Powered By Blogger

Sunday, November 24, 2019

சாஸ்திரியின் கடைசிப் படம்


எளிமையாக வாழ்ந்த இந்திய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் லால் பகதூர் சாஸ்திரி. நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற அவர்,  ‘அமைதியின் மனிதர்’ என்று அழைக்கப்பட்டார்.    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக தாஷ்கண்ட் சென்ற நிலையில் அங்கு காலமானார். அவர் காலமாவதற்கு சில மணிநேரம் முன்பு பிரேம் வைத்யா (prem vaidya) என்ற புகைப்படக்காரர் எடுத்த படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
1965-ல் காஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்தியாவின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.    லால் பகதூர் சாஸ்திரியை இது கோபம் கொள்ளச் செய்தது.   பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க    உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடந்த போரில்,  பாகிஸ்தானின் சில பகுதிகளை இந்திய ராணுவம்  கைப்பற்றியது. 1965 செப்டம்பர் 21-ம் தேதி ஐநா சபை கூடி, இருதரப்பையும் சமாதானமாக செல்லுமாறு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து சில தினங்களில்   போர் முடிவுக்கு வந்தது.
போர் முடிந்த நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையே பகைமை குறையவில்லை. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அப்போதைய சோவியத் யூனியன் அரசு ஈடுபட்டது.  1966-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் சோவியத் யூனியனின் பிரதமராக இருந்த கோசிஜின் முன்னிலையில் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபரான அயூப்கானும் தாஷ்கண்ட் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனவரி 10-ம் தேதி இரவு, இரு தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது நடந்த சில மணி நேரங்களிலேயே ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில் லால் பகதூர் சாஸ்திரி காலமானார்.
சாஸ்திரி இறப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் பிரேம் வைத்யா அவரது கடைசி புகைப்படத்தை எடுத்துள்ளார்.  சாஸ்திரி காலமான இரவில் நடந்ததைப் பற்றி  பிரேம் வைத்யா குறிப்பிட்டுள்ளதாவது: 
    தாஷ்கண்டில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை படமெடுக்க நானும் சென்றிருந்தேன். இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தங்குவதற்காக அழகான மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.     பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் இருந்து  3 நிமிட நடைப்பயணத்தில் எட்டிவிடக் கூடிய தூரத்தில் அந்த மாளிகை இருந்தது.
ஜனவரி 10-ம் தேதி இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லால் பகதூர் சாஸ்திரி தனது மாளிகைக்கு சென்றுவிட்டார். அன்று நள்ளிரவு வரை சாஸ்திரிக்கு பல்வேறு பணிகள் இருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி பணிபுரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது.  அதை நிறைவேற்ற இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்.  
அன்று இரவு அறைக்கு வந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் யாரிடமோ நீண்டநேரம் தொலைபேசியில் பேசிவிட்டு தாமதமாக இரவு உணவை முடித்துக்கொண்டார். பின்னர்  அங்குள்ள அறையிலேயே அவர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தார்.  சாஸ்திரியை படமெடுக்க இதுதான் உகந்த சமயம் என்று நினைத்த நான்,  தோட்டத்தில் இருந்துகொண்டு என்னுடைய கேமராவில்  பிலிம்ரோல் தீரும் வரை படமெடுத்தேன். என்னுடன் தாஷ்கண்டுக்கு வந்திருந்த புகைப்படக்காரர்களான கிஷோர் பாரிக் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் அவரைப் படம் எடுத்தனர். அப்படி நான் எடுத்ததில் கடைசி படம்தான் இது.
அந்தப் படத்தை எடுத்த பிறகு என் அறைக்கு வந்த நான் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டேன். நள்ளிரவில் என் அறையின் கதவை யாரோ பதற்றத்துடன் தட்டும் சத்தம் கேட்டது.  கதவைத் திறந்தபோது, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர்  பதற்றத்துடன் வெளியில் நின்றிருந்தார். ‘பிரேம்.. பிரேம்.. சாஸ்திரிஜி...’ என்ற வார்த்தையை தவிர வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து நானும் அவரும், சாஸ்திரி தங்கியிருந்த மாளிகைக்கு சென்றோம்.
 நள்ளிரவு நேரத்திலும் அந்த மாளிகை பரபரப்பாக இருந்தது.    ஒவ்வொருவரின் முகத்திலும் கவலை அப்பிக்கிடந்தது. அறைக்குள்  பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உடல் சலனமற்றுக் கிடந்தது. அவரது தனிப்பட்ட மருத்துவரான டாக்டர்.ஆர்.என்.சக், இணைச் செயலாளரான சி.பி.ஸ்ரீவத்சவா, பிரதமரின் தனிச் செயலளரான ஜெகன்னாத் சஹாய் ஆகியோர் அவரது உடலைச் சுற்றி கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.  சில மணி நேரங்களுக்கு முன்பு, துடிப்பாக உலவிக்கொண்டிருந்த அவரை கடைசியாக படம் பிடித்து என் நினைவுக்கு வந்தது.
இவ்வாறு பிரேம் வைத்யா கூறுகிறார்.
அன்றைய தினம் சாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது வழிநெடுகிலும் இருந்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சோவியத் யூனியனின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. சாஸ்திரியின் உடலை விமானத்தில் ஏற்றும்போது அவரது உடலைச் சுமந்த பெட்டியின் ஒரு பக்கத்தை சோவியத் யூனியனின் பிரதமர் கோசிஜினும், மற்றொரு பக்கத்தை  பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் சுமந்து சென்றனர்.  லால் பகதூர் சாஸ்திரி, மாரடைப்பால் காலமானதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்னும் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
பிரேம் வைத்யா:
மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் பிலிம் டிவிஷன் பிரிவில் 31 ஆண்டுகள் பல்வேறு பதவிகளை வகித்தவர் பிரேம் வைத்யா.  இந்த 31 ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு முக்கிய தருணங்களை அவர் படம் எடுத்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் யுத்தம், வங்கதேச  போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சம்பவங்கள் இதில் அடங்குகின்றன. புகைப்படம் எடுப்பதுடன் வீர சாவர்கரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட ஏராளமான டாக்குமெண்டரி படங்களையும் அவர் எடுத்துள்ளார். 1954-ல் உதவி கேமராமேனாக பிலிம் டிவிஷனில் பணியைத் தொடங்கிய இவர், 1985-ல் நிகழ்ச்சி தயாரிப்பாளராக ஓய்வுபெற்றார்.


  

வகுப்பறைக்குள் வசந்தத்தை கொண்டுவருவது எப்படி?



வீடுகளுக்கு அடுத்ததாக மாணவர்கள் அதிக நேரம் செலவழிக்கும் இடம் வகுப்பறை. அதுபோல் குடும்பத்தினருக்கு அடுத்ததாக மாணவர்கள் அதிக நேரம் செலவழிப்பது வகுப்பு ஆசிரியருடனும்,    வகுப்புத்  தோழர்களுடனும்தான். எனவே ஒரு மாணவரை மிகச் சிறந்த மனிதனாக வடிவமைப்பதில் வகுப்பறைக்கும் முக்கிய பங்கு உள்ளது. அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை ஈர்ப்பதிலும், அதற்குள் சிறப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதிலும்  ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.   வகுப்பறைக்குள் சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:
வகுப்பறையின் அமைப்பை மாற்றுங்கள்:
ஒரே விஷயத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாலோஒரே சூழலில் நீண்டகாலம் இருக்கவேண்டி இருந்தாலோ மாணவர்களுக்கு அலுப்புத் தட்டலாம்.  எனவே மாதம் ஒரு முறையாவது வகுப்பறையின் சூழலையும்அமைப்பையும் மாற்றுங்கள்ஒரு வாரம் புவியியல் சம்பந்தப்பட்ட படங்களை வைத்து வகுப்பறையை அலங்கரித்திருந்தால்அடுத்த மாதம் அறிவியல் தொடர்பான படங்களை வைத்து வகுப்பறையை அலங்கரியுங்கள்அதற்கு அடுத்த மாதம் வரலாறு சம்பந்தப்பட்ட படங்களை பயன்படுத்தி வகுப்பறையை அழகுபடுத்துங்கள்இதற்கான பணிகளை மாணவர்களை வைத்தே செய்யுங்கள்அவர்களே இது தொடர்பான ஓவியங்களையும்சார்ட்களையும் தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்இதனால் மாணவர்களுக்கு தங்கள் வகுப்பறையை அலங்கரிக்கிறோம் என்ற உர்வு ஏற்படும்பாடம் சம்பந்தப்பட்ட படங்களை வகுப்பறையில் அடிக்கடி பார்க்க நேர்வதால்அதைப் பற்றிய புரிதலும் ஏற்படும்.
மாணவர்களின் இருக்கையை அடிக்கடி மாற்றுங்கள்:
படிப்பில் இருந்து மாவர்களை திசைமாற்றும் விஷயங்களில் ஒன்று அரட்டை.  அதிலும் ஒரே இடத்தில் அருகருகே 2 மாவர்களை பல நாட்கள் தொடர்ந்து அமரவைத்தால்கேட்கவே வேண்டாம்அவர்களின் நட்பு பலமாகி அரட்டைக் கச்சேரி அதிகரித்துவிடும்இதைத் தவிர்க்க மாணவர்களை அடிக்கடி இடம் மாற்றுங்கள்இதனால் அரட்டைகளை குறைக்க முடியும்அத்துடன்  மாவர்களிடையே  முதல் பெஞ்ச் மாணவன்’,  கடைசி பெஞ்ச் மாணவன்  என்ற பாகுபாட்டையும் குறைக்கலாம்.
வகுப்பறையை சுற்றி வாருங்கள்:
சில ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும் நோட்ஸ்களை டிக்டேட் செய்யும்போதும்  ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பார்கள்.  இப்படி செய்வதால் ஆசிரியர்களால் வகுப்பில் உள்ள அனைத்து மாவர்களையும் கவனிக்க முடியாதுஇதனால் மாணவர்கள் தங்களை சரியாக கவனிக்கிறார்களா என்பதையும் அறிய முடியாதுஇந்த நிலை ஏற்படுவதை தடுக்கபாடம் நடத்தும்போதும்நோட்ஸ்களை டிக்டேட் செய்யும்போதும் வகுப்பறையை சுற்றி வருவது நல்லதுஇப்படி வகுப்பறையைச் சுற்றி வரும்போது பாடங்களை எழுதாமல் தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் மாவர்களையும், அரட்டை அடிக்கும் மாணவர்களையும்  கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தலாம்.
 கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்:
மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்களுக்கு கோபம் வருவது இயல்புஅப்படி கோபம் வந்தால் சில ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பார்கள்ஒரு சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்கள்.   இதுபோன்ற சமயங்களில் சக மாணவர்கள் முன்புமிகக் கடுமையான வார்த்தைகளால் அவர்களை திட்டாமல் இருப்பது நல்லதுஇதனால் ஏற்படும் அவமானத்தால் அவர்கள் மேலும் கடுமையானவர்களாக வாய்ப்பு உள்ளதுஎனவே முடிந்தவரை சம்பந்தப்பட்ட மாணவரிடம்  தண்மையாக பேசி அறிவுரை கூறுங்கள்அவசியம் திட்டவேண்டும் என்றால் வகுப்பு முடிந்த பிறகு தனியே அழைத்துப் போய் திட்டிஅறிவுரை கூறுங்கள்இதனால் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
அனைவரையும் சமமாக நடத்துங்கள்:
உங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களை எப்போதும் சமமாக நடந்துங்கள்ஒவ்வொரு மாவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் தனித்தன்மையும் ஆற்றலும் இருக்கும்எனவே நன்றாக படிக்கும் மாணவர்கள்படிக்காத மாவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துங்கள்தங்களாலும் சாதிக்க முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை மாவர்கள் மனதில் விதையுங்கள்படிப்பை மட்டுமின்றி மாவர்களிடம் உள்ள பிற ஆற்றல்களையும் ஊக்குவியுங்கள்தங்கள் ஆசிரியர்கள் தங்களை அன்பாகஅனைவருடனும் சமமாக நடத்துகிறார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு படிப்பின் மீதும் வகுப்பறையின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

கார்களின் காதலர்


 
மனிதர்களின் வாழ்க்கையில் போர் எந்த அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும் படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். ’அலெப்போ மேன்’ என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமான இந்தப் படத்தை எடுத்தவர் ஜோசப் ஈத்.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக  ஆட்சி நடத்திவந்த தலைவர்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டில்  மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்து, லிபியா என பல்வேறு நாடுகளுக்கும் பரவி அந்நாடுகளின் ஆட்சியாளர்களை பந்தாடியது.
இந்த புரட்சிகளின் தாக்கம் 2011-ல் சிரியாவுக்கும் பரவியது. அந்நாட்டின் அதிபரான பஷார் அல் அசாத்துக்கு எதிராக  ஏற்கெனவே கோபம் கொண்டிருந்த மக்கள், புரட்சியில் ஈடுபட்ட மற்ற நாடுகளைப் போல் தங்கள் நாட்டின் அரசையும் தூக்கியெறிய விரும்பினர்.   முதல் கட்டமாக  பொடெர்ரா நகரின் தெற்குப் பகுதியில் 2011 மார்ச் மாதத்தில் அரசுக்கு எதிராக ஒரு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டால், தனது பதவி ஆட்டம் கண்டுவிடும் என்று பயந்த  அதிபர் பஷார், ராணுவத்தைப்  பயன்படுத்தி, போராட்டக்காரர்களை அடக்க முயன்றார். அதிபரின் இந்த செயலால்  அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. அதிபருக்கு எதிரான போராட்டமானது நாடு முழுவதும் பரவியது. ஆரம்பத்தில் சாத்வீகமான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.

 அதிபர் அசாத்துக்கு ஆதரவாக சீனா, ஈரான் மற்றும் ரஷ்ய அரசுகள்  இருக்க, அவருக்கு எதிரான கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக துருக்கி உள்ளிட்ட சில நாடுகளும், தீவிரவாத அமைப்புகளும் உள்ளன.  இப்படி இரு பிரிவினருக்கும் சம அளவில் ஆதரவு இருப்பதால் கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது சிரியா. உள்நாட்டுப் போர், பலரை அகதிகளாக்கி துரத்த,  ஒருசிலர் மட்டும் விடாப்பிடியாக தங்கள் சொந்த மண்ணிலேயே உயிர்விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வைராக்கிய மனிதர்களில் ஒருவரான முகமது மொய்தீன் அனிஸைத்தான் இங்கே படம்பிடித்திருக்கிறார்   ஜோசப் ஈத்.
சிரிய நகரங்களில் ஒன்றான அலெப்போவில்,  போரின் தாக்கத்தால் முற்றிலும் சிதைக்கப்பட்ட ஒரு வீட்டின் படுக்கையறையில்,  பாதி நாசமான நிலையில் இருக்கும் தனது படுக்கையில் அமர்ந்து பைப்பில் புகைப் பிடித்துக்கொண்டே, கிராமபோனில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் 70 வயது முதியவரான  மொய்தீன் அனிஸின் படம், ‘அலெப்போ மேன்’ (Aleppo man)  என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களிலும் இப்படம் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

 அபு ஒமர் என்று அழைக்கப்படும் மொய்தீன் அனிஸ், 1970-ல் ஸ்பெயின் நாட்டில் உள்ள சரகோசா என்ற நகருக்குச் சென்று மருத்துவம் படித்தவர். சிறு வயதில் இருந்தே கார்களின் மீது மோகம் கொண்டதால்,      பியட் கார் தொடர்பான மேனுவலை இத்தாலிய மொழியில் இருந்து அரேபிய மொழியில் மொழிபெயர்க்கும் வேலையையும்  செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் பழங்கால கார்கள் சிலவற்றையும் அவர் வாங்கியுள்ளார்.
 பின்னாளில் அலெப்போ நகருக்கு திரும்பியவர், ‘மிலா ராபின்சன்’ என்ற பெயரில் நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். கார்களையும் தொடர்ந்து நேசித்துவந்த அவர் 30-க்கும் மேற்பட்ட பழைய கார்களை  வீட்டில் சேகரித்து வைத்துள்ளார்.  பிற்காலத்தில் அலெப்போ நகரில் தீவிரமான உள்நாட்டு போர் நடந்தபோதிலும், தனது வீட்டையும், உயிருக்கு உயிராய் மதிக்கும் கார்களையும் விட மனம் இல்லாமல் அங்கேயே தங்கியிருக்கிறார்.  
அவரை படமெடுத்ததைப்  பற்றிக் கூறும் ஜோசப் ஈத், “என் நண்பர் ஒருவர் மூலமாக அனிஸைப் பற்றிக் கேள்விப்பட்டு   அவரைச் சந்திக்க சென்றேன். உள்நாட்டுப் போர் காரணமாக மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் இருந்த அந்த வீட்டில் இருக்கும் சவுகரியங்களை வைத்து தனது கார்களுடன் வாழ்ந்து வந்தார் அனிஸ். குண்டுவீச்சுகளால் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் அவரது வீடு இருந்தது.   கற்குவியலுக்கு நடுவில் இருந்த படுக்கையில்  அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு கிராமபோனில் இசையை ரசித்துக்கொண்டிருந்தார்.
கார்களுடனான அவரது காதலைப் பற்றி கேட்டபோது விழிகள் விரிய அவற்றைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.   ‘நான் கார்களை மிகவும் நேசிக்கிறேன். அவை பெண்களைப் போன்று அழகாகவும், உறுதியாகவும் இருக்கும் என்பதே அதற்கு காரணம்’   என்று கூறும்  அனிஸ், தனக்கு பிரியமான 10-க்கும் மேற்பட்ட கார்கள் குண்டுவீச்சில் சேதமடைந்ததைப் பற்றி கூறும்போது கண்கலங்கிவிட்டார்.
 வீட்டுக்கு வெளியில் பாதி நொறுங்கிப்போய் இருந்த ஒரு காரைக் காண்பித்த அவர்,  ‘இந்தக் காரைப் பாருங்கள். குண்டுவீச்சால் இவள் காயமடைந்து இருக்கிறாள். உதவிகேட்டு அவள்  அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால் அவளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்கிறார்.
அவரது கார்களுக்கு ஏற்பட்ட நிலையைப் பற்றி கேள்விப்பட்டு பல வெளிநாட்டவர்களும் அவற்றைப்  பராமரிக்க முன்வந்துள்ளனர். ஆனால் அவற்றை தன் மகன்களுக்கும், மகளுக்கும் மட்டுமே உரிய சொத்தாக விட்டுச்செல்ல விரும்புவதாக கூறும் அனிஸ், மற்றவர்களை நம்பி அந்தக் கார்களை ஒப்படைக்க மறுக்கிறார். இப்போதைக்கு கஷ்டப்பட்டாலும், வெகு விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவரது முகத்தில் தெரிந்தது. அவர் நினைத்தபடி எல்லாம் நல்லபடியாக முடியட்டும் என்று வாழ்த்திவிட்டு வந்தேன். அவரைப்போன்ற மனிதர்களுக்காகவாவது சிரியாவில் உள்நாட்டுப் போர் நிற்க வேண்டும்” என்கிறார் ஈத்
 
ஜோசப் ஈத் (Joseph Eid)
லெபனானை அடிப்படையாக கொண்டு இயங்கும் புகைப்படக்காரரான ஜோசப் ஈத், பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றவர். பின்னாளில் ஏஎஃப்பி நிறுவனத்தில் புகைப்படக்காரராக பணியில் சேர்ந்த இவர், வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றி அப்பகுதி மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தன் புகைப்படங்களால் படம்பிடித்து வருகிறார். தற்போது லெபனானில் தங்கியிருக்கும் இவர், புகைப்படங்களை எடுப்பதுடன் பத்திரிகைகளுக்கு செய்திக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வரலாறு -3

வெள்ளையர்கள் மட்டுமே ஆடிவந்த கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக தடம் பதித்த இந்தியர் என்று ரஞ்சித் சிங்கை சொல்லலாம்.  சர் ரஞ்சித்சிங்ஜி விபாஜி ஜடேஜா (Sir Ranjitsinhji Vibhaji Jadeja) என்ற முழுப்பெயரைக் கொண்ட ரஞ்சித் சிங், இந்தியாவின் கத்தியாவார் பகுதியில், 1872-ல் பிறந்தார். நவாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர்,  உள்ளூரில் பள்ளிப்படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அங்குள்ள  கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில்  சேர்ந்த அவருக்கு படிப்பைவிட கிரிக்கெட் விளையாட்டில்தான்  ஆர்வம் இருந்தது.

அங்கு விடுமுறை நாட்களில்  நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது அவரது வழக்கம். இப்போட்டிகளில்  அவர் ஆடுவதைப் பார்த்த சசெக்ஸ் கவுண்டி அணியின் தேர்வாளர் ஒருவர், தங்கள் அனிக்காக ஆட ரஞ்சித் சிங்கை தேர்ந்தெடுத்தார். கவுண்டி தொடர்களில் சிறப்பாக ஆடியதால், 1892-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு தொடரில் ஆடும் இங்கிலாந்து அணிக்கு ரஞ்சித் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளையர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியில், ஒரு இந்தியரை தேர்ந்தெடுப்பதா என்று சிலர் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் ரஞ்சித் சிங் குவித்த ரன்கள், அவர்களின் வாயை மூடவைத்து, இங்கிலாந்து அணியில் அவருக்கு இடம்பிடித்துக் கொடுத்தது.

ஆஷஸ் தொடரில் தான்  ஆடிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 65 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்களையும் குவித்தார் ரஞ்சித் சிங். இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். ரஞ்சித் சிங்கின் இந்த சாதனை இந்திய இளைஞர்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அவரை ரோல் மாடலாக கொண்டு இந்தியாவில் பல இளம் கிரிக்கெட் வீரர்கள் உருவானர்கள். இதனால் இந்தியாவில் பல உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடந்தன. இப்படி உள்ளூரிலேயே பல அணிகளாக பிரிந்து கிடக்கும் வீரர்களை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கென்று பொதுவான ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஒருசிலர் இறங்கினர். வர்த்தகம் செய்வதற்காக இந்தியா வந்திருந்த ஆர்.இ.கிராண்ட் என்பவரும் அவர்களில் ஒருவர்.

 “டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடவேண்டும் என்றால், முதலில் எல்லா அணிகளுக்கும் பொதுவான இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும்” என்று அப்போது எம்சி.சி. அணியின் கேப்டனாக இருந்த கில்லிகன் கூற, இந்திய கிரிக்கெட் வாரியத்தை  அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் கிராண்ட்.  பாட்டியாலா மகாராஜாவுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அவர், 1927-ம் ஆண்டு, நம் நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு கிரிக்கெட் அமைப்புகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்தார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1928-ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டது. இப்படி கிரிக்கெட் வாரியம் அமைக்கப்பட்டதும் அதில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, இந்திய கிரிக்கெட்டின் முதல் நாயகனான ரஞ்சியின் பெயரால் உள்ளூரில் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்துவது என்பதாகும்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அமைக்க பெரு முயற்சி செய்த   கிராண்ட், அடுத்ததாக இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்றுத் தர   போராடினர். அவரது முயற்சிகளால், இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து கிடைத்தது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடரில் ஆட ஒன்றுபட்ட இந்திய அணிக்கு அழைப்பு வந்தது. அங்கு நடந்தது என்ன என்பதை அடுத்த அத்தியாத்த்தில் பார்க்கலாம்.
----------------------------------------

இந்திய கிரிக்கெட் வரலாறு -2

19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த பெரும் பணக்காரர்களில் ஒருவர் பிரேம்ஜி படேல். விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட அவருக்கு, இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற  பார்ஸி இளைஞர்களின் கனவு பற்றித் தெரியவந்தது.   அவர்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார் பிரேம்ஜி படேல். அந்த சமயத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த டி.எச்.படேல் என்பவருக்கு கிரிக்கெட் தொடர்புகள் இருப்பது பிரேம்ஜிக்கு தெரியவந்தது.  அவரைத் தொடர்புகொண்ட பிரேம்ஜி படேல், பார்ஸி அணியின் இங்கிலாந்து பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த 2 பணக்காரர்களின் உதவியால் 1886-ம் ஆண்டு  14 வீரர்களைக் கொண்ட இந்திய பார்ஸி அணி, இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. சுமார் ஒரு ஆண்டுகாலம் இங்கிலாந்தில் தங்கியிருந்து 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பார்ஸி அணி, அதில் 19 போட்டிகளில் தோற்றது. 8 போட்டிகளில் தோல்வியடைய, ‘ஒண்ணே ஒண்ணு கண்னே கண்ணு’ என்று ஒரு போட்டியில் மட்டும் வெற்றியை ருசித்தது.  ஆனால் அந்த ஒரே ஒரு வெற்றி, அவர்கள் அதுவரை பெற்ற தோல்விகளையெல்லாம் மறக்கச் செய்தது. ‘இங்கிலாந்திலேயே ஜெயிச்சுட்டோம்ல’ என்று காலரை துக்கி விட்டுக்கொண்டு இந்தியா திரும்பியது பார்ஸி அணி.
இங்கிலாந்தில் இருந்து பார்ஸி அணி இந்தியா திரும்பிய சில மாதங்களுக்கு பிறகு  தமிழகத்திலும் ஒரு கிரிக்கெட் கிளப் உருவானது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் புச்சிபாபு.
ஆங்கிலேய அரசில் துபாஷாக இருந்த மோதரவரப்பு தேரா வெங்கடசாமி என்ற செல்வந்தரின் பேரக் குழந்தைகளில் ஒருவர்தான் புச்சிபாபு. சென்னையில்   தங்கியிருந்த வெங்கடசாமி,  சிறுவயதில் புச்சிபாபுவை கவனித்துக்கொள்ள வெள்ளைக்கார பெண் ஒருவரை வேலைக்கு வைத்திருந்தார். தினமும் மாலை வேளைகளில் புச்சிபாபுவுக்கு விளையாட்டு காட்டுவதற்காக அவரை அந்தப் பெண் வெளியில் அழைத்துச் செல்வார். அந்தப் பெண்ணுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் வெள்ளைக்கார இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் இடத்துக்குத்தான் பெரும்பாலும் புச்சிபாபுவை அழைத்துச் செல்வார். இப்படி சிறுவயதில் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க, தானும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் புச்சிபாபுவுக்கு சிறுவயதிலே ஏற்பட்டுள்ளது.
புச்சிபாபு வளர வளர, அவரது கிரிக்கெட் ஆர்வமும் அதிகரித்தது. 1888-ம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, ‘மெட்ராஸ் யுனைடட் கிளப்’ (எம்யுசி) என்ற அமைப்பைத் தொடங்கிய புச்சிபாபு, தன் சொந்த பணத்திலேயே அந்த கிரிக்கெட் கிளப்புக்கான மைதானத்தையும் அமைத்துக் கொடுத்தார்.  ஆரம்பத்தில் உள்ளூர் கிளப்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த எம்யுசி அணி, பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்சிசி அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடத் தொடங்கியது. இந்த கிரிக்கெட் போட்டிகளின்போது எம்சிசி அணி வீரர்களுக்கு மட்டுமே பெவிலியனில் அமர்ந்து உணவு உண்ணவும், போட்டிகளைப் பார்க்கவும் அனுமதி இருந்தது. இந்திய வீரர்கள் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துதான் உணவு உண்ணவேண்டி இருந்தது.
இப்படி இந்திய இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் விளையாட்டின் ஏபிசிடியை கற்றுக்கொண்டிருக்க, நம் நாட்டு இளைஞர் ஒருவர்   முறையாக சர்வதேச போட்டிகளில்  இங்கிலாந்து அணிக்காக ஆடி கலக்கத் தொடங்கினார்.  அந்த இளைஞரின் பெயர் ரஞ்சித் சிங். உள்ளூர் கிரிக்கெட்டில் இப்போது பிரபலமாக இருக்கும் ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட்’ இவரது நினைவாகத்தான் நடத்தப்படுகிறது. இப்படி தன் நினைவாக இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை நடத்தும் அளவுக்கு அவர் கிரிக்கெட்டில் அப்படி என்னதான் சாதித்தார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் வரலாறு - 1

-
வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் இயற்கை வளங்களை எல்லாம் இங்கிலாந்துக்கு கடத்திச் செல்ல எந்த கப்பல்கள்  உதவியதோ, அதே கப்பல்கள்தான் இங்கிலாந்தில் இருந்த கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் காலூன்றவும் உதவியது. அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியதற்காக கப்பல்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
1721-ம் ஆண்டு குஜராதின் கட்ச்  பகுதிக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் ஒன்று அங்குள்ள துறைமுகத்திலேயே 15 நாட்கள் தங்கியிருக்க வேண்டி வந்தது. அப்போது கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு போர் அடிக்காமல் இருக்கவும், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கவும்  எதையாவது செய்தாக வேண்டுமே என்று அந்தக் கப்பலின் கேப்டன் யோசித்திருக்கிறார். அப்போதுதான் மாலுமிகளை இரு பிரிவுகளாக பிரித்து, அவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டியை நடத்தும் எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது. இப்படி  அடுத்த 15 நாட்களுக்கு அவர்கள் கிரிக்கெட் ஆடியதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள இந்தியர்களுக்கும், பிரபுக்களுக்கும் கிரிக்கெட் பிடித்துப்போய் உள்ளது.
 “நம்ம ஊர் கில்லி தாண்டு ஆட்டத்தைப் போலவே இருக்கிறதே” என்று அவர்களுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் பிறந்திருக்கிறது. இந்தியர்களுக்கு பொதுவாகவே வேடிக்கை பார்க்கும் பழக்கம் அதிகம் என்பதால்,  ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் ஆடும் இடங்களுக்கெல்லாம் சென்று வேடிக்கை பார்த்தனர். அவர்களுக்கு உதவியாக முட்செடிகளை வெட்டி மைதானம் அமைக்க உதவினர். பிட்ச்சின் மீது கனமான உருளைகளை இழுத்துச் சென்று அதைச் சீர்படுத்திக் கொடுத்தனர். ஆட்டத்தின்போது யாராவது வெகுதூரத்துக்கு பந்தை அடித்தால் அதை ஓடிச் சென்று எடுத்துக் கொடுத்தனர்.
இந்த உதவிகளுக்கு பிரதிபலனாக வெள்ளையர்களும் இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர். இப்படியாக  இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி எங்கெல்லாம் விரிவடைந்ததோ, அங்கெல்லாம் கிரிக்கெட்டும் தடம் பதித்துள்ளது. ஆரம்பத்தில்  வெள்ளையர்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டத்தை பிற்காலத்தில் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த இந்திய இளைஞர்களும் ஆடத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி கிரிக்கெட் அடிய முதல் இந்தியர்கள் என்ற பெருமை பார்சி இனத்தவர்களையே சேரும்.
1980-ம் ஆண்டில் பார்சி இனத்தவர்கல் சிலர் ஒன்றுகூடி ‘யங் சொராஸ்டியான் கிரிக்கெட் கிளப்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து  1883-ல் இஸ்லாமிய இலைஞர்களால் ‘முகமதியன் கிரிக்கெட் கிளப்’ 1866-ல்  இந்து இளைஞர்களால் ‘யுனைடட் கிரிக்கெட் கிளப்’ ஆகியவை தொடங்கப்பட்டன. இந்த கிளப்புகள் தங்களுக்குள்ளும், இங்கிலாந்து கிளப்களுடனும் பல்வேறு கிர்க்கெட் போட்டிகளில் விளையாட இந்த ஆட்டம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. இந்த நேரத்தில் உள்ளூரிலேயே கிரிக்கெட் ஆடுவதைவிட அதன் பிறப்பிடமான இங்கிலாந்துக்கே சென்று கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற ஆசை பார்சி கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த சில இளைஞர்களின் மனதில் எழுந்தது.
அவர்களின் இங்கிலாந்து பயணத்தைப் பற்றி நாளை பார்ப்போம்.