கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், திராவிட் வரிசையில் இந்திய கிரிக்கெட்டின் நெடுந்தூண்களில் ஒருவரன யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் முன்கூறிய வீரர்களைப் போல் யுவராஜ் கவுரவமான முறையில் வழியனுப்பப்படவில்லை என்ற சோகம் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இருக்கும்.
40 டெஸ்ட் போட்டிகளில் 1,900 ரன்கள், 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்கள், 58 டி20 போட்டிகளில் 1,177 ரன்கள் என்று ரன் மழை பொழிந்து ரசிகர்களை நனைத்தவர் யுவராஜ் சிங். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் மாயாஜாலம் செய்தவர். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 111 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 28 விக்கெட்களையும் இவர் சாய்த்துள்ளார். அதனால்தான் ரசிகர்களுக்கு அவர் மீது இத்தனை பாசம்.
யுவராஜின் அப்பா யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கபில்தேவுக்கு இணையாக வேகப்பந்து வீச்சில் கலக்கியவர். ஹரியாணாவைச் சேர்ந்த கபில்தேவும், யோக்ராஜ் சிங்கும் ஒரே சமயத்தில் வாய்ப்புதேடி கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளைத் தட்டினர். இருவரில் ஒருவருக்குதான் எதிர்காலம் என்றிருந்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கபில்தேவ் புகழின் உச்சிக்கு சென்றார். யோக்ராஜோ, 1981-ல் இந்திய அணிக்காக ஆடக்கிடைத்த வாய்ப்பில் ஒரே விக்கெட்டை மட்டும் எடுத்ததால், அணியில் மீண்டும் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டார்.
துவண்டுபோன யோக்ராஜ் சிங், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய திட்டமிட்டார். நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து டிரிக்கரை அழுத்தும் தருணம், மகன் யுவராஜ் சிங்கின் முகம் அவரது மனதில் தோன்றி மறைந்துள்ளது. தன்னால் முடியாததை மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்த யோக்ராஜ், தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு யுவராஜுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.
சிறுவயதில் கிரிக்கெட்டுக்கு இணையாக ரோலார் ஸ்கேட்டிங்கிலும் ஆர்வமாக இருந்துள்ளார் யுவராஜ் சிங். ஒருமுறை பள்ளியில் நடந்த ரோலார் ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிக்கோப்பையை வென்ற யுவராஜ் சிங், அதைத் தன் தந்தையிடம் பெருமையாக காட்ட, அதற்காக உச்சி முகர்வதற்கு பதில், ஸ்கேட் போர்டை உடைத்துப் போட்டுள்ளார் யோக்ராஜ். கிரிக்கெட்டைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்ட அவர், யுவராஜை சண்டிகரில் உள்ள பிஷன்சிங் பேடியின் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார்.
2000 ஆண்டில் 19 வயது இளம் வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார் யுவராஜ் சிங். கிரிக்கெட்டில் அவர் வளர வர இந்தியாவின் புகழும் வளர்ந்தது. 2000-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய ஜூனியர் அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டை வென்றது, 2007-ம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையில் வென்றது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் மகுடம் சூடியது என இந்திய கிரிக்கெட்டின் அனைத்து மகத்தான தருணங்களிலும், அதற்கு மூலகாரணமாக யுவராஜ் இருந்துள்ளார்.
குறிப்பாக 2007-ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும் சிக்சர்களாக சிதறடித்தார் யுவராஜ். இப்போட்டியில் வெறும் 12 பந்துகளில் 50 ரன்களை எட்டிய (இப்போட்டியில் யுவராஜ் சிங் 16 பந்துகளில் 58 ரன்களை குவித்தார்) யுவராஜின் சாதனையை இன்றைய ரஸ்ஸல், கெயில், ஹர்திக் பாண்டியா வகையறாக்களால் தொட்டுப்பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான். இதற்கு அடுத்து நடந்த அரையிறுதிப் போட்டியிலும் யுவராஜின் ஆவேசம் தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இப்போட்டியில் வெறும் 30 பந்துகளில் 70 ரன்களை விளாசினார் யுவராஜ். முதலாவது டி20 கோப்பையை இந்தியா வெல்ல, தொடர் நாயகனாக மகுடம் சூட்டப்பட்டார் யுவராஜ்.
2007-ல் டி20 உலகக் கோப்பையில் காட்டிய அதே ஆவேசத்தை 2011-ல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் வெளிப்படுத்தினார். இத்தொடரில் 362 ரன்களைக் குவித்ததுடன் 15 விக்கெட்களையும் வீழ்த்தி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. உலகக் கோப்பையை இந்தியா வென்ற ஒரு வாரத்திலேயே இரவு நேரங்களில் இருமலால் பாதிக்கப்பட்டார் யுவராஜ் சிங். மருத்துவ பரிசோதனை செய்ய வீட்டில் வற்புறுத்தியபோது கேட்கவில்லை. உலகக் கோப்பையைத் தொடர்ந்துவந்த ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப் போய்விட்டார்.
ஆனால் நோயின் கடுமை அவரை ஒழுங்காக ஆட விடவில்லை. மூச்சிறைக்கத் தொடங்கியது. டாக்டரிடம் சென்றபோது அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் வந்திருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தனர். உற்சாகமான மனிதராக வளையவந்த யுவராஜ் தனக்கு வந்த நோயை நினைத்து வருந்தி பல நாட்கள் அறையிலேயே முடங்கிக் கிடந்ததாக அவரது தாய் கூறுகிறார். ஆனால் அதெல்லாம் சில நாட்களுக்குதான். நெருக்கடியான பல காலகட்டங்களில் தன் துடிப்பான பேட்டிங்கால் இந்திய அணியை கரைசேர்த்த யுவராஜ் சிங், இதையும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு போராடினார். ஓராண்டுகால நீண்ட போராட்டத்துக்கு பிறகு புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தார்.
அதேநேரத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த அவரால் பழையபடி மீண்டும் கிரிக்கெட் உலகில் ஜொலிக்க முடியவில்லை. இந்த ஓராண்டு காலத்துக்குள் கோலி உள்ளிட்ட இளம் வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதால் யுவராஜுக்கான வாய்ப்பு மங்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 கோடி ரூபாய்க்கு ஏலம்போன யுவராஜ் சிங், கடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியால் வெறும் 1 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். மேலும் இத்தொடரில் ஆட அவருக்கு அதிக அளவில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கிரிக்கெட் உலகில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் யுவராஜ் சிங்.
“பல கோப்பைகளை பெற்றுத் தந்த யுவராஜ் சிங்குக்கு கடைசியாக ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு தந்து, கிரிக்கெட் வாரியம் அவரை கவுரவமாக ஓய்வுபெற” என்று சேவாக், கவுதம் காம்பீர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் இதே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் விடைபெறும் முன்பு ஒரு ஆட்டத்தில் ஆட விரும்பினால், உடல்தகுதி தேர்வான ‘யோ யோ’ தேர்வில் தோற்க வேண்டும் என்று பிசிசிஐ தனக்கு நிபந்தனை விதித்ததாகவும், அதை தான் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார் யுவராஜ் சிங்.
வழியனுப்பும் போட்டியை விட தனது கவுரவம்தான் முக்கியம் என்ற வைராக்கியத்துடன் விடைபெறும் ‘யுவராஜ் சிங்’கத்தை வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment