இந்த நவீன காலத்தில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக பணம் மாறியுள்ளது. வாழ்க்கையில் ஒருவர் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார் என்பதை கணிக்கும் அளவீட்டுக் கருவியாகவும் பணம் பார்க்கப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கல்வியுடன் பணத்தைப் பற்றிய புரிதலையும், அதை எப்படி கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
4 வயது குழந்தை ஒன்றிடம் போய் பணம் எப்படி வருகிறது என்று கேட்டால், “ரோட்ல இருக்கிற ஏசி ரூமுக்குள்ள ஒரு மிஷின் இருக்கு. அதுக்குள்ள அப்பா ஒரு கார்டை போடுவாரு. அப்புறம் பணம் தட்டினதும் அந்த மிஷின்ல இருந்து பணமா கொட்டும்” என்பதுதான் பதிலாய் வரும். அவர்களைப் பொறுத்தவரை பணம் ஈட்டுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏடிஎம்மில் ஒரு கார்டை சொருகினால் அடுத்த நிமிடமே பணம் கிடைத்துவிடும் என்று நினைத்திருக்கிறார்கள். அதனால் நாம் கேட்டதையெல்லாம் பெற்றோர்கள் வாங்கிக் கொடுப்பது எளிதான விஷயம் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அவர்களின் பாஷையில் விளக்குங்கள்
இந்த அறியாப் பருவத்தில் இருந்தே நாம் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். அவர்கள் 1, 2, 3 என்று துல்லியமாக எண்ண ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே அவர்களிடம் ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் கொடுத்து எண்ணப் பழக்க வேண்டும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பணம் மதிப்பு வாய்ந்த பொருளாக இருக்காது. சாக்லேட்களும் பொம்மையும்தான் அவர்களுக்கு மதிப்பு வாய்ந்த விஷயங்கள். அதனால் அவர்களின் பாதையிலேயே சென்று பணத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். உதாரணமாக 100 ரூபாயின் மதிப்பைப் பற்றி அவர்களுக்கு விளக்க, “உனக்கு ரொம்ப பிடிச்ச சாக்லேட்டோட விலை 5 ரூபாய். 100 ரூபாய் இருந்தா அதேபோல 20 சாக்லேட்களை வாங்கலாம்” என்று விளக்கலாம். அப்படியே ஏடிஎம் மிஷினில் இருந்து சும்மா பணம் கொட்டாது என்பதையும், வேலைக்குப் போய் வங்கியில் பணத்தைப் போட்டால்தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் என்பதையும் அவர்களிடம் விளக்க வேண்டும். -இது முதல் கட்டம்.
உண்டியல் வாங்கிக் கொடுங்கள்
வீட்டில் குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கிக்கொடுக்கும் பழக்கம் முன்பெல்லாம் பல வீடுகளில் இருந்தது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் கொடுக்கும் பணத்தையும், பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தையும் இதில் ஆசை ஆசையாய் குழந்தைகள் போட்டு வைப்பார்கள். அவசர தேவைகளுக்கு பெற்றோர்களுக்கே அந்தப் பணம் உதவும். ஆனால் காலப்போக்கில் இந்த பழக்கம் குறைந்து வருகிறது. பணத்தின் அருமை குழந்தைகளுக்கு தெரிய வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு ஒரு உண்டியலை வாங்கிக் கொடுங்கள்.
‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சி வந்த பிறகு, ‘டாஸ்க்’ என்ற வார்த்தை குழந்தைகள் மனதில் பச்சென்று ஒட்டிவிட்டது. ‘பிக் பாஸ்’ வீட்டைப் போல் உங்கள் குழந்தைகளுக்கும், குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தனை ரூபாயை சேர்த்து வைக்க வேண்டும் என்று ‘டாஸ்க்’ கொடுங்கள். அல்லது புதிதாக வெளிவந்திருக்கும் 10 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் போன்ற குறிப்பிட்ட நாணயங்களை சேர்த்துவைக்கச் சொல்லுங்கள். இந்த விளையாட்டின் மூலம் சேமிக்கும் பழக்கம் அவர்கள் மனதில் வளரும். கண்டதை வாங்கிச் சாப்பிட்டு பணத்தை விரயம் செய்யும் குணமும் மாறும்.
சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், “நீ 5000 ரூபாய் சேர்த்தால் நான் மேற்கொண்டு 5 ஆயிரம் ரூபாயைப் போட்டு உனக்குப் பிடித்த கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்ப்பேன்” என்பதுபோன்ற சிறுசிறு பரிசுகளையும் அறிவிக்கலாம். மேற்கொண்டு பணத்தைச் சேர்க்க உதவியாக அவர்களின் பெயரிலேயே ஒரு வங்கிக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டு வைக்கச் சொல்லலாம். இதற்காக வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் வங்கி நடைமுறைகளையும் அவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
குடும்ப பட்ஜெட் பற்றி விவாதியுங்கள்
கணவன் - மனைவி மட்டுமல்ல, ஒரு வீட்டின் குடும்ப பட்ஜெட்டைப் போடும்போது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளும் விவாதத்தில் பங்கேற்க வேண்டியது அவசியம். அப்போதுதான் வீட்டில் என்னவெல்லாம் செலவுகள் இருக்கின்றன. அதைச் சமாளிக்க பெற்றோர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். குடும்ப பட்ஜெட் என்றில்லை, சுற்றுலா செல்வதற்கான பட்ஜெட், வீட்டில் நடக்கும் பிறந்த நாள் போன்ற சிறு நிகழ்ச்சிகளுக்கான பட்ஜெட் என்று ஒவ்வொரு பட்ஜெட்டைப் போடும்போதும் வீட்டில் உள்ள குழந்தைகள் அருகில் இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் இந்த விவாதங்களின்போது குழந்தைகளுக்கு கவலையளிக்கும் வகையில் பணக் கஷ்டத்தை பற்றி தீவிரமாக விவாதிக்க கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இது அவர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தி படிப்பை பாதிக்கலாம் என்பதால், மேலோட்டமாக மட்டும் நிதிநிலையைப் பற்றி பேச வேண்டும்.
உன் பணம் உன் ஷாப்பிங்
குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்லும்போது, அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், ஒரு நல்ல தகப்பன் என்று அவர்களிடம் பெயர் வாங்கலாம். ஆனால் இதன்மூலம் பணத்தின் அருமை அவர்களுக்கு தெரியாமல் இருக்க நீங்கள் காரணமாகி விடுகிறீர்கள். எனவே அடுத்த முறை ஷாப்பிங் செல்லும்போது அப்படிச் செய்யாதீர்கள். அவர்களுக்கென்று ஒதுக்கிவைத்த பணத்தை, அவர்களிடமே கொடுத்து விடுங்கள். “இதுதான் உனக்கான பட்ஜெட். இந்த தொகைக்குள்தான் உனக்குத் தேவையான பொருட்களை வாங்கவேண்டும்” என்று திட்டவட்டமாக கூறிவிடுங்கள். இதன்மூலம் மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்கி, பணத்தை எப்படி உபயோகமாக செலவு செய்வது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்வர்கள். குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் கலையை அவர்கள் கற்பதுடன், அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதும் குறைந்துவிடும். அதேபோல் சாதாரணமாக மளிகைக்கடைக்கு செல்லும்போதோ, காய்கறிக் கடைக்கு செல்லும்போதோ குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் விலைவாசி பற்றிய நிலவரங்கள் அவர்களுக்கும் தெரியவரும்.
இப்படி பணத்தின் அருமையைப் பற்றி குழந்தைகளுக்கு புரியவைக்க பல வழிகள் உள்ளன. அதே நேரத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்பதையும் அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டியது நம் கடமை.
No comments:
Post a Comment