Powered By Blogger

Friday, August 10, 2018

குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் நேரம் ஒதுக்குவது எப்படி?



இந்தியாவின் நம்பிக்கை நங்கைகள்

 

 

காம்ன்வெல்த் போட்டிகள், உலகக் கோப்பை கால்பந்து ஆகியவற்றைத் தொடர்ந்து விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க ஆசிய விளையாட்டுப் போட்டி காத்திருக்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் ஆகஸ்ட் 18-ம் தேதி இப்போட்டிகள் தொடங்கவுள்ளன. 
 ஆசிய நாடுகள் நடத்தும் இந்த பலப்பரீட்சையில்,  தனது வலுவைக் காட்ட 36 பிரிவுகளில்   524 பேரைக்கொண்ட பெரும் படையை  இந்தியா அனுப்புகிறது. இதில் 247 பேர் பெண்கள். இதுவரை நடந்த சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பல பதக்கங்களை பெற்றுத் தந்துள்ள வீராங்கனைகளின் படை, இம்முறையும் போட்டிக்கு தயாராக முந்தி நிற்கிறது. பி.வி.சிந்து, தீபா கர்மகார், சாய்னா நெவால், டிண்டு லுகா, மீராபாய் சானு, ஹீனா சித்து என நாடறிந்த வீராங்கனைகளுடன் அதிகம் தெரியாத  சில  நட்சத்திரங்களும் பதக்கப் போரில் குதிக்கவுள்ளனர். பதக்கம் வெல்லும்முன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:

சாதனை வேகத்தில் டூட்டி சந்த் 
ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்தின் பாட்மிண்டன் அகாடமி வழக்கமாக பாட்மிண்டன் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்தான் பயிற்சி அளிக்கும். ஆனால்  இதற்கு விதிவிலக்காக கடந்த 4 ஆண்டுகளாக இங்கு இலவசமாகத் தங்கி  பயிற்சி பெற்று  வருகிறார் தடகள வீராங்கனை டூட்டி சந்த். 
தகுதியானவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் கோபிசந்த் என்றும் சறுக்கியதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய விளையாட்டில் 100 மீட்டர் தூரத்தை வெறும் 11.29 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் டூட்டி சந்த். இதே வேகத்தில்  ஓடினால் ஆசியப் போட்டியில் தங்கம் நிச்சயம் என்பதால் ஆசிய விளையாட்டில் டூட்டியின் ஓட்டத்தை அவலோடு எதிர்பார்க்கிறது  இந்தியா. இப்போட்டியில்   100 மீட்டர் மட்டுமின்றி 200  மீட்டர் ஓட்டத்துக்கும் தகுதி பெற்றுள்ள டூட்டி, இரண்டிலும் தங்கம் வெல்வர் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 
 “ஆசிய  போட்டிக்காக கடந்த பல மாதங்களாக காலை 5 மணி முதல் பயிற்சி பெற்று வருகிறேன். முன்பெல்லம் முக்கிய போட்டிகளில் பங்கேற்கும்போது ஒருவித பதற்றம் மனதில் இருக்கும். அனால் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த பிறகு எதையும் எதிர்கொள்ளும் மனோபலம் கிடைத்துள்ளது. நிச்சயம் பதக்கத்தோடு திரும்புவேன்” என்று உறுதியுடன்  கூறுகிறார் டூட்டி சந்த். 
புதிய எழுச்சியுடன் தீபிகா 
வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தரகையாக இருந்த தீபிகா குமாரிக்கு கடந்த 6 ஆண்டுகளாக கட்டம் சரியில்லை. தங்கப் பதக்கங்களாக  குவித்துவந்த அவர், 2012-ம் ஆண்டுக்கு பிறகு  சர்வதேச போட்டிகளில் ஒரு பதக்கத்தைக்கூட வெல்ல முடியாமல் தடுமாறி வந்தார்., இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர், பாதை மாறி சினிமாவுக்குள் நுழையலாமா என்று நினைத்து ஒரு படத்தில்கூட ஒப்பந்தமானர்.
இந்த நேரத்தில்தான் ஜூலை மாதத்தில் சால்ட் லேக் நகரில் உலகக் கோப்பைக்கான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன. கடைசி முறையாக ஒரு கை பார்த்துவிடுவோமே என்று நினைத்து களத்தில் இறங்கியவருக்கு அதில் தங்கப் பதக்கம் கிடைக்க, ஆறாண்டு சாபம் முடிவுக்கு வந்ததைப் போல் மகிழ்சியடைந்தார். படப்பிடிப்பை நிறுத்தி திரையுலக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், இப்போது ஆசிய விளையாட்டு போட்டிக்காக முழு மூச்சில் தயாராகி வருகிறார். 
 “வில்வித்தையில் என் செயல்பாட்டை நினைத்து வருந்தி ஓய்வுபெற்று விடலாமா என்றுகூட நினைத்ததுண்டு. ஆனால் வில்வித்தை மீதான என் பாசம் அதைச் செய்யவிடாமல் தடுத்தது. இந்த நிலையில்தான் உலகக் கோப்பையில் தங்கம் கிடைத்தது. இனி எல்லாமே வெற்றியில் முடியும்” என்கிறார் தீபிகா.   
நம்பிக்கை நாயகி மனு பாகர் 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளில் மிகவும் இளையவர்   (16 வயது)  மனு பாகர்.  ஆனால் வயதில் இளையவர் என்பதால் தன்னை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சமீப கலமாக இவர் நிரூபித்து வந்துள்ளார். உலகக் கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டி முதல் காமன்வெல்த் போட்டிவரை கடந்த ஓராண்டில் பல பதக்கங்களை குவித்துள்ள மனு பாகர், இப்போது ஆசிய போட்டியில் தங்கத்துக்கு குறிவைத்திருக்கிறார்.
 “பொதுவாக போட்டிகளின்போது நான் பதக்கங்களையும், சாதனைகளையும் பற்றி நினைப்பதே இல்லை. என் எதிரில் உள்ள டார்கெட்டை துல்லியமாக குறிபார்த்து சுடுவதைப் பற்றி மட்டுமே நினைப்பேன். இதுதான் எனக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது” என்று கூறும் மனு பாகர், ஏர் பிஸ்டல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய புயல் மணிகா பத்ரா
கோல்ட் கோஸ்ட் நகரில் சில மாதங்களுக்கு முன்புவரை பாட்மிண்டனில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக இல்லாமல் இருந்தது.  ஆனால் காமல்வெல்த் போட்டியில் 8 பதக்கங்களை வென்றதன் மூலம் உலக டேபிள் டென்னிஸ் வரைபடத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 4 பதக்கங்களை பெற்றுத் தந்தவர் மணிகா  பத்ரா.
பாட்மிண்டன் உலகில் பி.வி.சிந்துவும், சாய்னா நெவாலும் செய்த மாற்றத்தை, காமன்வெல்த் போட்டியில் பெற்ற  வெற்றிகள் மூலம் பாட்மிண்டனில் மல்லிகா பத்ரா செய்துள்ளார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, மாணவ மாணவிகளிடம் டேபிள் டென்னிஸிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
இந்நிலையில் கோல்ட்கோஸ்டில்  உருவாக்கித் தந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த ஜகார்த்தாவுக்கு புறப்படுகிறார் மணிகா  பத்ரா, “முன்பெல்லாம் டேபிள் டென்னிஸ் வீரர்களை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால் காமன்வெல்த் போட்டிக்கு பிறகு எங்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கிறது. நாம் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தால்தான் அதை தக்கவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். காமன்வெல்த் போட்டியை விட ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவால்கள் அதிகமாக இருக்கும் சீனா, ஜப்பான், ஹாங்காங்  போன்ற  டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கும் நாடுகளின் சவாலை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முயற்சிப்போம்” என்கிறார் .
(ஆசியப் போட்டியில் இந்தியா நம்பியிருக்கும் வீரர்களைப் பற்றி அடுத்த வாரம்)

குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி?



குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் முதல் கனவே அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்,  நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம்கூட அதற்கு அப்புறம்தான்.    ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நன்றாக சாப்பிட வேண்டும். அதிலும் சத்தான  உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஆனால் இன்றைய  அவசர உலகத்தில் நொறுக்குத் தீனிகளுக்கும், ப்ளே ஸ்டேஷன் செல்போன் ஆகியவற்றுக்கும்  அடிமையாகிவிட்ட  குழந்தைகளை சாப்பிட வைப்பதே  பெற்றோர்களுக்கு பெரும்பாடாக உள்ளது. 
ஆனால் பெற்றோர்கள்  திட்டமிட்டு செயல்பட்டால் சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளைத் தங்கள் வழிக்கு கொண்டுவர முடியும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குழந்தைகளைச் சாப்பிட வைக்க அவர்கள் காட்டும் முதல் வழி,  ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும்  வழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதுதான்.  பெற்றோர்கள் என்னதான்  பிஸியாக இருந்தாலும் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள  வேண்டும். அந்த நேரத்தில் டிவி, செல்போன்  போன்ற எந்த இடையூறுகளும் இருக்கக்கூடாது. முடிந்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் தேவையற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்காமல் பயனுள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.
சமையலறைக்குள் குழந்தைகளை விடுங்கள்
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைச் சமையலறைக்குள் விடுவதில்லை. அடுப்பு எரிந்துகொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டுவிடும், கத்தியால்   கைகளை வெட்டிக்கொள்வார்கள் என்ற பெற்றோர்களின் பயம்தான் அதற்கு காரணம். ஆனால் குழந்தைகள் நன்றாக சாப்பிட வேண்டுமென்றால் அவர்களை சமையல் அறைக்குள் விடவேண்டும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின்  முடிவு தெரிவிக்கிறது.
குழந்தைகளிடம் இந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்  உணவுகளைச் சமைப்பதில் பங்கெடுத்துக்கொள்ளும் குழந்தைகள், அப்படி பங்கெடுக்காத குழந்தைகளை விட அதிகம் சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. எனவே உணவு சமைக்கும்போது   காய்கறிகளை வெட்டுவது, சப்பாத்திக்கு மாவு பிசைவது போன்ற சிறுசிறு வேலைகளை குழந்தைகளுக்கு  கொடுங்கள். இதனால்    சமைப்பது எத்தனை கடினமான காரியம் என்பது அவர்களுக்கு விளங்கும். மேலும் வீட்டில் உணவு சமைப்பதில் தங்கள் பங்கும் இருக்கிறது என்ற உணர்விலேயே அவர்கள் அதிகம் சாப்பிடவும் செய்வார்கள்.  உணவை வீணடிக்கவும் மாட்டார்கள்.
டைனிங் டேபிளுக்கு வரவழையுங்கள்
குழந்தைகள் சாப்பிட வேண்டுமானால் முதலில் அவர்களை டைனிங் டேபிளுக்கு வரவழைக்க வேண்டும். தினமும் சாப்பாட்டு வேளையில் குழந்தைகள் விருப்பதுடன்  டைனிங் டேபிளுக்கு வரும் வகையில் அவர்களை ஈர்க்க ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.  சாம்பார்,  பொரியல்,   கூட்டு உங்கள் சவுகரியத்துக்கு ஏற்றதுபோல் ஒரே வகையான சமையலைச் செய்து குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வழக்கமான சமையலுடன் புலாவ், பிரியாணி வகைகள், ஐஸ்கிரீம், ப்ரூட் சாலட் என்று உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஏதாவது ஒரு உணவு வகையையும் சேர்த்து சமையுங்கள். அது உங்கள் குழந்தையை சாப்பாட்டு மேஜைக்கு இழுத்துவரும். அப்படி குழந்தைகள் வர ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உங்கள் வழிக்கு கொண்டுவரலாம். 
பெரும்பாலான குழந்தைகள் புதிய உணவுகளை ஏற்றுக்கொள்வதில் முதலில்  தயக்கம் காட்டுவார்கள். இதுபோன்ற நேரங்களில் அவர்களை அதட்டாதீர்கள். இதனால் அந்த உணவு மீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படலாம். மாறாக  அந்த உணவு அவர்களை கவரும் வகையில் செய்து கொடுங்கள். உதாரணமாக   கேரட், பீட்ரூட் போன்ற  காய்கறிகளை  அவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும் என்று  விரும்பினால், அவர்களுக்கு பிடிக்கும் வகையில் அவற்றை சின்னச் சின்னதாக வெட்டி சாலட் போல் செய்து, டொமாட்டோ சாஸ்,  தயிர் என்று அவர்களுக்குப் பிடித்த பொருட்களுடன் கலந்து கொடுங்கள். சர்க்கரை தூவியும் கொடுக்கலாம்.
பிடித்தவர்களுடன் ஒப்பிடுங்கள்
குழந்தைகளைச் சாப்பிட்ட வைக்க நாம் பயன்படுத்த வேண்டிய மற்றொரு யுக்தி, அவர்களுக்கு பிடித்தமானவர்களுடன் அந்த உணவை ஒப்பிட்டுப் பேசுவது. உதாரணமாக உங்கள் குழந்தைக்கு நடிகர் விஜய்யை பிடிக்கும் என்றால், “இந்த வயசுலயும் விஜய் சினிமாவுல சுறுசுறுப்பா டான்ஸ் ஆடுறதுக்கும், சண்டை போடுறதுக்கும் அவர் கேரட்டையும் பீட்ரூட்டையும் சாப்பிடுறதுதான் காரணம்”  என்று சொல்லி வையுங்கள். குழந்தைகள் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், “தோனி ஒரு நாளைக்கு 4 லிட்டர் பால் குடிப்பாராம். அதனாலதான் இப்படி   அவரால சிக்சர் அடிக்க முடியுது” என்று சொல்லிப் பாருங்கள். இதனால் அந்த உணவுகளின் மீது குழந்தைகளுக்கு தனி மரியாதையும், அன்பும் ஏற்படும். தங்கள் ஹீரோக்களைப் போல் தாங்களும் நன்றாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

சாப்பாட்டுக்கான நேரம் தவிர  மற்ற நேரங்களில் பப்ஸ், சமோசா, சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்கு வழங்காதீர்கள். இவற்றைச் சாப்பிடுவதால்   குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பசி எடுக்காததுடன் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு.   நொறுக்குத் தீனிகளைக் கொடுப்பதாக இருந்தாலும், கேழ்வரகு, திணை, சோளம் போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளைக் கொடுங்கள்.

குழந்தைகள் முன் டயட்டிங் வேண்டாம்
உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்கள்.  எனவே அவர்கள் சத்தான ஆகாரங்களைச் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அந்த உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் உங்களைப் பார்த்து கற்றுக்கொள்வார்கள். ஒரு சில பெற்றோர்கள் டயட்டில் இருக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகள் முன்பாகவே சத்தான புரதச்சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பார்கள். இதனால் குழந்தைகளும் அதுபோன்ற உனவுகளைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு. இதனால் அவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்காமல் போகலாம்.
ஒரு சில பெற்றோர்கள் தங்களுக்கு பிடிக்காத உணவுகளைச் சுதந்திரமாக தள்ளி வைத்துவிட்டு, குழந்தைகளிடம் மட்டும் வலுக்கட்டாயமாக திணிப்பார்கள். ஒரே டைனிங் டேபிளில் ஒன்றாக சாப்பிடும்போது, கீரை பிடிக்காது என்று ஒதுக்கிவைக்கும் பெற்றோர்கள்,  அதே கீரையை  குழந்தைகள் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதில் எந்த நியாயமும் இருக்காது. குழந்தைகளும் அதை ஏற்க மாட்டார்கள். எனவே அவற்றை பெற்றோர்கள் முதலில் சாப்பிட்டு குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய விஷயங்களைச் சில நாட்கள் செய்து பாருங்கள், சாப்பாடு விஷயத்தில் சமர்த்தாக மாறி, உங்கள் குழந்தைகள் நிச்சயம் உங்களை மகிழ்விப்பார்கள்.

கால்பந்தில் இருந்து தடகளத்துக்கு - ஹிமா தாஸின் சாதனைப் பயணம்



அசாமின் குவாஹாட்டி நகரில் இருந்து 140 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது கந்துளிமாரி கிராமம். அங்குள்ள ஊர்ப் பொதுவெளியில் மாடுகள் மேய்ப்பதற்காக புற்கள் நிறைந்த ஒரு மைதானம் உள்ளது. சேறும் சகதியும் நிறைந்த அந்த மைதானத்தில் சுமார் 10 ஆண்டுகள் வெறும் கால்களுடன் ஓடி பயிற்சி பெற்ற சிறுமிதான் இன்று பின்லாந்தில் நடந்த தடகளப்  போட்டியில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள ஹிமா தாஸ்.
ஹிமா தாஸின் அப்பா ரொஞ்சித் தாஸ் ஒரு ஏழை விவசாயி. 0.4 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக வைத்திருந்த அவர், மேற்கொண்டு வருமானம் ஈட்ட உள்ளூர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.  தினமும் கால்பந்து பயிற்சிக்கு சொல்லும்போது,  ஹிமா தாஸையும் அழைத்துச் செல்வார். மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்து ஆடுவதைப் பார்த்து ஹிமா தாஸின் மனதிலும் விளையாட்டு ஆர்வம் துளிர் விட்டது. இதைப்பார்த்த ரொஞ்சித் தாஸ், அவருக்கு பயிற்சியளிக்க தொடங்கியுள்ளார்.
 கால்பந்து விளையாட்டில் வெற்றிகரமாக இருக்க, ஓட்டத்திலும் பயிற்சி பெற வேண்டும் என்பதால் தினமும் காலையிலும் மாலையிலும் தன் மகளை கந்துளிமாரி கிராமத்தில் உள்ள மைதானத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார். ஹிமா தாஸுக்கு ஓட்டப்பந்தயம் அறிமுகமானது இந்த வகையில்தான்.
 2 ஆண்டுகளுக்கு முன்புவரை   கால்பந்தில் மட்டும்தான் ஹிமா கவனம் செலுத்தி வந்தார்.    நன்றாக  ஆடி, மாவட்ட அளவிலான அணியில் இடம் பிடிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது.  இந்த நிலையில்தான் சம்சுல் ஹக் என்ற ஆசிரியர் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் ஹிமா தாஸ் ஆடுவதைப் பார்த்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன்னிடம் பந்து கிடைத்தும் மின்னல் வேகத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த அவருக்குள் பொறி தட்டியது. ‘இந்த அளவுக்கு வேகமாக ஓடும் பெண்ணுக்கு பயிற்சி அளித்தால், ஓட்டப் பந்தயத்தில் இன்னும் சிறப்பாக வருவாளே’ என்ற எண்ணத்தில் ஹிமாவை மாநில தடகள சங்க நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார்.
அங்கு ஹிமாவை ஓடவைத்து அவர்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை ஓட்டத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளரான நிப்பான் தாஸின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. இத்தனை நாட்களாக அவரைப் போன்ற வீராங்கனைக்காகத்தானே காத்திருந்தோம் என்ற எண்ணத்தில் அவரை வாரி அணைத்துக்கொண்டார். ஹிமா தாஸை குவாஹாட்டியில் உள்ள பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க முன்வந்தார்.
முதலில் ஹிமாவின் பெற்றோர்  இதற்கு சம்மதிக்கவில்லை.  ஆனால் பயிற்சியாளர் நீண்ட விவாதத்துக்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்தார்.அன்றிலிருந்து ஹிமா தாஸின் வாழ்க்கை மாறியது.  சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற அவர், குவாஹாட்டியில் விளையாட்டு ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ள உயர்தர சின்தடிக் டிராக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார்.
அசாமில் 2016-ம் ஆண்டு நடந்த மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம்தான் ஹிமா கலந்துகொண்ட முதல் போட்டி. இப்போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹிமா, இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 
2017-ம் ஆண்டில் நைரோபியில் நடந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதற்கு செல்ல காசில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார் ஹிமா தாஸ். இந்த நேரத்தில்   நிப்பான் தாஸும், அசாம் மாநில பயிற்சியாளரான நபஜித் மலாகாரும் கடன் வாங்கி அவரை நைரோபிக்கு அனுப்பி வைத்தனர். இப்போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 5-வது இடத்தையே பெற முடிந்தாலும், நிறைய அனுபவங்களுடன் தாய்நாடு திரும்பினார் ஹிமா.
ஆரம்பத்தில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் மட்டுமே கலந்துகொண்ட  ஹிமாவின் பார்வையை 400 மீட்டர் ஓட்டத்தின் மீது திருப்பியவர் இந்திய தடகள கூட்டமைப்பின் பயிற்சியாளரான கலீனா புகாரியா. அவரது அறிவுரைக்கு பிறகு 400 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமே கலந்துகொண்ட ஹிமா தாஸ், காமன்வெல்த் போட்டியில்   6-வது இடத்தைப் பிடித்தார்.
முதல் 2 சர்வதேச போட்டிகளில் பதக்கத்தை நழுவவிட்ட ஹிமா, கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு புதிய பெருமையை பெற்றுத் தந்துள்ளார். உலக அளவிலான போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கமாகும் இது.
இதுபற்றிக் கூறும் ஹிமா தாஸ், “பொதுவாக ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளும்போது அதில் பதக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஓடுவதில்லை.  என் முந்தைய போட்டியில்  எத்தனை விநாடிகளில் 400 மீட்டர்  தூரத்தைக் கடந்தேனோ,  அதைவிட ஒரு விநாடியாவது குறைந்த நேரத்தில் அந்த தூரத்தை கடக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடுவேன். பின்லாந்திலும் அதைத்தான் செய்தேன். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அதைத்தான் செய்யப்போகிறேன். அதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார்.
அவரது நம்பிக்கை ஜெயிக்கட்டும் !
டிவியில் வருவாயா?
ஹிமா தாஸின் அம்மா ஜுனாலிக்கு தன் மகள் எவ்வளவு பெரிய பெருமையை நாட்டுக்கு பெற்றுத் தந்திருக்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அவரது ஒரே ஆசை தன் மகள் டிவியில் வரவேண்டும் என்பதுதான். கடந்த காமன்வெல்த் போட்டியில் தான் பங்கேற்கப் போவதைப் பற்றி ஹிமா பெருமையாக சொன்னபோது அவரது அம்மா கேட்ட ஒரே விஷயம், “இதனால் நீ டிவியில் வருவாயா” என்பதுதான்.
இந்த முறை தான் போட்டியில் பங்கேற்பது டிவியில் காட்டப்படும் நேரத்தைப் பற்றி  முன்கூட்டியே தன் தாயாரிடம் கூறியுள்ளார் ஹிமா. ஆனால் அந்த நேரத்தில் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதால் அவரால் போட்டியை காண முடியவில்லை. இருப்பினும் இப்போட்டியில் வென்றதால் தன் மகளை அடிக்கடி டிவியில் காட்டுவதால் உற்சாகமாகி இருக்கிறாராம் ஹிமாவின் தாயார்.


பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க...