Powered By Blogger

Saturday, June 15, 2019

இந்தியாவை கரைசேர்ப்பாரா விராட் கோலி?



தேர்தல் சீசன் முடிந்துவிட்டது. இந்தியாவில் அடுத்த 2 மாதங்களுக்கு  கிரிக்கெட் சீசன்தான் காபி ஷாப்கள் முதல் தெருவோர டீக்கடைகள் வரை விராட் கோலியின் தலையைத்தான் உருட்டப்போகிறார்கள்.  1983-ல் கபில்தேவும், 2011-ல் தோனியும் செய்த மாயாஜாலத்தை 2019-ல் விராட் கோலி நிகழ்த்துவாரா என்ற விவாதம் பட்டிதொட்டியெல்லாம்நடக்கும். உலகக் கோப்பையை வென்றுவந்தால்  ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்வார் விராட் கோலி. தோற்றுப் போனாலோஅணியின் எல்லாத் தவறுகளுக்கான பழியும் அவர் தலையில்தான் விழும்.

ஒருபக்கம் கேப்டனுக்கான பொறுப்புகள்மறுபக்கம் சிறந்த பேட்ஸ்மேனுக்கான கடமைகள் என்று ஒரே நேரத்தில் 2சுமைகளை சுமக்கவேண்டிய நிலை கோலிக்கு.  சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் விராட் கோலிஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்  2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அடித்த ரன்கள்   4,306. இதில் சதங்கள் மட்டுமே 19. ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் தொடர்ந்து நம்பர் ஒன்னாக இருக்கும் கோலி,   உலகக் கோப்பையிலும் தன் அதிரடியை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்று வருவார் என்று  நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அதே நேரத்தில் முழுச் சுமையையும் கோலியின் முதுகில் சுமத்தினால் அணி கரைசேராது என்று எச்சரிக்கை விடுக்கிறார்  சச்சின் டெண்டுல்கர். “1996, 1999, 2003 உலகக் கோப்பை போட்டிகளில்  எனது பேட்டிங்கை மட்டுமே அணி நம்பியிருந்ததால்  எனக்கு மிகப்பெரிய சுமை ஏற்பட்டது. இதே நிலை விராட்  கோலிக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்ற வீரர்களும் அவருக்கு தோள்கொடுத்து ஆடவேண்டும்” என்று கூறியுள்ளார்.   இந்நிலையில் முன்பு சச்சினை நம்பியிருந்ததுபோல் இன்றைய கிரிக்கெட் அணி கோலியை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அவருக்கு துணையாக பல அம்சங்கள் அணியில் இருக்கின்றன என்று பட்டியலிடுகிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
 
வலுவான தொடக்க ஜோடி
 பேட்டிங் வரிசையில் கோலியின் வேகத்துக்கு சற்றும் குறையாமல்  ஈடுகொடுத்து வருகிறார்கள் தொடக்க ஆட்டக்கார்களான  ரோஹித் சர்மாவும்ஷிகர் தவனும்.  2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இதுவரை ஒருநாள் போட்டிகளில்  3,790 ரன்களை விளாசியுள்ள ரோஹித் சர்மாவை,   20 ரன்களுக்குள்  ஆட்டம் இழக்கச் செய்தால்தான் உண்டு. அப்படிச் செய்யாவிட்டால்எதிரணி காலி என்று அர்த்தம். எக்ஸ்பிரஸ் ரயில் போல மெதுவாக ஓட ஆரம்பித்து பின்னர் மிதமான வேகம்கடைசிக்கட்டத்தில் அசுர வேகம் என்று முன்னேறி எதிரணியை துவம்சம் செய்வது இவரது ஸ்டைல். பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்களை எட்டினால் சோர்ந்து போவார். ஆனால் ரோஹித் சர்மாவுக்கோ, 100 ரன்களை எட்டிய பிறகுதான்  உற்சாகமே பிறக்கும்.   150, 175, 200 என்று தனது ரன் இலக்கைநீட்டித்துக்கொண்டே போய் எதிரணியை கலங்கடிப்பார்.

 ரோஹித் சர்மா நிதானமாக ஆடும் கட்டத்தில் ரன் ரேட்டைக் குறையாமல் பார்த்துக் கொள்வதில் ஷிகர் தவன் கெட்டிக்காரர்.அதனால்தான் உலகின் சிறந்த தொடக்க ஜோடிகளில் ஒன்றாக தவன் - ரோஹித் சர்மா ஜோடி திகழ்கிறது.  
தோனியின் பினிஷிங்
ஒரு அணி முதலில் எப்படி பேட்டிங் செய்கிறது என்பதைவிடஅது பேட்டிங்கை எப்படி முடிக்கிறது  என்பதுதான் முக்கியம். சினிமாக்களில் க்ளைமேக்ஸ் காட்சியில் எதிரிகளை பந்தாடுவதுபோல் கடைசி கட்டத்தில் அதிரடியாய் வெளுத்துவாங்கும் பேட்ஸ்மேன்களால்தான் அணியின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் எடுத்துச்செல்ல முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தப் பணியை கச்சிதமாய் நிறைவேற்றுபவராக தோனியும் அவருக்கு துணையாக ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர்.   சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் வெளிக்காட்டிய ஆவேசத்தை உலகக் கோப்பையிலும் இவர்கள்   வெளிப்படுத்தினால் இந்திய பேட்டிங் இங்கிலாந்தில் வாணவேடிக்கை காட்டும்.
தோனியைப் பொறுத்தவரை அவரது அதிரடி பேட்டிங்குடன் நீண்டகால அனுபவமும் கேப்டன் கோலிக்கு கைகொடுக்கிறது.  இதுபற்றி சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ள விராட் கோலி, “35 ஓவருக்குப் பிறகு பெரும்பாலும் எல்லைக் கோட்டுக்கு அருகில் நின்று பணியாற்றவே நான் விரும்புவேன். இதுபோன்றகாலகட்டங்களில் அணிக்கும்பந்துவீச்சாளர்களுக்கும் வழிகட்டும் பணியை தோனி மேற்கொள்வது எனது பணிச்சுமையை குறைக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் முக்கியமான கட்டங்களில் பீல்ட் செட்டிங்கை மாற்றியமைப்பது ரிவ்யூவை பயன்படுத்துவதும் விஷயத்தில்  வழிகாட்டுவது என பல விஷயங்களில் கோலிக்கு தோள்கொடுக்கிறார் தோனி.

பாயும் பந்துவீச்சு
பொதுவாக இந்திய அணி என்றாலே அதன் வலுவான பந்துவீச்சுதான் அனைவரின் மனதிலும் தோன்றும். ஆனால் இந்த உலகக் கோப்பையில்தான் மற்ற அணிகளை விட வலுவான பந்துவீச்சு வரிசையைக் கொண்ட அணியாக இந்தியா கருதப்படுகிறது.  இந்த பந்துவீச்சு வரிசையில் பிரம்மாஸ்திரம் என்று பும்ராவைச் சொல்லலாம். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலி ராஜா என்றால்பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ரா சக்ரவர்த்தி கடந்த பல வாரங்களாக பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பும்ரா, 41 போட்டிகளில் 85விக்கெட்களை அள்ளியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை விக்கெட்களை எடுப்பதைவிட ரன்களைக் கட்டுப்படுத்துவதுதான் முக்கியம்.   இந்த விஷயத்திலும் பும்ரா ராஜாதான்.  ஓவருக்கு சராசரியாக 4.51 ரன்களுக்கு மேல் கொடுக்காத பும்ராகடைசி ஓவர்களில் பிரம்மாண்டமாக யார்க்கர்களை  வீசி பேட்ஸ்மேன்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

வேகப்பந்தில் பும்ரா மிரட்டினால்அதற்கு சற்றும் குறையாமல் சுழற்பந்தில் வித்தைகளைக் காட்டி  எதிரணியைக் கட்டிப் போடுகிறார்  குல்தீப் யாதவ். 44 ஒருநாள் போட்டிகளில் 87 விக்கெட்களை எடுத்துள்ள குல்தீப் யாதவ்,  ஒரு ஓவரில் விட்டுக்கொடுக்கும் ரன்களின் சராசரி 4.93தான். பும்ரா - குல்தீப் கூட்டணிக்கு தோள்கொடுக்கும் வகையில் புவனேஸ்வர் குமார்முகமது ஷமிசாஹல் என்று மிகச்சிறந்த பந்துவீச்சு வரிசை இருப்பதால் பந்துவீச்சில் பலமாகவே இருக்கிறது இந்தியா.
இப்படி சாதகமான பல விஷயங்கள் இருந்தாலும்ஸ்திரமான  4-வது வரிசை பேட்ஸ்மேன் இல்லாததுஇங்கிலாந்தில் ஸ்விங் பந்துவீச்சில் தடுமாறும் பேட்டிங் வரிசை என்று பாதகமான சில விஷயங்களும் இந்தியாவை மிரட்டுகின்றன. இவையெல்லாம் கடந்து கோப்பையை வென்றுகொடுத்து இந்தியாவை கோலி கரைசேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

 

No comments:

Post a Comment