ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான், 1993-ம் ஆண்டில் மிக மோசமான காலகட்டத்தைச் சந்தித்தது. ஒருபக்கம் பஞ்சம், மறுபக்கம் உள்நாட்டுப் போர் என அந்நாட்டின் கழுத்து நெரிபட்டுக் கொண்டிருந்தது. சூடான் மக்கள் உணவில்லாமல் திண்டாடிக்கொண்டு இருந்தார்கள். சர்வதேச பத்திரிகைகள் இதைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருந்தன.
சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் இதுதொடர்பாக செய்திகளை சேகரிக்க சூடானில் முகாமிட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் கெவின் கார்ட்டர் (Kevin Carter). தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான அவர், ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத விஷயங்களை ஒரே புகைப்படம் மூலம் எடுத்துச் சொல்வதில் வல்லவர். துடிப்பான போட்டோகிராபரான அவரது படங்களை சர்வதேச பத்திரிகைகள் பலவும் ஆவலுடன் வாங்கி வெளியிட்டு வந்தன. சூடானின் நிலையை ஒருசில படங்களில் விளங்கவைக்கும் முயற்சியில் கேமராவும் கையுமாக சூடான் முழுக்க அலைந்தார்.
ஒட்டிய வயிறுடன் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், உணவு வேன்களின் பின்னால் வெறிபிடித்து ஓடும் மக்கள் கூட்டம், ஒரு துண்டு ரொட்டிக்காக அடித்துக்கொள்ளும் குடிமக்கள் என்று பல விஷயங்களை அவரது கேமரா க்ளிக்கிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில்தான் அயோட் (Ayod) என்ற கிராமத்தில் ஒரு காட்சி அவரது கண்களில் பட்டது. பசியால் குற்றுயிரும் கொலையுயிருமாக ஒரு குழந்தை சோர்ந்துபோய் அமர்ந்திருக்க, அதன் அருகே கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது.இதைப் பார்த்ததும் குழந்தையை காப்பாற்றுவதா அல்லது அந்தச் சூழலை படமெடுப்பதா என்று ஒரு மினி பட்டிமன்றமே கெவின் கார்ட்டரின் மனதில் நடந்தது கடைசியில் கடமை உணர்ச்சிதான் வென்றது. படம் எடுப்பதுதான் முதல் லட்சியம் என்று கேமராவை ஸ்டாண்டில் பொருத்தி நிதானமாக காத்திருந்தார். சுமார் 20 நிமிட நேரம் குழந்தையை வட்டமிட்ட கழுகு, கடைசியில் அதன் அருகில் போய் அமர்ந்தது. இதுதான் சமயமென்று,அதை க்ளிக்கினார் கார்ட்டர்.
இதுபற்றி கூறும் கார்ட்டர், “அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் விமானத்தில் இருந்து கீழே போடப்படும் உணவுகளை சேகரிப்பதில் கவனமாக இருந்ததால் குழந்தையை கவனிக்கவில்லை. இதனால் தனித்திருந்த குழந்தையை தாக்கும் எண்ணத்துடன் கழுகு நெருங்கிக்கொண்டிருந்தது. குழந்தையை காக்கவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், எனக்குள் இருந்த புகைப்படக்கார மனசாட்சி அதை முதலில் படமெடுக்கத் தூண்டியது 20 நிமிடங்கள் காத்திருந்து, குழந்தையை அந்த கழுகு நெருங்கியதும் படமெடுத்தேன். சில படங்களை எடுத்த பிறகு அந்த கழுகைத் துரத்திவிட்டு குழந்தையையும் காப்பாற்றினேன்” என்கிறார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு விற்கப்பட்ட அந்த படம், ‘தி வல்ச்சர் அண்ட் தி லிட்டில் கேர்ள்’ (The vulture and the little gir) என்ற தலைப்பில் 1993-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி முதலில் வெளியானது. இந்த படத்தைப் பார்த்த வாசகர்கள் பலரும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையைத் தொடர்புண்டு, அந்த குழந்தை காப்பாற்றப்பட்டதா என்று பதற்றத்துடன் விசாரித்தனர். மேலும் அந்தச் சூழலில் குழந்தையை காப்பாற்றாமல் படமெடுப்பதில் ஆர்வம் காட்டிய புகைப்படக்காரரை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
சூடானில் எடுத்த அந்தப் படம், கெவின் கார்ட்டரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. இதற்காக 1994-ம் ஆண்டில் அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.ஆனாலும் சூடானில் தான் கண்ட காட்சிகளால் மனதளவில் பாதிக்கப்பட்ட கார்ட்டர்,புலிட்சர் விருது வாங்கிய சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
கெவின் கார்ட்டர்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜொகன்னஸ்பர்க்கில் 1960-ம் ஆண்டு பிறந்த கெவின் கார்ட்டர், சிறு வயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ‘ஜொகன்னஸ்பர்க் ஸ்டார்’ என்ற பத்திரிகையில் புகைப்படக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி உள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் பஞ்சம் நிறைந்த பகுதிகளில் படம் எடுக்கச் செல்பவர்கள்,அங்குள்ளவர்களை தொடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து புகைப்படக்கரர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது. இதனால் கழுகுக்கு முன்னால் தான் படம் எடுத்த குழந்தை உட்பட, பசியால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை தொட்டு ஆறுதல் கூறக்கூட முடியாததால் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டார். மேலும் வறுமை நிலையும் கெவினை அலைக்கழித்தது. இறுதியில் 1994-ம் ஆண்டு தான் சிறுவயதில் விளையாடிய பார்க்மோர் என்ற இடத்தில், ஒரு டிரக்கை இயக்கி அதன் புகைபோக்கி அருகே முகத்தை வைத்து, புஅதிலிருந்து வெளியான கார்பன் மோனோக்ஸைடை சுவாசித்து இறந்தார்.
No comments:
Post a Comment