குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் முதல் கனவே அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம்கூட அதற்கு அப்புறம்தான். ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நன்றாக சாப்பிட வேண்டும். அதிலும் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் நொறுக்குத் தீனிகளுக்கும், ப்ளே ஸ்டேஷன் செல்போன் ஆகியவற்றுக்கும் அடிமையாகிவிட்ட குழந்தைகளை சாப்பிட வைப்பதே பெற்றோர்களுக்கு பெரும்பாடாக உள்ளது.
ஆனால் பெற்றோர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளைத் தங்கள் வழிக்கு கொண்டுவர முடியும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குழந்தைகளைச் சாப்பிட வைக்க அவர்கள் காட்டும் முதல் வழி, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதுதான். பெற்றோர்கள் என்னதான் பிஸியாக இருந்தாலும் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் டிவி, செல்போன் போன்ற எந்த இடையூறுகளும் இருக்கக்கூடாது. முடிந்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் தேவையற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்காமல் பயனுள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.
சமையலறைக்குள் குழந்தைகளை விடுங்கள்
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைச் சமையலறைக்குள் விடுவதில்லை. அடுப்பு எரிந்துகொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டுவிடும், கத்தியால் கைகளை வெட்டிக்கொள்வார்கள் என்ற பெற்றோர்களின் பயம்தான் அதற்கு காரணம். ஆனால் குழந்தைகள் நன்றாக சாப்பிட வேண்டுமென்றால் அவர்களை சமையல் அறைக்குள் விடவேண்டும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
குழந்தைகளிடம் இந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உணவுகளைச் சமைப்பதில் பங்கெடுத்துக்கொள்ளும் குழந்தைகள், அப்படி பங்கெடுக்காத குழந்தைகளை விட அதிகம் சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. எனவே உணவு சமைக்கும்போது காய்கறிகளை வெட்டுவது, சப்பாத்திக்கு மாவு பிசைவது போன்ற சிறுசிறு வேலைகளை குழந்தைகளுக்கு கொடுங்கள். இதனால் சமைப்பது எத்தனை கடினமான காரியம் என்பது அவர்களுக்கு விளங்கும். மேலும் வீட்டில் உணவு சமைப்பதில் தங்கள் பங்கும் இருக்கிறது என்ற உணர்விலேயே அவர்கள் அதிகம் சாப்பிடவும் செய்வார்கள். உணவை வீணடிக்கவும் மாட்டார்கள்.
டைனிங் டேபிளுக்கு வரவழையுங்கள்
குழந்தைகள் சாப்பிட வேண்டுமானால் முதலில் அவர்களை டைனிங் டேபிளுக்கு வரவழைக்க வேண்டும். தினமும் சாப்பாட்டு வேளையில் குழந்தைகள் விருப்பதுடன் டைனிங் டேபிளுக்கு வரும் வகையில் அவர்களை ஈர்க்க ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். சாம்பார், பொரியல், கூட்டு உங்கள் சவுகரியத்துக்கு ஏற்றதுபோல் ஒரே வகையான சமையலைச் செய்து குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வழக்கமான சமையலுடன் புலாவ், பிரியாணி வகைகள், ஐஸ்கிரீம், ப்ரூட் சாலட் என்று உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஏதாவது ஒரு உணவு வகையையும் சேர்த்து சமையுங்கள். அது உங்கள் குழந்தையை சாப்பாட்டு மேஜைக்கு இழுத்துவரும். அப்படி குழந்தைகள் வர ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உங்கள் வழிக்கு கொண்டுவரலாம்.
பெரும்பாலான குழந்தைகள் புதிய உணவுகளை ஏற்றுக்கொள்வதில் முதலில் தயக்கம் காட்டுவார்கள். இதுபோன்ற நேரங்களில் அவர்களை அதட்டாதீர்கள். இதனால் அந்த உணவு மீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படலாம். மாறாக அந்த உணவு அவர்களை கவரும் வகையில் செய்து கொடுங்கள். உதாரணமாக கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை அவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு பிடிக்கும் வகையில் அவற்றை சின்னச் சின்னதாக வெட்டி சாலட் போல் செய்து, டொமாட்டோ சாஸ், தயிர் என்று அவர்களுக்குப் பிடித்த பொருட்களுடன் கலந்து கொடுங்கள். சர்க்கரை தூவியும் கொடுக்கலாம்.
பிடித்தவர்களுடன் ஒப்பிடுங்கள்
குழந்தைகளைச் சாப்பிட்ட வைக்க நாம் பயன்படுத்த வேண்டிய மற்றொரு யுக்தி, அவர்களுக்கு பிடித்தமானவர்களுடன் அந்த உணவை ஒப்பிட்டுப் பேசுவது. உதாரணமாக உங்கள் குழந்தைக்கு நடிகர் விஜய்யை பிடிக்கும் என்றால், “இந்த வயசுலயும் விஜய் சினிமாவுல சுறுசுறுப்பா டான்ஸ் ஆடுறதுக்கும், சண்டை போடுறதுக்கும் அவர் கேரட்டையும் பீட்ரூட்டையும் சாப்பிடுறதுதான் காரணம்” என்று சொல்லி வையுங்கள். குழந்தைகள் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், “தோனி ஒரு நாளைக்கு 4 லிட்டர் பால் குடிப்பாராம். அதனாலதான் இப்படி அவரால சிக்சர் அடிக்க முடியுது” என்று சொல்லிப் பாருங்கள். இதனால் அந்த உணவுகளின் மீது குழந்தைகளுக்கு தனி மரியாதையும், அன்பும் ஏற்படும். தங்கள் ஹீரோக்களைப் போல் தாங்களும் நன்றாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
சாப்பாட்டுக்கான நேரம் தவிர மற்ற நேரங்களில் பப்ஸ், சமோசா, சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்கு வழங்காதீர்கள். இவற்றைச் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பசி எடுக்காததுடன் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு. நொறுக்குத் தீனிகளைக் கொடுப்பதாக இருந்தாலும், கேழ்வரகு, திணை, சோளம் போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளைக் கொடுங்கள்.
குழந்தைகள் முன் டயட்டிங் வேண்டாம்
உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்கள். எனவே அவர்கள் சத்தான ஆகாரங்களைச் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அந்த உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் உங்களைப் பார்த்து கற்றுக்கொள்வார்கள். ஒரு சில பெற்றோர்கள் டயட்டில் இருக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகள் முன்பாகவே சத்தான புரதச்சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பார்கள். இதனால் குழந்தைகளும் அதுபோன்ற உனவுகளைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு. இதனால் அவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்காமல் போகலாம்.
ஒரு சில பெற்றோர்கள் தங்களுக்கு பிடிக்காத உணவுகளைச் சுதந்திரமாக தள்ளி வைத்துவிட்டு, குழந்தைகளிடம் மட்டும் வலுக்கட்டாயமாக திணிப்பார்கள். ஒரே டைனிங் டேபிளில் ஒன்றாக சாப்பிடும்போது, கீரை பிடிக்காது என்று ஒதுக்கிவைக்கும் பெற்றோர்கள், அதே கீரையை குழந்தைகள் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதில் எந்த நியாயமும் இருக்காது. குழந்தைகளும் அதை ஏற்க மாட்டார்கள். எனவே அவற்றை பெற்றோர்கள் முதலில் சாப்பிட்டு குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய விஷயங்களைச் சில நாட்கள் செய்து பாருங்கள், சாப்பாடு விஷயத்தில் சமர்த்தாக மாறி, உங்கள் குழந்தைகள் நிச்சயம் உங்களை மகிழ்விப்பார்கள்.
No comments:
Post a Comment