Powered By Blogger

Wednesday, December 11, 2019

வகுப்பறைக்குள் வசந்தத்தை கொண்டுவருவது எப்படி?



வீடுகளுக்கு அடுத்ததாக மாணவர்கள் அதிக நேரம் செலவழிக்கும் இடம் வகுப்பறை. அதுபோல் குடும்பத்தினருக்கு அடுத்ததாக மாணவர்கள் அதிக நேரம் செலவழிப்பது வகுப்பு ஆசிரியருடனும், வகுப்புத் தோழர்களுடனும்தான். எனவே ஒரு மாணவரை மிகச் சிறந்த மனிதனாக வடிவமைப்பதில் வகுப்பறைக்கும் முக்கிய பங்கு உள்ளது. அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை ஈர்ப்பதிலும், அதற்குள் சிறப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. வகுப்பறைக்குள் சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:
வகுப்பறையின் அமைப்பை மாற்றுங்கள்:
ஒரே விஷயத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாலோ, ஒரே சூழலில் நீண்டகாலம் இருக்கவேண்டி இருந்தாலோ மாணவர்களுக்கு அலுப்புத் தட்டலாம். எனவே மாதம் ஒரு முறையாவது வகுப்பறையின் சூழலையும், அமைப்பையும் மாற்றுங்கள். ஒரு வாரம் புவியியல் சம்பந்தப்பட்ட படங்களை வைத்து வகுப்பறையை அலங்கரித்திருந்தால், அடுத்த மாதம் அறிவியல் தொடர்பான படங்களை வைத்து வகுப்பறையை அலங்கரியுங்கள். அதற்கு அடுத்த மாதம் வரலாறு சம்பந்தப்பட்ட படங்களை பயன்படுத்தி வகுப்பறையை அழகுபடுத்துங்கள். இதற்கான பணிகளை மாணவர்களை வைத்தே செய்யுங்கள். அவர்களே இது தொடர்பான ஓவியங்களையும், சார்ட்களையும் தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இதனால் மாணவர்களுக்கு தங்கள் வகுப்பறையை அலங்கரிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். பாடம் சம்பந்தப்பட்ட படங்களை வகுப்பறையில் அடிக்கடி பார்க்க நேர்வதால், அதைப் பற்றிய புரிதலும் ஏற்படும்.
மாணவர்களின் இருக்கையை அடிக்கடி மாற்றுங்கள்:
படிப்பில் இருந்து மாணவர்களை திசைமாற்றும் விஷயங்களில் ஒன்று அரட்டை. அதிலும் ஒரே இடத்தில் அருகருகே 2 மாணவர்களை பல நாட்கள் தொடர்ந்து அமரவைத்தால், கேட்கவே வேண்டாம். அவர்களின் நட்பு பலமாகி அரட்டைக் கச்சேரி அதிகரித்துவிடும். இதைத் தவிர்க்க மாணவர்களை அடிக்கடி இடம் மாற்றுங்கள். இதனால் அரட்டைகளை குறைக்க முடியும். அத்துடன் மாணவர்களிடையே ‘முதல் பெஞ்ச்
மாணவன்’, ‘கடைசி பெஞ்ச் மாணவன்’ என்ற பாகுபாட்டையும் குறைக்கலாம்.
வகுப்பறையை சுற்றி வாருங்கள்:
சில ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும் நோட்ஸ்களை டிக்டேட் செய்யும்போதும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பார்கள். இப்படி செய்வதால் ஆசிரியர்களால் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியாது. இதனால் மாணவர்கள் தங்களை சரியாக கவனிக்கிறார்களா என்பதையும் அறிய முடியாது. இந்த நிலை ஏற்படுவதை தடுக்க, பாடம் நடத்தும்போதும், நோட்ஸ்களை டிக்டேட் செய்யும்போதும் வகுப்பறையை சுற்றி வருவது நல்லது. இப்படி வகுப்பறையைச் சுற்றி வரும்போது பாடங்களை எழுதாமல் தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் மாணவர்களையும், அரட்டை அடிக்கும் மாணவர்களையும் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தலாம்.
கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்:
மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்களுக்கு கோபம் வருவது இயல்பு. அப்படி கோபம் வந்தால் சில ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பார்கள். ஒரு சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்கள். இதுபோன்ற சமயங்களில் சக மாணவர்கள் முன்பு, மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர்களை திட்டாமல் இருப்பது நல்லது. இதனால் ஏற்படும் அவமானத்தால் அவர்கள் மேலும் கடுமையானவர்களாக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை சம்பந்தப்பட்ட மாணவரிடம் தண்மையாக பேசி அறிவுரை கூறுங்கள். அவசியம் திட்டவேண்டும் என்றால் வகுப்பு முடிந்த பிறகு தனியே அழைத்துப் போய் திட்டி, அறிவுரை கூறுங்கள். இதனால் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
அனைவரையும் சமமாக நடத்துங்கள்:
உங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களை எப்போதும் சமமாக நடந்துங்கள். ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் தனித்தன்மையும் ஆற்றலும் இருக்கும். எனவே நன்றாக படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துங்கள். தங்களாலும் சாதிக்க முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதையுங்கள். படிப்பை மட்டுமின்றி மாணவர்களிடம் உள்ள பிற ஆற்றல்களையும் ஊக்குவியுங்கள். தங்கள் ஆசிரியர்கள் தங்களை அன்பாக,
அனைவருடனும் சமமாக நடத்துகிறார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு படிப்பின் மீதும் வகுப்பறையின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

இந்திய கிரிக்கெட் வரலறு - முதல் சதம்

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக அணியின் கேப்டனை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு கூடியது. கிரிக்கெட்டுக்காக அதிக அளவில் நிதி வழங்கிவந்த போர்பந்தர் மகாராஜா கேப்டனகவும், ஞான்ஷியாம்ஜி என்பவர் துணை கேடப்டனாகவும் நியமிக்கப்பட்டவர். இந்திய கிரிக்கெட்டில் அப்போது சூப்பர் ஸ்டாராக கருதப்பட்ட சி.கே.நாயுடுவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாததால், அணியின் வீரர்கள் பலரும் அதிருப்தியடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் வரலாறு
முதல் போட்டியும் முதல் கேப்டனும்
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பே இந்த அதிருப்தியைப் பற்றித் தெரியவர போர்பந்தர் மகாராஜாவும், ஞான்ஷியாம்ஜியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக சி.கே.நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது சி.கே.நாயுடுவின் வயது 37.

ஜூன் 25,1932- இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகாரபூர்வமான அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய நாள்தான் இது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்ற 6-வது அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடிவிட, மைதானமே நிரம்பி வழிந்தது. புதிதாக டெஸ்ட் போட்டியில் ஆட வந்திருக்கும் இந்தியாவின் ஆட்டத்தைக் காணும் உற்சாகத்தில் அவர்கள் வந்திருந்தனர்.

வழக்கமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு நடக்கும் விஷயம்தான் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு நடந்தது. வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையைக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி இந்தியாவை இத்தொடரில் ஊதித் தள்ளியது. டெஸ்ட் தொடரில் தோற்றாலும் இந்த பயனத்தின்போது நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கவுண்டி அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடியது. 26 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி, அதில் 9-ல் வெற்றியைக் குவித்தது. இதில் அனைத்து முதல்தர போட்டியிலும் ஆடிய கேப்டன் சி.கே.நாயுடு 1,618 (சராசரியாக 40.45) ரன்களைக் குவித்தார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து 1933-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டது. இந்த முறை இந்திய அணியின் பேட்டிங்கில் சி.கே.நாயுடுவுக்கு தோல் கொடுக்க லாலா அமர்நாத் என்ற இளம் வீரர் இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் நாயுடுவின் அனுபவமும், லாலா அமர்நாத்தின் இளமைத் துடிப்பும் இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனால் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லாலா அமர்நாத் பெற்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதுவே அவரது கடைசி சதமாகவும் இருந்தது. இதற்கு காரணம் அவரது முன்கோபம். அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள் - போலோ




போலோ என்பது குதிரையின் மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. 2 அணிகள் விளையாடும் இந்த விளையாட்டில், ஒவ்வொரு அணியிலும் தலா 4 வீரர்கள் இருப்பார்கள். எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை அடிப்பதே இந்த விளையாட்டின் முக்கிய லட்சியம்.

போட்டி நேரத்தில்  அதிக முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தைச் செலுத்தும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.  7 நிமிடங்களைக் கொண்ட 4 சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. சில சமயங்களில் 8 சுற்றுகளைக் கொண்டதாகவும் இப்போட்டி நடத்தப்படும். போட்டியின்போது ஆட்டக்காரர்கள் விதிகளை மீறாமல் பார்த்துக்கொள்வதற்காக 2 அம்பயர்கள் இருப்பார்கள்.

இந்த ஆட்டம் முதலில் ஈரானில் ஆடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலகட்டத்தில் அரசர்களின் தனிப்பட்ட காவல் படையினரும்,  மதிப்புமிக்க படைப்பிரிவினரும் தங்கள்  வலிமையை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆட்டத்தை ஆடியுள்ளனர். அப்போது போலோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா 100 வீரர்கள் வரை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் போலோ ஆட்டக் களமானது ஒரு போர்க்களம் போன்று இருக்குமாம்.   

ஈரானில் இருந்து அரேபியா, திபெத், சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த விளையாட்டு பரவியது. இந்தியாவில் 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசர்களால் போலோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரச குடும்பங்கள் பலவற்றில் இந்த விளையாட்டு புகழ்பெற்றது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருந்து போலோ விளையாட்டைக் கற்றுக்கொண்டனர். அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்களை அமைத்த ஆங்கிலேயர்கள் மத்தியில் முதலில் இந்த விளையாட்டு பரவியதாகவும் இதைத் தொடர்ந்து ஐரோப்பிய போலோ கிளப்பை 1859-ம் ஆண்டு சில்சார் எனும் இடத்தில் அவர்கள் தொடங்கியதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

1860-களில் கொல்கத்தாவிலும் ஒரு போலோ கிளப் தொடங்கப்பட்டது. இந்தியாவில் குதிரைப்படை வீரர்களிடையே இந்த விளையாட்டு வேகமாக பிரபலமடைந்தது.  பின்னர் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வெள்ளையர்கள் மூலம் இங்கிலாந்தில் போலோ விளையாட்டு பிரபலமாக,  1869-ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல் முறையாக போலோ  விளையாட்டு போட்டி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இப்போட்டி பரவியுள்ளது. அக்காலகட்டத்திலேயே இங்கிலாந்தில் நடந்த போலோ போட்டிகளைக் காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ராணுவ வீரர்களால் மட்டும் ஆடப்பட்டு வந்த இந்த விளையாட்டு, பின்னர் பலகலைக்கழகங்களிலும், ஐரோப்பாவின்  அரச குடும்பங்களிலும் வேகமாக பரவியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக போலோ ஆடப்பட்டாலும், முதலாவது சர்வதேச போலோ போட்டி நடத்தப்பட்டது 1886-ம் ஆண்டில்தான். இதில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அதன்பின்னர் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மாறி மாறி சர்வதேச போலோ போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதன்பிறகு இந்த விளையாட்டில் அர்ஜென்டினாவின் கை ஓங்கியது.

1983-ம் ஆண்டில் அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சர்வதேச போலோ கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்ட  சில ஆண்டுகள் (1987-ம் ) ஆண்டு உலக போலோ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் அர்ஜென்டினா அணி அதிக முறை கோப்பையை வென்றுள்ளது.
   

விளையாட்டை தெரிந்துகொள்ளுங்கள் - கூடைப்பந்து


கனடா நாட்டில் பிறந்து 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்  உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் நிஸ்மித்ஸ்பிரிங்பீல்ட் என்ற கல்லூரியில் பணியாற்றிய அவர், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் தினமும் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால்  அவரது விருப்பத்துக்கு பனிக்காலங்கள் தடையாக இருந்த.
 பனிக்காலங்களின்போது  வெளியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வராமல் இருந்தனர். இப்படியே இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டார் நிஸ்மித்.  இந்த நிலையை மாற்றி பனிக்காலங்களில் மாணவர்கள் வெளியில் வராமல், உள்ளரங்கிலேயே ஆடுவதற்கு ஏற்ற விளையாட்டு ஒன்றை கண்டுபிடிக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து பல ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்து அவர் உருவாக்கிய விளையாட்டுதான் கூடைப்பந்து.    
ஒரு கூடையை எடுத்து அதன் அடிப்பாகத்தை வெட்டியவர், அதை ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியின் விடுதியில் உள்ள பால்கனியில் மாட்டினார். பின்னர் மாணவர்களிடம் அந்தக் கூடைக்குள் துல்லியமாக பந்தை நுழைக்குமாறு  கூறியுள்ளார். அப்படி துல்லியமாக பந்தை போடுபவர்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பின்னர்  இந்த விளையாட்டை 2 அணிகள் மோதும் ஆட்டமாக மாற்றியுள்ளார் நிஸ்மித். செவ்வகமான வடிவத்தில் ஒரு மைதானத்தை அமைத்து அதன் 2 புறங்களிலும் தலா ஒரு கூடையைத் தொங்கவிட்டார். மைதானத்தில் மோதும் 2 அணிகளும், எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக்கு சென்று அங்குள்ள கூடைக்குள் பந்தை போடுவதை இலக்காக கொண்ட ஆட்டமாக கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கினார். கூடவே இந்த விளையாட்டுக்காக 13 முக்கிய விதிகளையும் வகுத்தார். இதன்படி 1891-ம் ஆண்டில்   ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் முதல் முறையாக கூடைப்பந்து விளையாடப்பட்டது.

அமெரிக்காவில் ஒரு கல்லூரியின் விடுதியில் சிறிய அளவில் தொடங்கிய கூடைப்பந்து விளையாட்டு அதன்பின்னர் ஐரோப்பாவிலும், அங்கிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து  சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பான ஃபிபா (FIBA), 1932-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தொடங்கப்பட்டது. கூடைப்பந்து  விளையாட்டுக்கான விதிகளை ஃபிபா அமைப்பு மேலும் செதுக்க, இந்த விளையாட்டு நவீனமடைந்தது.

  
28 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலம் கொண்டதாக  கூடைப்பந்து மைதானங்கள் விளங்குகின்றன. இதில் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியிலும் தலா 5 வீரர்கள் போட்டியில் பங்கேற்பார்கள். இதைத்தவிர ஒவ்வொரு அணியும் மாற்று வீரர்களாக 7 பேரை மைதானத்துக்கு வெளியில் வைத்திருக்கலாம். போட்டியின்போது   கூடைக்கு அருகில் சென்று அதற்குள் பந்தைச் செலுத்தினால் 2 புள்ளிகளும், அரைவட்டத்துக்கு வெளியில் இருந்து கூடைக்குள் பந்தைச் செலுத்தினால் 3 புள்ளிகளும், ஃப்ரீ த்ரோ மூலம் பந்தை கூடைக்குள் செலுத்தினால் 1 புள்ளியும் வழங்கப்படும்.
  1936-ம் ஆண்டுமுதல் ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. இதில் அமெரிக்க அணி அதிக முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.


இந்திய கிரிக்கெட் வரலாறு - வந்தார் சுனில் கவாஸ்கர்





1949-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி மும்பையைச் சேர்ந்த மீனாள் என்ற பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் குழந்தையைப் பார்க்க வந்திருந்த அவரது உறவினரான நானா காகா என்பவரின் கண்ணில் வித்தியாசமான ஒரு விஷயம் பட்டது. குழந்தையின் காது மடலில் இயற்கையாகவே ஒரு ஓட்டை அமைந்திருந்தது. அதை மிகவும் விசேஷமானதாக நினைத்தார் நானா காகா.

அடுத்த நாள் காலையும் குழந்தையைப் பார்க்க வந்தவர் திடுக்கிட்டார். காரணம் குழந்தையின் காது மடலில்  ஓட்டை இல்லை. உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றார்.  “மீனாளுக்கு பிறந்த குழந்தை இது இல்லை. அவளுடைய குழந்தையின் காது மடலில்  ஓட்டை இருந்தது. ஆனால் இந்த குழந்தையின் காது மடலில்  ஓட்டை இல்லை. குழந்தை மாறிவிட்டது” என்று முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் முந்தைய தினம் பிறந்த குழந்தைகளை சோதித்துப் பார்த்ததில், காதில் ஓட்டை உள்ள குழந்தை ஒன்று மீனவப் பெண்ணிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்ற சமயத்தில் குழந்தை மாறியது  தெரியவந்தது.  அப்படி காது மடலில் ஓட்டையுடன் பிறந்த குழந்தைதான் பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கர். தன்னுடைய வாழ்க்கை வரலாறான ‘சன்னி டேஸ்’ என்ற புத்தகத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், “அன்றைய தினம் என் உறவினர் மட்டும் காது மடலில் உள்ள ஓட்டையை கவனிக்காமல் இருந்தால், என் விதியே மாறியிருக்கும். இன்று நான் ஒரு மீனவராகி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன்” என்கிறார். கவாஸ்கரின் விதி மட்டுமா, கிரிக்கெட் உலகில் இந்தியாவின் விதிகூட மாறியிருக்கும்.
 கவாஸ்கரின் அப்பா மனோகர் ஒரு கிரிக்கெட் வீரர். அவரது மாமா மந்திரி, இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர். தாங்கள்   ஆடும் போட்டிகளைக் காண சுனில் கவாஸ்கரையும் அவர்கள் அழைத்துச் செல்ல  இள வயதிலேயே அவரது  மனதில் கிரிக்கெட் மீது காதல் ஏற்பட்டுள்ளது.  பின்னாளில் தனது மாமாவான மந்திரியிடம் பேட்டிங் பயிற்சி பெற்ற கவாஸ்கர், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட், கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மும்பை அணியில் இடம் பிடித்தார்.

மும்பை அணிக்காக ஆடிய போட்டிகளில் அவர் சதங்களாக குவிக்க, தேர்வுக் குழுவின் பார்வை அவர் மீது விழுந்துள்ளது. 1971-ம் ஆண்டு   மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்தார் கவாஸ்கர். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து பட்டோடி நீக்கப்பட்டு, இம்முறை அஜித் வடேகர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். வேகப்பந்து வீச்சில் சூரர்களைக் கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் உலகில் வல்லரசாய் வலம்வந்த காலம் அது. இந்திய அணியை மேற்கிந்திய தீவுகள் அணி ஊதித் தள்ளிவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் அங்கு எதிர்பாராத விஷயங்கள் நடந்தன.

இந்திய கிரிக்கெட் வரலாறு - ஸ்பின்னர்களின் சகாப்தம்





இந்திய  அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட முதல் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 5-0 என்ற கணக்கில் இழந்தார் பட்டோடி. ஆனால் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தார்.  இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் தன் பேட்டிங் திறமையால் பட்டோடி வெல்ல, அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

இந்திய அணியின் கேப்டனாக பட்டோடி இருந்த காலத்தில்தான் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தொடங்கியது. மற்ற   அணிகள், வேகப்பந்து வீச்சால் மிரட்டிக் கொண்டிருக்க அதற்கு மாற்றாக இந்திய அணியில்  சுழற்பந்து வீச்சாளர்களை அதிக அளவில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டோடி திட்டமிட்டார்.

பகவத் சந்திரசேகர்,  பிஷன் சிங் பேடி, வெங்கட்ராகவன் என்று இந்த காலகட்டத்தில்  வரிசையாக சுழற்பந்து வீச்சாளர்கள்  இந்திய அணியில் அறிமுகமானார்கள். இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வெல்வதில் சந்திரசேகர் முக்கிய பங்கு வகித்தார்.   மற்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பயந்ததுபோல், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பேட்ஸ்மேன்கள் பயப்படத் தொடங்கினார்கள். சமயத்தில் ஒரே போட்டியில் 4 சுழற்பந்து வீச்சாளர்களைக்கூட பட்டோடி பயன்படுத்தினார்.

 டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக  பிரசன்னாவுக்கும், சந்திரசேகருக்கும் அதிக வாய்ப்புகளைக் கொடுத்துவந்தார் பட்டோடி. வெங்கட்ராகவனுக்கு அவர் அதிக முக்கியத்துவம்  கொடுக்கவில்லை. இதனால் துவண்டு போகாத வெங்கட்ராகவன், தனக்கும் ஒரு நாள் வரும் என்று காத்திருந்தார்.

நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வெங்கட்ராகவனுக்கு கிடைத்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களையும்,  இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் வீழ்த்தி தனது சக்தியை நிரூபித்தார் வெங்கட்ராகவன். இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அவர் முக்கிய காரணமாக இருந்தார்.   1968-ல் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி,  3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.  இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே நமது அணிக்கு கிடைத்த முதலாவது தொடர் வெற்றி இது.

இந்திய அணியின் இந்த வெற்றிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது.  
பேடியும்,  பிரசன்னாவும் இந்த டெஸ்ட் தொடரில் மாறி மாறி விக்கெட்களை அள்ளினர். அவர்கள் இருவரும் பந்துவீச்சில் கலக்க, இந்தியாவின் புதுமுகமான அஜித் வடேகர் பேட்டிங்கில் வித்தை காட்டினார். இதன்மூலம் இந்திய அணியின் துணைக் கேப்டனாகவும் அவர் உருவெடுத்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தலையெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பேட்டிங்கிலும் ஒரு புதிய நாயகன் உருவெடுத்தார். அவர்தான்  சுனில் கவாஸ்கர்.



 

இந்திய கிரிக்கெட் வரலாறு - சுதந்திர இந்தியாவின் முதல் கேப்டன்




இந்திய கிரிக்கெட்டில் இன்று சச்சின்,  தோனி, விராட் கோலி என்று  பலருக்கும் தீவிர ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. இவர்களின் ஒவ்வொரு செயலையும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் கொதித்து எழுகிறார்கள். தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்ட கலாச்சாரத்தை தொடங்கி வைத்த முதல் கிரிக்கெட் வீரர் யார் தெரியா?
இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை அடித்த லாலா அமர்நாத்தான் (முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஹீந்தர் அமர்நாத்தின் தந்தையார்) அந்த கிரிக்கெட் வீரர். பேட்டிங் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் கெட்டிக்காரரான லாலா அமர்நாத், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
தனக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தால் பெருமகிழ்ச்சி அடைந்த லாலா அமர்நாத், சி.கே.நாயுடுவுக்கு பிறகு அணித் தலைமை தனக்கு வரும் என்று உறுதியாக நம்பினார். அப்படி தனக்கு  கேப்டன் பதவி கிடைத்தல், எதிரணியை கட்டுப்படுத்துவதற்கான  திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில் 1936-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு விழியநகரம் மகராஜா  கேப்டனாக  நியமிக்கப்பட்டார். முன்கோபக்காரரான லாலா கொந்தளித்தார்.   அவரது இந்த கோபத்தை அதிகரிக்கும் வகையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமாக 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் லாலா அமர்நாத்தை 7 விக்கெட்கள் விழுந்த இறகும் பேட்டிங் செய்ய களம் இறக்கவில்லை.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற  லாலா அமர்நாத், தனது கால் காப்பை (பேட்) கழற்றி கேப்டன் முன் வீசியெறிந்தார். இந்த நடவடிக்கைக்காக உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார் லாலா அமர்நாத். இந்தியாவில் உள்ள அவரது ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் கொதித்துப் போனார்கள். கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இந்த தொடரில் இந்திய அணி பல போட்டிகளில் தோற்றுப்போக, இந்த கோபம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் கப்பலில் மும்பைக்கு திரும்பியுள்ளார் லாலா அமர்நாத்.   மும்பை துறைமுகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க ரசிகர்கள் திட்டமிட்டனர். ஆனால் ரசிகர்களும் , லாலா அமர்நாத்தும் சந்தித்துக்கொண்டால் கலவரம் நடக்குமோ என்று பயந்த ஆங்கிலேய அரசு, துறைமுகத்துக்கு வெளியிலேயே கப்பலை நிறுத்தி, ஒரு படகில் லாலா அமர்நாத்தை ஏற்றி ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவங்களால் சில காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தார் லாலா. ஆனால்   சுதந்திரம் பெற்ற பிறகு,  இந்திய அணியின் கேப்டனாக லாலா அமர்நாத் நியமிக்கப்பட்டார்.
   


விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள் - ஜிம்னாஸ்டிக்ஸ்



உலகில் தோன்றிய பழமையான விளையாட்டுகளில் ஒன்று என்று ஜிம்னாஸ்டிக்கைச் சொல்லலாம். கிறிஸ்து பிறப்பதற்கு பல்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காக கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை கண்டுபிடித்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் நாம் காணும் நவீன ஜிம்னாஸ்டிக் போட்டியை உருவாக்கியவர்கள் என்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக்   மற்றும் பிரட்ரிக் லட்விக் ஜான் ஆகியோரைக் கூறலாம்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆசிரியரான  ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக், பண்டைய காலத்தில் இருந்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளைப் பற்றி ஆய்வு செய்து, அதில் மேலும் சில விஷயங்கலைச் சேர்த்து ஒரு புத்தகத்தை 1793-ம் ஆண்டு எழுதினார். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய அந்தப் புத்தகம், பின்னர் “Gymnastics for Youth: or a Practical Guide to Healthful and Amusing Exercises for the use of Schools” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
ஆரம்பத்தில் புத்தக அளவிலேயே இருந்த நவீன ஜிம்னாஸ்டிக் போட்டியை செயல்முறையில் வடிவமைத்தவர்  பிரட்ரிக் லட்விக் ஜான். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் தந்தை என்று கருதப்படும் இவர், 1800-களில் புரூஷிய  ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர்   பணியாற்றிய காலத்தில் புரூஷிய ராணுவம் ஒரு போரில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியில் இருந்து ராணுவ வீரர்களை மீட்கவும், அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை அளிக்கவும்  ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக் எழுதிய புத்தகத்தைப் பின்பற்றி, ராணுவ வீரர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை அளித்தார்.
இதற்காக 1811-ம் ஆண்டில் ஜிம்னேஷியம் ஒன்றை அமைத்த அவர், பாரலல் பார்ஸ் ( Parallel Bars), ரிங்ஸ் (rings) மற்றும் ஹை பார் (high bar)  உள்ளிட்ட ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கான பயிற்சிகளை அளித்தார் வீரர்களின் உடல் மற்றும் மனநலத்தைப் பேணுவதற்கான பயிற்சிகளைத்தான் ஆரம்பகட்டத்தில் அவர் அளித்தார்.
இது நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு 1881-ம் ஆண்டில், ஜிம்னாஸ்டிக் விளையாட்டு, அமைப்பு ரீதியான ஒரு விளையட்டாக உருவெடுத்தது. இந்த ஆண்டில் ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன.  நாளடையில் இந்த அமைப்பு  சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பாக மாற்றப்பட்டது.
1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் போட்டி அறிமுகமானது. இருப்பினும் 1920-ம் ஆண்டுவரை பெண்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.  ஒலிம்பிக் நாம் இப்போது காணும் பல்வேறு விதமான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் 1956-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் (ஒன்றிணைந்த ரஷ்யா) ஆதிக்கம் செலுத்திய இவ்விளையாட்டில் தற்போது அமெரிக்கா, சீனா ருமேனியா உள்ளிட்ட நாடுகளும் பதக்கங்களை வென்று வருகின்றன.
இந்தியாவின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக தீபா கர்மகார் விளங்குகிறார். கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்த இவர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.



விளையாட்டை தெரிந்துகொள்ளுங்கள் - செஸ் பாக்ஸிங்



மாணவர்களே... உங்கள் அனைவருக்கும் செஸ் போட்டியைப் பற்றித் தெரிந்திருக்கும். பலர் செஸ் போட்டிகளில் ஆடியும் இருப்பீர்கள். இதேபோல் குத்துச்சண்டை போட்டிகளைப் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதே நேரத்தில் செஸ் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் செஸ் பாக்ஸிங் (செஸ் குத்துச்சண்டை) போட்டியைப்  பற்றி தெரியுமா?
போட்டியாளர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்தகுதியை சோதிக்கும் வகையிலான செஸ் பாக்ஸிங் போட்டிகள் 1992-ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த காமிக்ஸ் எழுத்தாளரான பிராய்ட்  எக்வாட்டர் என்பவர் 1992-ம் ஆண்டில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டார். விளையாட்டு வீரர்களின் உடல் மற்றும் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் 2 பிரிவுகளிலும் போட்டி நடப்பதுபோல் இந்த காமிக்ஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காமிக்ஸால் ஈர்க்கப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர், செஸ் பாக்ஸிங் போட்டிக்கு உருவம் கொடுத்தார்.
இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் வீரர்கள்  செஸ் போட்டியில் 6 சுற்றும், குத்துச்சண்டையில் 5 சுற்றும் மோதவேண்டும். இதில் செஸ் போட்டி 4 நிமிடங்களைக் கொண்டதாகவும், குத்துச்சண்டை போட்டி 3 நிமிடங்களைக்  கொண்டதாகவும்   இருக்கும்.
ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் போட்டியாளர்களுக்கு ஒரு நிமிடம் ஓய்வு அளிக்கப்படும். இதில் செஸ் போட்டியில் தோற்பதைத் தவிர்க்க எந்த வீரராவது காய் நகர்த்தலில் தாமதம் செய்தால், அவருடைய புள்ளிகள் கழிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அதற்கு முன் குறைந்தது 50 அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளிலாவது பங்கேற்றிருக்க வேண்டும்.
1992-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் செஸ் பாக்ஸிங் ஆடப்பட்டு வந்தாலும், சர்வதேச அளவிலான முதல் செஸ் பாக்ஸிங் போட்டி 2003-ம் ஆண்டில்தான் நடந்தது. நெதர்லாந்து குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் உலக செஸ் பாக்ஸிங் அமைப்பு இணைந்து ஏற்படு செய்த இந்த போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபிங் வெற்றிபெற்றார்.
உலகெங்கிலும் தற்போது 150 தொழில்முறை ஆட்டக்காரர்கள் செஸ் பாக்ஸிங் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். பெர்லின், லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த விளையாட்டுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன.
கொல்கத்தாவைச் சேர்ந்த தற்காப்பு கலை வீரரான மோண்டு தாஸ் என்பவர்தான் இந்த விளையாட்டை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். 2011-ம் ஆண்டில்  செஸ் பாக்ஸிங் ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைத் தொடங்கிய இவர், பல வீரர்களுக்கு   பயிற்சி அளித்து வருகிறார்.
இப்போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்ற முதல் வீரர் ஷைலேஷ் திரிபாதி ஆவார். மும்பையைச் சேர்ந்த இவர், 2012-ம் ஆண்டில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்  இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

   .


ஜப்பானை அழித்த இரட்டை குண்டுகள்




இரண்டாம் உலகப்போரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என்று ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலை சொல்லலாம். அணுகுண்டுகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை இந்த உலகுக்கு எடுத்துச்சொன்ன இந்த சம்பவத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். இதில் நாகாசாகி நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டபோது எடுத்த படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில்  ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர்   ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941-ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி மற்றும்  ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஜப்பானிய படைகள் இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறியது.

இப்போரில் 1942-ம் ஆண்டுவரை  ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி  ஆகிய நாடுகளின் கைதான் ஓங்கி இருந்தது.  ஆனால் அதன்பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இப்போரில் நேரடியாக பங்கேற்காமல் இருந்த அமெரிக்கா, பின்னர் இதில் நேரடியாக களம் இறங்கியது, நேச நாடுகளின் கரத்தை வலுப்படுத்தியது. அதே நேரத்தில் ஐரோப்பாவின் கிழக்கு முனையில் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை ரஷ்யப் படைகள் தடுத்து நிறுத்தின.

பல ஆண்டுகள் நீடித்த போருக்கு பின்னர் 1945-ம் ஆண்டு மே மாதம்      ஜெர்மனி சரணடைந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  போர் முடிவுக்கு வந்தது. ஆனால்  ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான் போரை தொடர்ந்துகொண்டிருந்தது.  இந்நிலையில் 1945-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீன நாடுகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.   ‘பாட்சம் அறிக்கை’ (Potsdam Statement)  என்று அழைக்கப்பட்ட இந்த அறிக்கையில்,  ‘ஜப்பான் அரசு உடனடியாக நிபந்தனையின்றி  சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அந்நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும்’ என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.  

ஆனால் ஜப்பான்  பிரதமரான கண்டாரோ சுசுகி, இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தார்.    ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பிரிட்டனும், அமெரிக்காவும் திட்டமிட்டது.  இதற்கு அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த நகரம் ஹிரோஷிமா.

சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசித்துவந்த ஹிரோஷிமா, அப்போது ஜப்பானின் முக்கிய நகரமாக இருந்தது. போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் அங்கிருந்துதான் அனுப்பப்பட்டு வந்தன. இதனால்தான் முதலில் ஹிரோஷிமாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் குறிவைத்தது.  இந்த திட்டத்தின்படி ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி காலையில் பசுபிக் கடற்பகுதியில் உள்ள டினியான் (Tinian)  என்ற இடத்தில் இருந்து எனோலா கே (Enola Gayஎன்ற போர்விமானத்தில்  ‘லிட்டில்பாய்’ என்ற அணுகுண்டு ஏற்றி அனுப்பப்பட்டது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மக்கள் காலையில் எழுந்து சோம்பல் முறிந்துகொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மீது ‘லிட்டில் பாய்’  வீசப்பட்டது.

ஹிரோஷிமா நகரில் சர்வ நாசத்தை விளைவித்த இந்த அணுண்டு வீச்சில் சுமார் 70 ஆயிரம் பேர் பலியானார்கள். இதே அளவிலான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஹிரோஷிமாவின் 69 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின. எஞ்சியிருந்த கட்டிடங்களும் வாழத் தகுதியில்லாத நிலையில் இருந்தன.
இந்த அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நேரத்துக்கு பின்  அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை இதில் அறிவித்த ட்ரூமேன், இனியும் ஜப்பான் சரணடையாவிட்டால் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கும் என்று எச்சரித்தார்.

ஆனால் அதன் பிறகும் ஜப்பான் சரணடையவில்லை. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் மீது மேலும் ஒரு அணுகுண்டு தாக்குதலை நடத்த அமெரிக்காவும், பிரிட்டனும் திட்டமிட்டன.  இம்முறை தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் நாகசாகி.  ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியைத் தாக்க ஆகஸ்ட் 9-ம் தேதி  ‘போக்ஸ்கார்’ (Bockscar) என்ற விமானத்தில் ‘ஃபேட்மேன்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அணுகுண்டை வீசுவதற்காக அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவர் லெப்டினண்ட் சார்லஸ் லெவி (Lieutenant Charles Levy) பிலடெல்பியாவைச் சேர்ந்த இவர், படமெடுப்பதிலும் கெட்டிக்காரராக இருந்தார். அணுகுண்டை வீசுவதற்காக செல்லும் குழுவில் தான் இருப்பதாக தெரிந்துகொண்டதும் அதைப் படம்பிடிக்கும் ஆர்வத்தில்  மறக்காமல் தனது கேமராவையும் எடுத்துக்கொண்டு சென்றார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11 மணிக்கு, ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது 2-வது அணுகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு மண்ணில் விழுந்து, அதன் ஜுவாலைகள் மிகப்பெரிய அளவில்  எழும்ப, அதைத் தன் கேமராவால் துல்லியமாக படம்பிடித்தார் சார்லஸ் லெவி. உலகின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும், அணுகுண்டின் அழிவுகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் படமாகவும் இன்றுவரை இப்படம் விளங்குகிறது.

பின்னாளில் இதுபற்றி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சார்லஸ் லெவி, “அணுகுண்டை வீசுவதற்கு முன்பே, அதன் ஜுவாலை எங்கள் கண்களைத் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடிகளை அணிந்துகொண்டோம். அணுகுண்டை நாங்கள் வீசியதும் மிகப்பெரிய அளவிலான ஜுவாலை ஒன்று ஆகாயம் வரை எழுந்தது 60 ஆயிரம் அடி உயரம் வரை எழுந்த இந்த ஜுவாலையில் பல வண்ணங்கள் கலந்திருந்தன. அதன் வெப்பத்தை எங்களாலேயே தாங்க முடியவில்லை. எத்தனை வேகத்தில் முடியுமோ, அத்தனை வேகத்தில் நாங்கள் திரும்பி வந்தோம்” என்கிறார்.

ஜப்பான் மீது நடத்தப்பட்ட இந்த இரண்டாவது அணுகுண்டு வீச்சில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிந்ததுடன் ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஜப்பான் நிலைகுலைந்தது.  இனியும் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதியதால்   நேசப் படைகளிடம் ஜப்பான் சரணடைந்தது. இதற்கடுத்த சில நாட்களில் 2-வது உலகப்போரும் முடிவுக்கு வந்தது.

சார்லஸ் லெவி (Charles Levy)
2-ம் உலகப் போரின்போது அமெரிக்க விமானப்படையில் லெப்டினென்டாகப் பணியாற்றியவர் சார்லஸ் லெவி. இப்போர் முடிந்த ஒரு மாதத்துக்கு பின் அமெரிக்க விமானப்படையில் இருந்து விலகிய லெவி, பின்னர் பிலடெல்பியாவில் ஒரு விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். பின்னர் தீயணைப்பு படையில் இணைந்து பணியாற்றிய அவர், 1997-ம் ஆண்டு, தனது 79-வது வயதில் காலமானார். விமானப்படை வீரர் என்பதைவிட, அணுகுண்டு வீச்சைப் படம்பிடித்த புகைப்படக்காரராகவே பின்னாளில் அவர் பிரபலமானார்.




முகமது அலியும் பீட்டில்ஸ் இசைக்குழுவும்



குத்துச்சண்டை உலகில் கடந்த நூற்றாண்டில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி உலகளாவிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் முகமது அலி. அவர் புகழ்பெற்றிருந்த அதே காலகட்டத்தில்  இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய இசைக்குழு பீட்டில்ஸ். ஜார்ஜ் ஹாரிசன், ஜான் லெனன், பால் மெக்கார்டினி, ரிங்கோ ஸ்டார் ஆகிய 4 புகழ்பெற்ற இசைக்கலைஞர்களைக் கொண்ட பீட்டில்ஸ் இசைக்குழு, தங்களின் இனிய பாடல்களால் உலகையே ஆட்கொண்டிருந்தது.
இப்படி ஒரே நேரத்தில் வேறுபட்ட 2 துறைகளில் புகழ்பெற்றிருந்த முகமது அலியும், பீட்டில்ஸ் இசைக்குழுவும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்களைத்தான்  இங்கே பார்க்கிறீர்கள். இந்த படத்தை எடுத்தவர் புகழ்பெற்ற விளையாட்டுத் துறை புகைப்படக்காரரான கிறிஸ் ஸ்மித் (chris smith).
1964-ம் ஆண்டு பீட்டில்ஸ் இசைக்குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. பிப்ரவரி மாதம்  மியாமி பகுதியில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக  அவர்கள் சென்றிருந்தனர்.    புகழ்பெற்ற ஹெவிவெயிட் சாம்பியனான சோனி லிஸ்டனுக்கும் குத்துச்சண்டை போட்டிகளில் வளரும் நட்சத்திரமாக கருதப்பட்ட   காஸியஸ் கிளேவுக்கும் (பின்னாளில் இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை முகமது அலி என்று மாற்றிக்கொண்டார்) சில நாட்களில் நடக்கவுள்ள குத்துச்சண்டை போட்டியைப் பற்றிய பேச்சு அமெரிக்க மக்களிடையே அப்போது பரபரப்பாக இருந்தது.
 அப்போது ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்த லிஸ்டனுடன்  சேர்த்துவைத்து  பீட்டில்ஸ் குழுவைப் படம்பிடித்தால் என்ன என்ற யோசனை அக்குழுவின் ஆஸ்தான புகைப்படக்காரரான ஹாரி பென்ஸனுக்கு (பீட்டில்ஸ் குழுவின் தலையணைச் சண்டையை படம் பிடித்தவர்)  தோன்றியுள்ளது. அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்து  பத்திரிகைகளில் வெளியிட்டால் பீட்டில்ஸ் குழுவின்  அமெரிக்க சுற்றுப்பயணம்  மேலும் பேசப்படும்  என்றும் அவர் யோசனை கூறியுள்ளார். பீட்டில்ஸ் குழுவுக்கு இந்த யோசனை பிடித்துப் போக இது தொடர்பாக லிஸ்டனுடன் பேசியுள்ளனர்.
  ஆனால் பீட்டில்ஸ் குழுவின் இந்த கோரிக்கையை ஏற்க சோனி லிஸ்டன் மறுத்துள்ளார்.  அத்துடன் பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றியும் அவர் தாறுமாறாக பேசியுள்ளார். இது பீட்டில்ஸ் இசைக்குழுவினரின் மனதை பாதித்துள்ளது. இந்நிலையில்தான் லிஸ்டனுக்கு பதில், இப்போட்டிக்காக பயிற்சி பெற்றுவரும் முகமது அலியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் என்ன என்ற யோசனை பீட்டில்ஸ் இசைக்குழுவினருக்கு வந்துள்ளது. உடனடியாக பென்சனையும் அழைத்துக்கொண்டு மியாமி கடற்கரைப் பகுதியில் முகமது அலி பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்த இடத்துக்கு சென்றுள்ளனர்.
முகமது அலி பயிற்சி செய்துகொண்டிருந்த உடற்பயிற்சி கூடத்துக்குள் நுழைய முதலில் பீட்டில்ஸ் குழுவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  அங்கிருந்த ஒரு அறைக்குள் அவர்களை காத்திருக்குமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். நீண்ட நேரம் அவர்கள் அறைக்குள் காத்திருந்தும் முகமது அலி வரவில்லை. பீட்டில்ஸ் குழுவைப் பற்றி அப்போது முகமது அலிக்கு அவ்வளவாக தெரியாததால், அவர்கள் வந்திருப்பது தெரிந்தும் உடனடியாக அவர்களைச் சந்திக்க செல்லாமல் முகமது அலி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தாங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி வந்ததால் கோபமடைந்த பீட்டில்ஸ் குழுவினர் அங்கிருந்து திரும்பிப் போக முடிவெடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் அங்கிருந்த முகமது அலியின் நண்பரும், பத்திரிகையாளருமான லிப்சைட் என்பவர், பீட்டில்ஸ் குழுவின் புகழைப் பற்றியும் அவர்கள்  காத்திருப்பது பற்றியும் முகமது அலியிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பீட்டில்ஸ் குழுவினர் இருந்த அறைக்குள் நுழைந்த முகமது அலி, அவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கியிருக்கிறார்.
முகமது அலியும், பீட்டில்ஸ் குழுவினரும் ஒன்றாக சேர்ந்திருக்கும் படங்களை எடுக்கும் திட்டத்தைப் பற்றி, பென்சன் கூற அவரும் உற்சாகமாக தலையாட்டி உள்ளார். பீட்டில்ஸ் குழுவினர் போதும் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுடன் குதூகலமாக பல படங்களை எடுத்துள்ளார் முகமது அலி. இப்படங்களை பென்ஸன் மட்டுமின்றி,  அங்கிருந்த முகமது அலியின் நண்பரும் பிரபல விளையாட்டு புகைப்படக்காரரான கிறிஸ் ஸ்மித்தும் எடுத்துள்ளார்.
இச்சம்பவத்தைப் பற்றி கூறும் கிறிஸ் ஸ்மித், “அப்போது நான் முகமது அலியை படமெடுப்பதற்காக ஜிம்முக்கு சென்றிருந்தேன். அங்கு அவரைப் படமெடுத்துக்கொண்டு இருந்தபோது, பீட்டில்ஸ் குழுவினர் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களைப் பற்றி தனது நண்பர் மூலம் தெரிந்துகொண்ட முகமது அலி, ஒரு பெரிய இசைக்குழுவினர் தன்னை சந்திக்க வந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஒரு குழந்தையைப் போல் அவர்களுடன் விதவிதமான  போஸ்களில் செல்லச் சண்டை போடுவதுபோல் படம் எடுத்துக்கொண்டார். ஒரே நேரத்தில் உலகின் 5 பிரபலங்களை படமெடுக்க அன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது” என்கிறார்.
கிறிஸ் ஸ்மித்
இங்கிலாந்தின் பிரபலமான புகைப்படக்காரராக விளங்கியவர் கிறிஸ் ஸ்மித். 1970-ம் ஆண்டில் புகழ்பெற்ற  ‘தி அப்சர்வர்’  பத்திரிகையில் புகைப்படக்காரராக வாழ்க்கையை தொடங்கிய ஸ்மித், விளையாட்டு உலகில் பல அரிய புகைப்படங்களை எடுத்துள்ளார். கலர் புகைப்படங்களின் காலம் வந்த பிறகு, மற்ற புகைப்படக்காரர்கள் கலர் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் கிறிஸ் ஸ்மித் தொடர்ந்து கறுப்பு வெள்ளை படங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். சிறந்த விளையாட்டு புகைப்படக்காரருக்கான விருதை 4 முறை வென்றுள்ள கிறிஸ் ஸ்மித், ’ஸ்போர்ட் இன் போகஸ்’ (Sport in Focus) உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.