இது அவசர யுகம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவரும் நேரத்துடன் போரிட்டு வாழ்க்கையை கடந்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதே இல்லை. தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்றுகூட தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். அதேபோல் குழந்தைகளும் தங்களுக்கு வழிகாட்ட ஆளின்றி தவித்து வருகிறார்கள் இந்தச் சூழல் மாற வேண்டுமானால் ஆயிரம் வேலைகள் இருந்தாலும், தினசரி ஒரு மணி நேரமாவது குழந்தைகளுடன் பெற்றோர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.
நாம் வீட்டில் இருந்தால் மட்டுமே அது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதாக ஆகாது. தினசரி ஒரு மணி நேரமாவது பணிகளை ஒதுக்கிவைத்து, செல்போன், டிவி, புத்தகங்கள் ஆகியவற்றை தள்ளி வைத்துவிட்டு குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் ஏதாவது கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நீங்கள் அவர்களுக்காக பயனுள்ளபடி நேரத்தைக் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
காலை நேரம் முக்கியம்
காலை நேரம் என்றாலே பல வீடுகள் பரபரப்பாக இருக்கும். குழந்தைகளை அதட்டி எழுப்புவது, அவர்களுக்கான உணவைச் சமைத்து டிபன்பாக்ஸில் அடைப்பது, ஷூ, சாக்ஸ் மற்றும் சீருடையைத் தேடுவது, பள்ளிக்கு அனுப்ப வேகவேகமாக தயாராவது என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருக்கும். இந்த பரபரப்பில் குழந்தைகளை திட்டும் சம்பவங்களும் நடக்கும். இது குழந்தைகளுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, நாள் முழுவதும் அவர்களைத் துரத்தும். நாம் நினைத்தால் இதை தவிர்க்க முடியும். அதற்கு நாம் செய்யவேண்டிய முதல் விஷயம் வழக்கத்தை விட அரை மணிநேரம் முன்னதாக கண் விழிப்பதுதான்.
வீட்டில் உள்ள அனைவரும் வழக்கத்தை விட அரை மணிநேரம் முன்னதாக எழுந்தால் நிச்சயம் இந்த பரப்பை குறைத்து ரிலாக்ஸ் ஆகலாம். இந்த நேரத்தில் அவர்களுக்கு உணவு ஊட்டுவது, குளிக்கவைப்பது, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது என்று குழந்தைகளை மகிழ்விக்கலாம். வீட்டுப் பாடங்களை அவர்கள் சரியாக செய்து முடித்தார்களா என்பதை சரிபார்த்து தேவையான திருத்தங்களையும் செய்யலாம். இதனால் குழந்தைகள் உற்சாகமடைந்து அன்றைய நாளை கடக்கக் கூடிய புத்துணர்ச்சியையும் பெறுவார்கள்.
குழந்தைகளுடன் சேர்ந்து படியுங்கள்
இந்த டிஜிட்டல் யுகத்தில் படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு பல விஷயங்கள் தெரியாமல் போகின்றன. இத்தகைய நிலை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க, தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவர்களுக்கு நல்ல புத்தகங்களை படித்துக் காட்டுங்கள். அல்லது அவர்களின் வயதுக்கு ஏற்ற புத்தகத்தை வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். புத்தகங்கள் இல்லாவிட்டால் அன்றைய நாளிதழ்களையாவது படிக்கச் சொல்லுங்கள். அவர்களை படிக்கச் சொல்லிவிட்டு, நாம் ஏதாவது வேலையைப் பார்க்க செல்ல கூடாது. அவர்கள் படிக்கும்போது நாமும் ஏதாவது படித்துக்கொண்டு அவர்களின் அருகிலேயே இருக்க வேண்டும். அவர்களுக்கு வரும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடமாவது செய்தால், அவர்கள் சிறந்த படிப்பாளி ஆகிவிடுவார்கள். பின்னர் நீங்கள் சொல்லாமலேயே படிக்கும் வழக்கம் அவர்களை தொற்றிக்கொள்ளும்.
எல்லாவற்றையும் கற்றுக்கொடுங்கள்
குழந்தைகளுக்கு படிப்பறிவு மட்டும் இருந்தால் போதாது. கூடவே உலக அனுபவமும் வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை தாங்களே செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அதற்கு குழாய்களை ரிப்பேர் செய்வது, துணிகளைத் துவைப்பது, இஸ்திரி போடுவது போன்ற சிறுசிறு வேலைகளைச் செய்யும்போது அவர்களையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஓய்வு நாட்களில் துணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் அவர்களையும் ஈடுபடுத்துங்கள். அப்போதுதான் சொந்தக் கால்களில் நிற்க அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வார்கள்.
நடை நல்லது
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் குடும்பத்துடன் ரிலாக்ஸாக நடக்கச் செல்லுங்கள். அமைதியான இரவுப் பொழுதில் பெற்றோருடன் ஒரு வாக்கிங் செல்வது குழந்தைகளின் மனதை லேசாக்கும். ரம்மியமான அந்தச் சூழலில், அன்றைய தினம் அவர்களுக்கு நடந்த நல்ல விஷயங்கள் என்ன? கெட்ட விஷயங்கள் என்ன என்பதைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். உங்களுடன் மனம் விட்டு பேசுவதால், ‘எல்லா விஷயத்தையும் பெற்றோரிடம் சொல்லிவிட்டோம். இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் ஏற்படும். இரவில் மட்டுமின்றி பகலிலும் வீட்டுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு குடும்பத்துடன் செல்ல நேர்ந்தால் நடந்து செல்லுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், நடக்கும்போது மனம்விட்டு பேசுவதால் மனதும் லேசாகும்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள்
குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்துகொள்வதை விட கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். “ஐயையோ வீட்டில் அப்பா இருக்காரே” என்று குழந்தைகள் பயப்படுவதை விட, “ஹைய்யா... வீட்டில் அப்பா இருக்காரே” என்று அவர்கள் குதூகலிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் தங்கள் முன்னால் ஒரு கோமாளிகளாக இருந்து அப்பாவும் அம்மாவும் தங்களை சிரிக்கவைக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமாக உள்ளது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கூடுமான வரை அவர்களுடன் விளையாடுங்கள். அவர்களுக்கு பிடித்த வீடியோ கேம்களை உங்களுக்கும் கற்றுக்கொடுக்க சொல்லுங்கள். அவர்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகளை அவர்களுடன் சேர்ந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த கிரிக்கெட், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை அவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். இதனால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் உங்களின் குழந்தைத்தன்மையையும் மீட்க முடியும்.
ஒன்றாக தூங்குங்கள்
ஒருசில வீடுகளில் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்தால், அவர்களைத் தனியாக படுக்க வைப்பார்கள். தங்கள் பெற்றோருடன் சேர்ந்து தூங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும். எனவே நீங்கள் குழந்தைகளை தனியாக படுக்க வைப்பவர் என்றால், வாரத்தில் ஒரு நாளோ அல்லது 2 நாட்களோ அவர்களுடன் சேர்ந்து தூங்குங்கள். எல்லோரும் சேர்ந்து படுக்க உங்கள் படுக்கை அறையில் இடம் இல்லாவிட்டால் வீட்டு ஹாலிலோ, மொட்டை மாடியிலோ ஒன்றாக சேர்ந்து படுங்கள். அப்படி ஒன்றாக சேர்ந்து தூங்கச் செல்லும் முன் அந்தாக்ஷரி போன்ற விளையாட்டுகளை ஆடுவதுடன், அந்த வாரம் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றி குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். இதனால் உங்கள் மனபாரம் குறைவதுடன் குழந்தைகளுக்கும் உங்கள் அனுபவத்தைக் கடக்க உதவும்.