நிறைய ஆடியுள்ளார்.  கடந்த ஆஸ்திரேலிய தொடரில் கடைசி டெஸ்ட்டில் தனி ஆளாக இந்தியாவை அவர் வெற்றிபெற வைத்தது, அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றது.  அத்துடன் sena (south Africa, England, newzealand, Australia) நாடுகளில் அதிக சதங்களைக் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

 

இந்த சாதனைகளை அடைய அவர் பட்டுள்ள கஷ்டங்கள் கொஞ்சமல்ல. ஒரு காலத்தில் இவர் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.  உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த ரிஷப் பந்த், சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்றிருக்கிறார்.  ஷிகர் தவனின் பயிற்சியாளர் தாரக் சின்ஹாதான் ரிஷப் பந்துக்கும் பயிற்சியாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் டெல்லி அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி இருந்ததால், ராஜஸ்தானுக்கு குடிபெயரும்படி ரிஷப் பந்த்துக்கு  ஆலோசனை கூறியுள்ளார் தாரக் சின்ஹா.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற ரிஷப் பந்த், அம்மாநிலத்தின் 15 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார். ஆனால் அதன்பிறகு ரிஷப் பந்த் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆட எதிர்ப்பு எழுந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் டெல்லி திரும்பிய ரிஷப் பந்த், பெரிய போராட்டங்களுக்கு பிறகு அந்த அணியில் இடம் பிடித்தார்.

 

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், 2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். இதில் ஒரு போட்டியில் 18 பந்துகளில் 50 ரன்களையும், மற்றொரு போட்டியில் 96 பந்துகளில் 111 ரன்களையும் குவித்ததன் மூலம் இளைஞர்களின் ஹீரோ ஆனார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது நகலாக தற்போது கிரிக்கெட்டில் தடம்பதித்து வருகிறார் ரிஷப் பந்த்.

 

அதேநேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் தோனிக்கும் பந்த்துக்கும் வித்தியாசம் உள்ளது. தோனி ஆடவந்த காலத்தில் தினேஷ் கார்த்திக்கைத் தவிர வேறு எந்த கீப்பர்களும் அவருக்கு இணையாக இல்லை. ஆனால் இப்போது சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், விருத்திமான் சாஹா பந்த்துக்கு போட்டியாக பல விக்கெட் கீப்பர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாததால், இந்த இங்கிலாந்து தொடரில்கூட அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை ஆடவைக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு, பயிற்சியாளர் திராவிட்டின் ஆதரவால் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது.

 

இந்தச் சூழலில் கடந்த மாதம் நடந்த டெச்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமும் விளாசிய பந்த், எதிர்ப்பாளர்களின் வாயை மூடினார். நேற்றைய இன்னிங்ஸின் மூலம் இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் தான்தான்  என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இதே பாணியை அவர் தொடரவேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.

 

 

மீண்டும் சாதித்த நீரஜ் சோப்ரா

 


சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை தராமல் போக்கு காட்டிய விளையாட்டுகளில் ஒன்று தடகளம். மில்கா சிங், பி.டி.உஷா ஆகியோரால்கூட ஒலிம்பிக், சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பதக்கங்களை வெல்ல முடிந்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றி எழுதுவதற்காகவே பிறந்தவரைப் போல் சர்வதேச அரங்கில் பீடு நடை போட்டு முன்னேறி வருகிறார் நீரஜ் சோப்ரா.

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்தார். அந்த சாதனை வரலாற்றை எழுதிய மையின் ஈரம் காயும் முன்னே, தற்போது ஈகன் நகரில் நடந்துவரும் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இம்முறை அவருக்கு கிடைத்தது வெள்ளிப் பதக்கமாக இருந்தாலும், கடந்த முறை தங்கப் பதக்கம் வெறபோது எறிந்த தூரத்தைவிட அதிக தூரத்துக்கு (88.13 மீட்டர்) ஈட்டியை எறிந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் (இதற்கு முன்பு அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


சர்வதேச போட்டிகளில் பதக்கம் வாங்குவது நீரஜ் சோப்ராவுக்கு புதிதல்ல. இதற்கு முன் ஏற்கெனவே 2021-ல் நடந்த ஒலிம்பிக் போட்டி,  2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தவர்தான் நீரஜ் சோப்ரா. அந்த வரிசையில் தற்போது சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஹரியாணாவில் உள்ள காண்டிரா கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாக நீரஜ் சோப்ரா பிறந்தார். நீரஜ்ஜின் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்கும்.  எந்த நேரமும் ஏதாவது பலகாரங்களைச் செய்து அவருக்கு சாப்பிடக் கொடுப்பார். கேட்டால், “வளர்ற பிள்ளை நல்லா சாப்பிடட்டும்” என்று சொல்வார். பாட்டியின் அதீதமான அன்பினால் சிறு வயதிலேயே நீரஜ் சோப்ராவின் உடல் எடை கூடியது. 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட சிறுவன் ஆனார் நீரஜ் சோப்ரா.


நீரஜ்ஜின் எஅடை கூடுவதைப் பார்த்து கவலைப்பட்ட அவரது அப்பா சதீஷ்குமார்,  எடையைக் குறைப்பதற்காக தினமும் மைதானத்தில் நீரஜ்ஜை ஓடச்செய்வார். ஒரு நாள் அப்படி ஓடிக்கொண்டு இருந்தபோது பானிபட்டைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர். நீரஜ்ஜின் உடல் வாகு ஈட்டி எறிவதற்கு ஏற்றதாய் இருந்ததால் அவருக்கு பயிற்சி அளிக்க விரும்பினார். அவரின் தந்தையிடம் இதற்கு ஒப்புதல் கேட்க, அவரும் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்வீரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா,
உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஈட்டி எறியும் போட்டிகளில் வல்லவரும், சர்வதேச சாம்பியனுமான உவே ஹானின் பார்வையில் நீரஜ் பட, அவரை மேலும் பட்டை தீட்டியுள்ளார். இந்த இருவரும்தாஅன் நீரஜ் சோப்ராவின் முக்கிய குருநாதர்கள்.

 

பொதுவாக தனது முதல் வீச்சிலேயே பதக்கத்தை உறுதி செய்வது நீரஜ் சோப்ராவின் பாணி. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் அது மாறிவிட்டது. இம்முறை முதலில் ஈட்டியை எறியும்போது நீரஜ் சோப்ராவின் கால் எல்லைக் கோட்டைத் தொட அது பவுலாக அமைந்தது. அடுத்த முறை பவுல் ஆகாமல் இருப்பதில் நீரஜ் சோப்ரா அதிக கவனம் செலுத்த, அவரது ஈட்டி 82.39 மீட்டர் தூரமே சென்றது. இதனால் வரலாற்ரில் முதல் முறையாக தனது ரசிகர்களை நகம் கடிக்க வைத்தார் நீரஜ் சோப்ரா. அவரது போட்டியாளர்கல் பலரும் 85 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை வீச, நீரஜ்ஜை வெற்றித் தேவதை ஏமாற்றிவிடுவாரோ என்று பலரும் சந்தேகித்தனர். ஆனால் 3-வது முறை புது வேகத்தில் ஈட்டியை வீசிய நீரஜ், 86.37 மீட்டரை தொட்டார். அதன்பிறகு இன்னும் ஆற்றலை பெருக்கிக் கொண்ட நீரஜ் சோப்ரா, 88.13 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

ஒலிம்பிக் போட்டியை விட இம்முறை அதிக தூரத்துக்கு ஈட்டியை எறிந்தும், நீரஜ்ஜுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. அவரது போட்டியாளரான பீட்டர்ஸ், இம்முறை 93.07 மீட்டருக்கு ஈட்டியை எறிந்ததே இதற்கு காரணம்.

நீரஜ்ஜுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததால் ரசிகர்கள் மகிழலாம். ஆனால் நீரஜ் சோப்ரா மகிழவில்லை. வெள்ளியால் அவர் திருப்திப்படவில்லை. அடுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்கிறார்.

சரித்திர நாயகர்கள் இப்படித்தான்..  சிறிய வெற்றிகள் அவர்களை எப்போதுமே திருப்திப்படுத்தாது.

 

 

ரபேல் நடால்: சாம்பியன்களின் சாம்பியன்

 


டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீரர் யார் என்பதை நிர்ணயிப்பது கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்தான். ஆஸ்திரேலியன் ஓபன்,  அமெரிக்கன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் டென்னிஸ் ஆகியவைதான் இந்த கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்கள். இதில் கடந்த ஆண்டு இறுதியில் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் ஆகிய 3 வீரர்களும்  என்றென்றைக்குமான நம்பர் 1 போட்டியில் சரிசமமாக இருந்தனர். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம் தனது  பட்டங்களின் எண்ணிக்கையை 21-ஆக அதிகரித்து முன்னணிக்குச் சென்றுள்ளார் ரபேல் நடால்.

21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடாலைப் பற்றிய 21 விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:

1.ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்காதான்  ரபேல் நடாலின் சொந்த ஊர். டென்னிஸ் போட்டி இல்லாத நாட்களில் மலோர்காவில் நடாலைப் பார்க்கலாம்.

2. இடதுகை டென்னிஸ் வீரராக இருந்தாலும், மற்ற பல விஷயங்களில் வலது கைப் பழக்கம் கொண்டவர் நடால்.

3. நடாலின் மாமா டோனி, புகழ்பெற்ற கால்பந்து வீரர். பார்சிலோனா எஃப்சி அணிக்காக அவர் கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளார்

4. மாமா வழியில் ஆரம்பத்தில் கால்பந்தில் கவனம் செலுத்தியுள்ளார் நடால்.   12-வது வயது முதல்தான் கால்பந்தை விட்டு டென்னிஸில் அவர் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

5.டென்னிஸ் ராக்கெட்டில் சிறிய வகை கிரிப்பை பயன்படுத்துவது நடாலின் வழக்கம்.

6. தனது 15 வயதிலேயே பிரபல டென்னிஸ் வீரரான பாட் கேஷை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடால்.

7.சாம்பியன் பட்டம் வெல்லும்போதெல்லாம் வெற்றிக் கோப்பையைக் கடித்து போஸ் கொடுப்பது ரபேல் நடாலின் வழக்கம்.

8. நடாலுக்கும், ரோஜர் பெடரருக்கும் இடையிலான டென்னிஸ் போட்டிகள் மிகவும் பரபரப்பானவை.  இதுவரை இவர்களுக்குள் நடந்த 40 போட்டிகளில் நடால் 24-ல் வென்றுள்ளார்.

9.போட்டிகளின்போது தண்ணீர் பாட்டில்களை வரிசைப்படுத்தி வைத்தால், எதிராளியை வெல்ல முடியும் என்பது நடாலின் நம்பிக்கை.

10.நடால் பயன்படுத்தும் ரிச்சர்ட் மில் வகை கைக்கடிகாரம் 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் விலைமதிப்பு கொண்டது.

11.களிமண் தரையில் ஆடுவது நடாலுக்கு கைவந்த கலை. அதனாலேயே பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்றுள்ளார்.

12. 2003-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கலம் ஒன்றுக்கு நடாலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

13.கால்பந்து ரசிகரான நடாலுக்கு பிடித்த கால்பந்து அணி ரியல் மாட்ரிட்.

14. டென்னிஸைத் தவிர கோல்ஃப், போக்கர் ஆகிய ஆட்டங்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார் நடால்.

15. டேவிஸ் கோப்பையை மிக இளம் வயதில் (18) வென்ற வீரர் என்ற பெருமையும் நடாலுக்கு உண்டு.

16. டென்னிஸ் மைதானத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் நடால், செய்தியாளர்களைச் சந்திக்க மிகவும் கூச்சப்படுவார்.

17. ‘கிளாடியேட்டர்’, டைட்டானிக் ஆகியவை நடாலுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள்.

18. நடாலின் மனைவியின் பெயர் மரியா பிரான்சிஸ்கா. குழந்தைகளுக்காக நடால் செய்யும் அறக்கட்டளை பணிகளுக்கு வழிகாட்டியாக அவர் இருக்கிறார்.

19. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூரில், ‘நடால் எஜுகேஷனல் அண்ட் டென்னிஸ் ஸ்கூல்’ என்ற பள்ளியை 2010-ம் ஆண்டில் நடால் தொடங்கியுள்ளார். 90 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இப்போது 200-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் உள்ளனர்.

20.  ‘களிமண் தரையின் ராஜா’ என்பது ரபேல் நடாலின் பட்டப்பெயராக உள்ளது.

21. ஒலிம்பிக்கில் 2008-ம் ஆண்டு ஒற்றையர் பிரிவிலும், 2016-ம் ஆண்டு இரட்டையர் பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ரபேல் நடால்.

 

 

 

  

முலாயம் சிங் யாதவ்

 


இந்திய அரசியல் சரித்திரத்தில் கடைசிவரை போராளியாகவே வாழ்ந்த அரசியல் தலைவர்கள் வெகு சிலர்தான். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவர் முலாயம் சிங் யாதவ்.

உத்தரபிரதேச மக்களால் ‘நேதாஜி’ என்று அன்பாக  அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், சிறுவயதில் மல்யுத்த வீரராக இருந்தார்.  மல்யுத்த களத்தில் எதிராளியை தலைக்கு மேல் சுழற்றி அடிப்பது முலாயம் சிங்கின் ஸ்டைல். பிற்காலத்தில் அரசியலில் நுழைந்த பிறகும் மல்யுத்த பாணியை பின்பற்றிய முலாயம் சிங் யாதவ், தன் சாணக்கியத்தனத்தால் பல எதிராளிகளை தலைகுப்புற கவிழ்த்துள்ளார்.

அப்படி அவர் வீழ்த்திய அரசியல் கட்சிகளில் மிக முக்கியமான கட்சி காங்கிரஸ். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸை வீழ்த்தி 1989-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார் முலாயம் சிங் யாதவ்.

 

கலைஞருக்கு அண்ணா எப்படியோ, அப்படித்தான் முலாயம் சிங் யாதவுக்கு ராம் மனோஹர் லோகியா. சிறுவயதில் ராம் மனோஹர் லோஹியாவின் சித்தாந்தத்தாலும், அவர் எழுதிய சில அரசியல் கட்டுரைகளாலும் ஈர்க்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், அவரது வழியில் செயல்பட விரும்பி அரசியல் களத்தில் குதித்தார். 1967-ம் ஆண்டில் முதல் முறையாக  உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜஸ்வந்த் நகர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்ட முலாயம் சிங்,  10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  3 முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார்.  

அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முலாயம் சிங் என்றும் சளைத்ததில்லை. 1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடம் செய்தபோது பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய முலாயம், அதற்காக 17 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறை சென்ற முலாயம் சிங் யாதவ், கடைசிவரை ஒரு போராளியாகவே வாழ்ந்தார்.

1996-ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி அமைந்தபோது, பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் அப்போது லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்த்ததால் அவர் பிரதமராக முடியவில்லை. பிற்காலத்தின் 2014-ம் ஆண்டில் 3-வது அணி வெற்றி பெற்றால் முலாயம் சிங் யாதவ் பிரதமராவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் முலாயமின் சமஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்து பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற, பிரதமராகும் அவரது ஆசை நிராசையாகிப் போனது.

பாரதிய ஜனதா கட்சியை ஒரு காலத்தில் மிகத் தீவிரமாக எதிர்த்த நபர் முலாயம் சிங் யாதவ். 1990-களில் அவர் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி ரதயாத்திரை மேற்கொண்டார் பாஜக தலைவர் அத்வானி.  அப்போது தனது மாநிலத்துக்குள் ரத யாத்திரை நுழைந்தால், அத்வானியை கைது செய்வேன் என்பதில் தீவிரமாக இருந்தார். அவரது இந்த நிலை, காங்கிரஸ் வசம் இருந்த சிறுபான்மையினர் வாக்குகளை முலாயம் சிங் யாதவ் வசம் திருப்பியது.

ஆனால் அதே முலாயம் சிங் யாதவ், பிற்காலத்தில் பாஜக பக்கம் கொஞ்சம் சாய்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2002-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளரான அப்துல் கலாமுக்கு ஆதரவு அளித்தார் முலாயம் சிங்.  இதேபோல் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது மகன் அகிலேஷ் யாதவ், மோடிக்கு எதிராக தீவிரமாக இயங்கி வந்த நிலையில், ‘மீண்டும் முதல்வராக வருவீர்கள்’ என்று மோடியை வாழ்த்தினார். இதனால் அவர் ஒரு குழப்பவாதியாக சித்தரிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முலாயம் சிங் யாதவின் கடைசிக் காலம் அத்தனை நிம்மதியாக இல்லை. மகன் அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட ஊடல்களே அதற்கு காரணம். தேசியா அரசியலில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறி, தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார் முலாயம் சிங் யாதவ். தன் சொல்படி மகன் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவார் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் அகிலேஷ் யாதவோ, தனக்கென்று ஆதரவாளர்களை உருவாக்கி முலாயம் சிங்கையும், அவரது சகோதரர் சிவபால் சிங் யாதவையும் ஓரம் கட்டினார். குத்துச்சண்டை நடுவரைப்போல் சகோதரருக்கும் மகனுக்கும் இடையில் சமாதானம் செய்வதிலேயே கடைசி நாட்களைக் கழித்த முலாயம் சிங் யாதவ், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசியல் போராளியான அவர், பல நாட்கள் காலனோடு போராடிய நிலையில் குர்காவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இன்று காலமானார்.

 

 

  

பஞ்சாப் முதல்வரான ‘மின்மினிப் பூச்சி’

 


பஞ்சாப்பின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மானைப் பற்றி நாம்  தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..

‘ஜுக்னு’ என்பது பகவந்த் மானின் செல்லப் பெயர். ‘ஜுக்னு’ என்ற வார்த்தைக்கு மின்மினிப் பூச்சி என்று அர்த்தம்.

‘தி கிரேட் இந்தியன் லாஃப்டர் ஷோ’ என்ற தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியின் மூலம்தான் பகவந்த் மான்   மக்களுக்கு அதிகம் அறிமுகமானார்.  இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் அரசியல்வாதிகளை கிண்டலடித்து பேசித்தான் மான் ரசிகர்களை சேர்த்துள்ளார்.

தேசிய விருதுபெற்ற ‘மெயின் மா பஞ்சாப் தே’ என்ற படத்திலும் மான் நடித்துள்ளார்.

2011-ம் ஆண்டில் பஞ்சாப் மக்கள் கட்சியில் சேர்ந்ததன் மூலம் பகவந்த் மான் அரசியலில் நுழைந்தார். 2012-ம் ஆண்டில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் 2014-ம் ஆண்டு இணைந்த பகவந்த் மான், 2014-ம் ஆண்டு அக்கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால் இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2015-ம் ஆண்டில் தனது மனைவியை பிரிந்துள்ளார்  பக்வந்த் மான். குடும்பத்துக்கு அதிக நேரத்தை செலவிட முடியாததால் மனைவியைப் பிரிந்ததாகச் சொல்கிறார். அவரது மனைவியும் 2 குழந்தைகளும் இப்போது கனடாவில் வசிக்கிறார்கள்.

அதிக முடிப்பழக்கம் உள்ளவர் என்பதும், நாடாளுமன்றத்துக்கே குடித்துவிட்டு சென்றுள்ளார் என்பதும் எதிர்க்கட்சிகள் இவர் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

 குடித்துவிட்டு நடந்து செல்வதுபோன்ற வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, இனி குடிக்க மாட்டேன் என்று பஞ்சாப் மக்களிடம் சத்தியம் செய்துள்ளார் மான்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று தொலைபேசியில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார் கேஜ்ரிவால். இதில் அதிகம் பேர் மானின் பெயரைச் சொன்னதால், அவர் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டார்.

பகவந்த் மானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். பெரும்பாலும்  மஞ்சள் நிற தலைப்பாகையைத்தான் அவர் அணிவார். மானின் பதவியேற்பு விழா அரங்கில்கூட மஞ்சள் நிறம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

 

 

 

 

 

 

300 கிலோ எடை தூக்கிய 67 கிலோ இளைஞர் - ஜெர்மி லால்ரின்னுங்கா

 


விளையாட்டு உலகில் அவ்வப்போது சில நாயகர்கள் இந்தியாவுக்கு கிடைப்பது வழக்கம். அந்த வகையில் இபோது இந்தியாவுக்கு கிடைத்த ஹீரோ ஜெர்மி லால்ரின்னுங்கா. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த 67 கிலோகிராம் எடைப்பிரிவு  பளு தூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ எடையையும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடையையும் (மொத்தம் 300 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார் ஜெர்மி லால்ரின்னுங்கா.

நீரஜ் சோப்ராவைப் போல் இளம் வயதில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்த புதிய நாயகனைப் பற்றி தெரிந்துகொள்வோம்..

ஜெர்மி  லால்ரின்னுங்காவின் அப்பா லால்நெய்துலங்கா ஒரு குத்துச்சண்டை வீரர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள லால்நெய்துலங்கா, போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் ஐஸ்வாலில் உள்ள இளைஞர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து வந்துள்ளார்.

சிறுவயதில் அப்பாவின் பதக்கங்களை வைத்து விளையாடுவது ஜெர்மியின் வழக்கம். அந்த பதக்கங்கள் மீதுள்ள ஆர்வத்தால் அவரும் விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பினார்.

லால்நெய்துலங்காவின்  5 மகன்களில் ஒருவர்தான் ஜெர்மி லால்ரின்னுங்கா. ஆரம்ப காலத்தில் லால்ரின்னுங்காவுக்கும் குத்துச்சண்டையில்தான் ஆர்வம் இருந்துள்ளது. 7 வயதிலேயே குத்துச்சண்டை பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த காலகட்டத்தில்  குத்துச்சண்டை வீரருக்கான உடற்பயிற்சிகளில் ஒன்றாக அவர் பளு தூக்கியுள்ளார். பின்னர் இதிலேயே அவரது ஆர்வம் அதிகரிக்க, பளு தூக்கும் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

ஜெர்மியின் அப்பாவுக்கு 5 குழந்தைகள் இருந்ததால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். பயிற்சி மற்றும் அதற்கு தேவையான உணவை எடுத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டுள்ளார் ஜெர்மி.

8 வயதில் மல்சாமா என்ற உள்ளூர் பயிற்சியாளரிடம் ஜெர்மி லால்ரின்னுங்கா பயிற்சி பெற்றார். முதலில் 5 மீட்டர் நீளமும் 20 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட மூங்கில் கம்புகளை தூக்கி ஜெர்மி லால்ரின்னுங்கா பயிற்சிகளை மேற்கொண்டார்.   அதன்பிறகு இரும்பு கம்பிகளைத் தூக்கிப் பயிற்சி பெற்ற லால்ரின்னுங்கா,  பின்னர் முறையாக எடைதூக்கி பயிற்சிகளை செய்யத் தொடங்கினார்.

ஜெர்மிக்கு 9 வயதாக இருக்கும்போது ராணுவத்தில் பளுதூக்கும் பயிற்சியாளராக இருந்த  சர்சோகிமா (Zarzokima)   என்பவரின் பார்வையில்  பட்டுள்ளார்.  உடனடியாக ஜெர்மி லால்ரின்னுங்காவின் பெற்றோரை சந்தித்து, புனேயில் உள்ள தனது பயிற்சி மையத்தில் அவரைச் சேர்ப்பதற்கு அனுமதி வாங்கினார். இதைத்தொடர்ந்து 9 வயதில் பெற்றோரைப் பிரிந்து  ஐஸ்வாலில் இருந்து புனேவுக்கு பயணமானார் ஜெர்மி லால்ரின்னுங்கா.

 2016-ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த இளையோருக்கான உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிதான் ஜெர்மியை உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் சர்வதேச போட்டி. இப்போட்டியில் 14 வயது சிறுவனாக பங்கேற்ற ஜெர்மி, வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

புவனஸ் ஏர்ஸ் நகரில் 2018-ம் ஆண்டில்  நடந்த உலக இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது அவரது கிராஃபை இன்னும் மேலே கொண்டுபோனது.   

போட்டிகள் மற்றும் பயிற்சிகள் இல்லாத நேரத்தில் கால்பந்து மற்றும் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடுவது ஜெர்மியின் வழக்கம்.

ஜெர்மிக்கு மிசோராமின் ஸ்பெஷல் உணவுகளும், சிக்கனும் மிகவும் பிடிக்கும். ஆனால் பளுதூக்கும் போட்டிக்காக எடையை கட்டுக்கோப்பாக வைக்கவேண்டி இருப்பதால் மாதத்துக்கு 2 நாட்கள் மட்டும்தான்  அவருக்குப் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறார்.

 

 

தேசிய கொடி – தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

 


இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்)  கொண்டாட்டத்துக்கான பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக  ஆகஸ்ட் 13 முதல்  15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று   தேசிய கொடியை ஏற்றும்போது நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்… கொடிக்கு எந்தெந்த வகையில் மரியாதை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

கொடியை ஏற்றும்போது நாம் கவனமாக ஏற்ற வேண்டும். நம் தேசியக் கொடியை பொறுத்தவரை கீழே பச்சை நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், மேலே காவி நிறமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தவறி பச்சை நிறம் மேலே வருவதைப்போல் தேசியக் கொடியை ஏற்றினால், அதை தலைகீழாக ஏற்றி அவமதித்தது போல் ஆகிவிடும்.

பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. துணியால் செய்யப்பட்ட தேசிய கொடியைத்தான் பயன்படுத்த வேண்டும். பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, காதி, பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை பறக்க விடலாம்.

 2002ம் ஆண்டு இந்திய தேசியக் கொடி சட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக் கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு.

தேசியக் கொடியை ஏற்றும்போது விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும்போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த, அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக் கூடாது.

நாம் பயன்படுத்திய தேசிய கொடியை எந்த காரணத்தாலும் குப்பைத் தொட்டியில் போடக்கூடாது.

சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.

கார்களில் கொடிகளைப் பறக்க விட விரும்பினால், நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.

தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும்போது, வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். மேலும், மற்ற கொடிகள் நிறைய இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு தேசியக் கொடி இருக்க வேண்டும்.

பல நாடுகளின் தேசியக் கொடியை பறக்கவிடும் பட்சத்தில் நம் நாட்டின் தேசியக் கொடி முதலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் மற்ற நாடுகளின் கொடியை இறக்கிய பிறகே நமது தேசியக் கொடியை இறக்கவேண்டும்.

நாம் பறக்கவிடும் தேசிய கொடியின் நீளமும் அகலமும் 3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

தேசிய கொடியின் மீது எந்தவொரு வாசகத்தையும் எழுதக்கூடாது.

 தேசியக் கொடியை எந்த கட்டத்திலும் இடுப்பிற்குக் கீழே அணியக்கூடாது.  தேசியக் கொடியை கால்சட்டையாக அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி எந்த கட்டத்திலும் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேசிய கொடியை சூரிய உதயத்துக்கு முன் ஏற்றி, சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கிவிட வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. ஆனால் இந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி தேசிய கொடியை மக்கள் இரவிலும் பறக்க விடலாம்.

  

நொவாக் ஜோகோவிச் 21

 


விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இதன்மூலம் அவர் பெற்றுள்ள கிராண்ட் ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றால் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற ரபேல் நடாலின் (22 பட்டங்கள்) சாதனையை ஜோகோவிச்சால் எட்டிப் பிடிக்க முடியும். இந்த சூழலில் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச்சைப் பற்றி 21 சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்..

 

செர்பியாவில் உள்ள பெல்கிரேட் நகரில் பிறந்தவர் ஜோகோவிச். அவரது அப்பா பனிச்சறுக்கு வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்தார். பின்னாளில் அவர் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டார்.

 

டென்னிஸ் விளையாட்டைத் தவிர  பனிச்சறுக்கு, கால்பந்து ஆகிய விளையாட்டுகளிலும் நொவோக் ஜோகோவிச்சுக்கு ஆர்வம் அதிகம். டென்னிஸைப் போலவே சிறுவயதில் அப்பாவிடம் பனிச்சறுக்கு விளையாட்டிலும் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.

 4 வயதில் ஜோகோவிச்சுக்கு ஒரு டென்னிஸ் ராக்கெட்டைப் பரிசளித்தார் அவரது அப்பா. அந்த வயது முதலேயே டென்னிஸ் போட்டிகளில் ஆடி அவர் பயிற்சி பெற்ற்றார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனையான மோனிகா செலஸின் பயிற்சியாளர் ஜெலீனா ஜென்சிக்தான் ஜோகோவிச்சின் முதல் பயிற்சியாளர். ஜோகோவிச்சின் 6-வது வயதிலேயே அவரது ஆற்றலை கண்டுபிடித்து ஜெலீனா ஜென்சிக் அவருக்கு பயிற்சி அளித்தார்.

12 வயதுவரை ஜெலீனாவிடம் பயிற்சிபெற்ற ஜோகோவிச், அதன்பிறகு தனது 13-வது வயதில் ஜெர்மனியின் மியூனிச் நகரில் உள்ள பிலிக் அகாடமியில் பயிற்சி பெறச் சென்றார்.

ஜோகோவிச் தனது 14-வது வயது முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகிறார்.

2001-ம் ஆண்டில் தனது 14 வயதில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் ஆடிய ஜோகோவிச், இந்த தொடரில் ஒற்றையர் பட்டம், இரட்டையர் பட்டம் மற்றும் யுகோஸ்லாவிய அணிக்கான குழு சாம்பியன் பட்டம் ஆகியவற்றை வென்றார். இப்படி ஒரே தொடரிலேயே ஜோகோவிச் 3 பட்டங்களை வென்றது டென்னிஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது பள்ளிக்கால தோழியான ஜெலீனா ரிஸ்டிக்கை 2014-ம் ஆண்டில் ஜோகோவிச் மணந்தார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜோகோவிச்சால் செர்பியன், இத்தாலியன், ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளை சகஜமாக பேச முடியும்.

2007-ம் ஆண்டில் ‘நொவாக் ஜோகோவிச் அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஜோகோவிச் தொடங்கினார். செர்பியாவில் நடந்த போரின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் தேவாலயங்களை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கி வருகிறது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடக்கும்போதெல்லாம், அங்குள்ள புல்தரையில் இருந்து பிற்களை பிடுங்கி சாப்பிடுவது ஜோகோவிச்சிடம் உள்ள வினோத பழக்கம். இதுபற்றி கேட்டால், புற்களுக்கு வியர்வையின் சுவை இருப்பதாக கூறுவார்.

பூடில் பிடரி என்ற நாய்க்குட்டியை ஜோகோவிச் செல்லமாக வளர்த்து வருகிறார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்த நாய்க்குட்டியையும் கொண்டுசெல்வது ஜோகோவிச்சின் வழக்கம்.

 ‘தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 2’ என்ற படத்தில் சில காட்சிகளில் ஜோகோவிச் நடித்துள்ளார். ஆனால் படத்தின் நீளம் கருதி பின்னர் அந்த காட்சிகள் வெட்டப்பட்டன.

தனது வாழ்க்கைப் பயணத்தை, ‘செர்வ் டு வின்’ என்ற பெயரில் புத்தகமாக ஜோகோவிச் எழுதியுள்ளார்.

உணவுக் கட்டுப்பாட்டை ஜோகோவிச் தீவிரமாக கடைபிடித்து வருகிறார். அசைவ உணவுகளை அவர் முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.

வெளியூரில் டென்னிஸ் விளையாடச் செல்லும் சமயங்களில் தனது உணவை தானே சமைத்துச் சாப்பிடுவது இவரது வழக்கம்.

மோண்டே கார்லோ நகரில் ’ஏக்விடா’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் ஜோகோவிச். இந்த உணவகத்தில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன. தனது பெற்றோர் உணவகங்களை நடத்தியவர்கள் என்பதால் அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த உணவகத்தை நடத்துவதாக ஜோகோவிச் சொல்கிறார்.

மற்ற டென்னிஸ் வீரர்களைப் போல் நடித்துக் காட்டுவதில் ஜோகோவிச் வல்லவர். டென்னிஸ் போட்டிகளின்போது சக வீரர்களான ரபேல் நடால், மரியா ஷரபோவா ஆகியோரைப்போல் நடித்துக்காட்டி ரசிகர்களை மகிழ்விப்பது இவரது வழக்கம்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வென்ற ஜோகோவிச்சுக்கு பரிசுப் பணமாக 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பணத்துடன் சேர்த்து ஜோகோவிச்சின் மொத்த சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலராக உள்ளது.

தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஜோகோவிச். தினந்தோறும் சுமார் 1 மணி நேரத்துக்கு தியானம் செய்வது அவரது வழக்கம்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டனில் 7 முறையும், ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், அமெரிக்க ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் 1 முறையும் ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார்.

 

 

 

 

 

 

 

  

தோனி 41

 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தமிழக கிரிகெட் ரசிகர்களின் செல்லப் பிள்ளையுமான தோனிக்கு இன்று 41-வது பிறந்த நாள். இந்த நாளில் அவரைப் பற்றி 41 சுவாரஸ்யமான  விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:

10-ம் வகுப்பில் படிக்கும்போதுதான் தோனி கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

பள்ளிக் காலத்தில் கால்பந்து விளையாட்டில் கோல் கீப்பராகவும் தோனி இருந்துள்ளார். அந்த ஆர்வத்தால்தான் பின்னாளில் சென்னையின் எஃப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆனார்.

கிரிக்கெட் வீரர் ஆவதற்கு முன்பு 2001-ம் ஆண்டுமுதல் 2003-ம் ஆண்டுவரை மேற்குவங்கத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றி உள்ளார்.

 

2004-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிதான் தோனியின் முதல் சர்வதேச போட்டி. இதில் தோனி 0 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

 

மோட்டார் சைக்கிள்கள் மீது தோனிக்கு ஆர்வம் அதிகம். விலை உயர்ந்த 50-க்கும் மேற்பட்ட  மோட்டார் சைக்கிள்களை அவர் தனது வீட்டில் வைத்துள்ளார்.

MSD R-N  என்ற  மோட்டார் சைக்கிள் ரேஸிங் அணியையும் தோனி சொந்தமாக வைத்துள்ளார்.

தனது முதல் பைக்கை 4,500 ரூபாய் கொடுத்து தோனி வாங்கினார். அதை இன்னும் அவர் வைத்துள்ளார்.

’தனது வீட்டில் ஏராளமான நாய்களை தோனி வளர்த்து வருகிறார். தான் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவை ஒரே விதமான அன்பைத்தான் செலுத்துகின்றன என்று தோனி ஒருமுறை வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் இயற்கை முறையில் தோனி விவசாயம் செய்து வருகிறார். இங்கு விளையும் பயிர்களை உள்ளூர் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்கிறார்.

தனது பண்ணை வீட்டுக்கு, ‘கைலாஷ்பதி’ என்று தோனி பெயரிட்டுள்ளார்.

தோனிக்கு கடவுள் பக்தி அதிகம். ராஞ்சியில் தனது வீட்டில் இருக்கும் நேரங்களில் உள்ளூரில் உள்ள தியோரி மந்திருக்குச் செல்ல தோனி தவறுவதில்லை.

ஓய்வாக இருக்கும் நேரங்களில் பழைய இந்திப் பாடல்களைக் கேட்க தோனிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்திப் பாடகரான கிஷோர் குமாரின் ரசிகர்.

தோனிக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜான் ஆப்ரகாம்.  அவரால் கவரப்பட்டுதான் ஆரம்ப காலத்தில் தோனி மிக நீண்ட கூந்தலை வைத்திருந்தார்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தோனியின் தீவிர ரசிகர்.

 

வீட்டில் ஓய்வாக இருக்கும்போது தன் மகளை பின்னால் அமரச் செய்து பைக் ஓட்டுவது தோனிக்கு மிகவும் பிடித்த விஷயம்.

தோனிக்கு பிடித்த உணவு சிக்கன் மற்றும் ஹாட் சாக்லேட்.

கொல்கத்தாவில் கிரிக்கெட் ஆடச் சென்றபோதுதான் தனது மனைவி சாக்‌ஷியை தோனி முதல் முறையாகச் சந்தித்தார்.

2011-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் லெப்டினெண்ட் கர்னலாக தோனி நியமிக்கப்பட்டார்.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் கோப்பை ஆகிய 3 கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணிக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 ஐபிஎல் கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் தோனி குவித்துள்ளார்.  90 டெஸ்ட் போட்டிகளில்  4,876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டிகளில்  10,773 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளராகவும் ஒரு விக்கெட்டை தோனி எதுத்துள்ளார்.

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013-ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 224 ரன்களைக் குவித்துள்ளார்.

முதலாவது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் தோனி. இவரை 1.5 மில்லியன் டாலர் விலை கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

 

 

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிதான் தோனி விளையாடிய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 256 கேட்ச்களைப் பிடித்துள்ள தோனி, 38 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 321 கேட்ச்களைப் பிடித்துள்ள தோனி, 123 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார்.

 7-ம் தேதி பிறந்த காரணத்தால்  சர்வதேச போட்டிகளில் ஆடும்போது 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்து தோனி விளையாடினார்.

தோனியின் ட்ரேட் மார்க்காக ஹெலிகாப்டர் ஷாட் உள்ளது. தனது நண்பரான சந்தோஷ் லால் என்பவரிடம் இருந்து தோனி இந்த ஷாட்டைக் கற்றார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராகுல் திராவிட் விலகியபோது, தோனியை கேப்டன் ஆக்குமாறு பரிந்துரை செய்தவர் சச்சின் டெண்டுல்கர்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு உள்ளது.

மொத்தம் 331 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார்.

2009-ம் ஆண்டில் தோனியின் தலைமையில்தான் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அந்தஸ்த்தைப் பெற்றது.

தோனியின் தலைமையில் இந்தியா 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

2007 முதல் 2016 வரை 6 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 183. இலங்கைக்கு எதிராக இந்த ஸ்கோரை தோனி அடித்தார்.

சிறந்த பேட்ஸ்மேனுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 656 நாட்கள் தோனி முதல் இடத்தில் இருந்துள்ளார்.

 2021-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி தோனியின் மொத்த சொத்து மதிப்பு 808 கோடி ரூபாய்.

விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் மட்டும் 250 கோடி ரூபாயை தோனி சம்பாதித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்களின் மூலம் மட்டுமே 150 கோடி ரூபாயை தோனி சம்பாதித்துள்ளார்.

மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை தோனிக்கு வழங்கியுள்ளது.