அசாமின் குவாஹாட்டி நகரில் இருந்து 140 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது கந்துளிமாரி கிராமம். அங்குள்ள ஊர்ப் பொதுவெளியில் மாடுகள் மேய்ப்பதற்காக புற்கள் நிறைந்த ஒரு மைதானம் உள்ளது. சேறும் சகதியும் நிறைந்த அந்த மைதானத்தில் சுமார் 10 ஆண்டுகள் வெறும் கால்களுடன் ஓடி பயிற்சி பெற்ற சிறுமிதான் இன்று பின்லாந்தில் நடந்த தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள ஹிமா தாஸ்.
ஹிமா தாஸின் அப்பா ரொஞ்சித் தாஸ் ஒரு ஏழை விவசாயி. 0.4 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக வைத்திருந்த அவர், மேற்கொண்டு வருமானம் ஈட்ட உள்ளூர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தினமும் கால்பந்து பயிற்சிக்கு சொல்லும்போது, ஹிமா தாஸையும் அழைத்துச் செல்வார். மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்து ஆடுவதைப் பார்த்து ஹிமா தாஸின் மனதிலும் விளையாட்டு ஆர்வம் துளிர் விட்டது. இதைப்பார்த்த ரொஞ்சித் தாஸ், அவருக்கு பயிற்சியளிக்க தொடங்கியுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் வெற்றிகரமாக இருக்க, ஓட்டத்திலும் பயிற்சி பெற வேண்டும் என்பதால் தினமும் காலையிலும் மாலையிலும் தன் மகளை கந்துளிமாரி கிராமத்தில் உள்ள மைதானத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார். ஹிமா தாஸுக்கு ஓட்டப்பந்தயம் அறிமுகமானது இந்த வகையில்தான்.
2 ஆண்டுகளுக்கு முன்புவரை கால்பந்தில் மட்டும்தான் ஹிமா கவனம் செலுத்தி வந்தார். நன்றாக ஆடி, மாவட்ட அளவிலான அணியில் இடம் பிடிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. இந்த நிலையில்தான் சம்சுல் ஹக் என்ற ஆசிரியர் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் ஹிமா தாஸ் ஆடுவதைப் பார்த்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன்னிடம் பந்து கிடைத்தும் மின்னல் வேகத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த அவருக்குள் பொறி தட்டியது. ‘இந்த அளவுக்கு வேகமாக ஓடும் பெண்ணுக்கு பயிற்சி அளித்தால், ஓட்டப் பந்தயத்தில் இன்னும் சிறப்பாக வருவாளே’ என்ற எண்ணத்தில் ஹிமாவை மாநில தடகள சங்க நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார்.
அங்கு ஹிமாவை ஓடவைத்து அவர்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை ஓட்டத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளரான நிப்பான் தாஸின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. இத்தனை நாட்களாக அவரைப் போன்ற வீராங்கனைக்காகத்தானே காத்திருந்தோம் என்ற எண்ணத்தில் அவரை வாரி அணைத்துக்கொண்டார். ஹிமா தாஸை குவாஹாட்டியில் உள்ள பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க முன்வந்தார்.
முதலில் ஹிமாவின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் பயிற்சியாளர் நீண்ட விவாதத்துக்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்தார்.அன்றிலிருந்து ஹிமா தாஸின் வாழ்க்கை மாறியது. சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற அவர், குவாஹாட்டியில் விளையாட்டு ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ள உயர்தர சின்தடிக் டிராக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார்.
அசாமில் 2016-ம் ஆண்டு நடந்த மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம்தான் ஹிமா கலந்துகொண்ட முதல் போட்டி. இப்போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹிமா, இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
2017-ம் ஆண்டில் நைரோபியில் நடந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதற்கு செல்ல காசில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார் ஹிமா தாஸ். இந்த நேரத்தில் நிப்பான் தாஸும், அசாம் மாநில பயிற்சியாளரான நபஜித் மலாகாரும் கடன் வாங்கி அவரை நைரோபிக்கு அனுப்பி வைத்தனர். இப்போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 5-வது இடத்தையே பெற முடிந்தாலும், நிறைய அனுபவங்களுடன் தாய்நாடு திரும்பினார் ஹிமா.
ஆரம்பத்தில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் மட்டுமே கலந்துகொண்ட ஹிமாவின் பார்வையை 400 மீட்டர் ஓட்டத்தின் மீது திருப்பியவர் இந்திய தடகள கூட்டமைப்பின் பயிற்சியாளரான கலீனா புகாரியா. அவரது அறிவுரைக்கு பிறகு 400 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமே கலந்துகொண்ட ஹிமா தாஸ், காமன்வெல்த் போட்டியில் 6-வது இடத்தைப் பிடித்தார்.
முதல் 2 சர்வதேச போட்டிகளில் பதக்கத்தை நழுவவிட்ட ஹிமா, கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு புதிய பெருமையை பெற்றுத் தந்துள்ளார். உலக அளவிலான போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கமாகும் இது.
இதுபற்றிக் கூறும் ஹிமா தாஸ், “பொதுவாக ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளும்போது அதில் பதக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஓடுவதில்லை. என் முந்தைய போட்டியில் எத்தனை விநாடிகளில் 400 மீட்டர் தூரத்தைக் கடந்தேனோ, அதைவிட ஒரு விநாடியாவது குறைந்த நேரத்தில் அந்த தூரத்தை கடக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடுவேன். பின்லாந்திலும் அதைத்தான் செய்தேன். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அதைத்தான் செய்யப்போகிறேன். அதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார்.
அவரது நம்பிக்கை ஜெயிக்கட்டும் !
டிவியில் வருவாயா?
ஹிமா தாஸின் அம்மா ஜுனாலிக்கு தன் மகள் எவ்வளவு பெரிய பெருமையை நாட்டுக்கு பெற்றுத் தந்திருக்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அவரது ஒரே ஆசை தன் மகள் டிவியில் வரவேண்டும் என்பதுதான். கடந்த காமன்வெல்த் போட்டியில் தான் பங்கேற்கப் போவதைப் பற்றி ஹிமா பெருமையாக சொன்னபோது அவரது அம்மா கேட்ட ஒரே விஷயம், “இதனால் நீ டிவியில் வருவாயா” என்பதுதான்.
இந்த முறை தான் போட்டியில் பங்கேற்பது டிவியில் காட்டப்படும் நேரத்தைப் பற்றி முன்கூட்டியே தன் தாயாரிடம் கூறியுள்ளார் ஹிமா. ஆனால் அந்த நேரத்தில் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதால் அவரால் போட்டியை காண முடியவில்லை. இருப்பினும் இப்போட்டியில் வென்றதால் தன் மகளை அடிக்கடி டிவியில் காட்டுவதால் உற்சாகமாகி இருக்கிறாராம் ஹிமாவின் தாயார்.
No comments:
Post a Comment