Powered By Blogger

Saturday, June 15, 2019

ஆலன் குர்தியின் மரணம்


2015-ம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகின் மனசாட்சியை உலுக்கிய படம் என்று ஆலன் குர்தியின் படத்தைச் சொல்லலாம். கிரேக்க நாட்டின் கடற்கரைப் பகுதியில் மணலில் முகம்புதைந்த நிலையில் கிடந்த ஆலன் குர்தியின் உடல், நிலுபர் டெமிரின்  கேமரா வழியாக பதிவாகி உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்படும் அகதிகளின் அவலத்தை  உரக்கச் சொன்னது.  
தன் மரணத்தால் உலகை உலுக்கிய  ஆலன் குர்தி, சிரியாவின் கொம்பானி நகரத்தைச் சேர்ந்தவன். உள்நாட்டுச் சண்டையால் சிரியாவின் அமைதி பாதிக்கப்பட, 3 வயதான மகன் ஆலன் குர்தியையும், 5 வயதான அவன் அண்ணன் காலிப் குர்தியையும் அழைத்துக்கொண்டு மனைவியுடன் கனடாவில் தஞ்சம் புக திட்டமிட்டார் அப்துல்லா குர்தி. ஏற்கெனவே கனடாவில் இருக்கும் அப்துல்லாவின் சகோதரி இதற்கான செலவை ஏற்பதாக கூறியிருந்தார். ஆனால் அகதிகள் விஷயத்தில் கனடா அரசு கொண்டிருந்த கொள்கை மாற்றத்தால், அப்துல்லாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கனடா வருவதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது.   இந்நிலையில் சிரியாவில் இருந்து துருக்கிக்கு சென்று அங்கிருந்து கிரேக்கத்துக்கு செல்லும் ஒரு நெரிசல் மிகுந்த படகில்  3 லட்ச ரூபாய் செலுத்தி,  குடும்பத்துடன் புறப்பட்டார் அப்துல்லா. ஏராளமான அகதிகளின் நம்பிக்கையைச் சுமந்து,  துருக்கியின் போட்ரம் பகுதியில் இருந்து படகு புறப்பட்டது.
கிரேக்க நாட்டில் உள்ள கோஸ் தீவில் அவர்களை இறக்கி விடுவதுதான்  படகின் நோக்கமாக இருந்தது. ஆனால் கடலில் எழுந்த ராட்சத அலைகளாலும், படகில் அதிகம் அகதிகள் குவிந்து இருந்ததாலும் புறப்பட்ட  3 கிலோமீட்டர் தொலைவிலேயே படகு தத்தளிக்கத் தொடங்கியது. பயத்தில் பயணிகள் அங்குமிங்கும் சாய, ஒட்டுமொத்தமாக கவிழ்ந்தது. அப்துல்லாவின் கண் முன்பே அவரது மனைவியும் மகன்களான ஆலனும், காலிப்பும் தண்ணீரில் மூழ்கினர்.
அடுத்த நாள் காலை கடற்கரை ஓரம் முகம் புதைத்துக் கிடந்த ஆலனின் உடல், படகில் வந்தவர்களுக்கு நேர்ந்த கதியை உலகுக்கு சொல்லியது. நிலுபர் டெமிர் (Nilufer Demir) என்ற பத்திரிகை புகைப்படக்காரர் இதை படமெடுத்து வெளியிட, சிரிய அகதிகளின் அவலத்தை உலகம் அறிந்தது.
  நிலுபர் டெமிர்
துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகை புகைப்படக்காரரான நிலுபர் டெமிர் (32 வயது), உள்நாட்டுப் போரால் அவதிப்பட்டு பிற நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளின் வாழ்க்கையை படமெடுப்பதில் சிறந்து விளங்குகிறார். ’டோகன் நியூஸ் ஏஜென்ஸி’யில் பணியாற்றும் அவர் 2015-ம் ஆண்டு ஆலன் குர்தியின் இந்தப் படத்தை எடுத்தார். இந்தப் படத்துக்காக துருக்கி ஃபோட்டோஜர்னலிஸ்ட் அசோசியேஷனின் சிறந்த படத்துக்கான விருதை வென்றார்.
 “போட்ரம் கடற்கரைப் பகுதியில் ஆலனின் உடலைக் கண்டதும் முதலில் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்று மனம் தவித்தது. அவனுக்கு உதவ முடியாவிட்டாலும் அவனைச் சார்ந்த மக்களுக்காவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை எடுத்தேன்’ என்கிறார் நிலுபர் டெமிர்.


No comments:

Post a Comment