வெள்ளையர்கள் மட்டுமே ஆடிவந்த கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக தடம் பதித்த இந்தியர் என்று ரஞ்சித் சிங்கை சொல்லலாம். சர் ரஞ்சித்சிங்ஜி விபாஜி ஜடேஜா (Sir Ranjitsinhji Vibhaji Jadeja) என்ற முழுப்பெயரைக் கொண்ட ரஞ்சித் சிங், இந்தியாவின் கத்தியாவார் பகுதியில், 1872-ல் பிறந்தார். நவாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், உள்ளூரில் பள்ளிப்படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவருக்கு படிப்பைவிட கிரிக்கெட் விளையாட்டில்தான் ஆர்வம் இருந்தது.
அங்கு விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது அவரது வழக்கம். இப்போட்டிகளில் அவர் ஆடுவதைப் பார்த்த சசெக்ஸ் கவுண்டி அணியின் தேர்வாளர் ஒருவர், தங்கள் அனிக்காக ஆட ரஞ்சித் சிங்கை தேர்ந்தெடுத்தார். கவுண்டி தொடர்களில் சிறப்பாக ஆடியதால், 1892-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு தொடரில் ஆடும் இங்கிலாந்து அணிக்கு ரஞ்சித் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளையர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியில், ஒரு இந்தியரை தேர்ந்தெடுப்பதா என்று சிலர் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் ரஞ்சித் சிங் குவித்த ரன்கள், அவர்களின் வாயை மூடவைத்து, இங்கிலாந்து அணியில் அவருக்கு இடம்பிடித்துக் கொடுத்தது.
ஆஷஸ் தொடரில் தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 65 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்களையும் குவித்தார் ரஞ்சித் சிங். இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். ரஞ்சித் சிங்கின் இந்த சாதனை இந்திய இளைஞர்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அவரை ரோல் மாடலாக கொண்டு இந்தியாவில் பல இளம் கிரிக்கெட் வீரர்கள் உருவானர்கள். இதனால் இந்தியாவில் பல உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடந்தன. இப்படி உள்ளூரிலேயே பல அணிகளாக பிரிந்து கிடக்கும் வீரர்களை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கென்று பொதுவான ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஒருசிலர் இறங்கினர். வர்த்தகம் செய்வதற்காக இந்தியா வந்திருந்த ஆர்.இ.கிராண்ட் என்பவரும் அவர்களில் ஒருவர்.
“டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடவேண்டும் என்றால், முதலில் எல்லா அணிகளுக்கும் பொதுவான இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும்” என்று அப்போது எம்சி.சி. அணியின் கேப்டனாக இருந்த கில்லிகன் கூற, இந்திய கிரிக்கெட் வாரியத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் கிராண்ட். பாட்டியாலா மகாராஜாவுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அவர், 1927-ம் ஆண்டு, நம் நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு கிரிக்கெட் அமைப்புகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்தார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1928-ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டது. இப்படி கிரிக்கெட் வாரியம் அமைக்கப்பட்டதும் அதில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, இந்திய கிரிக்கெட்டின் முதல் நாயகனான ரஞ்சியின் பெயரால் உள்ளூரில் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்துவது என்பதாகும்.
----------------------------------------
No comments:
Post a Comment