Powered By Blogger

Sunday, November 24, 2019

இந்திய விளையாட்டுகளின் கதை - 1



பள்ளிப்பருவத்தை உற்சாகமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று விளையாட்டுகுழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு படிப்பு எப்படி முக்கியமோஅதேபோல் உடல் வளர்ச்சிக்கு  விளையாட்டு மிகவும் அவசியம்அதனால்தான், “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பாடிய பாரதியார்அடுத்த சில வரிகளிலேயே, “மாலை முழுதும் விளையாட்டு” என்று விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அழுத்திச் சொல்கிறார்.
முன்பெல்லாம் மாலை நேரங்களில் ஒவ்வொரு தெருவைக்  கடக்கும்போதும் கிரிக்கெட், பேட்மிண்டன், கண்ணாமூச்சி என்று உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கும்   குழந்தைகளின் கூக்குரல்களைக் கேட்க முடியும். இந்த கூக்குரல்களில் உள்ள மகிழ்ச்சி, மற்றவர்களையும் விளையாடத் தூண்டும். ஆனால் இப்போது அந்தக் காலம் மாறிவிட்டது.  நீங்கள் யாராவது மாலையில் வீட்டுக்கு வெளியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் விளையாடுகிறீர்களா?
வீட்டில் உள்ள பெரியவர்கள் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித் தந்தாலும், பலரும் வெளியில் சென்று விளையாடுவதில்லை. “வெளியே போய் ஆடினா கை காலெல்லாம் வலிக்கும். அதோட டிரஸ்ஸையும் அழுக்காக்கி அம்மாகிட்ட திட்டு வாங்கவேண்டி வரும். அதனால வீட்டுக்குள்ளேயே விளையாடிக்கறோம்” என்ற பதிலைத்தான் பலரும் தருவீர்கள்.
சரி வீட்டுக்குள்ளாவது செஸ், கேரம்போர்ட் போன்ற ஆட்டங்களை விளையாடுகிறீர்களா என்றால் அதையும் பலர் செய்வதில்லை. இப்போதெல்லாம் விளையாட்டு என்றாலே உங்களில் பலருக்கு  ‘பப்ஜி’ போன்ற செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடும் ஆட்டங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த விளையாட்டுக்களைத்தான் ஆடுகிறீர்கள்.
 உங்களின் பெற்றோரும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. “அவனால ஒரு தொந்தரவும் இல்லை. ஸ்கூல்ல இருந்து வந்தா, தான் உண்டு கம்ப்யூட்டர் உண்டுன்னு இருப்பான். யார் வம்புக்கும் போக மாட்டான்” என்று இதைப் பற்றி பெருமையாக சொல்லும் பெற்றோர்களும் உண்டு.
ஆனால் இதெல்லாம் உங்கள் உடல்நலனுக்கு நல்லதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் முதலில் உங்கள் உடல் வலுவானதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். விராட் கோலி, பி.வி.சிந்து, சுனில் சேட்ரி என்று மற்றவர்கள் ஆடுவதை டிவியில் பார்த்து உற்சாகமடைவதுடன் அந்த ஆட்டங்களை நீங்களும் ஆடவேண்டும். அப்போது வலுவான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.


விளையாட்டுகள் மூலம் உடலை வலுவாக வைத்திருக்கும் அதே நேரத்தில், அந்த விளையாட்டுகளின் வரலாற்றையும், அது இந்தியாவில் வளர்ந்த விதத்தையும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு உதவுவதற்காகவே இந்த சிறு தொடர். உங்களில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த விளையாட்டான கிரிக்கெட்டில் இருந்து இதைத் தொடங்குவோம்.

No comments:

Post a Comment