Powered By Blogger

Monday, October 31, 2022

தேசிய கொடி – தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

 


இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்)  கொண்டாட்டத்துக்கான பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக  ஆகஸ்ட் 13 முதல்  15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று   தேசிய கொடியை ஏற்றும்போது நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்… கொடிக்கு எந்தெந்த வகையில் மரியாதை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

கொடியை ஏற்றும்போது நாம் கவனமாக ஏற்ற வேண்டும். நம் தேசியக் கொடியை பொறுத்தவரை கீழே பச்சை நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், மேலே காவி நிறமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தவறி பச்சை நிறம் மேலே வருவதைப்போல் தேசியக் கொடியை ஏற்றினால், அதை தலைகீழாக ஏற்றி அவமதித்தது போல் ஆகிவிடும்.

பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. துணியால் செய்யப்பட்ட தேசிய கொடியைத்தான் பயன்படுத்த வேண்டும். பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, காதி, பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை பறக்க விடலாம்.

 2002ம் ஆண்டு இந்திய தேசியக் கொடி சட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக் கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு.

தேசியக் கொடியை ஏற்றும்போது விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும்போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த, அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக் கூடாது.

நாம் பயன்படுத்திய தேசிய கொடியை எந்த காரணத்தாலும் குப்பைத் தொட்டியில் போடக்கூடாது.

சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.

கார்களில் கொடிகளைப் பறக்க விட விரும்பினால், நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.

தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும்போது, வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். மேலும், மற்ற கொடிகள் நிறைய இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு தேசியக் கொடி இருக்க வேண்டும்.

பல நாடுகளின் தேசியக் கொடியை பறக்கவிடும் பட்சத்தில் நம் நாட்டின் தேசியக் கொடி முதலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் மற்ற நாடுகளின் கொடியை இறக்கிய பிறகே நமது தேசியக் கொடியை இறக்கவேண்டும்.

நாம் பறக்கவிடும் தேசிய கொடியின் நீளமும் அகலமும் 3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

தேசிய கொடியின் மீது எந்தவொரு வாசகத்தையும் எழுதக்கூடாது.

 தேசியக் கொடியை எந்த கட்டத்திலும் இடுப்பிற்குக் கீழே அணியக்கூடாது.  தேசியக் கொடியை கால்சட்டையாக அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி எந்த கட்டத்திலும் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேசிய கொடியை சூரிய உதயத்துக்கு முன் ஏற்றி, சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கிவிட வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. ஆனால் இந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி தேசிய கொடியை மக்கள் இரவிலும் பறக்க விடலாம்.

  

No comments:

Post a Comment