Powered By Blogger

Friday, August 10, 2018

இந்தியாவின் நம்பிக்கை நங்கைகள்

 

 

காம்ன்வெல்த் போட்டிகள், உலகக் கோப்பை கால்பந்து ஆகியவற்றைத் தொடர்ந்து விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க ஆசிய விளையாட்டுப் போட்டி காத்திருக்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் ஆகஸ்ட் 18-ம் தேதி இப்போட்டிகள் தொடங்கவுள்ளன. 
 ஆசிய நாடுகள் நடத்தும் இந்த பலப்பரீட்சையில்,  தனது வலுவைக் காட்ட 36 பிரிவுகளில்   524 பேரைக்கொண்ட பெரும் படையை  இந்தியா அனுப்புகிறது. இதில் 247 பேர் பெண்கள். இதுவரை நடந்த சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பல பதக்கங்களை பெற்றுத் தந்துள்ள வீராங்கனைகளின் படை, இம்முறையும் போட்டிக்கு தயாராக முந்தி நிற்கிறது. பி.வி.சிந்து, தீபா கர்மகார், சாய்னா நெவால், டிண்டு லுகா, மீராபாய் சானு, ஹீனா சித்து என நாடறிந்த வீராங்கனைகளுடன் அதிகம் தெரியாத  சில  நட்சத்திரங்களும் பதக்கப் போரில் குதிக்கவுள்ளனர். பதக்கம் வெல்லும்முன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:

சாதனை வேகத்தில் டூட்டி சந்த் 
ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்தின் பாட்மிண்டன் அகாடமி வழக்கமாக பாட்மிண்டன் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்தான் பயிற்சி அளிக்கும். ஆனால்  இதற்கு விதிவிலக்காக கடந்த 4 ஆண்டுகளாக இங்கு இலவசமாகத் தங்கி  பயிற்சி பெற்று  வருகிறார் தடகள வீராங்கனை டூட்டி சந்த். 
தகுதியானவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் கோபிசந்த் என்றும் சறுக்கியதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய விளையாட்டில் 100 மீட்டர் தூரத்தை வெறும் 11.29 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் டூட்டி சந்த். இதே வேகத்தில்  ஓடினால் ஆசியப் போட்டியில் தங்கம் நிச்சயம் என்பதால் ஆசிய விளையாட்டில் டூட்டியின் ஓட்டத்தை அவலோடு எதிர்பார்க்கிறது  இந்தியா. இப்போட்டியில்   100 மீட்டர் மட்டுமின்றி 200  மீட்டர் ஓட்டத்துக்கும் தகுதி பெற்றுள்ள டூட்டி, இரண்டிலும் தங்கம் வெல்வர் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 
 “ஆசிய  போட்டிக்காக கடந்த பல மாதங்களாக காலை 5 மணி முதல் பயிற்சி பெற்று வருகிறேன். முன்பெல்லம் முக்கிய போட்டிகளில் பங்கேற்கும்போது ஒருவித பதற்றம் மனதில் இருக்கும். அனால் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த பிறகு எதையும் எதிர்கொள்ளும் மனோபலம் கிடைத்துள்ளது. நிச்சயம் பதக்கத்தோடு திரும்புவேன்” என்று உறுதியுடன்  கூறுகிறார் டூட்டி சந்த். 
புதிய எழுச்சியுடன் தீபிகா 
வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தரகையாக இருந்த தீபிகா குமாரிக்கு கடந்த 6 ஆண்டுகளாக கட்டம் சரியில்லை. தங்கப் பதக்கங்களாக  குவித்துவந்த அவர், 2012-ம் ஆண்டுக்கு பிறகு  சர்வதேச போட்டிகளில் ஒரு பதக்கத்தைக்கூட வெல்ல முடியாமல் தடுமாறி வந்தார்., இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர், பாதை மாறி சினிமாவுக்குள் நுழையலாமா என்று நினைத்து ஒரு படத்தில்கூட ஒப்பந்தமானர்.
இந்த நேரத்தில்தான் ஜூலை மாதத்தில் சால்ட் லேக் நகரில் உலகக் கோப்பைக்கான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன. கடைசி முறையாக ஒரு கை பார்த்துவிடுவோமே என்று நினைத்து களத்தில் இறங்கியவருக்கு அதில் தங்கப் பதக்கம் கிடைக்க, ஆறாண்டு சாபம் முடிவுக்கு வந்ததைப் போல் மகிழ்சியடைந்தார். படப்பிடிப்பை நிறுத்தி திரையுலக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், இப்போது ஆசிய விளையாட்டு போட்டிக்காக முழு மூச்சில் தயாராகி வருகிறார். 
 “வில்வித்தையில் என் செயல்பாட்டை நினைத்து வருந்தி ஓய்வுபெற்று விடலாமா என்றுகூட நினைத்ததுண்டு. ஆனால் வில்வித்தை மீதான என் பாசம் அதைச் செய்யவிடாமல் தடுத்தது. இந்த நிலையில்தான் உலகக் கோப்பையில் தங்கம் கிடைத்தது. இனி எல்லாமே வெற்றியில் முடியும்” என்கிறார் தீபிகா.   
நம்பிக்கை நாயகி மனு பாகர் 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளில் மிகவும் இளையவர்   (16 வயது)  மனு பாகர்.  ஆனால் வயதில் இளையவர் என்பதால் தன்னை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சமீப கலமாக இவர் நிரூபித்து வந்துள்ளார். உலகக் கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டி முதல் காமன்வெல்த் போட்டிவரை கடந்த ஓராண்டில் பல பதக்கங்களை குவித்துள்ள மனு பாகர், இப்போது ஆசிய போட்டியில் தங்கத்துக்கு குறிவைத்திருக்கிறார்.
 “பொதுவாக போட்டிகளின்போது நான் பதக்கங்களையும், சாதனைகளையும் பற்றி நினைப்பதே இல்லை. என் எதிரில் உள்ள டார்கெட்டை துல்லியமாக குறிபார்த்து சுடுவதைப் பற்றி மட்டுமே நினைப்பேன். இதுதான் எனக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது” என்று கூறும் மனு பாகர், ஏர் பிஸ்டல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய புயல் மணிகா பத்ரா
கோல்ட் கோஸ்ட் நகரில் சில மாதங்களுக்கு முன்புவரை பாட்மிண்டனில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக இல்லாமல் இருந்தது.  ஆனால் காமல்வெல்த் போட்டியில் 8 பதக்கங்களை வென்றதன் மூலம் உலக டேபிள் டென்னிஸ் வரைபடத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 4 பதக்கங்களை பெற்றுத் தந்தவர் மணிகா  பத்ரா.
பாட்மிண்டன் உலகில் பி.வி.சிந்துவும், சாய்னா நெவாலும் செய்த மாற்றத்தை, காமன்வெல்த் போட்டியில் பெற்ற  வெற்றிகள் மூலம் பாட்மிண்டனில் மல்லிகா பத்ரா செய்துள்ளார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, மாணவ மாணவிகளிடம் டேபிள் டென்னிஸிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
இந்நிலையில் கோல்ட்கோஸ்டில்  உருவாக்கித் தந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த ஜகார்த்தாவுக்கு புறப்படுகிறார் மணிகா  பத்ரா, “முன்பெல்லாம் டேபிள் டென்னிஸ் வீரர்களை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால் காமன்வெல்த் போட்டிக்கு பிறகு எங்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கிறது. நாம் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தால்தான் அதை தக்கவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். காமன்வெல்த் போட்டியை விட ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவால்கள் அதிகமாக இருக்கும் சீனா, ஜப்பான், ஹாங்காங்  போன்ற  டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கும் நாடுகளின் சவாலை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முயற்சிப்போம்” என்கிறார் .
(ஆசியப் போட்டியில் இந்தியா நம்பியிருக்கும் வீரர்களைப் பற்றி அடுத்த வாரம்)

No comments:

Post a Comment